...கலையறிந்த புலவர்களை அக் காலத்து மன்னரும் செல்வரும் மதித்தார்கள்; கற்றோரைப் போற்றாத நாடு ஒரு நாளும் கடைத்தேற மாட்டாது என்னும் உண்மையை நன்றாக அறிந்திருந்தார்கள். சேரநாட்டை யாண்ட பெருஞ்சேரலை நாடிச் சென்றார், ஒரு தமிழ்ப் புலவர். அப்பொழுது மன்னன் மாளிகையில் இல்லை. நெடுந்தூரம் நடந்து, வெயிலால் உலர்ந்து, பசியால் வருந்திய புலவர் அங்கிருந்த மெல்லிய மஞ்சத்தில் படுத்துறங்கிவிட்டார். சேரமான் வந்தான்; மஞ்சத்தில் உறங்கிய அறிஞரைக் கண்டு நெஞ்சம் குளிர்ந்தான். அவர் நன்றாக உறங்குமாறு வெண்சாமரம் எடுத்து வீசுவானாயினன். சேரன் உள்ளத்தில் அமைந்த தமிழார்வம் இதனால் தெள்ளிதின் விளங்குகின்றதன்றோ? வாள் எடுத்து, மாற்றார் தலைகளை வீசிய கைகளால் சேரமான் புலவர்க்குச் சாமரம் வீசினான். தகடூர்க் கோட்டையைத் தகர்த்த சேரன், தமிழ்ப் புலமைக்குத் தாழ்ந்து பணி செய்வானாயினான். ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழ் இன்பம்- இரண்டாவது பகுதி....
பத்மாவதி சரித்திரம் – நூல் அறிமுகம்
‘நாவல்‘ எனப்படும் புதினம் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமாகி நூறாண்டு ஆகிறது; ஆங்கில இலக்கியத்தின் தாக்கத்தால் புதிய உரைநடையில் நெடுங்கதைகளை வடிப்பது தமிழிலும் துவங்கியது. அந்த வகையில் தமிழின் முன்னோடி நாவலாக, அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் விளங்குகிறது. தமிழ் நாவல்கள் பட்டியலில் மூன்றாவது நாவலான இந்நூல், தரத்தில் நூறாண்டு கடந்தும் முதன்மை வகிப்பது, மாதவையாவின் சமகால நோக்கிற்கு உதாரணம். தமிழ் இலக்கிய உலகில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்ட அ.மாதவையாவின் முதல் நாவலான பத்மாவதி சரித்திரம், மூன்று காலகட்டங்களில் மூன்று பாகங்களாக எழுதப்பட்டது. இதில் முதல் இரு பாகங்களே பெரும்பாலான பதிப்பாளர்களால் வெளியிடப்பட்டுள்ளன. காவ்யா பதிப்பகம், இதுவரை வெளியாகாமல் இருந்த, முற்றுப்பெறாத மூன்றாவது பாகத்தையும் இணைத்து செம்மையான பதிப்பாக வெளியிட்டுள்ளது. மாதவையாவின் சமுதாய நோக்கு, இலக்கிய பரிச்சயம், சீர்திருத்தச் சிந்தனை, மெல்லிய நகைச்சுவை உணர்வு ஆகியவை நாவல் முழுவதும் விரவிக் கிடப்பதைக் காண முடிகிறது. பழமையின் பிடியில் சமுதாயம் தத்தளித்த காலத்தில், விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், பெண்ணுரிமைகளை வலியுறுத்தி துணிவுடன் நாவல் எழுதிய அ.மாதவையா இன்றைய எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக விளங்குகிறார்....
