அதிகாரவர்க்கத்தின் பிடியில் நீதித்துறை?

-சோ. தர்மன்

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து ஒருசிலரால் அவதூறுகள் கற்பிக்கப்படுகின்றன. அரசியல் களத்தில் சிலரின் தூக்கத்தை இவரது தீர்ப்புகள் கெடுத்ததன் விளைவு தான் இது என்பது நீதிமன்றத்தில் நிற்கும் எவருக்கும் தெரியும். இத்தருணத்தில் எழுத்தாளர் திரு. சோ.தர்மன் அவர்களின் குரல்  தனிக்குரலாக, அறத்தின் குரலாக ஒலிக்கிறது. இதோ அந்தக் குரல்…

இன்று அதிகாலை என்னுடைய வழக்கறிஞரை தொடர்பு கொண்டேன். இன்று தான் ஊரில் இல்லை என்றும், நெல்லை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற இருக்கின்ற நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களுக்கு ஆதரவாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வக்கீல் நண்பர்களுடன் செல்வதாகவும் குறிப்பிட்டார்.

இது மாதிரி ஒரு சில ஊர்களில் அவருக்கு ஆதரவாகவும், இன்னும் சில ஊர்களில் அவருக்கு எதிராகவும் ஆர்பாட்டங்கள் நடை பெறுகின்றன. மரியாதைக்குரிய நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் ஜாதிய மனோபாவத்துடன் நீதிமன்றத்தில் செயல்படுவதாக வக்கீல் ஒருவர் குற்றம்‌ சுமத்த விஷயம் போராட்டமாக மாறிவிட்டது.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

இந்தக் குற்றச்சாட்டு என்பது நீதித்துறையின் ஆனி வேரில் வெந்நீரை ஊற்றுவது போல உள்ளது. நீதியரசர்கள் வழங்கும் தீர்ப்புக்களைப் பற்றி நாம் விவாதிக்கலாம், கருத்துக்கள் கூறலாம். ஆனால் நீதிபதிகள் ஜாதிய மனோபாவத்துடன் செயல்பட்டால் என்னவாகும்? நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை தகுந்த சாட்சியங்கள் இல்லாததால் நீதிபதி ஒருவர் விடுதலை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். குற்றவாளியும் நீதிபதியும் ஒரே ஜாதி… ஆகவே விடுதலை செய்து விட்டார் என்றோ, தண்டனை வழங்கி விட்டால், நீதிபதி குற்றவாளிக்கு எதிர் ஜாதி… ஆகவே தண்டித்து விட்டார் என்றோ, அவர் ஜாதியைச் சேர்ந்தவர்… ஆகவே முன் ஜாமின் வழங்கி விட்டார் என்று பேசினால், நீதித்துறை என்னவாகும்? நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது. இதுவரை இதுமாதிரியான ஒரு குற்றச்சாட்டு எந்த நீதிபதியின் மீதும் சுமத்தப்பட்ட தில்லை.

நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களைப் பற்றி எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன். சில வருடங்களுக்கு முன் என்னுடைய முகநூல் பதிவு ஒன்றை மேற்கோள் காட்டி ஒரு தீர்ப்பு சொல்லியிருந்தார். அது நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து மதுரையில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் நீதியரசரை நான் சந்தித்தேன். அதுவும் உணவு சாப்பிட அவர் உட்கார்ந்திருந்த நிலையில் எதிரே நின்று வணக்கம் சொல்லிவிட்டு  “நான்தான் எழுத்தாளர் சோ.தர்மன்” என்றேன்.

சடாரென எழுந்து வந்து என் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் அவருக்கு அடுத்த சேரில் என்னை அமர வைத்ததோடு, பரிமாறுகிறவர்களிடம் சொல்லிச் சொல்லி எனக்கு பரிமாற வைத்ததோடு, நான் கூனிக் குறுகி அமர்ந்திருக்க வெகுநாட்கள் பழகிய ஒரு நண்பரைப் போல பல விஷயங்களை பேசினார்.

ஒரு ஜாதிய மனோபாவம் கொண்டவராக இருந்தால், நான் வணக்கம் வைத்தவுடன் பதில் வணக்கம் சொல்லிவிட்டு பேசாமல் இருந்திருப்பார். ஒரு உயர்நீதிமன்ற நீதியரசர் தன் அருகில் என்னை அமர வைத்து என்னுடன் பேசிக்கொண்டே உணவருந்துகிறார் என்றால் அவரிடம் எப்படி ஜாதி துவேஷம் இருக்கும்?

என்னைப் பொறுத்த வரையில் கீழ்மை நீதிமன்றங்களிலும் சரி, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் எதிலுமே நீதியரசர்கள் ஜாதிய மனோபாவத்துடன் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் இல்லை என்றே கூறலாம்.

என்னைப் பொறுத்த வரை சுதந்திரமாகச் செயல்படும் நீதியரசர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் துடிக்கும் அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகள் கண்டிக்கத் தக்கவை.

  • நன்றி: எழுத்தாளரின் முகநூல் பதிவு.

$$$

Leave a comment