பாரதியும் உலகமும் – தூரன்

மகாகவி பாரதியின் இலக்கியங்கள் குறித்த ஆய்வு தமிழகத்தில் தனியே  பாரதியியலாகவே வளர்ந்துள்ளது. பாரதியின் எழுத்துகளை செம்மைப்படுத்துதல், பதிப்பித்தல், அவரது படைப்புகளை வரிசைப்படுத்துதல், விடுபட்ட படைப்புகளைக் கண்டறிதல், அவற்றின் இலக்கியச் சுவையை எடுத்துரைத்தல், திறனாய்வு என, பல ஆய்வாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்; இன்றும் ஈடுபடுகின்றனர். இந்த ஆய்வாளர்களுள் அமரர் திரு. ம.ப.பெரியசாமி தூரன் முன்னோடியாவார்.

திரு தூரனின் ‘பாரதியும் உலகமும்’ என்ற இந்த நூல், பாரதியின் படைப்புகளில் அவரது உலகு தழுவிய பார்வையைத் தரிசித்து, அதனை தமிழ் மக்களுக்குத் தரும் ஓர் இனிய முயற்சி. வானதி பதிப்பகம் 1979இல் வெளியிட்ட இந்நூல் பாரதி அன்பர்கள் சுவைப்பதற்கான, தேர்ந்தெடுத்துக் கோர்த்த கனிகளாலான மணியாரம்.

போர்ச்சூழலில் உலகம் அச்சத்துடன் தவிக்கும் தற்போதைய அவல நிலையில், உலகையே அன்பால் அரவணைக்கும் பாரதீயப் பார்வையை முன்வைக்கும் பாரதியின் இந்தப் படைப்புகள் முக்கியமானவை; இன்றைய தருணத்தில் அனைவராலும் படிக்கப்பட வேண்டியவை.

இலக்கியத்தின் எதிரிகள் – ம.பொ.சி.

நாத்திகப் பிரசாரம் தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் (1950களில்) தமிழகத்தின் பாரம்பரியம் காக்க, திரு.ம.பொ.சிவஞான கிராமணியார், தனது எழுத்தாற்றலை ஆயுதமாக்கிப் போராடினர். அவரது எழுத்தாற்றலின் சீரிய திறனுக்கு 'இலக்கியத்தின் எதிரிகள்’ என்ற இந்த நூல் ஓர் உதாரணம். ‘தமிழ் முரசு’ இதழில் அவர் எழுதிய கட்டுரைகள் இவை.

அகமே புறம் – வ.உ.சி.

ஆங்கில எழுத்தாளர் ஜேம்ஸ் ஆலனின் ‘Out from the heart’ என்ற சுய முன்னேற்ற நூலை, சுதேசி நாயகரும் சுதந்திரப் போராட்ட வீரருமான வ.உ.சி. ‘அகமே புறம்’ என்று 1916-ல் மொழிபெயர்த்தார். தமிழின் சுய முன்னேற்ற நூல்களில் இதுவே முன்னோடி. அந்த மொழியாக்கமே இங்கு 10 அத்தியாயங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளது…

சிகாகோ பேருரைகள்- விவேகானந்தர்

அமெரிக்காவின் சிகாகோ நகரில், 1893 செப்டம்பர் 11- 27 இல் நடைபெற்ற உலக சர்வ சமயப் பேரவை மாநாட்டில், ஆறு நாட்களில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரைகள் உலகப் புகழ் பெற்றவை. உலக அரங்கில் பாரதத்தின் பெருமையையும் ஹிந்து மதத்தின் சிறப்பையும் நிலைநாட்டியவை. அந்த உரைகள் இங்கே...