பாஞ்சாலி சபதம் – 1.2.2

-மகாகவி பாரதி

அஸ்தினாபுரம் விஜயம் செய்த பாண்டவர்களை மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்ற காட்சியை மகாகவி வர்ணிக்கும்போதே, பாண்டவர்பால் மக்களுக்கு இருந்த அன்பு புலனாகும். மன்னரையும் உறவினர்களையும் குருவையும் பிதாமகரையும் வணங்கிய பின் ஓய்வுக்குச் செல்கின்ரனர் பாண்டவர்கள், வரபோகும் துயரை அறியாமல்... 

முதல் பாகம்

1.2. சூதாட்டச் சருக்கம்

1.2.2. பாண்டவர் வரவேற்பு

அத்தின மாநக ரத்தினில் வந்தனர்
      ஆரியப் பாண்டவர் என்றது கேட்டலும்,
தத்தி எழுந்தன எண்ணருங் கூட்டங்கள்,
      சந்திகள்,வீதிகள்,சாலைகள்,சோலைகள்;
எத்திசை நோக்கினும் மாந்தர் நிறைந்தனர்;
      இத்தனை மக்களும் எங்கண் இருந்தனர்
இத்தின மட்டும் எனவியப் பெய்துற
      எள்ளும் விழற்கிட மின்றி யிருந்தார்.       155

மந்திர கீதம் முழக்கினர் பார்ப்பனர்;
      வந்தடந் தோள்கொட்டி ஆர்த்தனர் மன்னவர்;
வெந்திறல் யானையும் தேரும் குதிரையும்
      வீதிகள் தோறும் ஒலிமிகச் செய்தன;
வந்தியர் பாடினர்,வேசையர் ஆடினர்;
      வாத்தியங் கோடி வகையின் ஒலித்தன;
செந்திரு வாழும் நகரினில் அத்தினஞ்
      சேர்ந்த ஒலியைச் சிறிதென லாமோ!       156

வாலிகன் தந்ததொர் தேர்மிசை ஏறி,அம்
      மன்னன் யுதிட்டிரன் தம்பியர் மாதர்கள்
நாலிய லாம்படை யோடு நகரிடை
      நல்ல பவனி எழுந்த பொழுதினில்
சேலியல் கண்ணியர் பொன்விளக் கேந்திடச்
      சீரிய பார்ப்பனர் கும்பங்கள் ஏந்திடக்
கோலிய பூமழை பெய்திடத் தோரணம்
      கொஞ்ச,நகரெழில் கூடிய தன்றே.       157

வேறு

மன்னவன் கோயிலிலே-இவர்
      வந்து புகுந்தனர் வரிசை யொடே
பொன்னரங் கினிலிருந்தான்-கண்ணில்
      புலவனைப் போய்நின்று போற்றிய பின்
அன்னவன் ஆசிகொண்டே,-உயர்
      ஆரிய வீட்டுமன் அடி வணங்கி
வின்னய முணர் கிருபன்-புகழ்
      வீரத் துரோணன் அங்கவன் புதல்வன், 158

மற்றுள பெரியோர்கள்-தமை
      வாழ்த்தி உள்ளன்பொடு வணங்கிநின்றார்;
கொற்றமிக் குயர்கன் னன்-பணிக்
      கொடியோன் இளையவர் சகுனியொடும்
பொற்றடந் தோள் சருவப்-பெரும்
      புகழினர்,தழுவினர்,மகிழ்ச்சிகொண்டார்;
நற்றவக் காந்தாரி-முதல்
      நாரியர் தமைமுறைப் படிதொழுதார்.       159

குந்தியும் இளங்கொடியும்-வந்து
      கூடிய மாதர் தம்மொடு குலவி
முந்திய கதைகள் சொல்லி-அன்பு
      மூண்டுரை யாடிப்பின் பிரிந்து விட்டார்;
அந்தியும் புகுந்ததுவால்-பின்னர்
      ஐவரும் உடல்வலித் தொழில் முடித்தே
சந்தியுஞ் சபங்களுஞ் செய்-தங்கு
      சாருமின் னுணவமு துண்டதன் பின்,       160

சந்தன மலர்புனைந் தே,-இளந்
      தையலர் வீணைகொண் டுயிருருக்கி
விந்தைகொள் பாட்டிசைப்ப-அதை
      விழைவொடு கேட்டனர் துயில்புரிந் தார்;
வந்ததொர் துன்பத் தினை-அங்கு
      மடித்திட லன்றிப் பின்தருந் துயர்க்கே
சிந்தனை உழல்வா ரோ?-உளச்
      சிதைவின்மை ஆரியர் சிறப்பன் றோ?       161

$$$

Leave a comment