-மகாகவி பாரதி
துரியோதனனின் ஆர்ப்பரிப்பைத் தடுக்கும் தாய்மாமன் சகுனி, மேலும் வஞ்சக நெஞ்சுடன் பேசுகிறான். களி விளையாட்டுக்காக ஆடிய சூதில் தோற்ற சகோதரர்களை ஏளனம் செய்தல் முறையல்ல என்று மருகனிடம் கூறும் அவன், பாண்டவரின் மனைவியான பாஞ்சாலியைப் பணயம் வைத்து ஆடினால், அவளது அதிர்ஷ்டத்தால் இழந்த அனைத்தையும் தருமன் திரும்பப் பெறலாம் என்கிறான். இது நல்ல ஆலோசனை என்கிறான் துரியன் - தேன் கலசத்தை நக்க விழையும் நாய் போல என்கிறார் மகாகவி பாரதி. இத்துடன் அடிமைச் சருக்கம் முற்றுப் பெறுகிறது...

இரண்டாம் பாகம்
2.1. அடிமைச் சருக்கம்
2.1.13. சகுனி சொல்வது
‘புண்ணிடைக் கோல்கொண்டு குத்துதல் – நின்னைப்
போன்றவர் செய்யத் தகுவதோ? – இரு
கண்ணி லினியவ ராமென்றே – இந்தக்
காளையர் தம்மைஇங் குந்தைதான் – நெஞ்சில்
எண்ணி யிருப்ப தறிகுவாய்; – இவர்
யார்? நின்றன் சோதர ரல்லரோ? – களி
நண்ணித் தொடங்கிய சூதன்றோ? – இவர்
நாணுறச் செய்வது நேர்மையோ? 36
‘இன்னும் பணயம்வைத் தாடுவோம்; – வெற்றி
இன்னும் இவர்பெற லாகுங்காண்.
பொன்னுங் குடிகளுந் தேசமும் – பெற்றுப்
பொற்பொடு போதற் கிடமுண்டாம்; – ஒளி
மின்னும் அமுதமும் போன்றவள் – இவர்
மேவிடு தேவியை வைத்திட்டால், அவள்
துன்னும் அதிட்ட முடையவள் – இவர்
தோற்ற தனைத்தையும் மீட்டலாம்.’ 37
என்றந்த மாமன் உரைப்பவே – வளர்
இன்பம் மனத்தி லுடையனாய் – ‘மிக
நன்றுநன்’றென்று சுயோதனன் – சிறு
நாயொன்று தேன்கல சத்தினை – எண்ணித்
துன்று முகவையில் வெற்றுநா – வினைத்
தோய்த்துச் சுவைத்து மகிழ்தல்போல் – அவன்
ஒன்றுரை யாம லிருந்திட்டான் – அழி
வுற்ற துலகத் தறமெலாம். 38
அடிமைச் சருக்கம் நிறைவு
$$$