வாழைப்பழக் குடியரசாகி வரும் அமெரிக்கா  

-திருநின்றவூர் ரவிகுமார்

உலகில் கம்யூனிசம் விழுந்துவிட்டது. அதன் மறுபக்கமாக இருக்கும் முதலாளித்துவமும் வீழ்வது தவிர்க்க முடியாதது. அந்த வீழ்ச்சியை  ட்ரம்ப் துரிதப்படுத்தி வருகிறார் என்று பொருளாதார நோக்கர்கள் கருதுகிறார்கள் . போகப் போக அது உறுதியாகத் தெரிய வரும்.

அண்மையில் நண்பர் ஒருவர் சிறிய காணொளியை அனுப்பி இருந்தார். அது அமெரிக்க நாடாளுமன்றக் குழு விசாரணை பற்றியது. அதில், ஒரு பெண் உறுப்பினர் நீண்ட வாழைப்பழத்தை கையில் எடுத்துக்காட்டி  “இதை அமெரிக்க மக்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுகிறோம். இதற்கு இறக்குமதி வரியை அதிகரித்து உள்ளீர்களா ? அப்படி என்றால் ஏன் அதிகரித்தீர்கள் ?”  என்று காட்டமாகக் கேட்கிறார்.

உட்கருத்து

U S going bananas என்று எழுதி ஒரு ஸ்மைலியையும் சேர்த்து பதில் அனுப்பினேன். கதலி/ வாழைப்பழக் குடியரசு –  பலவீனமான பொருளாதாரமும்  வலுவற்ற அரசும் கொண்ட நாடாக அமெரிக்கா மாறி வருகிறது என்று அதற்கு பொருள்.

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று , அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தினசரி வெளியிடும் அதிரடி அறிவிப்புகள். இரண்டு , கருங்கல் ஜல்லி ஏற்றிப் போகும் லாரி மெர்சிடெஸ் பென்ஸ் கார் மீது மோதினால் ……? பாக். ராணுவ தளபதியின் சவடால்.

 பாக். சவடால்

இரு நாடுகள் இடையே மோதல் ஏற்பட்டு அதில் வெற்றி பெற்ற நாட்டுத் தளபதிக்கு பாராட்டும் பதவி உயர்வும் கிடைப்பது புரிந்துகொள்ளக் கூடியது. ஆனால் உதை வாங்கித் தோற்ற நாட்டுத் தளபதிக்கு பதவி உயர்வு என்றால் அது பாகிஸ்தானில் தான்.

பஹல்காம் பயங்கரவாதச் செயலுக்கு பதிலடியாக இந்தியா (ஆபரேஷன்) சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானை அடித்து நொறுக்கியது. பாகிஸ்தானில் அமெரிக்கா வைத்துள்ள அணு ஆயுதக் கிடங்கு வாசலை இந்திய ஏவுகணைகள் தாக்கி அழித்தன என்று நம்பத் தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்களும் செய்தித்தாள்களும் எழுதின. அதனால்தான் பாகிஸ்தானின் கையை முறுக்கி மோதலை நிறுத்த மண்டியிட வைத்தது அமெரிக்கா என்பது இந்திய செய்தியாளர்களின் உலகத்தில் உலா வரும் செய்தி.

ஆனால்,  தோற்று தாக்குதலை நிறுத்தும்படி கேட்டுக் கொண்ட பாகிஸ்தான் நாட்டு தளபதி அசீம் முனீர் தனக்குத்தானே  ‘பீல்ட் மார்ஷல்’ பட்டத்தையும் பாராட்டையும் சூட்டிக் கொண்டார். இது உலக நாடுகளிடையே  நகைப்பை ஏற்படுத்தியது. அது பற்றி எல்லாம் பாகிஸ்தான் கவலைப்படவில்லை. அவ்வளவு சுரணை  கிடையாது அந்த நாட்டுத் தலைவர்களுக்கு. (இந்தியாவிலும் அப்படி பாரத ரத்னா வாங்கியவர்கள் உண்டு).

