என்.ஜி.ஓ.க்களின் பணத்தைப் பின்தொடர்வோம்!

-பல்பீர் புன்ச் 

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பெறும் வெளிநாட்டு நிதியுதவி  பல பிரச்னைகளுக்கு வித்திடுகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் திரு. பல்பீர் புன்ச் அவர்களின் ஆங்கிலக் கட்டுரை இங்கு தமிழில் வெளியாகிறது.

வருமான வரித்துறை தன் வரம்பை மீறிச் செயல்படுவதாக  ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தித்தாள் தலையங்கம் (‘The long arm’, 2024 October 4) மூலமாக குற்றம் சாட்டியுள்ளது. அது தாங்கிப் பிடிக்கின்ற அரசு சாரா அமைப்புகள், என்ஜிஓ க்கள் மீதும் அதே குற்றச்சாட்டை வைக்க முடியுமே ? அவற்றில் பல எந்தக் காரணத்தைச் சொல்லி வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றார்களோ, அந்த நோக்கத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத விஷயங்களுக்கு அந்த பணத்தை மடைமாற்றி விடவில்லையா?

ஜனநாயகத்தில் குடிமை சமுதாயத்தின் செயல்பாடுகளையும் கருத்து சுதந்திரத்தையும் வருமான வரித்துறை கட்டுப்படுத்துகிறது என்கிறது அந்தத் தலையங்கம் . கோமணத்தை தலையில் கட்டிக் கொண்டுள்ளது போல இருக்கிறது இது. வெளிநாட்டு நிதி உதவி பெறும் பல என்ஜிஓ.க்கள் ஆளுங்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பின் – அரசின் முடிவுகளாக, திட்டங்களாகச் செயல்படுத்தப் படுவதைக் கெடுக்கின்றன. இது ஜனநாயக வழிமுறைகளை சிதைப்பது ஆகாதா?

சட்டப் புத்தகத்தில் நுண்ணிய எழுத்துக்களில் இருப்பதைக் கொண்டு என்ஜிஓ.க்கள் குறி வைக்கப்படுகின்றன என்கின்றது அந்த தலையங்கம். இந்த வாதமே துர்நாற்றம் வீசுவதாக இருக்கிறது. சட்டத்தினால் வலியுறுத்தப்படும் நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றியாக வேண்டும்.

என்ஜிஓ.க்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். தங்களை அரசு எப்போதும் கண்காணித்துக் கொண்டு இருக்கிறது என்ற பயம் இல்லாமல் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது அந்தத் தலையங்கம். அதாவது வெளிநாட்டு நிதி உதவி பெறும் என்ஜிஓ.க்களை கூர்ந்து கவனிக்கக் கூடாது என்கிறது அது. ஏன் கண்காணிக்கக் கூடாது? வெளிநாட்டு நிதி உதவி பெறும் என்ஜிஓ.க்களையும் இதர என்ஜிஓ.க்களையும் அரசு வெவ்வேறு விதமாக நடத்த வேண்டும் என்கிறதா இந்தியன் எக்ஸ்பிரஸ்?

கட்சி வேறுபாடுகளைக் கடந்து பல்வேறு கட்சித் தலைவர்கள் இந்த என்ஜிஓ.க்களின் செயல்பாடுகளைப் பற்றி கண்டனம் எழுப்பி உள்ளனர். 2005இல் நடந்த 18 வது கட்சி மாநாட்டில் சிபிஎம் தலைவர் பிரகாஷ் காரத்,  ‘அரசுக்கு வெளிநாட்டு நிதி உதவி என்பது ஒரு வகை.  அரசு சாரா அமைப்புகள் -என்ஜிஓ- என்கின்ற தன்னார்வ அமைப்புகளுக்கு வெளிநாட்டு நிதி உதவி என்பது வேறொரு வகை. பல என்ஜிஓ.க்களின் செயல்பாடுகளுக்கு ஏராளமாக வெளிநாட்டு நிதி உதவி வருவதைப் பற்றி நம்முடைய கட்சி தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளது. அது  போல மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் நிதி உதவி மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை மழுங்கடிப்பதற்காகவும் இடதுசாரி இயக்கங்களிடமிருந்து மக்களை விலக்கி வைப்பதற்காகவும் அளிக்கப்படுகிறது’  என்று கூறியுள்ளார்.

