-சேக்கிழான்

‘நாவல்‘ எனப்படும் புதினம் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமாகி நூறாண்டு ஆகிறது; ஆங்கில இலக்கியத்தின் தாக்கத்தால் புதிய உரைநடையில் நெடுங்கதைகளை வடிப்பது தமிழிலும் துவங்கியது. அந்த வகையில் தமிழின் முன்னோடி நாவலாக, அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் விளங்குகிறது. தமிழ் நாவல்கள் பட்டியலில் மூன்றாவது நாவலான இந்நூல், தரத்தில் நூறாண்டு கடந்தும் முதன்மை வகிப்பது, மாதவையாவின் சமகால நோக்கிற்கு உதாரணம்.
தமிழ் இலக்கிய உலகில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்ட அ.மாதவையாவின் முதல் நாவலான பத்மாவதி சரித்திரம், மூன்று காலகட்டங்களில் மூன்று பாகங்களாக எழுதப்பட்டது. இதில் முதல் இரு பாகங்களே பெரும்பாலான பதிப்பாளர்களால் வெளியிடப்பட்டுள்ளன. காவ்யா பதிப்பகம், இதுவரை வெளியாகாமல் இருந்த, முற்றுப்பெறாத மூன்றாவது பாகத்தையும் இணைத்து செம்மையான பதிப்பாக வெளியிட்டுள்ளது; பிழைத் திருத்தத்தில் இன்னும் சிறிது கவனம் செலுத்தி இருக்கலாம்.
நாவல் குறித்த அ.மாதவையாவின் விளக்கம் நூலின் முகவுரையாக அமைந்துள்ளது. அவரது புதல்வர் மா.கிருஷ்ணனின் கோட்டோவியங்களும், பேத்தி மீனாட்சி தியாகராஜனின் முன்னுரையும் நூலுக்கு நல்ல விளக்கமாக அமைந்துள்ளன.
மாதவையாவின் சமுதாய நோக்கு, இலக்கிய பரிச்சயம், சீர்திருத்தச் சிந்தனை, மெல்லிய நகைச்சுவை உணர்வு ஆகியவை நாவல் முழுவதும் விரவிக் கிடப்பதைக் காண முடிகிறது. பழமையின் பிடியில் சமுதாயம் தத்தளித்த காலத்தில், விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், பெண்ணுரிமைகளை வலியுறுத்தி துணிவுடன் நாவல் எழுதிய அ.மாதவையா இன்றைய எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக விளங்குகிறார்.
நெல்லையில் துவங்கும் இரு நண்பர்களின் கதையை நாவலுக்கே உரித்தான சிக்கல்களுடன் சென்னையில் வளர்த்து, நுணுக்கமாகப் பின்னப்பட்ட கதைமாந்தர்களின் ஊடாக அன்றைய சமுதாயச் சூழலை புலப்படுத்தும் இந்நாவல், அக்கால மொழி நடையையும் வெளிப்படுத்துகிறது. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல் இது.
$$$
நூல் விவரம்:
பத்மாவதி சரித்திரம்
(மூன்று பாகங்களும் ஒரே தொகுப்பில்)
-அ.மாதவையா
334 பக்கங்கள், விலை: ரூ. 250,
காவ்யா பதிப்பகம்,
16, இரண்டாம் குறுக்குத் தெரு,
டிரஸ்ட்புரம்,
கோடம்பாக்கம், சென்னை- 24.