 முதல் காரணம்

தனக்குத் தானே பட்டத்தை சூட்டிக் கொண்ட முனீர் தன்னை மண்டியிட வைத்த மகானுபாவர் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று கூறுவதுதான் நகைச்சுவை.  அதற்கும் அடுத்த கட்டம் ஒன்று உண்டென்றால், அது வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் அன்னா கெல்லியின் பேச்சு.  அந்தப் பெண்மணி,   “அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டுமென பாகிஸ்தான் தளபதி அசீம் முனீர் சொன்னதைப் பாராட்டி அவரை விருந்துக்கு அழைத்தோம்” என்று முனீர் (தோல்விக்கு பின்) முதல் முறை அமெரிக்காவுக்கு அழைத்ததற்குக் காரணம் சொன்னார்.

அதைவிட உச்சபட்ச கோமாளித்தனம்,  “போர் நிறுத்தத்திற்கு காரணம் அமெரிக்கா அல்ல என்று கூறும் மோடி  ‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பொய் சொல்கிறார்’ என்று சொல்ல முடியுமா?” என்ற ராகுலின் பேச்சு. இவரது தந்தை ராஜீவ் காந்தி என்ன செய்தார் என்பதை மறந்துவிட்டார். ஒரு விருந்து. அதில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அமெரிக்க அதிபருடன் கையில் கோப்பையுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாகிஸ்தானின் அதிபராக இருந்த ஜியா உல் ஹக் வருகிறார். அமெரிக்க அதிபரிடம் ஒருவரை அறிமுகப்படுத்தி,   ‘இவர் தான் ஆசாதி காஷ்மீரின் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர்) பிரதமர்’ என்கிறார். ராஜீவ் காந்தி எப்படி பதில் வினையாற்றுவது என்று தெரியாமல் திகைத்தார்; அந்த இடத்தை விட்டு நழுவிச் சென்றார். இதை அவரே ஒரு நேர்காணலில்,   “பாகிஸ்தான் அதிபரின் பேச்சைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.  அப்போது எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று புரியாமல் திகைத்தேன் . அங்கிருந்து விலகிச் சென்றேன்” என்று  சொல்லி உள்ளார்.

 பென்ஸ் காரும் ஜல்லி லாரியும்

அடுத்த சில வாரங்களில் முனீர் மீண்டும் அமெரிக்கா சென்றார். இந்த முறை சென்ற போது அமெரிக்க ராணுவத்தின் மத்திய தலைமைத் தளபதியான மைக்கேல் குரில்லா பணி ஓய்வு பாராட்டு நிகழ்ச்சியில் ( டெக்ஸாஸில் நடந்தது) கலந்து கொண்டார். அதில்தான் முனீர்,  “எங்களிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. ஏவுகணைகளுக்கும் பஞ்சமில்லை, நிறைய இருக்கின்றன. எங்கள் நாட்டின் மீது யாராவது கை வைத்தால் எங்களோடு சேர்ந்து பாதி உலகத்தையும் அழித்து விடுவோம்” என்று கொக்கரித்தார்.

அப்போதுதான்,  “மெர்சிடஸ் பென்ஸ் கார் போல இந்தியா உள்ளது. அது குவாரிகளில் கருங்கல் ஏற்றி செல்லும் லாரி (பாகிஸ்தான்) மீது மோதினால் யாருக்கு சேதம் விளையும் என்பது எல்லோருக்கும் தெரியும்” என்று நக்கலாகப் பேசினார்.

அந்த விருந்தில் அமெரிக்காவின் கூட்டாளியான இஸ்ரேல் ராணுவ பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருப்பார்கள். இந்தியா சார்பாகக் கலந்து கொண்டதாக இதுவரை செய்தி இல்லை. இஸ்ரேலுக்கும் இந்தப் பேச்சு அச்சுறுத்தலைத் தந்திருக்கும் .