1984 இல் காரத் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில்,  ‘வெளிநாட்டு நிதி உதவி பெறும் எல்லா அமைப்புகள் மீதும் சந்தேக பார்வை வேண்டும். அவற்றின் நோக்கங்கள் , செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும்’ என்று எழுதியுள்ளார்.

இதுபோன்ற அமைப்புகள் மீது வருமான வரித் துறை நடவடிக்கை எடுப்பது அடிப்படை அற்றது என்றும் ‘சதி செய்யும் வெறிகொண்டு அலைபவை என்று என்ஜிஓ.க்களை சித்தரிப்பது சரியல்ல’ என்றும் தலையங்கம் கூறுவது சரிதானா? இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் ஆழ்ந்த சதி நோக்கத்துடன் அவை செயல்படுவதை 2019இல்  ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை – ‘இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் சீனாவின் பொருளாதாரம் வானுயரப் பறந்து கொண்டிருப்பது ஏன்?’ என்ற தலைப்பில் வெளியான ஆய்வுக் கட்டுரை -அம்பலப்படுத்தி உள்ளது.

அந்தக் கட்டுரையில், 1985இல் இந்தியா மற்றும் சீனாவின் தனிநபர் வருமானம் ஒரே மாதிரியாக 293 டாலராக இருந்தது. ஆனால் இப்போது சீனாவின் தனிநபர் வருமானம் 13 ஆயிரம் டாலராகவும் இந்தியா வெறும் 2700 டாலராகவும் இருக்கிறது. 2024இல் இந்தியாவின் மொத்த உற்பத்தி 4 டிரில்லியன் ஆக இருக்கும் வேளையில் ஏறத்தாழ அதைவிட ஐந்து மடங்கு அதிகமாக 18.5 டிரில்லியன் டாலராக சீனாவின் மொத்த உற்பத்தி உள்ளது.

இரண்டு அண்டை நாடுகள் இடையே ஏன் இந்த பெரிய இடைவெளி? இரண்டு நாடுகளிலும் கட்டப்பட்ட அணைகளைப் பற்றிய  ஒப்பீடு – ஒன்று இந்தியாவில் கட்டப்பட்டது. மற்றது சீனாவில் கட்டப்பட்டது – இந்தியாவை விட சீனா வேகமாக வளர்ச்சியில் தாவியதற்கான காரணத்தை விளக்குகிறது. உலகில் மிகப்பெரிய புனல் மின்சக்தி திட்ட அணையான மூன்று ஆழ்ப்பள்ளத்தாக்கு அணையை சீனா 15 ஆண்டுகளில் கட்டியது. அதைவிட மிகச்சிறிய சர்தார் சரோவர் அணையைக் கட்ட இந்தியாவுக்கு 56 ஆண்டுகளானது . ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த அந்தத் திட்டத்தினால் வளர்ச்சிக்கு எதிராகச் செயல்பட்ட பல தனிநபர்கள் பலனடைந்தனர்.

2012 பிப்ரவரி மாதம் ஓர் அறிவியல் பத்திரிகைக்கு பேட்டியளித்த அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், ‘உதாரணமாக, கூடங்குளத்தில் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அணுமின் உற்பத்தி திட்டம் பிரச்சினையில் சிக்கிக் கொண்டது. அதற்கு காரணம் அமெரிக்காவில் உள்ள என்ஜிஓ.க்கள் தான் என்று நான் கருதுகிறேன். நம் நாட்டின் மின் சக்தி உற்பத்தி அதிகரிப்பதை அவை விரும்பவில்லை’ என்று கூறியுள்ளார். எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் இந்தியாவின் திட்டத்தில் அமெரிக்க என்ஜிஓ.க்களுக்கு என்ன நாட்டம்? ஏன் அந்தத் திட்டத்தை எதிர்க்க நிதி உதவி செய்தன?

