-மகாகவி பாரதி

பக்திப் பாடல்கள்
30. காளிப்பாட்டு
யாதுமாகி நின்றாய் – காளி! எங்கும் நீநி றைந்தாய்,
தீது நன்மை யெல்லாம் – காளி! தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்தும் ஆனாய் – காளி! பொறிக ளைந்தும் ஆனாய்
போத மாகி நின்றாய் – காளி! பொறியை விஞ்சி நின்றாய். 1
இன்பமாகி விட்டாய் – காளி! என்னுளே புகுந்தாய்!
பின்பு நின்னை யல்லால் – காளி! பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய் – காளி! ஆண்மை தந்துவிட்டாய்,
துன்பம் நீக்கி விட்டாய் – காளி! தொல்லை போக்கிவிட்டாய். 2
$$$
31. காளி ஸ்தோத்திரம்
யாது மாகி நின்றய் – காளி! எங்கும் நீநி றைந்தாய்,
தீது நன்மை யெல்லாம் – நின்றன் செயல்க ளன்றி யில்லை.
போதும் இங்கு மாந்தர் – வாழும் – பொய்ம்மை வாழ்க்கையெல்லாம்!
ஆதி சக்தி, தாயே! – என்மீது – அருள் புரிந்து காப்பாய். 1
எந்த நாளும் நின்மேல் – தாயே! இசைகள் பாடி வாழ்வேன்;
கந்தனைப்ப யந்தாய் – தாயே! கருணை வெள்ளமானாய்!
மந்த மாரு தத்தில் – வானில் – மலையி னுச்சி மீதில்
சிந்தை யெங்கு செல்லும் – அங்குன் – செம்மை தோன்றும் அன்றே! 2
கர்ம யோகமென்றே – உலகில் – காக்கு மென்னும் வேதம்,
தர்ம நீதி சிறிதும் – இங்கே – தவற லென்ப தின்றி,
மர்ம மான பொருளாம் – நின்றன் – மலர டிக்கண் நெஞ்சம்,
செம்மை யுற்று நாளும் – சேர்ந்தே – தேசு கூட வேண்டும். 3
என்ற னுள்ள வெளியில் – ஞானத் – திரவி யேற வேண்டும்;
குன்ற மொத்த தோளும் – மேருக் – கோல மொத்த வடிவும்,
நன்றை நாடு மனமும் – நீயெந் – நாளு மீதல் வேண்டும்;
ஒன்றை விட்டு மற்றோர் – உழலும் நெஞ்சம் வேண்டா. 4
வான கத்தி னொளியைக் – கண்டே – மனம கிழ்ச்சி பொங்கி,
யானெ தற்கும் அஞ்சேன் – ஆகி – எந்த நாளும் வாழ்வேன்,
ஞான மொத்த தம்மா! – உவமை நானு ரைக்கொ ணாதாம்.
வான கத்தி னொளியின் – அழகை வாழ்த்து மாறி யாதோ? 5
ஞாயி றென்ற கோளம் – தருமோர் – நல்ல பேரொ ளிக்கே
தேய மீதோர் உவமை – எவரே – தேடி யோத வல்லார்?
வாயி னிக்கும் அம்மா! – அழகாம் – மதியின் இன்ப ஒளியை
நேயமோ டுரைத்தால் – அங்கே – நெஞ்சி ளக்க மெய்தும். 6
காளி மீது நெஞ்சம் என்றும் – கலந்து நிற்க வேண்டும்;
வேளை யொத்த விறலும் – பாரில் – வெந்த ரேத்து புகழும்,
யாளி யொத்த வலியும் – என்றும் – இன்பம் நிற்கும் மனமும்,
வாழி யீதல் வேண்டும் – அன்னாய் – வாழ்க நின்றன் அருளே! 7
$$$
32. யோக சக்தி
வரங் கேட்டல்
விண்ணும் மண்ணும் தனியாளும் – எங்கள்
வீரை சக்தி நினதருளே – என்றன்
கண்ணும் கருத்தும் எனக்கொண்டு – அன்பு
கசிந்து கசிந்து கசிந்துருகி – நான்
பண்ணும் பூசனை கள்எல்லாம் – வெறும்
பாலை வனத்தில் இட்ட நீரோ, – உனக்
கெண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ? – அறி
வில்லா தகிலம் அளிப்பாயோ? 1
நீயே சரணமென்று கூவி – என்றன்
நெஞ்சிற் பேருறுதி கொண்டு – அடி
தாயே! எனக்கு மிக நிதியும் -அறந்
தன்னைக் காக்கு மொருதிறனும் – தரு
வாயே என்றுபணிந் தேத்திப் – பல
வாறா நினது புகழ்பாடி – வாய்
ஓயே னாவதுண ராயோ? – நின
துண்மை தவறுவதோ அழகோ? 2
காளீ வலியசா முண்டி – ஓங்
காரத் தலைவியென் னிராணி – பல
நாளிங் கெனையலைக்க லாமோ, – உள்ளம்
நாடும் பொருளடைதற் கன்றோ? – மலர்த்
தாளில் விழுந்தபயங் கேட்டேன் – அது
தாரா யெனிலுயிரைத் தீராய் – துன்பம்
நீளில் உயிர்தரிக்க மாட்டேன் – கரு
நீலியென் னியல்பறி யாயோ? 3
தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ? 4