 மயான அமைதி

அமெரிக்காவின் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த எவரும் இதைக் கண்டிக்கவில்லை. அவர்களது அமைதி காதைப் பிளப்பதாக உள்ளது. அவரைக் கண்டித்தால் பாகிஸ்தான் மண்ணை அமெரிக்கா பயன்படுத்த விடாமல் அந்நாடு செய்துவிடுமோ, அதன்பிறகு  ஆசியாவில் தான் கால் வைப்பதற்கு இடம் இல்லாமல் போய்விடுமோ என்ற தயக்கம். அவரை ஆதரித்தாலோ அவரது அணு ஆயுத அச்சுறுத்தலை சரியென ஏற்றுக் கொள்வதாகவும் இந்தியாவுடனான நட்புக்கு எதிரானதாகவும் கருதப்படும்.

ஆனால், அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் தளபதி மைக்கேல் ரூபின் பாகிஸ்தான் தளபதி முனீரை வன்மையாகச் சாடியுள்ளார்.  “பாகிஸ்தான் ஒரு பொறுக்கி நாடு. முனீர் கோட்டு போட்ட ஒசாமா பின் லேடன். அவரது விசாவை உடனடியாக தடை செய்ய வேண்டும். பாகிஸ்தானின் நேட்டோவில்  இல்லாத நட்பு நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்துவிட்டு, அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும். பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்” என்று மைக்கேல் ரூபின் என்று சொல்லி உள்ளார்.

அமெரிக்க மண்ணிலிருந்து பாகிஸ்தான் அணு ஆயுத அச்சுறுத்தலை விடுவதும் , அதைக் கண்டிக்காமல் அமெரிக்கா அமைதி காப்பதும் அதன் புவியரசியல்  யுத்தி என்று சிலர் கருதலாம்; வாழைப்பழக் குடியரசு என்றும் சொல்லலாம்.

இரண்டாவது காரணம்

ட்ரம்பின் அதிரடி அறிவிப்புகள். முதலில் 25 சதவீதம் வரி விதிப்பு. பிறகு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் மேலும் 25 சதவீதம் வரி விதிப்பு என்ற மிரட்டல். ட்ரம்ப் ஆசிய நாடுகளிலேயே  மிக அதிகமாக வரி விதித்தது நட்பு நாடான இந்தியா மீதுதான்; எதிரியான சீனா மீதல்ல.

நெருங்கிய நண்பர் என்று மோடி சொன்னாரே,  அடுத்த முறை ட்ரம்ப் சர்க்கார் என்று மோடி தேர்தல் பிரசாரம் செய்தாரே ,  இப்போ து?  என்று மோடி எதிர்ப்பாளர்கள் நக்கல் அடிக்கிறார்கள். அவர்களது கேலி நியாயமற்றது என்று கூறி விட முடியாது. ஏனெனில் அதெல்லாம் பொதுவெளியில் எல்லோரும் பார்க்கும்படி நடந்தது.

 டிரம்பின் முந்தைய ஆட்சியில்

ஆனால் , முதல் முறை ட்ரம்ப ஆட்சியின் போது நமக்கு கசப்பான அனுபவங்கள்தான் கிடைத்தன என்கிறார் பங்கஜ் சரண். இவர் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் ரஷ்யாவில் இந்திய தூதராகவும் பணியாற்றியவர் .

ட்ரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க டேவிட்சன் பைக்குகளுக்கு (இருசக்கர வாகனங்கள்) இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும். போர்ன்பான் விஸ்கிக்கு இறக்குமதி வரி குறைக்க வேண்டும் என்று இந்தியாவின் கையை முறுக்கி வரியைக் குறைத்தார். தீநுண்மீ (கொரோனா) காலத்தில் வேறு நாட்டுக்கு நாம் அனுப்பிய தடுப்பூசியை நடுவழியில் மறித்து கடத்திக் கொண்டு போனார்.  ‘அமெரிக்காவுக்கு தடுப்பூசியைத் தராவிட்டால்….’ என்று மிரட்டினார்.  “அமெரிக்கப் பொருள்களுக்கு மிக அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா. அது வரி விதிப்பில் அரசன் (Tax King )” என்று சாடினார். இதெல்லாம் தெரிந்தும் ஊடகங்கள் நெருங்கிய நண்பர் என்றாயே , தேர்தல் பிரசாரம் செய்தாயே –  என்றெல்லாம் வெற்று அரசியல் பேசுகின்றன.

 ட்ரம்ப் சொல்வது என்ன?