ரா.பி.சேதுப்பிள்ளையின் ‘தமிழ் விருந்து’: பகுதி-1
ரா.பி.சேதுப்பிள்ளை (1896- 1961), தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர் எனப் பன்முகம் கொண்ட படைப்பாளி. தமிழ் இலக்கியத்தில் ஆழங்காற்பட்ட புலமை கொண்ட இவர் மேடைச் சொற்பொழிவிலும், கட்டுரை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். தமிழின் எழுத்து நடை வளர்ச்சியில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் கொண்டு வந்தவர் இவரே. சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம்’ என்னும் நூலுக்கு சாஹித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. கவியோகி சுத்தானந்த பாரதியார், ரா.பி.சேதுப்பிள்ளையை “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” என்று பாராட்டினார். அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத் தொடர் மூன்றையும் உரைநடைக்குள் கொண்டுவந்த சேதுப்பிள்ளையின் பேச்சாற்றலைப் பாராட்டித் தருமபுர ஆதீனம் 1950ஆம் ஆண்டு ‘சொல்லின் செல்வர்’ என்னும் விருதினை வழங்கியது. அவரது ’தமிழ் விருந்து’ நூல் இங்கு 4 பகுதிகளாக வெளியாகிறது....
அரவிந்தரின் உத்தர்பாரா பேருரை
1908இல் அனுசீலன் சமிதியைச் சேர்ந்த குடிராம் போஸும், பிரஃபுல்ல சாகியும் ஆங்கிலேய அதிகாரி கிங்ஸ்ஃபோர்டைக் கொல்ல முயன்றனர். இந்த வழக்கில் குடிராம் போஸ் கைதானார்; பிரஃபுல்ல சாஹி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இவ்வழக்கு ‘அலிப்பூர் சதி வழக்கு’ என்று பெயர் பெற்றது. இந்த வழக்கில் பிரதானக் குற்றவாளிகளாக அரவிந்தர், அவரது தம்பி உள்பட 38 பேர் கைது செய்யப்பட்டனர். எனினும், இவ்வழக்கில் பிற்பாடு அரவிந்தர் விடுதலையானார். பரீந்திர கோஷ் உள்பட பலர் பலவேறு சிறைத் தண்டனைகளைப் பெற்றனர்; குடிராம் போஸ் தூக்கு தண்டனை பெற்றார். இதுவே இந்தக் குற்ற வழக்கின் சாரம். இவ்வழக்கில் 1908 மே 2-இல் கைது செய்யப்பட்ட அரவிந்தர், 1908 மே 5 முதல் 1909 மே 6 வரை அலிப்பூர் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கபட்டிருந்தார்; அங்கு பல சித்ரவதைகளை அனுபவித்தார். எனினும், இவ்வழக்கில் அரவிந்தர் மீதான குற்றச்சாட்டை அரசுத் தரப்பால் நிரூபிக்க இயலாததால் அவர் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு 1909 மே 30இல் உத்தர்பாரா என்ற நகரில் தனது ஆதரவாளர்கள் கூட்டிய கூட்டம் ஒன்றில் அரவிந்தர் உரை நிகழ்த்தினார். அதுவே, புகழ்பெற்ற ‘உத்தர்பாரா பேருரை’ என்று அழைக்கப்படுகிறது. விடுதலை வீரரான அரவிந்தர் ஆன்மிகவாதியாக மலர்ந்ததன் பின்னணியை அவரே இந்த உரையில் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்ல, ‘சநாதன தர்மமே தேசீயம்’ என்ற அறைகூவலையும் அரவிந்தர் இந்த உரையின் இறுதியில் தெரிவித்திருக்கிறார்.
அன்னிபெசண்ட் அம்மையாரும் மகாகவி பாரதியும்
பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த அயர்லாந்து மாதான அன்னிபெசன்ட் அம்மையார் (1857 அக். 1 - 1933 செப். 20), இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் பெரும் பங்கு ஆற்றியவர். மகாகவி பாரதிக்கு, அன்னிபெசன்ட் அம்மையார் மீது ஆரம்பத்தில் மேலான அபிப்பிராயம் இல்லை. என்ன இருந்தாலும் அவர் ஓர் ஆங்கில மாது என்ற எண்ணமே இருந்தது. தவிர அவரது தியாஸபிகல் ஸங்கம் மீதும் பாரதிக்கு நல்லெண்னம் இருக்கவில்லை. எனவே ஆரம்பக் காலத்தில் அவரை கடுமையாக விமர்சித்திருக்கிறார். எனினும், அன்னிபெசன்ட் அம்மையாரின் பாரதம் மீதான அபிமானத்தை பாரதி மதித்திருக்கிறார். தனது எழுத்துகளில் அவரைப் பாராட்டவும் செய்கிறார். பாரதியின் தேசபக்தியும், நமது நாட்டுக்கு அன்னிபெசன்ட் அம்மையாரால் ஆகும் லாபமென்ன என்ற எண்ணமும் தான் அவர் மீதான கருத்துகளில் வெளிப்படுகின்றன....
