-சியாம்லால் யாதவ்
தலித் மக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருப்பதாகக் காட்டிக்கொள்ள விரும்பி அண்மையில் ராகுல் காந்தி உதிர்த்த முத்து ஒன்று, காங்கிரஸ் கட்சியின் வேடத்தை வெளிப்படுத்தக் கிடைத்த வாய்ப்பாகிவிட்டது. இதோ, பத்திரிகையாளர் திரு. சியாம்லால் யாதவ், காங்கிரசின் பொய்முகத்தை தோலுரிக்கிறார்...

அண்மையில் லக்னோவில் நடந்த அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி “இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்” என்று கூறினார்.
நேரு சுமார் 17 ஆண்டு காலம் பிரதமராக இருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியில் பல முக்கிய முடிவுகளைத் தீர்மானித்தார். அவர் காலத்தில் உ.பி. யில் நான்கு முதல்வர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து பதவி வகித்தனர். அவர்கள் அத்தனை பேரும் முற்பட்ட ஜாதியினர். 1989 வரை உ.பி.யில் காங்கிரஸ் கட்சி தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
நேரு பிரதமராக 1947 லிருந்து 1964 வரை இருந்தபோது காங்கிரஸ் உ.பி.யில் நான்கு முதல்வர்களை நியமித்தது. அவர்கள்: கோவிந்த வல்லப் பந்த் (பிராமணர் 1954 -60), சம்பூர்ணானந்த் (காயஸ்தர்- 1954-60), சந்திர பானு குப்தா (வைசியர் – 1960-63,1967, 1969), சுசித்ரா கிருபளானி (சிந்தியை மணந்து கொண்ட காயஸ்தர் 1963-67) .
நேரு காலத்தில் உ.பி.யின் முதல்வராக முயற்சித்தவர்கள் புருஷோத்தமதாஸ் தாண்டன், ஸ்ரீ பிரகாஷா , விஜயலட்சுமி பண்டிட், கமலாபதி திரிபாதி (இவர் 1971 முதல்வரானார்). இவர்கள் எல்லோரும் கூட முற்பட்ட ஜாதியினர்.
காங்கிரஸ் தலைமை உ.பி.யில் அடிக்கடி முதல்வரை மாற்றியது. ஆனால் அப்போதெல்லாம் அவர்கள் சமூக நீதியை அல்லது அனைத்து சமூகத்தினருக்குமான பிரதிநிதித்துவத்தைக் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தியே வந்தனர். கட்சியில் குழு மோதல் நேருவுக்கு கவலையளித்த போதிலும், அவரும் கூட அரசின் உயர் பதவியில் பிற்பட்ட வகுப்பினருக்கு இடம் தர வேண்டுமென நினைத்தது இல்லை.
கான்ஷிராம் நேரு காலத்தைய அரசியலை கடுமையாகச் சாடியுள்ளார் . நாட்டில் உள்ள பகுஜன்களை உயர்த்தும், அதிகாரத்திற்கு இட்டுச் செல்லும் அவரது அரசியல் பயணத்தில் நேருவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேருவின் அரசியலை விமர்சித்து அவர் எழுதியுள்ள ‘சம்ஸ்ச்சா காலம்’ (எடுபிடிகளின் காலம்) என்ற நூல் பூனா ஒப்பந்தத்தின் (பூனா ஒப்பந்தம் என்பது மகாத்மா காந்திக்கும் பி.ஆர்.அம்பேத்கருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம். இதன் மூலம் இரட்டை வாக்குரிமை என்ற கோரிக்கை மாறி தொகுதி இடம் ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது) பொன்விழாக் காலத்தில் 1982 செப்டம்பர் 24 இல் வெளியானது.
கான்ஷிராமின் அரசியல், அம்பேத்கரின் கருத்துக்களை மையம் கொண்டதாகவும் அதே வேளையில் காந்தி, நேரு மற்றும் காங்கிரசை ஆட்டுவித்த உயர் ஜாதியினர் ஆதிக்கத்தை கூர்மையாக விமர்சிப்பதாகவும் இருந்தது . சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் திணித்த ஆட்சி அதிகார முறைமையில், கான்ஷிராம் ‘பகுஜன்கள்’ என்று அழைத்தவர்களுக்கு – பட்டியலினத்தவர், பழங்குடியினர், இதர பிற்பட்ட வகுப்பினர் , சிறுபான்மையினர்- தலைவர்கள் உருவாகாதபடியும் உயர் ஜாதியினரின் எடுபிடிகளால் சுரண்டப்பட்டார்கள் என்றும் அவர் அதில் விமர்சித்துள்ளார்.
