-கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்
கிறிஸ்தவர்கள் அதிகமுள்ள பகுதியில் வசிக்கும் அனுபவம், கவிஞர் திரு. லக்ஷ்மி மணிவண்னன் அவர்களின் அனுபவப் பதிவில் தெறிக்கிறது. அவரது அறிவுரையை காதுள்ளவர்கள் கேட்கட்டும்!

இந்து மதம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், வழிபாடுகள் போன்றவற்றைப் பற்றிய விமர்சனங்கள் எழும்போது இங்குள்ள முற்போக்கு முகமூடி அணிந்த கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் கூட்டுச் சேர்ந்து தாக்குகிறார்கள். அந்த இனிய தருணங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். அதற்காகத்தான் அவர்கள் முற்போக்குகளாக இருக்கிறார்களோ என சந்தேகிக்கும் அளவிற்கு!
எனக்கு இந்து சமயம் சார்ந்த நிறுவனங்களில் விமரிசனம் இல்லாமல் இல்லை. ஆனால் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோரிடம் இருந்து இத்தகைய சந்தர்ப்பங்களில் வெளிப்படும் காழ்ப்புணர்ச்சி நெருடலாக இருக்கிறது. நிறுவனங்களில் ஏற்படும் சிக்கல்கள், இடர்பாடுகள் எல்லா மதம் சார்ந்த நிறுவனங்களிலும் உண்டு. இஸ்லாமிய,கிறிஸ்தவ நிறுவனச் சிக்கல்கள் வரும்போது இந்துக்கள் இவ்வளவு தூரத்திற்கு தங்கள் முற்போக்கு அங்கியுடன் வந்து மோதுவது குறைவு, அல்லது கிடையாது .
அமிர்தானந்தமயி பற்றி, பங்காரு பற்றி இன்னும் பலரைப் பற்றி தொடர்ந்து வேற்று மதத்தினர் காட்டுகிற தாக்குதல் ஆர்வம் ஒரு நோய்க்குறி என்பதில் சந்தேகமே இல்லை. ஒவ்வொரு விதமான மத பிரிவுகளும் அதனதன் தளத்தில் சில பங்களிப்புகளைச் செய்து கொண்டிருப்பவை. குறைகள் எல்லா இடங்களிலுமே உண்டு. நான் இவர்களிடம் கேட்க விரும்புகிற கேள்வி, உங்கள் மத நிறுவனங்களின் சங்கதிகளில் குறைகள் எதுமே கிடையாதா? எனில் நீங்கள் எருமை மாடுகள் என்பதே அர்த்தம். ஏன், இந்து மதம் சார்ந்த நிறுவனங்களின் குறைகளில் இவ்வளவு தூரத்திற்கு உற்சாகம் அடைகிறீர்கள்?
ஜக்கி போன்றவர்களை நான் முழுமையாக ஆதரிக்கிறேனா இல்லையா என்பது பிரச்சினையே இல்லை. ஜக்கியாகட்டும், அமிர்தாவாகட்டும், பங்காருவாகட்டும், அவர்கள் ஆன்மிகத்தின் சில பண்புகளை ஜனநாயகப்படுத்தியிருக்கிறார்கள் என்பதே உண்மை. மக்கள் ஒன்றும் முட்டாள்கள் கிடையாது. ஆன்ம ஞானத்தின் சில பகுதிகளை மக்கள் உள்ளத்தில் உணராமல் ஒருபோதும் கூடுவதில்லை. இவர்கள் பக்கமாக சாய்வதுமில்லை; யாரையும் குருவாகக் கொள்வதும் இல்லை.
பிற மத இடர்பாடுகளின் போது உற்சாகம் கொள்வது நல்ல பண்பும் இல்லை; முற்போக்கும் இல்லை; சகிப்புத் தன்மையும் இல்லை. பிற சமயத்தைச் சார்ந்த தோழர்கள் இந்து மதத்தை மட்டுமே அடிவயிறு வரைக்கும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறீர்களே, அதனைச் செய்யாதிருங்கள். அதற்கு எந்த மனோபாவம் காரணமாக இருந்தாலும் கூட, அது நல்லொழுக்கம் இல்லை.