அரவிந்தர் தனது மனைவிக்கு எழுதிய கடிதம்
1901 ஏப். 30-இல் அரவிந்த கோஷ்- மிருணாளினி போஸ் திருமணம் நடைபெற்றது. அரசு அதிகாரியும் செல்வந்தருமான பூபால் சந்திர போஸின் மூத்த மகள் மிருணாளினி. அப்போது அவருக்கு வயது 14 மட்டுமே; அரவிந்தரின் வயது 28. இவர்களது இல்லற வாழ்வு நீண்ட நாள் நிலைக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்ட அரவிந்தரால் மற்றையோர் போல வாழ முடியவில்லை. கல்வியாளரான தனது கணவர் அரசுக்கு எதிராகப் போராடுவதை அவரது மனைவியால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்த அரவிந்தரால் மனைவிக்கு நேசத்தைக் காட்ட முடியவில்லை. இதனால் இருவரிடையே மனக்கசப்பு நேரிட்ட வேளையில், அரவிந்தர் தனது மனைவி மிருணாளினிக்கு 1905 ஆக. 30 இல் எழுதிய கடிதம் இது…
பிற நாடுகள் குறித்த பாரதியின் பாடல்கள்
எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் விடுதலை வேண்டும் என்ற உலகளாவிய நோக்கம் கொண்டதாக இருந்தது. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற புலவனின் வழிவந்தவர் அல்லவா? அவரது உலகம் தழுவிய பார்வைக்கு, பிற நாடுகள் மீது அவர் பாடிய இந்த நான்கு கவிதைகளும் உதாரணம். அந்த நாடுகள்: 1 இத்தாலி, 2 பெல்ஜியம், 3. ரஷ்யா, 4. பிஜி தீவுகள். சுதந்திர இத்தாலியை நிறுவப் போராடிய மாவீரர் மாஜினியின் சபதம், ஜெர்மனியிடம் வீழ்ந்தாலும் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய பெல்ஜியத்துக்கு வாழ்த்து, கொடுங்கோலன் ஜாரின் அரசை வீழ்த்திய ரஷ்யப் புரட்சியால் பெருமிதம், பிஜித் தீவுகளில் கரும்புத் தோட்டத் தொழிலாளர்களாக அவதிப்படும் ஹிந்து ஸ்திரீகளுக்காகக் கண்ணீர் என்று - இக்கவிதைகளில் மகாகவி பாரதியின் அதியுயர் மானுடம் வெளிப்படுகிறது.
பாரதியின் தேசியத் தலைவர்கள் மீதான பாடல்கள்
மகாகவி பாரதி தமது அரசியல் குருவாக மதித்த பெருந்தலைவர்களை வாழ்த்திப் பாடிய பாடல்கள் இவை. ‘தேசிய கீதங்கள்’ பகுப்பில், ‘தேசீயத் தலைவர்கள்’ என்ற் உள்பகுப்பில் இடம் பெற்றுள்ள 9 கவிதைகள் இவை. அந்நாளில் தமது நலன் கருதாமல் வாழ்வையே நாட்டுக்கு அர்ப்பணித்த பெரியோரை மட்டுமே மகாகவி பாரதி பாடி இருப்பது, அவர்தம் எண்ணத் துணிவையும் கொள்கைப் பற்றையும் வெளிப்படுத்துகிறது. இதோ அக்கவிதைகள்....
