-பல்பீர் புன்ச்

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் (ஜனவரி 11) சோமநாதர் கோயில் வரலாற்றைப் பற்றி பேசும்போது, ‘சோமநாத மகாதேவர் கோயிலில் ஏற்றப்பட்டுள்ள கொடியானது இந்தியாவின் வலிமையையும் செயலாற்றலையும் உலகுக்கு பறைசாற்றுவதாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டார். ‘ கால சுழற்சியில் , அடிப்படைவாத ஆக்கிரமிப்பாளர்கள் வரலாற்றுப் பக்கங்களில் புதைந்து போனார்கள், ஆனால் சோமநாதர் கோயில் இன்றும் கம்பீரமாக உயர்ந்து நின்று கொண்டிருக்கிறது’ என்று அவர் தன் உரையில் கூறினார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு “மெக்காலே மனோபாவத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுப்பேன்” என்று அவர் உறுதிப்படத் தெரிவித்த போது, “அவர் சரியாகச் சொல்கிறார் ஆனால் முழுமையாகச் சொல்லவில்லை”யென நான் எழுதியிருந்தேன். இந்தியாவின் அறிவுலக பக்கவாதத்திற்கு காரணம் தாமஸ் மெக்காலேவின் தாக்கம் மட்டுமல்ல, அதற்கு இணையான அளவு காரல் மார்க்ஸின் கருத்தியல் வாரிசுகள் நமது அரசியல், கல்வி, சமூக தளங்களை ஆக்கிரமித்துள்ளதும் தான்.
இப்போதும் கூட, ‘சோமநாத் தன்மான பர்வம்’ விழாவில் பிரதமர் மோடி முழு உண்மையையும் கூறாமல் சற்று முன்னதாகவே நின்று விட்டார். அவர், “மத அடிப்படைவாத ஆக்கிரமிப்பாளர்கள் வரலாற்றுப் பக்கங்களில் புதைந்து போக சோமநாதர் கோயில் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது” என்று மிகச் சரியாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் பாபர், ஔரங்கசீப் உடல்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட இருந்தாலும், அவர்களது நச்சு மனப்பான்மை அவர்களோடு அகற்றப்பட்டதா? அல்லது அவர்களது மதவெறியும் வெறுப்புணர்வும் அழுத்தி வைக்கப்பட்டதா? இதற்கான விடை மறைவாக அல்ல, தற்போதைய உலக நிகழ்வுகளில் வெளிப்படையாகத் தெரிகிறது.
1993 மும்பை தாக்குதல், 2001 ஆப்கானிஸ்தானில் இருந்த பாமியான் புத்த சிலைகள் தகர்ப்பு, அமெரிக்காவில் செப்டம்பர் 9/ 11 (இரட்டை கோபுரம் தகர்ப்பு), இந்திய நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகளின் தாக்குதல், மும்பையை அதிர வைத்த 26/ 11 தாக்குதல் என்று மனிதகுலத்துக்கு எதிரான பயங்கரவாத குற்றச் செயல்களின் நீண்ட பட்டியல் இஸ்லாமிய மதவெறிக் கருத்தியலால் எழுதப்பட்டுள்ளது.
2024 ஜெர்மனியில் மெக்டெபர்க் தாக்குதல், 2025 அக்டோபரில் பிரிட்டனில் நடந்த தாக்குதல் (ஜிகாத் – அல் – ஷாமி), 2025 மார்ச் மாதம் பெகல்காம் , 2025 நவம்பர் மாதம் தில்லி தற்கொலைப் படை தாக்குதல், 2005 டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நிகழ்ந்த தாக்குதல் என அண்மை நிகழ்வுகள் எல்லாம் அந்த புற்றுநோய் போலப் பரவும் கருத்தியல் இன்னமும் உலகிலிருந்து அகற்றப்படவில்லை என்பதையே காட்டுகிறது.
