–உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் டிச. 3-இல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு டிச. 1ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.
மதுரை, திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் ஆண்டு தோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது, பாதுகாப்பு காரணமாக, ஆங்கிலேய அரசு அதை தடை செய்தது. அதனால், கோயில் முன்புறம் உள்ள (மோட்ச தீபத்) தூணில் தீபம் ஏற்றப்பட்டது. அந்த நடைமுறை இதுவரை மாறவில்லை.
இதை மாற்றக் கோரியும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க உத்தரவிடக் கோரியும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம், எழுமலை, ராம. ரவிக்குமார் தாக்கல் செய்த அந்த மனு விவரம்:
திருப்பரங்குன்றம் மலையில் டிச. 3-இல் கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்பாடு செய்ய, சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினேன். மலை உச்சியிலுள்ள, பழமையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சட்ட ரீதியாக தடை இல்லை. தர்காவில் இருந்து, 15 மீட்டர் தொலைவில் அது உள்ளது. பதிலாக, மலையிலுள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அது சட்டவிரோதம். தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அறநிலையத் துறை தரப்பு மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ‘பாரம்பரியமாக உச்சிப்பிள்ளையார் கோயில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுகிறது. தவறான உள்நோக்கில், ஆதாரம் இல்லாமல் ராம.ரவிக்குமார் மனு செய்துள்ளார்’ என வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், அனைத்துத் தரப்பு வாத பிரதிவாதங்களைக் கேட்டறிந்தார். திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு நேரில் சென்றும் பார்வையிட்டார்.
விசாரணை முடிவில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ‘மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம்’ என நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இந்து சமயநிலையத் துறை மற்றும் வக்பு வாரியத்தின் கருத்துக்களைக் கேட்ட பிறகு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
நீதிமன்ற உத்தரவை தமிழக அரசும், இந்து சமய அறநிலயத் துறையும் திருக்கோயில் நிர்வாகமும் நிறைவேற்றுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
$$$
5 thoughts on “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்!”