ரஷ்யாவில் இருந்து பெட்ரோலிய எண்ணெய் வாங்காதே. ரஷ்யாவில் இருந்து ஆயுதங்கள் வாங்காதே. இந்திய விவசாயத் துறையை அமெரிக்காவுக்கு திறந்து விடு. பால் வளத் துறையில் அமெரிக்காவை அனுமதி என்கிறார்.

ரஷ்யா – உக்ரைன் போரின் காரணமாக ரஷ்யா குறைந்த விலைக்கு எண்ணெயை விற்றது. ஆனால் அதன் மீது வர்த்தகத் தடை வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ரஷ்யா பெட்ரோலிய எண்ணெய்க்கு விலையும் நிர்ணயமும் செய்யப்பட்டது. உலக நாடுகள் நிர்ணயித்த விலையில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெயை வாங்கியது.

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெயை வாங்கியது.  “யாராவது அதை வாங்கித்தானே ஆக வேண்டும்? இல்லையென்றால் விலை ஏறி விடும். எனவே அவர்கள் வாங்கி சுத்திகரித்து மற்றவர்களுக்கு விற்றார்கள். இதில் தவறு எதுவும் இல்லை. தடை திட்டத்தை அப்படித்தான் வடிவமைத்தோம். அதன்படியே அவர்கள் நிறைவேற்றித் தந்தார்கள்” என்று 2004 மே மாதத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை கொள்கை பற்றிய கருத்தரங்கில் எரிக்  கார்சிட்டி கூறியுள்ளார். இவர் ஜோ பைடன் காலத்தில் இந்தியாவில் தூதராக இருந்தவர்.

இதைத்தான் நமது அயலுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கூறினார் .  “உலக நாடுகளின் அனுமதியோடுதான் நாங்கள் வாங்கினோம். அது மட்டுமல்ல,  நாங்கள் ஒரு மாதத்தில் இறக்குமதி செய்ததை நீங்கள் ஒரு வாரத்தில் இறக்குமதி செய்துள்ளீர்கள். இதுவும் எங்களுக்கு தெரியும் . அப்படி இருக்கையில் இந்தியா எண்ணெயை இறக்குமதி செய்ததன் மூலம் ரஷ்யா – உக்ரைன் போரை தொடர்ந்து நடத்துகிறது என்று குற்றம் சாட்டுவது எப்படி சரி?” என்று கேட்டு உலக நாடுகளைத் திணறடித்தார் ஜெய்சங்கர்.

அது மட்டுமல்ல,   “ரஷ்யாவிடம் இருந்து யுரேனியம், புளோடோனியம்,  விவசாய உரங்கள், நிக்கல், இரும்பு ஆகியவற்றை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மற்ற நாடுகளும் இறக்குமதி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்” என்றார். ஜெய்சங்கர்.  நம்மூர் எதிர்க்கட்சிகளும் இவரது பதிலால் திகைப்படைந்தன.

 அமெரிக்காவின் வலு எது?

உலக யுத்தக் காலத்தில் இருந்தே  போர் விமானங்கள், ஆயுதங்கள், பயணியர் விமானங்கள், உயர் தொழில்நுட்பம் ஆகியவற்றில் அமெரிக்கர்கள் வல்லவர்களாக உள்ளார்கள். இரண்டாம் முறை ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு மோடியுடன் நடந்த சந்திப்பின்போது எப்-35 போர் விமானங்களைத் தருவதாக அறிவித்தார். இந்தியா அதைக் கேட்காமலே தருவதாக அவர் அறிவித்தார்.

அந்த அதிநவீன விமானங்களை இங்கிலாந்து வாங்கி உள்ளது. அதுதான் மூன்று மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் பழுதாகி நின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்பு அதே எப் -35 ரக விமானம் ஜப்பானில் பழுதாகி நின்றது. ட்ரம்பின் அதிரடி அறிவிப்புகளுக்கு பதிலடியாக இந்தியா  ‘விலை உயர்ந்த அந்த போர் விமானத்தை வாங்க மாட்டோம்’ என்று அறிவித்து விட்டது.

