பாரதியின் ஞானப்பாடல் – 4

-மகாகவி பாரதி

மகாகவி பாரதியின் ஞானப் பாடல்களில் 4வது கவிதையும் விடுதலையையே வேண்டுகிறது. இது பூவுலகில் பேசப்படும் சாதாரண விடுதலையல்ல; ஆன்மிகம் சார்ந்த ஆன்ம விடுதலை…

ஞானப் பாடல்கள்

4. விடுதலை வேண்டும்
ராகம் – நாட்டை

பல்லவி

வேண்டுமடி எப்போதும் விடுதலை, அம்மா;

சரணங்கள்

1. தூண்டு மின்ப வாடை வீசு துய்ய தேன் கடல்
சூழ நின்ற தீவிலங்கு சோதி வானவர்
ஈண்டு நமது தோழ ராகி எம்மோ டமுதமுண்டு குலவ
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய
நினைத்திடு மின்பம் அனைத்தும் உதவ

(வேண்டுமடி)

2. விருத்தி ராதி தானவர்க்கு மெலிவ தின்றியே,
விண்ணு மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே
பொருத்த முறநல் வேத மோர்ந்து
பொய்ம்மை தீர,மெய்ம்மை நேர
வருத்த மழிய வறுமை யொழிய
வையம் முழுதும் வண்மை பொழிய

(வேண்டுமடி)

3. பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்
பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே,
நண்ணி யமரர் வெற்றி கூற
நமது பெண்கள் அமரர் கொள்ள
வண்ண மினிய தேவ மகளிர்
மருவ நாமும் உவகைதுள்ள.

(வேண்டுமடி)

$$$

Leave a comment