-நாரதன்
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. அதுபற்றி பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டிய விழிப்புணர்வுப் பதிவு இது…

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர் – Special Intensive Revision – SIR) 04.11.2025 அன்று தொடங்கி நடந்து வருகிறது. தமிழகம் உள்பட மொத்தம் 9 மாநிலங்கள், புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற இருக்கின்றன.
பிகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆர் எதிர்க்கட்சிகளால் சர்ச்சைகளுக்குள்ளானது. உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு பச்சைக்கொடி காட்டிய பிறகு அந்த சர்ச்சை ஓய்ந்தது. தமிழகத்திலும் ஆளும் திமுக உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகள் எஸ்.ஐ.ஆர். மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், அதிமுகவும் பாஜகவும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் எஸ்.ஐ.ஆர். குறித்து விளக்கமாகத் தெரிந்துகொள்வது அவசியம்.
எஸ்.ஐ.ஆர். என்றால் என்ன?
தேர்தலில் அடிப்படை ஆவணம் வாக்காளர் பட்டியல். தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சரியாக இருப்பதை உறுதிப்படுத்த இரண்டு விதமான பணிகளை மேற்கொள்கிறது. ஆண்டுதோறும் சிறப்பு சுருக்க திருத்தம் (எஸ்.எஸ்.ஆர்.) – Special Summary Revision (SSR) தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படுகிறது.
எஸ்.எஸ்.ஆர். நடைமுறையில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது, இறந்து போனவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது மற்றும் வாக்காளரின் சுய விவரங்களில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொள்வது போன்ற பணிகள் நடக்கின்றன. இது அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வோர் ஆண்டும் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும்.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. எஸ்.ஐ.ஆர். என்பது தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் சிறப்புத் திருத்த நடவடிக்கை. தமிழ்நாட்டில் கடைசியாக 2002-2005 காலகட்டத்தில் எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளப்பட்டது. எஸ்.எஸ்.ஆர். போல அல்லாமல் எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளப்படுகிற போது வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களும் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசியாக 2025-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் சுமார் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7-ஆம் தேதி முடிவடையும் எஸ்.ஐ.ஆர். பணிகள் 5 கட்டங்களாக நடைபெறுகின்றன. இதனை அந்தத்ந மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள வருவாய்த்துறையினரே தேர்தல் ஆணைய அதிகாரிகளாகப் பொறுப்பேற்று நடத்துகின்றனர்.
இந்தப் பணிகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (Polling Station Officers – PSO) மேற்கொள்ளப்படும். இதற்காக அவர்களுக்கு அக்டோபர் 27 முதல் நவம்பர் 3 வரை சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கால அட்டவணை கீழே…
- வீடுதோறும் கணக்கெடுப்பு: 04.11.2025 – 04.12.2025
- வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – 09.12.2025
- பெயர்களை சேர்த்தல், ஆட்சேபம் தெரிவித்தல் – 09.12.2025 – 08.01.2026
- விசாரணை, சரிபார்த்தல் – 09.12.2025 – 31.01.2026
- இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – 07.02.2026
ஒவ்வொரு கட்டங்களிலும் நடைபெறும் செயல்பாடுகள்:
முதல் கட்டம்: வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவருமே புதிதாக கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இந்தப் படிவத்தை ஒவ்வொரு பாகத்திலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீட்டிற்கே வந்து வழங்குவார்கள்.
வாக்காளர்கள் அந்தப் படிவங்களை பூர்த்தி செய்து அவர்களிடம் வழங்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தது மூன்று முறை அலுவலர்கள் செல்வார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. படிவத்தை சமர்ப்பித்ததற்கான அத்தாட்சி நகல் வழங்கப்படும்.
வாக்காளர்கள் அதே முகவரியில் வசிக்கிறார்களா, யாரேனும் இறந்துவிட்டார்களா அல்லது நிரந்தரமாக வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து விட்டார்களா என்பதை அலுவலர்கள் சரிபார்ப்பார்கள். இது நவம்பர் 4 முதல் டிசம்பர் 4-ஆம் தேதிக்குள் மேற்கொள்ளப்படும்.
இரண்டாம் கட்டம்: டிசம்பர் 4-ஆம் தேதி வரை வாக்காளர்களிடமிருந்து படிவங்கள் பெறப்பட்டு, முந்தைய வாக்காளர் பட்டியலுடன் பொருந்திப் போகிறதா என்பதை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆராய்வார்கள். ஏதேனும் முரண்பாடு இருந்தால் வாக்காளரிடம் விளக்கம் கேட்கப்படும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9-ஆம் தேதி வெளியிடப்படும். இந்தக் காலகட்டத்தில் புதிய வாக்காளர்களை பதிவு செய்ய முடியாது. இவை அனைத்துமே ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மூன்றாம் கட்டம்: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகே புதிதாக வாக்காளர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும். வரைவுப் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ, பழைய வாக்காளர்கள் வேறு இடத்தில் புதிதாக பதிவு செய்ய வேண்டுமென்றாலோ, அல்லது புதிதாக யாரேனும் இணைக்கப்பட்டதற்கு ஆட்சேபனை இருந்தாலோ அதற்கான விண்ணப்பம் மூலம் முறையீடு செய்யலாம். இதை டிசம்பர் 9 தொடங்கி ஜனவரி 8-ஆம் வரை தேதி மேற்கொள்ளலாம்.