நாம் ஏற்கனவே அமெரிக்க போயிங் விமான நிறுவனத்திடம் 450 விமானங்களை வாங்க ஆர்டர் போட்டதை மறந்து விட்டாரா  ட்ரம்ப்? என்று கேட்கிறார் மோகன்தாஸ் பை. இவர் ஒரு பொருளாதார வல்லுனர் . பதிலடியாக நாம் அதை ரத்து செய்தால் என்னவாகும் என்று கேள்வி எழாமல் இல்லை.

 விவசாயம்

அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய விவசாயத் துறையைத் திறந்து விட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். மன்மோகன் சிங் ஆட்சியின் போது மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் அனுமதிக்கப்பட்டது; பி.டி.பருத்தி அனுமதிக்கப்பட்டது. விளைவாக மகாராஷ்டிரத்தில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்தன.

மான்சாண்டோ நிறுவனத்தின் மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதித்ததன் விளைவுகளைப் பார்த்த பிறகு (ஆர்எஸ்எஸ் சார்புடைய விவசாய சங்கமான) பாரதிய கிசான் சங்கம் அதை கடுமையாக எதிர்க்கிறது. காந்தியவாதியான டாக்டர் வந்தனா சிவா பொதுவெளியில் எதிர்ப்பைக் கூர்மைப்படுத்தி வருகிறார்.

 பால் வளம்

அதேபோல பால்வளத் துறையில் அமெரிக்கா நுழைய முயல்கிறது. அவர்களது மாடுகளுக்கு மாமிசக் கழிவுகளை உணவாகக் கொடுக்கிறார்கள். பால் அதிகரிப்பதற்காக ஊக்க மருந்து கொடுக்கிறார்கள் . இதெல்லாம் அந்த நாட்டின் மாடுகளின் தன்மையையும் பாலின் தன்மையையும் மாற்றியுள்ளன.

நம் நாட்டில் பசு தெய்வமாக வணங்கப்படுகிறது. பசுவின் பால் தாய்ப்பாலுக்கு நிகராக கருதப்படுகிறது பசுவினம் (எருமை, எருது) தூய சைவம். பால் சைவ உணவு.

வெண்மைப் புரட்சி மூலம் பால் வளம் நம் நாட்டில் பெருகக் காரணம் குரியன் வர்க்கீஸ். அவர்தான் காங்கிரஸ் ஆட்சியில், குஜராத்தில் கூட்டுறவு பால் உற்பத்தி மூலம் மாநில பொருளாதரத்தையே மாற்றிக் காட்டியவர். அதைப் பின்பற்றி நம்மூர் ஆவின் முதல் எல்லா மாநிலங்களிலும் கூட்டுறவுத் துறை மூலம் பால் வளமும், கால்நடை வளர்ப்பும், பால் பொருள்களும் அதிகரித்தன. இந்தியர்களின் ஆரோக்கியத்திலும் பொருளாதாரத்திலும் பெரிய மாற்றத்தை அது ஏற்படுத்தியது.

இந்தியாவில் பெரும் மாற்றங்கள் வந்துள்ளன . இருந்தாலும்,  இன்றும் பெருவாரியான மக்கள் விவசாயம், அது சார்ந்த தொழில்களில்தான் ஈடுபட்டு உள்ளனர். பிரதமர் மோடி அண்மையில்,  “விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பதில் நான் உறுதியாக உள்ளேன். இதற்காக பெரும் விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். விவசாயிகளையும் விவசாயத்தையும் காக்க எந்த விலையையும் கொடுக்கத் தயார்” என்று பொதுக்கூட்டத்தில் சூளுரைத்துள்ளார். இது ட்ரம்புக்குக் கொடுக்கப்பட்ட பதிலாகத் தெரிகிறது.

 வாஜ்பாய் ஆட்சியில்

பிரதமர் வாஜ்பாயின் அனுமதியோடு, தோஹாவில் நடந்த உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில், முரசொலி மாறன் அமெரிக்காவை கடுமையாக எதிர்த்துப் பேசினார் . அப்போது  இந்தியாவை சீனா ஆதரித்தது. அதேபோல்- இப்போது பிரதமர் மோடி ஆட்சியில், அமெரிக்காவுக்கு எதிராக சீனா இந்தியாவின் நிலையை ஆதரிக்கிறது.