‘புதிய ருஷ்யா’ கவிதையும் கவிஞரின் தீர்க்கதரிசனமும்
ரஷ்யாவில் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றத்தை மாகாளியின் கடைக்கண் பார்வையால் நிகழ்ந்த யுகப் புரட்சி என்று மகாகவி பாரதி பாடியபோதும், அங்கு நிகழ்ந்த வன்முறைகளில் அவருக்கு விருப்பம் இல்லை. ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து கிடைத்த செய்திகளும் அவருக்கு உவப்பாக இல்லை. ஆட்சி அதிகாரம் மிக்கவர்கள் நடத்தும் வன்முறைகளால் நாட்டு மக்களுக்கு பயனேதும் கிடைக்காது என்று அவர் தீர்மானமாக நம்பினார். எனவேதான், சுதேசமித்திரனில், தனது சந்தேகங்களை ஒரு கட்டுரையாகவும் வடித்தார். மகாகவி பாரதியின் தீர்க்கதரிசன வார்த்தைகள் இப்போது உண்மையாகி விட்டதைக் காண்கிறோம். ஆயுதபலத்தாலும், வன்முறையாலும் நாட்டு மக்களை அடக்கி வைத்திருந்த கம்யூனிஸக் கூட்டம் 1990களில் சிதிலமடைந்து வீழ்ந்ததை உலகம் கண்டது. பல்வேறு நாடுகளை ஆயுதபலத்தால் சேர்த்து ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யக் குடியரசு (யுஎஸ்எஸ்ஆர்) என்ற வல்லரசாகத் தோற்றம் அளித்த ரஷ்யா பலகூறுகளாக இன்று சிதறிவிட்டது. அங்கு இப்போது லெனின் சிலைகள் உடைக்கப்படுகின்றன; கம்யூனிஸம் ஒரு கெட்ட வார்த்தையாகிவிட்டது....
அழகிய இந்தியா – நூல் அறிமுகம்
பேரறிஞர் தரம்பால் தாம் எழுதிய - அழகிய மரம், அழகிய நதி, அழகிய போராட்டம், அழகிய கிராமம் ஆகிய 4 நூல்களின் சாராம்சத்தை எளிய நடையில் அந்தந்தப் புத்தகங்களுக்கான முன்னுரையாக எழுதி இருக்கிறார். ’அழகிய இந்தியா’ என்ற இந்தப் புத்தகம் அப்படியான முன்னுரைகளின் தொகுப்புதான். தரம்பால் தொகுத்த ஆவணங்களை வேறு யாரேனும் ஒருவர் சுருக்கி எழுதுவதைவிட அவர் எழுதிய முன்னுரைகளின் தொகுப்பான இந்த நூல் அதிகாரபூர்வ ஆவணத்துக்கான முழு மதிப்புடனே உருவாகியிருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் பிரிட்டிஷார் வருவதற்கு முந்தைய பாரதம் எப்படி உயரிய நிலையில் இருந்தது என்பதை பிரிட்டிஷாரின் ஆவணங்களைக் கொண்டே நிரூபித்த மகத்தான சாதனையின் கையடக்க அறிமுகம் இது.
பாரதியின் தேசிய இயக்கப் பாடல்கள்
மகாகவி பாரதி எழுத்தாளர் மட்டுமல்ல; அரசியல் செயற்பாட்டாளரும் கூட. பாலகங்காதர திலகர் தலைமையிலான காங்கிரஸ் தீவிரவாதிகள் பிரிவில் தீவிரமாக இயங்கியவர்; அதற்காக, மிதவாதிகளை (நிதானக் கட்சியார் என்று பாரதி சுட்டுவார்) கடுமையாக விமர்சித்தவர்; தமிழகத்தில் வ.உ.சி.யுடன் இணைந்து போராட்டங்களை நடத்தியவர். தமது அரசியல் இயக்கத்துக்காக, அவர் இயற்றிய பாடல்கள் ‘தேசிய இயக்கப் பாடல்கள்’ என்ற தலைப்பில் பகுக்கப்பட்டுள்ளன. பாரதியின் தேசிய கீதங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள இக்கவிதைகளின் எண்ணிக்கை 9. இவை அவரது தேசபக்திக் கனலை வெளிப்படுத்தும் தூய கவிதைகளாக விளங்குகின்றன.