இஸ்லாத்தின் பெயரால் ஏன் இந்த அர்த்தமற்ற வன்முறைகள் நடக்கின்றன? இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் ஏன் மீண்டும் மீண்டும் இந்தியாவைத் தாக்கி, சோமநாதர் கோயில் உட்பட அதன் பிரம்மாண்டமான கோயில்களைத் தகர்த்து தூளாக்கினார்கள்? இவை எல்லாம் செல்வத்தைக் கொள்ளையடிப்பதற்காகத்தான் என்றும், இதில் மதக்கண்ணோட்டம் இல்லை என்றும், இடதுசாரி வரலாற்றாளர்கள் நம்மை நம்பச் சொல்கிறார்கள்.
1398இல் இந்தியா மீது படை எடுத்த தைமூர் தனது நூலான ‘துசுக் – இ – தைமூரி’ யில், “நான் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றவே இந்துஸ்தானத்தின் மீது படையெடுத்தேன். முகமதிய மதத்தின் எதிரிகளான அந்த அவநம்பிக்கையாளர்களுக்கு எதிரான மதப் போர் நடத்துவது. அதன்மூலம் மறுமையில் வெகுமதி பெறுவேன். இரண்டாவது நோக்கம் அந்த அவநம்பிக்கையாளர்களின் செல்வத்தையும் உடைமைகளையும் கொள்ளையிடுவது. ஒரு முகமதியனுக்கு தாய்ப்பாலில் எப்படி உரிமை இருக்கிறதோ, அதே போன்ற பிறப்புரிமை அந்த அவநம்பிக்கையாளர்களின் செல்வத்தைக் கொள்ளையிடுவது புனிதப் போரில் ஈடுபடுபவர்களுக்கு உள்ளது” என்று எழுதி உள்ளார்.
வரலாற்றாளர் ஆபிரகாம் எராலி ‘கடும் சீற்றத்தின் காலம்’ என்ற நூலில், கஜினியின் அரியணையில் முகம்மது அமர்ந்த போது கிலாபத் (இஸ்லாமிய உலகின் தலைவர்) வாழ்த்துக்களும் மரியாதைகளும் அவருக்கு வழங்கப்பட்டன . அப்போது கஜினி முகம்மது, “ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் விக்கிரகங்களை வணங்குபவர்களுக்கு (இந்துக்களுக்கு) எதிரான ஜிகாத் செய்வேன்” என்று சூளுரைத்தார். அவரது 32 ஆண்டு கால ஆட்சியில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட முறை இந்தியாவின் மீது படை கொண்டு போர் தொடுத்தார். சுல்தானுக்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. ஒன்று, விக்கிரக ஆராதனை செய்பவர்களைக் கொல்வது. மற்றது, கொள்ளையடிப்பது . இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இரண்டும் பரஸ்பரம் இட்டு நிரப்புபவை மட்டுமின்றி, கொடும் போரில் ஈடுபடத் தூண்டுபவை” என்று குறிப்பிட்டுள்ளார்.
கஜினி முகம்மது பலமுறை இந்தியாவைத் தாக்கியுள்ளார். தோற்கடிக்கப்பட்ட இந்து மன்னன் ஈடாக ஏராளமான செல்வத்தைத் தர முன்வந்த போது கஜினி முகம்மது சொன்னார், “முகம்மதிய மதத்தின்படி விக்கிரக வழிபாட்டாளர்களின் வழிபாட்டுத் தலங்களைத் தகர்ப்பது புனிதச் செயலாகும். அவ்வாறு செய்பவர்களுக்கு நியாயத்தீர்ப்பு நாளின் போது சிறப்பான வெகுமதி கிடைக்கும். நான் ஹிந்துஸ்தானத்தில் உள்ள எல்லா விக்கிரகங்களையும் முற்றிலுமாக அழித்து அகற்ற முனைந்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
இந்துக்களும் முஸ்லிம்களும் இந்தியாவின் மக்கள்தொகையில் 95 சதவீதமாக உள்ளார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக உள்ளன. இங்கு வாழும் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சமமாகவும் சமாதானமாகவும் வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் அவர்கள் அப்படி வாழவில்லை. காரணம் வரலாற்றுச் சுமை அவர்களை பிரித்துப் போட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பூர்வகுடிகள் இஸ்லாத்தை தங்களுக்கு இணையான சமயமாக எதிர்கொள்ள முடியவில்லை. மாறாக அரசியல் ஆதிக்கமும் படைவலிமையும் கொண்டவர்களாக, தங்கள் மீது ஆக்கிரமிக்க படையெடுத்து வந்து வெற்றி பெற்று, தங்கள் மானம், மரியாதையை அழிப்பவர்களாக, தங்கள் அடையாளத்தையும் சமய நம்பிக்கையையும் துடைத்தெறிபவர்களாகத்தான் எதிர்கொள்ள வேண்டியிருந்தார்கள்.
