-மகாகவி பாரதி
அவையில் சூதாட்டத்தை விதுரனைத் தவிர எதிர்ப்பார் யாருமில்லாத சூழலில், மீண்டும் தொடர்கிறது, வம்சம் அழிக்க வந்த சூது. பாண்டவர் தலைவனான தருமன் அங்கு நாட்டை பணையம் வைத்து இழக்கிறான். மன்னனே ஆயினும் நாட்டை ஆள மட்டுமே உரிமை உடையவன்; அவன் நாட்டை தனது சொந்தச் சொத்தாகக் கருதக் கூடாது என்று பொருள்பட, கோயில் பூசாரி கடவுள் சிலை விற்பதுபோல, வாயில் காப்போன் காக்க வேண்டிய வீட்டை சூதில் வைத்து இழப்பது போலவும், தேசத்தை சூதில் பணையம் வைத்து இழக்கிறான் தருமன் என்று கூறிக் கண்டிக்கிறார் மகாகவி பாரதி. “சீச்சீ! சிறியர் செய்கை செய்தான்” என்றும் குமுறுகிறார். மகாகவியின் தேசபக்தி கனலென வெளிப்படும் கவிதைத் தருணம் இது.

இரண்டாம் பாகம்
2.1. அடிமைச் சருக்கம்
2.1.5. சூது மீட்டும் தொடங்குதல்
வேறு
காயு ருட்ட லானார் – சூதுக்
களிதொடங்க லானார்
மாய முள்ள சகுனி – பின்னும்
வார்த்தை சொல்லுகின்றான்:
‘நீஅழித்த தெல்லாம் – பின்னும்
நின்னிடத்து மீளும்.
ஓய்வடைந்திடாதே, – தருமா!
ஊக்க மெய்து’ கென்றான். 14
கோயிற் பூசை செய்வோர் – சிலையைக்
கொண்டு விற்றல் போலும்,
வாயில் காத்து நிற்போன் – வீட்டை
வைத்திழத்தல் போலும்,
ஆயிரங்க ளான – நீதி
யவைஉ ணர்ந்த தருமண்
தேயம் வைத்திழந்தான்; – சிச்சீ!
சிறியர் செய்கை செய்தான். 15
‘நாட்டு மாந்த ரெல்லாம் – தம்போல்
நரர்களென்று கருதார்;
ஆட்டு மந்தை யாமென்’ – றுலகை
அரச ரெண்ணி விட்டார்.
காட்டு முண்மை நூல்கள் – பலதாங்
காட்டினார்க ளேனும்,
நாட்டு ராஜ நீதி – மனிதர்
நன்கு செய்ய வில்லை. 16
ஓரஞ் செய்திடாமே, – தருமத்
துறுதி கொன்றிடாமே,
சோரஞ் செய்திடாமே, – பிறரைத்
துயரில் வீழ்த்திடாமே,
ஊரை யாளு முறைமை – உலகில்
ஓர்புறத்து மில்லை.
சார மற்ற வார்த்தை! – மேலே
சரிதை சொல்லு கின்றோம். 17
$$$