எங்கள் பகுதிகளில் மிகுந்த இடையூறையும், உபத்திரவத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்கள் இந்த பெந்தெகொஸ்தே சபையின் சில பிரிவினர்தான். மிகப் பெரிய அத்துமீறிகள் இவர்கள். இவர்களின் சமயம் பிறரிடம் அத்துமீறுவதையும் கடமையாகவே போதிக்கிறது. அத்துமீறுவதை ஒருவர் ஏற்றுக் கொள்ளவில்லையெனில், அவரிடம் தொடர்ந்து அத்துமீறும் மனோநிலையில் இருப்பவர்கள் இவர்கள். அப்படித்தான் படித்து வைத்திருக்கிறார்கள். ஆர்.சி., சி.எஸ்.ஐ போன்ற பிற கிறிஸ்தவப் பிரிவுகளில் கூட இவர்களுக்கு ‘வல்லூறுகள்’ என்றே பெயர்.
ஒருமுறை சபரிமலைக்கு விரதமிருந்து மலைக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறேன். ஒரு பெந்தகொஸ்து வீட்டிற்குள் நுழைந்தார். உடனடியாக எனது தலையில் கைவைத்து ஜெபம் செய்யவும் முயன்றார். “ஐயா நான் வைகுண்டசாமிகளின் குடும்பத்தைச் சார்ந்தவன், தற்போது ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதமிருந்து கொண்டிருக்கிறேன். பிறிதொரு சமயத்தில் வாருங்கள். மேலும் எனக்கு ஜபம் செய்யும் நேரத்தில் பிறர் யாரேனும் ஒருவரை முயன்று பாருங்கள். அது உங்களுக்கு பலன் அளிக்கக் கூடும். அதுவே நல்லது” என்றேன்.
அவர் விடவில்லை. உட்கார்ந்து ஜபம் செய்யத் தொடங்கினார். நான் வீட்டை விட்டு வெளியேற்றும் படியாயிற்று. அவர்களில் பலரின் வணிகம் மதம்தான் என்பதும், அவர்களின் யோக்கியத்தைகளும் அறிந்தவைதான். ஆனாலும் கூட அவர்களும் ஒன்றுமில்லாமல் ஒன்றும் செய்து கொண்டிருக்கவில்லை என்பது எனக்குத் தெரியும்.
மக்களை அவர்களும் ஏதோ ஒரு விதத்தில் இறைநிலையுடன் தொடர்பு கொள்ளவே உதவுகிறார்கள். அவர்களுடைய அத்துமீறல்தான் பிரச்சினையே தவிர, அவர்களையும் புறக்கணிக்க இயலாது. ஏதோவொரு விசேஷமான காரியத்தை அவர்களும் மக்களிடம் ஏற்படுத்தவே செய்கிறார்கள். அவர்களை பற்றிய என்னுடைய எண்ணம் இது. காரணம் வேறொன்றுமில்லை. மக்கள் ஒருபோதும் காரணமற்ற விஷயங்களில் எதன் நிமித்தமும் போய் கூடுவது கிடையாது. அதற்கான அவசியம் ஒருபோதும் மக்களுக்குக் கிடையாது என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு.
எந்த மதத்தையும் யார் வேண்டுமாயினும் விமர்சிக்கலாம் என்பது உண்மைதான். அதற்காக இந்து மதம் சார்ந்த விஷயங்களில் மட்டுமே விமர்சனத்தை முன்வைத்து உங்கள் உற்சாகத்தைக் கட்டி எழுப்பிக் கொண்டிராதீர்கள் கிறிஸ்தவர்களே, முஸ்லீம்களே! நெருடலாக இருக்கிறது.
உங்கள் முற்போக்கு அங்கி பல சமயங்களில் கிழிந்து தொங்குவது பற்றிய சுரணையே உங்களுக்கு இல்லை. இந்துக்களையும் சகித்துக் கொள்ளப் பழகுங்கள். இது ஒரு நினைவூட்டல். மனம் திரும்புங்கள்.
$$$