தமிழ்த் திரைப்படப் பாடல்களில் மகாகவி பாரதி
மகாகவி பாரதியின் எழுத்துலகம் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சேக்கிழான் இப்பகுதியில் தொடர்ந்து எழுத உள்ளார். பாரதியின் கவிதைகள், இதழியல் பணிகள், மொழிபெயர்ப்புகள், காவியங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்த விரிவான ஆய்வுக் களமாக இத்தொடர் அமையும். இக்கட்டுரை, ’பாரதியின் விஸ்வரூபம்’ தொடரின் முதல் பகுதி. தமிழ்த் திரையுலகில், மகாகவி பாரதியின் கவிதைகள் பெற்றுள்ள இடத்தை விளக்குகிறது இக்கட்டுரை...
பாரதியின் சுதந்திர கீதங்கள்
மகாகவி பாரதியின் பாடல்களில் தேசிய கீதங்கள் பகுப்பில் இடம்பெற்றுள்ள - சுதந்திர உணர்வைப் பறைசாற்றும் 7 கவிதைகள் இங்கு தனியே தொகுக்கப்பட்டுள்ளன.
பாரதியின் வசன கவிதை – 6
தமிழ் இலக்கிய வரலாற்றில் புத்திளமை வாய்ந்த புதுக்கவிதைகளுக்குத் தோற்றுவாய் ஆனவர் மகாகவி பாரதி. அவரது வசன கவிதைகளே தற்போதைய புதுக்கவிதைகளுக்கு கங்கோத்ரி. ”சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை” என்று கவிதைக்கு இலக்கணம் வகுத்த பாரதியின் புதிய வழித்தடம் இந்த வசன கவிதை. அவர் எழுதிய 6 பெரும் வசன கவிதைகள் இங்கு தொடராக வெளியாகின்றன. அவரது ஆறாவது வசன கவிதையான ‘விடுதலை’ இங்கு ஆறாவது - நிறைவுப் பகுதியாக மலர்கிறது...
அந்தமான் சிறை அனுபவங்கள் – நூல் அறிமுகம்
விடுதலைப் போராட்ட வீரர்களுள் பிற எல்லோரையும் விட கொடிய தண்டனைகளையும் கடும் சித்ரவதைகளையும் பெற்றவர் வீர சாவர்க்கர் என்று அழைக்கப்படும் விநாயக தாமோதர சாவர்க்கர் (1883- 1966).... பூனாவில் சாவர்க்கர் துவங்கியிருந்த அபிநவ பாரத இயக்கம் நடத்திய பல வன்முறை நிகழ்வுகளையும், லண்டனில் நிகழ்ந்த ஆங்கிலேய அதிகாரி கொலையையும் விசாரித்த ஆங்கிலேய அரசின் நீதிமன்றம், சாவர்க்கருக்கு இரட்டை ஆயுள் தண்டனையை (50 ஆண்டுகள்- 1910- 1960) அளித்து, தீவாந்திர (நாடுகடத்தல்) தண்டனையாக அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.... தனது தண்டனைக் காலத்தை, சிறைவாச அனுபவங்களை அவரே பின்னாளில் ’கேசரி’ வார இதழிலும், ’ஷ்ரத்தானந்த்’ என்ற பத்திரிகையிலும் தொடராக எழுதினார். அவை பின்னர் தொகுக்கப்பட்டு 1927இல் எனது அந்தமான் சிறை அனுபவங்கள்’ என்ற நூலாக வெளிவந்தது. இந்த நூலின் பல பகுதிகள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக இருந்ததால் தடை செய்யப்பட்டது. 1946இல் இந்தத் தடை விலகியது..... அந்த நூல் தற்போது வழக்குரைஞர் எஸ்.ஜி.சூர்யாவால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அழகிய நூலாக கிழக்குப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. நூலின் பல பக்கங்களைப் படிக்கும்போது கண்களில் நீர்திரண்டு படிக்க முடியாமல் செய்து விடுகிறது. எத்தனை வேதனைகள்! எவ்வளவு அவமானங்கள்! கொடுமைகளின் கூடாரமான அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைந்த கஷ்டங்களை அவருள் இருக்கும் எழுத்தாளனும் தத்துவ அறிஞரும், கவிஞரும், அற்புதமான மனிதரும் பல கண்ணோட்டங்களில் காண்பதை அவரது எழுத்தே புலப்படுத்துகிறது.