பாரதியின் பெண் விடுதலைப் பாடல்கள்

-மகாகவி பாரதி

பல்வகைப் பாடல்கள்

4. புதுமைப் பெண்

போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி! நின்
      பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றிகாண்
சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்
      செய்ய தாமரைத் தேமலர் போலோளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே;
      துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை,மாதரசே! எங்கள்
      சாதி செய்த தவப்பயன் வாழி நீ!       1

மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்
      வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாதந் தானது நாரதர் வீணையோ?
      நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
      மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதோ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமொ?
      தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே!       2

அறிவு கொண்ட மனித வுயிர்களை
      அடிமையாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
      நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
      தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
      நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!       3

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
      அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
      போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
      ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
      பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!       4

நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;
      நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
      சாலவே யரி தாவதொர் செய்தியாம்;
குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்;
      கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;
      நங்கை கூறும் வியப்புகள் கேட்டிரோ!       5

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
      பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள்
      தன்னி லேபொது வான் வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்
      மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
      முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்.       6

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
      நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
      செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
      அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
      உதய கன்னி உரைப்பது கேட்டிரோ!       7

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
      ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
      யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
      தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
      வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்.       8

சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;
      சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;
      மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
      கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
      இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ!       9

போற்றி, போற்றி!ஜயஜய போற்றி!இப்
      புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
      மனிதர் தம்மை அமர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல்
      அருளி னாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
      செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.       10

$$$

5. பெண்மை

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
      பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
      தாயின் பெயரும் சதியென்ற நாமமும்.       1

அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.
      ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்;
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
      சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்.      2

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
      மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
      கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம்.       3

பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
      பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை!
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
      காத லின்பத்தைக் காத்திடு வோமடா.       4

சக்தி யென்ற மதுவையுண் போமடா!
      தாளங் கொட்டித் திசைகள் அதிரவே,
ஒத்தி யல்வதொர் பாட்டும் குழல்களும்
      ஊர்வி யக்கக் களித்துநின் றாடுவோம்.       5

உயிரைக் காக்கும், உயரினைச் சேர்த்திடும்;
      உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரி னும்இந்தப் பெண்மை இனிதடா!
      ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே.       6

‘போற்றி தாய்’ என்று தோள் கொட்டி யாடுவீர்
      புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே;
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
      நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே.       7

‘போற்றி தாய்’ என்று தாளங்கள் கொட்டடா!
      ‘போற்றி தாய்’என்று பொற்குழ லூதடா!
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
      காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே.       8

அன்ன மூட்டிய தெய்வ மணிக் கையின்
      ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்
      கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம். 9

$$$

6. பெண்கள் விடுதலைக் கும்மி

காப்பு

பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக் களிப்பொடு நாம்பாடக்
கண்களி லேயொளி போல வுயிரில்
கலந்தொளிர் தெய்வம்நற் காப்பாமே.

1. கும்மியடி!தமிழ் நாடு முழுதும்
      குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
      நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி)

2. ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
      றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
      விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார். (கும்மி)

3. மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்
      மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார், அதை
      வெட்டி விட்டோ மென்று கும்மியடி! (கும்மி)

4. நல்ல விலை கொண்டு நாயை விற்பார், அந்த
      நாயிடம் யோசனை கேட்ப துண்டோ ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
      கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார். (கும்மி)

5. கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு
      கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வற்புறுத் திப்பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்
      வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம். (கும்மி)

6. பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
      பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
      இளைப்பில்லை கணென்று கும்மியடி! (கும்மி)

7. வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
      வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்; தெய்வச்
      சாதி படைக்கவும் செய்திடு வோம். (கும்மி)

8. காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
      காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
      மாட்சி பெறச் செய்து வாழ்வமடி! (கும்மி)

$$$

7. பெண் விடுதலை

விடுதலைக்கு மகளிரெல் லோரும்
      வேட்கை கொண்டனம்; வெல்லுவம் என்றெ
திடம னத்தின் மதுக்கிண்ண மீது
      சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்.
உடைய வள்சக்தி ஆண்பெண் ணிரண்டும்
      ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்;
இடையிலேபட்ட கீழ்நிலை கண்டீர்.
      இதற்கு நாமொருப் பட்டிருப் போமோ?       1

திறமை யால்இங்கு மேனிலைசேர்வோம்;
      தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்;
குறைவி லாது முழுநிகர் நம்மைக்
      கொள்வ ராண்க ளெனிலவ ரோடும்
சிறுமை தீரநந் தாய்த்திரு நாட்டைத்
      திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்;
அறவி ழுந்தது பண்டை வழக்கம்;
      ஆணுக் குப்பெண் விலங்கெனும் அஃதே.       2

விடியு நல்லொளி காணுதி நின்றே,
      மேவு நாக ரிகம்புதி தொன்றே;
கொடியர் நம்மை அடிமைகள் என்றே
      கொண்டு,தாம்முதல் என்றன ரன்றே.
அடியொ டந்த வழக்கத்தைக் கொன்றே,
      அறிவு யாவும் பயிற்சியில் வென்றே
கடமை செய்வீர்,நந்தேசத்து வீரக்
      காரிகைக் கணத்தீர், துணி வுற்றே.       3

$$$

4 thoughts on “பாரதியின் பெண் விடுதலைப் பாடல்கள்

Leave a comment