விவேகாநந்தர் (கவிதை)

-கவிஞர் பெ.சிதம்பரநாதன்

கவிஞர் திரு. பெ.சிதம்பரநாதன், வானம்பாடி இயக்க கவிஞர்களுள் ஒருவர்; கோவையில் வசிக்கிறார்.  ‘ஓம் சக்தி’  ஆன்மிக, இலக்கிய மாத இதழின் முன்னாள் பொறுப்பாசிரியர்;  ‘அரண்மனைத் திராட்சைகள், வைகறை, பொய்கை’ஆகிய கவிதை நூல்களையும்,  ‘சிந்திக்கத் தூண்டிய சில விவாதங்கள்’ என்ற கட்டுரை நூலையும் எழுதி இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் மீதான அன்னாரது கவிதை இது….

நூற்று இருபத்து ஐந்து* 

ஆண்டுகளுக்கு முன்பு

.

பாரத மாதாவின்

கர்ப்ப வாசல் கதவுகள்

பிரளய உதிரத்தில்

பிய்த்தெறியப்பட்டு

.

பொங்கியோடிய

குங்கும வெள்ளத்தில்

சிக்கிக்கொண்ட

சிங்கக் குட்டியொன்று

புரண்டு புரண்டு

கர்ஜனையோடு கரையேறியது.

.

ஆம்- அது

சிசுக்களுக்கு உரிய

சிணுங்கல் அல்ல

கர்ஜனை.

.

ராணுவத் தளபதிகளின்

அணிவகுப்பைப் பார்வையிடும்

ராஜ ரௌத்ரம்.

.

ஆணவம்- அலட்சியம்

இரண்டின் குடல்களையும்

உருவி மாலைபோட்டு

நிற்பது போன்றதொரு

காம்பிரியக் காட்சி.

.

விளையாட்டு மைதானம் போன்ற

விசால மார்பு-

.

அலைகள் குமுறிக் கொந்தளிக்கும்

அட்லாண்டிக் சமுத்திரத்தை

அப்படியே தூக்கிவரக் கூடிய

இரண்டு இமயத் தோள்கள்-

.

இங்கே இப்படி

வருணிக்கப்பட்டுக் கொண்டிருப்பது

ஈட்டி கேடயத்தோடு

இருபது வயதில் புறப்பட்டு வந்தானே

மாவீரன் அலெக்சாண்டர் அல்ல.

.

கட்டிக் கொண்டிருந்த

காவியோடும் – உடலில்

ஒட்டிக் கொண்டிருந்த

ஆவியோடும் – அதே

அலெக்சாண்டரின் வயதில்

அமெரிக்காவுக்குப் புறப்பட்ட

விவேகாநந்தரை.

.

அவன் புறப்பட்டது

அகிலமெல்லாம் ஆள்வதற்கு!

.

இவன் புறப்பட்டது

சந்யாசியாய் வாழ்வதற்கு!

.

பரமஹம்சரை மட்டும் – இவர்

பார்க்காமல் இருந்திருந்தால்

.

வங்கத்திலும்

வரலாறு

மற்றுமொரு

மராட்டிய சிவாஜியை

சந்தித்திருக்கும்!

.

இந்த சிவாஜியோ

இந்து மதத்திற்கு

அத்வைதச் செங்கோலை

வழங்கியவர்.

.

தேவகுமாரன்

கன்னி மேரியை

தேர்ந்தெடுத்து – அவளுக்குள்

ஒரு சிசுவாக

சிருஷ்டியானதைப் போல

.

நமது தாய் ஒருத்திக்குள்

நரேந்திரனும் பிரதிஷ்டையானான்.

.

முப்பத்து இரண்டு வயதுக்குள்

கப்பல்களே சுமக்க முடியாத

ஞானப் பொக்கிஷங்களைச்

சுமந்து வந்ததால் தான்

நரேந்திரன் – விவேக

நந்தனானார்.

.

எழுந்து நிற்கவே சக்தியற்ற

பாமரனைப் பார்த்து

எழு எழு என்றார்

.

அவனோ

எழுந்த பிறகும்

தூங்குவதைப் பார்த்துத் தான்

விழி விழி என்றார்.

.

ஆனாலும் பலர்

திரு திரு என்று தான் விழித்தார்கள்

கருத்து விழிப்பு அவனுக்கு

கைவரவே இல்லை.

.

உழையுங்கள்! உழையுங்கள்!

என்றார்- காரணம்

சுபிட்சத்திற்கான

சூத்திரமே உழைப்புத் தானே!

.

நாமோ

எழுந்தது உண்மை

விழித்ததும் உண்மை

விழித்த வினாடி முதல்

உழைக்க மறந்து

பேசவே தலைப்பட்டோம்.

.

அங்கிங்கெனாதபடி

எங்கும் எதிலும் எப்போதும்

பேச்சு பேச்சு பேச்சு

பொழுது விழுந்தால் போதும்

பொதுக் கூட்டம் தான்.

.

மைதானங்களிலே அரசியல் பேச்சு

வீடுகளிலோ சினிமா பேச்சு

கோவில்களிலோ சமயப் பேச்சு

கல்லூரிகளிலோ கீச்சு மூச்சு..

எல்லாம் போச்சு

அதனால்

எல்லாம் போச்சு.

.

ஆரம்பப் பள்ளிகளில்அன்றைக்கு

பேசாதே பேசாதே என்று

அடிக்கடி ஆசிரியர் சொன்னதற்கு

அர்த்தம் புரிகிறதா இப்போதாவது?

.

இனியாவது

மேடைகளை விட்டிறங்கி

காடுகரை செல்வோம்.

.

திண்ணைகளை விட்டிறங்கி

பண்ணைகள் செல்வோம்.

உழைப்போம் உயர்வோம்.

.

குறிப்பு:

* சுவாமி விவேகானந்தரின் 125-வது ஜெயந்தியின் போது எழுதப்பட்ட கவிதை இது. 
கவிஞரின் ‘வைகறை’ தொகுப்பில் இடம் பெற்றுள்ளது இக்கவிதை. 
வெளியீடு: அகரம், தஞ்சாவூர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s