சுமார் 800 ஆண்டுகள் ஏறத்தாழ இந்தியா முழுமையும் காபீர், குபுர் போன்ற கோட்பாடுகள் உட்பட இஸ்லாமியக் கருத்தியலை ஏற்றுச் செயல்படுத்தும் இஸ்லாமிய அரசை பரம்பரையினரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. கோயில்கள் இடிக்கப்பட்டன. மதம் மாற மறுத்தவர்கள் கொல்லப்பட்டனர். ஜிசியா வரி விதிக்கப்பட்டது. முஸ்லிம் அல்லாதவர்களை திட்டமிட்ட ரீதியில் கொடுமைப்படுத்தும் ஆட்சி முறைமைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டன.
பன்மைத்துவம் கொண்டதாகவும் மதமாற்றம் செய்யாததாகவும் அனைவரையும் அரவணைப்பதாகவும், இந்து நாகரிகம் சீரியதாக உள்ளது. அதற்கு எதிர்மாறாக இஸ்லாம் மதமாற்றம் செய்வதன் மூலம் விரிவடைவதாக, தன்னை மட்டுமே முன்னிறுத்துவதாக, தன்னுடைய மத நம்பிக்கையை ஏற்றுக் கொள்பவர்கள் அல்லாதவர்கள் என்று மனித இனத்தைப் பிரிப்பதாக உள்ளது.
பல முஸ்லிம்கள் அமைதியாக வாழ விரும்பினாலும், அவர்களது இறையியல் கருத்து இஸ்லாமிய மதத்தைச் சேராத மற்ற மதத்தினரை தங்களுக்கு சமமாக ஏற்றுக் கொள்வதை தடை செய்கிறது. ‘மற்ற மதத்தினரை சமமாக ஏற்றுக் கொள்வது இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு எதிரானது’ என்று அவர்கள் நம்புகிறார்கள்.
இந்த மதக்கோட்பாடு ஆழமான பிரிவினையை மக்கள் மனதில் ஏற்படுத்துகிறது. தங்கள் மானம், மரியாதையை இழந்து, உயிர் வாழ்வதற்கே போராட வேண்டி இருந்ததை இந்துக்கள் நினைவில் கொண்டுள்ளார்கள் . அதேவேளையில், பல முஸ்லிம்கள் அந்தக் கொத்தளிப்பான கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்ளும் தவறைச் செய்கிறார்கள் . அதனால் அடிக்கடி ஆக்ரோஷமான நிலைப்பாட்டை மேற்கொள்கிறார்கள். வரலாற்றைப் பற்றிய இந்த நுட்பமான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாததால் சேர்ந்து வாழ்வது இயலாததாக உள்ளது.
இந்தியாவில் நல்லிணக்கமும் ஒத்திசைவும் பரஸ்பரம் புரிதலின் அடிப்படையில் இல்லாமல் ஒரு பக்கத்தினரின் சகிப்புத் தன்மையாக இருக்கிறது. இடதுசாரிகளின் திருகலான வரலாற்றுச் சித்தரிப்பால் இரு மதத்தினர் இடையே மோதலும் குழப்பமும் தூண்டப்படுகிறது. கடந்த கால அநியாயங்களை மாற்ற முடியாது என்னும்போது, அதை பெருமையாகக் கருதுவதும் கொண்டாடுவதும் ஏன்?
கடந்த காலமானது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் அழிக்க அனுமதிக்கக் கூடாது. இந்தியாவில் மட்டுமே இந்தத் தடுமாற்றம் இருப்பதாக நினைக்க வேண்டாம். உலகில் உள்ள பல நாடுகள் வரலாற்றுச் சுமையால் அழுத்தப்பட்டுள்ளன. அது அவர்களது நிகழ்கால உறவில் நீண்ட கருநிழலை ஏற்படுத்தி உள்ளது. பல நாடுகள் சமரசம் செய்துகொள்ள முயன்றுள்ளன . ஆனால் இந்தியா எவ்வாறு செய்யவில்லை.
