காற்றிடைச் சாளரம் – 11

-கவிஞர் ஸ்ரீ. பக்தவத்சலம்

தூரிகைப் பிழை

மனத்தூரிகை

முதலில் மீனை

வரைந்து விட்டது.

நதியின்றி நானா என்றது மீன்.

நதியைத் தொடங்கினால்

கரையின்றியா என்றது.

கரைக்குக் கோடிழுக்கையில்

மண் இல்லாமலா என்றது.

புல் முளைத்த மண் ஆக்கினால்

மழை பெய்யாமலா என்றது.

மழையைப் பொழியவிட்டால்

குடை விரிந்து தொலைக்கிறது.

பாவம் மீன்-

நதியின்றி நீந்துகிறது.

$$$

Leave a comment