நேரு காலத்தில் அதிகார அமைப்பை உயர் ஜாதியினர், குறிப்பாக பிராமணர்கள், ஆதிக்கம் செய்தனர் என்று கான்ஷிராம் வாதிடுகிறார். ‘எடுபிடிகளின் காலம்’ நூலில், 1957 நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தெடுக்கப்பட்டவர்களில் 47 சதவீதத்தினர் பிராமணர்கள். எஸ்.சி. / எஸ்.டி. ஒதுக்கீடு செய்யப்பட்ட 22.5 சதவீதத்தில் நேருவின் பெருந்தன்மை’யால் அவரது ‘எடுபிடி’களே தேர்வாகினர் என்று குறிப்பிட்டுள்ளார்.
1980 பொதுத் தேர்தலைப் பற்றி அந்த நூலில் குறிப்பிடும் போது, அவர் காங்கிரஸ் தலைவராக இந்திரா காந்தி இருந்த போது கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் 36 சதவீதத்தினர் பிராமணர்கள், 15 சதவீதத்தினர் ஷத்ரியர்கள். அப்போது காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஜெகஜீவன் ராம் பிரதமராக விரும்பினார். ஆனால் அவரை இந்திரா காந்தி புறமொதுக்கினார் என்று எழுதியுள்ளார்.
கான்ஷி ராம் 1984 ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கரின் பிறந்த நாளின் போது பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்தார். எஸ்.சி, எஸ்.டி, இதில் பிற்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் இடையே காங்கிரஸின் செல்வாக்கை வீழ்த்த அந்தக் கட்சி கவனத்தைச் செலுத்தியது. ‘ஜிஸ்கி ஜித்னி சங்கியா பாரி , உஸ்கி உத்னி இஸ்செதாரி’ (மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் ) என்ற அவரது கோஷம் நாடெங்கிலும் எதிரொலித்தது.
இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில், அவர்களே அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாகவும் இருந்தனர், உ. பி.யின் முதல்வராகப் பதவியேற்ற ஆறு தலைவர்களும் முற்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களே. அவர்கள்: கமலாபதி திரிபாதி (பிராமணர்) , எச்.என்.பகுகுணா (பிராமணர்) , என்.டி.திவாரி (பிராமணர்) , வி.பி.சிங் (தாக்குர்) , ஸ்ரீபதி மிஸ்ரா (பிராமணர்), வீர் பகதூர் சிங் (தாக்குர்).
மேற்கண்ட பத்து காங்கிரஸ் முதல்வர்களில் ஒருவர் கூட தனது ஐந்தாண்டு காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை. தில்லிக்கும் லக்னோவுக்கும் இடையே ஏற்பட்ட உரசலில் உ.பி. அரசில் முதல்வர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு கொண்டே இருந்தனர்.
கடந்த தசாப்தங்களில் உ.பி.யில் முதல்வரான இதர பிற்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் எவரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்தவர்கள் இல்லை. ராம் நரேஷ் சிங் (ஜனதா கட்சி) , முலாயம் சிங் யாதவ் (சமாஜ்வாடி) , கல்யாண் சிங் (பாஜக), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி) ஆகியோர் காங்கிரசால் முதல்வரானவர்கள் அல்ல.
உ.பி. முதல்வரான ஒரே ஒரு தலித் தலைவர் மாயாவதி மட்டுமே. அவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்தார். அவரை கான்ஷி ராம் தனது அரசியல் வாரிசாக ஆக்கியிருந்தார்.
- நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (23.03.2026)
- தமிழில் : திருநின்றவூர் ரவிகுமார்
- கட்டுரையாளர் இந்தியன் எக்ஸ்பிரஸில் மூத்த இணை ஆசிரியராக உள்ளார்.
22.03.26
$$$