இந்தியாவில் உள்ள இந்து, முஸ்லிம்கள் நல்லிணக்கம் கொள்ளாமல் தடுப்பது எது? நல்லிணக்கத்திற்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் பிளவு நீடிக்கிறது. அதேவேளையில், ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மதம் கடந்த அரசியல், சுய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மதச்சார்பின்மை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல இந்து மதமும் முன்னகர்ந்துள்ளது. இஸ்லாம் அதுபோன்றதொரு மதக் கருத்தியல் ஒப்பீட்டையும் வரலாற்று பூர்வமான மறு அவதானிப்பையும் நிகழ்த்தவில்லை.
இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளும் நிறுவனங்களும் மதரீதியான ஆக்கிரமிப்பையும் வெற்றியையும் இன்றுவரை அதிகாரப்பூர்வமாக மறுக்கவில்லை. விக்கிரக உடைப்பு பற்றி மன்னிப்புக் கோரவில்லை. இந்தியாவை படையெடுத்து ஆக்கிரமித்த பூமி என்கிறார்களே தவிர, இது நாகரிகங்களின் தொட்டில் என்று அங்கீகரிப்பதில்லை. அதற்குப் பதிலாக, இஸ்லாமிய மதவெறியர்களும் இடதுசாரிகளும் தொடர்ந்து இந்துக்களையும் சீக்கியர்களையும் உசுப்பேற்றும் விதத்தில் கஜினி முகம்மது, கோரி முகம்மது, பாபர், ஔரங்கசீப், திப்பு சுல்தான் போன்றவர்களைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நாகரிகம் குறித்த இந்தக் கேள்விக்கு முடிவு கட்டுவதற்காகத்தான் 1947இல் பிரிவினை நடந்தது. ஆனால் அதற்கு முடிவு கட்டப்படவில்லை. பாகிஸ்தான் இஸ்லாமிய நாடானது. இந்தியாவில், பிரிவினைக்குக் காரணமான, அதே இரு தேசக் கொள்கை இன்றும் உயிர்ப்புடன் உள்ளது. அதிகாரப்பூர்வமான அரசியலாக இல்லை, ஆனால் அந்த பிரிவினை மனப்பான்மை சமுதாயக் கெட்டிலை இன்னமும் கொதிநிலையிலேயே வைத்திருக்கிறது.
இந்தியாவைத் துண்டாட வேண்டும் என்ற கருத்தியல் நோக்கம் கொண்ட கம்யூனிஸ்டுகள் இந்த மதவெறியை நியாயப்படுத்தியும் முன்னிறுத்தி வருகின்றனர் . தங்களை ‘செக்யூலர்’ (மதச்சார்பற்றவர்கள்) என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ் உட்பட மற்ற கட்சிகள் முஸ்லிம்களை வாக்கு வங்கியாக பயன்படுத்திக் கொண்டு, அந்த சமுதாயத்திற்குள் திட்டமிட்ட ரீதியில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை வளர்த்து வருகின்றன. இந்த நிலையில் நல்லிணக்கத்தை எங்கிருந்து தொடங்குவது? முடிவு கட்டப்படாததால் கடந்த காலம் நிகழ்காலத்துக்குள் ஊடுருவி ரணமாக்கிக் கொண்டுள்ளது.
இஸ்லாமிய நம்பிக்கையாளர் – அது அல்லாதவர் என்று மனித இனத்தைப் பிரித்து வெறுப்பை வளர்க்கும் மதயியல் சிந்தனைகள், இறையியல் கோட்பாடுகள் குறித்து நேர்மையான முறையில் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும். வரலாற்று ரீதியான திரிபுகள், மறுப்புகள், உண்மைக்கு மாறான சித்தரிப்புகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள தவறான பிம்பங்கள் அகற்றப்பட வேண்டும்.
நன்றி: தி பயோனீர் நாளேடு (15.01.2026) கட்டுரையாளர், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷனின் முன்னாள் தலைவர். தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
$$$