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் – இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் – இனி
என்னைப் புதியவுயி ராக்கி – எனக்
கேதுங் கவலையறச் செய்து – மதி
தன்னை மிகத்தெளிவு செய்து – என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய். 5
தோளை வலியுடைய தாக்கி – உடற்
சோர்வும் பிணிபலவும் போக்கி – அரி
வாளைக் கொண்டுபிளந் தாலும் – கட்டு
மாறா வுடலுறுதி தந்து – சுடர்
நாளைக் கண்டதோர் மலர்போல் – ஒளி
நண்ணித் திகழுமுகந் தந்து – மத
வேளை வெல்லுமுறைகூறித் – தவ
மேன்மை கொடுத்தருளல் வேண்டும். 6
எண்ணுங் காரியங்க ளெல்லாம் – வெற்றி
யேறப் புரிந்தருளல் வேண்டும் – தொழில்
பண்ணப் பெருநிதியம் வேண்டும் – அதில்
பல்லோர் துணைபுரிதல் வேண்டும் – சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் – மிக
நன்றாவுளத் தழுந்தல் வேண்டும் – பல
பண்ணிற் கோடிவகை இன்பம் – நான்
பாடத் திறனடைதல் வேண்டும். 7
கல்லை வயிரமணி யாக்கல் – செம்பைக்
கட்டித் தங்கமெனச் செய்தல் – வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல் – பன்றிப்
போத்தைச் சிங்கவே றாக்கல் – மண்ணை
வெல்லத் தினிப்புவரச் செய்தல் – என
விந்தை தோன்றிட இந்நாட்டை – நான்
தொல்லை தீர்த்துயர்வு கல்வி – வெற்றி
சூழும் வீரமறி வாண்மை. 8
கூடுந் திரவியத்தின் குவைகள் – திறல்
கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் – இவை
நாடும் படிக்குவினை செய்து – இந்த
நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் – கலி
சாடுந் திறனெனக்குத் தருவாய் – அடி
தாயே! உனக்கரிய துண்டோ? – மதி
மூடும் பொய்மையிரு ளெல்லாம் – எனை
முற்றும் விட்டகல வேண்டும். 9
ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் – புலை
அச்சம் போயொழிதல் வேண்டும் – பல
பையச் சொல்லுவதிங் கென்னே! – முன்னைப்
பார்த்தன் கண்ணனிவர் நேரா – எனை
உய்யக் கொண்டருள வேண்டும் – அடி
உன்னைக் கோடிமுறை தொழுதேன் – இனி
வையத் தலைமையெனக் கருள்வாய் – அன்னை
வாழி! நின்ன தருள் வாழி! 10
ஓம் காளி! வலிய சாமுண்டீ!
ஓங்காரத் தலைவி! என் இராணி!
$$$
33. மஹாசக்தி பஞ்சகம்
கரணமுந் தனுவும் நினக்கெனத் தந்தேன்,
காளி நீ காத்தருள் செய்யே;
மரணமும் அஞ்சேன்; நோய்களை அஞ்சேன்;
மாரவெம் பேயினை அஞ்சேன்;
இரணமுஞ் சுகமும், பழியுநற் புகழும்
யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்;
சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்;
தாயெனைக் காத்தலுன் கடனே. 1
எண்ணிலாப் பொருளும், எல்லையில் வெளியும்,
யாவுமாம் நின்றனைப் போற்றி
மண்ணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும்
மயங்கிலேன், மனமெனும் பெயர்கொள்
கண்ணிலாப் பேயை எள்ளுவேன்; இனியெக்
காலுமே அமைதியி லிருப்பேன்;
தண்ணிலா முடியிற் புனைந்துநின் றிலகும்
தாயுனைச் சரண்புகுந் தேனால். 2
நீசருக் கினிதாந் தனத்தினும், மாதர்
நினைப்பினும், நெறியிலா மாக்கள்
மாசுறு பொய்ந்நட் பதனினும், பன்னாள்
மயங்கினேன்; அவையினி மதியேன்;
தேசுறு நீல நிறத்தினாள், அறிவாய்ச்
சிந்தையிற் குலவிடு திறத்தாள்,
வீசுறுங் காற்றில் நெருப்பினில் வெளியில்
விளங்குவாள் தனைச்சரண் புகுந்தேன். 3
ஐயமுந் திகைப்புந் தொலைந்தன; ஆங்கே
அச்சமுந் தொலைந்தது; சினமும்
பொய்யுமென் றினைய புன்மைக ளெல்லாம்
போயின உறுதிநான் கண்டேன்.