அண்மையில் , சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் சீன எல்லையில் உள்ள சாலைகளை 10 மீட்டருக்கு அகலப்படுத்த மோடி அரசு உச்ச நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியது.  ‘சிட்டிசன்ஸ் ஃபார் கிரீன் டூன்’ என்ற என்ஜிஓ அந்தத் திட்டத்தை எதிர்த்து பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகியது. பிறகு  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. சீன நாட்டு எல்லையில் சீன அரசு மேற்கொண்டு வரும் கட்டுமான நடவடிக்கைகளை பற்றிய விவரமான அறிக்கையை மத்திய அரசு சீல் இடப்பட்ட உறையிலிட்டு  உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதன் பிறகு உச்ச நீதிமன்றம் சாலை விரிவாக்கத்திற்கு சார்தாம் திட்டத்திற்கு அனுமதி அளித்தது. தீர்ப்பு அளித்த போது,  ‘பாதுகாப்பு படையினரின் அடிப்படைக் கட்டமைப்பு தேவைகளைப் பற்றி இந்த நீதிமன்றத்திற்கு இரண்டாவது பார்வையில்லை…. (அதாவது எல்லையோரங்களில் சாலை கட்டமைப்பு அவசியம்)’ என்று தன் கருத்தைத் தெரிவித்திருந்தது.

திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள விழுஞம் சர்வதேச துறைமுக திட்டம் வந்த போது உள்ளூர் மீனவர்கள் மிகப்பெரிய அளவில் அதை எதிர்த்தனர். 2022 ஆம் ஆண்டு   கேரள சட்டமன்றத்தில் மாநில முதல்வர் பினராயி விஜயன்,  ‘இப்போது நடக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை உள்ளூர் மீனவர்களால் தன்னெழுச்சியாக நடத்தப்படுவதாகக் கருத முடியவில்லை. சில பகுதிகளில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களைப் பார்க்கும் போது அவை உள்நோக்கத்துடன் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்றே கருத வேண்டி உள்ளது’ என்று குறிப்பிட்டார்.

குஜராத்தில் சர்தார் சரோவர் அணைக்கு எதிர்ப்பு, கூடங்குளத்தில் அணு மின்  உலைகள் நிறுவ எதிர்ப்பு, தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்கள், கேரளாவில் துறைமுகம் அமைக்கும் பணிகளை நிறுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், உத்தரகாண்டில் சார்தாம் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு ஆகிய எல்லாவற்றிலும் ஒரு விஷயம் பொதுவாக உள்ளது. இவை எதுவும் தன்னெழுச்சியான எதிர்ப்புகள் அல்ல. மாறாக பினராயி விஜயன் சொன்னது போல, ‘திட்டமிட்டு எழுப்பப் படுபவை’. வெளிநாட்டு நிதி உதவி பெறும் என்ஜிஓ.க்களால் எதிர்க்கப்படும் திட்டங்களைப் பட்டியலிட்டால் அது மேலும் விரிவாகிக் கொண்டே போகும்.

மத்திய புள்ளியியல் அமைப்பின் அறிக்கையின்படி நம் நாட்டில் 30 லட்சம் என்ஜிஓ.க்கள் இருக்கின்றன. நாட்டிலுள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை விட இது இரண்டு மடங்கு அதிகம்! உலகிலேயே மிகப்பெரிய பள்ளி கல்வி திட்டத்தைக் கொண்ட இந்தியாவில் 14.89 லட்சம் பள்ளிகள் உள்ளன.

2023 அக்டோபர் 14 தேதி நிலவரப்படி, வெளிநாட்டு நிதியுதவி பெற பதிவு செய்யப்பட்ட என்ஜிஓ.க்களின் எண்ணிக்கை 16,686.  2017 – 18 ஆண்டு முதல் 2021- 22 ஆண்டு வரை வெளிநாட்டு நிதி உதவி பெற பதிவு செய்யப்பட்ட என்ஜிஓ.க்களுக்கு 88,882 கோடி ரூபாய் நிதி வந்துள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.

இந்திய அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையில் இவ்வளவு பெரிய தொகையை வெளிநாட்டினர் ஏன் செலவிடுகிறார்கள்? ஓசி சோறு என்பது எங்கும் இல்லை என்ற சொலவடையை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

நவீன யுத்தங்கள் எல்லையில் மட்டுமே நடப்பதில்லை. போலிகள் மூலமாக புதிய காலனித்துவம் செயல்படுகிறது. எதிரிகளைக் கண்காணிக்கும் போது நம்முடனே இருக்கும் எதிரிகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கக் கூடாது.

  • நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (21.11.2024)
  • கட்டுரையாளர் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் அமைப்பின் முன்னாள் தலைவர்.
  • தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்

$$$

Leave a comment