ரஷ்யா – உக்ரைன் போர் பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ரஷ்ய அதிபர் புத்தினும் பேசியுள்ளார்கள் . அது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரதமர் மோடியுடன் பேசியுள்ளார். பிறகு தன் எக்ஸ் தளத்தில்,   “நான் இந்திய பிரதமருடன் நீண்ட நேரம் பேசினேன். இரண்டு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு பற்றியும் ஒட்டுமொத்த ராஜாங்க ரீதியான செயல்பாடுகள் பற்றியும் பேசினோம். பிரதமர் மோடி கனிவான, ஆறுதலான பேச்சின் மூலம் எங்கள் நாட்டு மக்களுக்கு ஆதரவளித்தார். அமைதி திரும்புவதற்கு நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தார். அமைதிப் பேச்சில் தனது நிலையை உக்ரைன் தான் மேற்கொள்ள வேண்டும். வேறு வகையாக நடந்தால் அது பலன் அளிக்காது என்று அவர் சொன்னார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 ட்ரம்பின் பிரச்னையும் ஆசையும்

ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரஷ்யா – உக்ரைன்  போர் நிறுத்தம் பற்றி அலாஸ்காவில் அமெரிக்க அதிபரும் ரஷ்ய அதிபரும் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர் . பேச்சுவார்த்தைக்கு முன்பு, ரஷ்யா போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று ட்ரம்ப் எச்சரித்திருந்தார். இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தது இந்தியா தான் என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இச்சந்திப்பு சுமுகமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருந்தது என்றும், அந்த இரு தலைவர்களின் அடுத்த சந்திப்பு ரஷ்யாவில் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்ததாக ஜெலன்ஸ்கி அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் செய்தி வந்துள்ளது.

ட்ரம்புக்கு சில பிரச்னைகளும் ஆசைகளும் உள்ளன. அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க வேண்டும். உள்ளூர் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.

பற்றாக்குறையைக் குறைக்க இறக்குமதிப் பொருள்களுக்கு அதிகமான வரி விதிப்பு என்கிறார். அதன்மூலம் அமெரிக்காவில் விலைவாசி ஏறிவிடும். உள்ளூர்காரர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க இந்தியா உட்பட பல நாட்டினரை வெளியேற்ற வேண்டும் என்கிறார். ஆனால் அமெரிக்காவில் உள்ள உயர் தொழில்நுட்பத் துறையில் சுமார் 50 சதவீதம் பேர் இந்தியர்கள். எனவே , என்ன செய்வது என்று தெரியாமல் சலுகைகளும் பிரம்படியும் என்று மாறி மாறி பேசுகிறார். அவர் கஷ்டங்களை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஏற்றுக் கொள்ள வேண்டியது இல்லை.

அதேபோல, முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா போல தனக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமென்ற ஆசை . அது அவரை அலைகழிக்கிறது.

 இனி …..

மிகப் பெரிய ஜனநாயக நாடாக சொல்லப்படும் அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தான் தளபதி அசீம் முனீரின் பயங்கரவாதப் பேச்சைக் கண்டிக்க முடியாத நிலை ,  பொருளாதாரச் சரிவு மற்றும் உலக விவகாரங்களில் அமெரிக்காவுக்கு மதிப்பு குறைந்து வருவது ஆகியவற்றைப் பார்க்கும் போது அமெரிக்கா கதலிக் குடியரசாக மாறி வருவதாகக் கருதலாம்.

உலகில் கம்யூனிசம் விழுந்துவிட்டது. அதன் மறுபக்கமாக இருக்கும் முதலாளித்துவமும் வீழ்வது தவிர்க்க முடியாதது. அந்த வீழ்ச்சியை  ட்ரம்ப் துரிதப்படுத்தி வருகிறார் என்று பொருளாதார நோக்கர்கள் கருதுகிறார்கள் . போகப் போக அது உறுதியாகத் தெரிய வரும்.

$$$

Leave a comment