நான்காம் கட்டம்: வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் முறையீடு, ஆட்சேபனைகளை வாக்காளர் பதிவு அலுவலர் (Electoral Registration Officer – ERO) ஆராய்வார். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் துணை வாக்காளர் பதிவு அலுவலர் இருப்பார்கள். இவை ஆராயப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியலில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
ஐந்தாம் கட்டம்: இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியிடப்படும்.
வாக்காளரின் கடமை:
ஒரு வாக்காளர் அதே முகவரியிலேயே தொடர்ந்து வசிக்கிறார் என்றால் கணக்கெடுப்பு படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்க வேண்டும்.
கணக்கெடுப்புப் படிவத்தை சமர்ப்பிக்கின்ற போது எந்த ஆவணமும் உடன் சேர்த்து வழங்க வேண்டியதில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 4-ஆம் தேதிக்குள் வழங்க முடியாதவர்கள் ஆட்சேபனை மனுக்கள் சமர்ப்பிக்கும் கட்டத்திலும் தங்களின் கணக்கெடுப்புப் படிவங்களை சமர்ப்பிக்கலாம்.
குடும்பத்தில் சிலர் மட்டும் வெளியூரில், வெளிநாட்டில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
வாக்காளர்கள் தங்கள் பெயரை நேரடியாகப் பதிவு செய்ய வேண்டும் என்றாலும், கல்வி, வேலை நிமித்தமாக யாரேனும் வெளியூரில் இருந்து, நேரடியாக வர முடியாத சூழல் இருந்தால் குடும்ப உறவினர் ஒருவர் அவர் சார்பில் உத்தரவாதம் வழங்கி பூர்த்தி செய்யலாம். படிவத்தில் அதற்கான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக என தேர்தல் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரே ஊரில் வேறு முகவரியில் வசித்தால் என்ன செய்ய வேண்டும்?
சில குடும்பங்கள் ஒரே ஊரில் வேறு பகுதிகளில் வசித்தால் கணக்கெடுப்பு நடக்கின்றபோது அவர்களின் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
யாருக்கு சிக்கல்?
நிரந்தர முகவரி அல்லது வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரியில் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் கூட வசிக்கவில்லையென்றால் அவர்களுக்கு சிக்கல் ஏற்படும்.
வாக்காளர்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டார்களா என்பதை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கெடுப்பின்போது பதிவு செய்கிறார்கள். பல குடும்பங்கள் வேறு ஊர்களில் நிரந்தரமாக வசித்து வந்தாலும், தேர்தலில் வாக்கு செலுத்துவதற்க்கு சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்ற வழக்கமுண்டு.
இந்தச் சூழலில் அவர்களால் முந்தைய முகவரியில் கணக்கெடுப்புப் படிவத்தை வழங்க முடியவில்லையென்றால், அவர்களின் பெயர் அங்கிருந்து நீக்கப்படும். அவர்கள் தற்போது வசிக்கும் இடத்தில் உள்ள வாக்குச்சாவடியில் புதிதாக இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பத்தை வழங்கி தங்களின் பெயர்களைப் பதிவு செய்யலாம்.
கணக்கெடுப்புப் பணிகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும். அந்தச் சூழலில், நோட்டீஸ் பெறப்பட்டவர்கள் கீழ்க்கண்ட ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்:
- 01.07.1987-க்கு முன் பிறந்தவர் என்றால் அவருடைய பிறந்த தேதி அல்லது பிறப்பிடத்தை நிரூபிக்கும் ஆவணத்தை வழங்க வேண்டும்.
- 01.07.1987 – 02.12.2004 காலகட்டத்தில் பிறந்தவர் என்றால் வாக்காளர் மற்றும் அவரின் தந்தை அல்லது தாயின் பிறந்த தேதி அல்லது பிறப்பிடத்தை நிரூபிக்கும் ஆவணத்தை வழங்க வேண்டும்.
- 02.12.2004-க்கு பிறகு பிறந்தவராக இருந்தால் வாக்காளர், அவரின் தந்தை மற்றும் தாய் என மூவரின் பிறந்த தேதி அல்லது பிறப்பிடத்தை நிரூபிக்கும் ஆவணத்தை வழங்க வேண்டும்.
- இவை அனைத்தும், கணக்கெடுப்புப் படிவம் சமர்ப்பித்து தேர்தல் அலுவலரால் விளக்கம் கேட்கப்பட்டவர்களுக்கு மட்டுமே ஆனது.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
- அரசு ஊழியர் அடையாள அட்டை அல்லது ஓய்வூதிய ஆணை
- அரசாங்கம் அல்லது பொதுத் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது ஆவணம் (1987-ஆம் ஆண்டுக்கு முன்பு)
- பிறப்புச் சான்றிதழ்
- கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)
- கல்விச் சான்றிதழ்
- நிரந்தர இருப்பிடச் சான்றிதழ்
- வன உரிமைச் சான்றிதழ்
- ஜாதிச் சான்றிதழ்
- மாநில அரசு/உள்ளாட்சி அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவேடு
- அரசால் வழங்கப்பட்ட மனை/ வீடு ஒதுக்கப்பட்ட சான்று
- ஆதார் அட்டை
தேர்தல் ஆணையத்தின் பணி:
தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு தனித்தனியாக பயிற்சி வழங்குகிறது. கணக்கெடுப்புப் பணியில், வாக்குச்சாவடி முகவர்கள் உதவியாக செயல்படுவர். இவை போக அரசியல் கட்சிகளும் தங்களின் வாக்குச்சாவடி முகவர்களையும் எஸ்.ஐ.ஆர் பணிக்காக தயார்படுத்தி வருகின்றன.
வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர், வாக்குச்சாவடி நிலை முகவர்களின் தொடர்பு விவரங்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
$$$