பாஞ்சாலி சபதம் – 2.1.9

-மகாகவி பாரதி

சகுனியின் எள்ளலைக் கேட்டு வெகுண்ட தருமன், தனது தம்பி பார்த்தனைப் பணயம் வைத்து இழக்கிறான். முன்னதாக, “‘எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம்; - ஐவர் எண்ணத்தில், ஆவியில் ஒன்றுகாண்” என்கிறான்.

இரண்டாம் பாகம்

2.1. அடிமைச் சருக்கம்

2.1.9. பார்த்தனை இழத்தல்

தர்மன் சொல்வது

‘எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம்; – ஐவர்
      எண்ணத்தில், ஆவியில் ஒன்றுகாண் – இவர்
பங்கமுற் றேபிரி வெய்துவார் – என்று
      பாதகச் சிந்தனை கொள்கிறாய்; – அட,
சிங்க மறவர் தமக்குள்ளே – வில்லுத்
      தேர்ச்சியி லேநிக ரற்றவன், – எண்ணில்
இங்குப் புவித்தலம் ஏழையும் – விலை
      யீடெனக் கொள்ளத் தகாதவன், 28

‘கண்ணனுக் காருயிர்த் தோழனாம் – எங்கள்
      கண்ணிலுஞ் சால இனியவன்,
வண்ணமும் திண்மையும் சோதியும் – பெற்று
      வானத் தமரரைப் போன்றவன், – அவன்
எண்ணரு நற்குணஞ் சான்றவன், – புக
      ழேறும் விஜயன் பணயங்காண்! – பொய்யில்
பண்ணிய காயை உருட்டுவாய்’ – என்று
      பார்த்திவன் விம்மி உரைத்திட்டான். 29

மாயத்தை யேஉரு வாக்கிய – அந்த
      மாமனும் நெஞ்சில் மகிழ்வுற்றே – கெட்ட
தாயத்தைக் கையினில் பற்றினான்; – பின்பு
      சாற்றி விருத்தமங் கொன்றையே – கையில்
தாய முருட்டி விழுத்தினான்; – அவன்
      சாற்றிய தேவந்து வீழ்ந்ததால். – வெறும்
ஈயத்தைப் பொன்னென்று காட்டுவார் – மன்னர்
      இப்புவி மீதுள ராமன்றோ? 30

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s