வையமிங் கனைத்தும் ஆக்கியும் காத்தும்
மாய்த்துமே மகிழ்ந்திடு தாயைத்
துய்யவெண் ணிறத்தாள் தனைக்கரி யவளைத்
துணையெனத் தொடர்ந்தது கொண்டே. 4
தவத்தினை எளிதாப் புரிந்தனள், யோகத்
தனிநிலை ஒளியெனப் புரிந்தாள்,
சிவத்தினை இனிதாப் புரிந்தனள், மூடச்
சித்தமும் தெளிவுறச் செய்தாள்;
பவத்தினை வெறுப்ப அருளினள் நானாம்,
பான்மை கொன்றவள் மயம் புரிந்தாள்;
அவத்தினைக் களைந்தாள், அறிவென விளைந்தாள்;
அநந்தமா வாழ்க யிங்கவளே! 5
$$$
34. மஹா சக்தி வாழ்த்து
விண்டு ரைக்க அறிய அரியதாய்
விரிந்த வான் வெளியென – நின்றனை;
அண்ட கோடிகள்வானில் அமைத்தனை;
அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை;
மண்ட லத்தை அணுவணு வாக்கினால்,
வருவ தெத்தனை அத்தனை யோசனை,
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை,
கோலமே! நினைக் காளியென் றேத்துவேன். 1
நாடு காக்கும் அரசன் தனையந்த
நாட்டு ளோர்அர சென்றறி வார்எனில்,
பாடு தண்டைக் குழந்தை தனக்கிதம்
பண்ணும் அப்பன் இவனென் றறிந்திடும்;
கோடி யண்டம் இயக்கி யளிக்கும்நின்
கோலம் ஏழை குறித்திட லாகுமோ?
நாடி யிச்சிறு பூமியிற் காணுநின்
நலங்கள் ஏத்திட நல்லருள் செய்கவே! 2
பரிதியென்னும் பொருளிடை யேய்ந்தனை;
பரவும்வெய்ய கதிரெனக் காய்ந்தனை;
கரிய மேகத் திரளெனச் செல்லுவை;
காலு மின்னென வந்துயிர் கொல்லுவை;
சொரியும் நீரெனப் பல்லுயிர் போற்றுவை;
சூழும் வெள்ள மெனவுயிர் மாற்றுவை;
விரியும் நீள்கட லென்ன நிறைந்தனை;
வெல்க காளி யெனதம்மை வெல்கவே. 3
வாயு வாகி வெளியை அளந்தனை,
வாழ்வெ தற்கும் உயிர்நிலை ஆயினை,
தேயு வாகி ஒளியருள் செய்குவை,
செத்த வற்றைக் கருப்பொருள் ஆக்குவை;
பாயு மாயிரஞ் சக்திக ளாகியே
பாரிலுள்ள தொழில்கள் இயற்றுவை;
சாயும் பல்லுயிர் கொல்லுவை, நிற்பன
தம்மைக் காத்துச் சுகம்பல நல்குவை. 4
நிலத்தின் கீழ்பல் லுலோகங்கள் ஆயினை;
நீரின் கீழெண் ணிலாநிதி வைத்தனை;
இதலத்தின் மீது மலையும் நதிகளும்,
சாருங் காடுஞ் சுனைகளும் ஆயினை;
குலத்தி லெண்ணற்ற பூண்டு பயிரினம்
கூட்டி வைத்துப் பலநலந் துய்த்தனை;
புலத்தை யிட்டிங் குயிர்கள் செய்தாய், அன்னே!
போற்றி! போற்றி! நினதருள் போற்றியே! 5
சித்த சாகரஞ் செய்தனை, ஆங்கதிற்
செய்த கர்மபயனெனப் பல்கினை;
தத்து கின்ற திரையுஞ் சுழிகளும்
தாக்கி யெற்றிடுங் காற்றுமுள் ளோட்டமுஞ்
சுத்த மோனப் பகுதியும் வெண்பனி
சூழ்ந்த பாகமும் கட்டவெந் நீருமென்று
ஒத்த நீர்க்கடல் போலப் பலவகை
உள்ளமென்னும் கடலில் அமைந்தனை. 6
$$$