-மகாகவி பாரதி
வெல்ல முடியும் என்ற எண்ணம் வரவழைப்பதே சூதாட்டத்தின் முதல்படி. அவ்வாறே, தருமனுக்கு சகுனி ஆசைவார்த்தை கூறுவதாக இப்பாடல்களை அமைத்திருக்கிறார் மகாகவி பாரதி...

முதல் பாகம்
1.2. சூதாட்டச் சருக்கம்
1.2.6. சகுனியின் ஏச்சு
கலகல வெனச்சிரித் தான்- பழிக்
கவற்றையொர் சாத்திர மெனப்பயின் றோன்;
‘பலபல மொழிகுவ தேன்?- உனைப்
பார்த்திவன் என்றெணி அழைத்துவிட் டேன்.
”நிலமுழு தாட் கொண் டாய்- தனி
நீ”எனப் பலர்சொலக் கேட்டதனால்,
சிலபொருள் விளையாட்டிற்- செலுஞ்
செலவினுக் கழிகலை எனநினைந் தேன். 168
‘பாரத மண்டலத் தார்- தங்கள்
பதிஒரு பிசுனனென் றறிவே னோ?
சோரமிங் கிதிலுண்டோ?- தொழில்
சூதெனி லாடுநர் அரசரன் றோ?
மாரத வீரர்முன் னே,- நடு
மண்டபத் தே,பட்டப் பகலினிலே,
சூரசி காமணியே- நின்றன்
சொத்தினைத் திருடுவ மெனுங்கருத் தோ? 169
‘அச்சமிங் கிதில்வேண்டா,- விரைந்
தாடுவம் நெடும்பொழு தாயின தால்;
கச்சையொர் நாழிகை யா- நல்ல
காயுடன் விரித்திங்கு கிடந்திடல் காண்!
நிச்சயம் நீவெல் வாய்;- வெற்றி
நினக் கியல் பாயின தறியா யோ?
நிச்சயம் நீவெல் வாய்;- பல
நினைகுவ தேன்?களி தொடங்கு கென்றான் 170
$$$