-கீதா குமரவேலன்
திருமதி கீதா குமரவேலன், குடியாத்தத்தில் உள்ள அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணிபுரிகிறார். ‘வள்ளலார் காட்டிய பெருநெறி’ என்ற நூலை எழுதி இருக்கிறார். இவரது கவிதைகள் பல பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன; பட்டிமண்டபப் பேச்சாளராக ஆன்மிகப் பயிர் வளர்க்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கவிதை இங்கே....

எந்தையர் முந்தையர் ஆயிரர் தவத்தால்
வங்கத்தில் விளைந்த வரமே!
பிந்தையர் சிந்தையில் ஆன்மிகப் பயிரை
விளைத்த புரட்சித் துறவே!
மந்தையில்; நீவிர் மக்கள் என்றே
.வீரத்தில் அன்பைக் கலந்து
மக்கள் சேவையில் மகேசனைக் கண்ட
விடியலே, இந்திய உரமே!
1
‘உன்னுள் கடவுள் காண்பாய்’ என்ற
உண்மை தெளிந்து உரைத்தாய்!
துண்ணிய கடவுள் தூயஇத யத்துள்
.என்று உரக்கவே நீ ஒலித்தாய்!
திண்ணிய நெஞ்சொடு நண்ணிய செய்தால்
எண்ணியது கிட்டும் என்றாய்!
மண்ணிய உயிரிரக் கம்தான் மதமென
என்றும் உரக்க மொழிந்தாய்!
2
வறியவன் துயரைத் துடைக்காத கடவுள்
எமக்கு வேண்டாம் என்றாய்!
விவேகம், நேர்மை, கருணை, தியாகம்
.இவையே சமயம்; அதுவே
வாழ்வின் நெறியென முழங்கி மக்களின்
.எண்ணங் களிலே சுடர்ந்தாய்!
விவேகா னந்தரே என்றும் எமக்கு
வழித்துணையாக நீ வந்தாய்!
3
‘எழுந்திரு, விழித்திரு தொடர்ந்திரு இலக்கை
அடையும் வரையில்’ என்றாய்!
ஆளுமை வளர்ப்பதே கல்வியின் நோக்கம்
குவிந்த மனதுடன் அதைநீ
என்றும் கற்றிடு; ஆன்மிகக் கல்வியே
உயர்வை அளிக்கும் என்றாய்!
நன்றாய் பாரதம் வாழ உதித்த
பகலவன் வாழிநீ எம்மான்!
4
$$$