பாரதியின் ஞானப்பாடல்- 5

-மகாகவி பாரதி

ஞானப் பாடல்கள்

5. உறுதி வேண்டும்

மனதி லுறுதி வேண்டும்,
      வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
      நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
      கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
      தரணியிலே பெருமை வேண்டும்.

கண் திறந்திட வேண்டும்,
      காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
      பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
      வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
      ஓம் ஓம் ஓம் ஓம்.

$$$

Leave a comment