-லக்ஷ்மி மணிவண்ணன்
2021 ஜூலையில் கவிஞர் திரு. லக்ஷ்மி மணிவண்ணன் எழுதியதன் மீள்பதிவு இது. ஒரு வார்த்தை கூட மாற்றத் தேவையில்லை… இன்றும் அதே சூழல் தான். எழுத்தாளர்கள் தீர்க்கதரிசிகள் என்று கூறுவது இதனால் தானோ?

இந்து சமய தொல் சடங்குகள் முதல் மேல்மரபுகள் வரை என பலவற்றில் பெண்கள் முக்கிய பங்குகளில் ஏற்கனவே இருக்கிறார்கள். பூஜைகள் செய்கிறார்கள்,வாழ்த்து வழங்குகிறார்கள், ஏற்று நடத்துகிறார்கள், இவை இன்று நேற்று நடப்பதல்ல. காலங்காலமாக நடந்து வருவது. நடப்பது. சில ஆகம விதிகளின்படி பின்பற்றும் கோயில்களில் இவை நடைபெறா. ஆனால் கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டிடங்களில் பெண்களுக்கு பூஜை உரிமை இல்லை. அவர்கள் ஒரு தேவாலயத்தை ஏற்று நடத்தும் உரிமை கொண்டவர்களும் அல்லர்.
வாப்பா ஆயிரம் ஆண் நபிகள் இருக்கிறார்கள்... ஏன் வாப்பா ஆயிரம் ஆண் நபிகளில் ஒரு பெண் நபி கூட இல்லை?
இது, ஹெச்.ஜி.ரசூலின் மத அரசியல் கவிதைகளில் ஒன்று.
எனக்கு தனிப்பட்ட முறையில் அரசியல் எழுத்துகளில் இருந்த நம்பிக்கையே போய் விட்டது. மத அரசியல் கவிதையிலும் எனக்கு ஏற்பு இல்லை. பண்பாட்டு அடித்தளம் சார்ந்த விஷயங்களின் முன்பாக மொக்கையான கேள்விகளை முன்வைப்பதில் எனக்கு எவ்விதமான ஏற்பும் இல்லை. ஆனால் ரசூலின் இந்த மொக்கைக் கேள்வி இந்து மதம் நோக்கி நீளுமாயின் உடனடியாக காரைக்கால் அம்மையையும், ஆண்டாளையும், அறம்வளர்த்த மங்கையையும் எனக்கு பதில் கூற முடியும்.
இது தமிழ் நாட்டின் சிறுபகுதியில் இருந்து சொல்லும் பதில். இந்தியா முழுமையும் அறிந்தோர் இந்து சமயத்தில் பெண்களின் இடம், பங்களிப்பு பற்றி இன்னுமின்னும் நிறைய பேசிட முடியும்
கிறிஸ்தவத்தில் கத்தோலிக்கத்திலும் சரி,சீர்திருத்த மார்க்கத்திலும் வழிபாடுகளில் சடங்குகள் மேற்கொள்ளுதலில் இன்றும் பெண்களுக்கு இடம் கிடையாது. பணிவிடைகளே அவர்களுக்குப் பணிக்கப்பட்டிருக்கிறது. இந்து மதத்தில் பழங்காலத்தில் இருந்த தேவதாசி முறையை ஒத்த பணிவிடை முறைகளே இவை.
இன்று எந்த இந்து ஆலயமாக இருப்பினும் சரி , ஒரு பக்தன் நினைத்தால் ஐந்தடி அருகில் நின்று காட்சி பெற முடியும். ஆனால் கிறிஸ்தவ தேவாலயங்களில் மேடை அமைக்கப்பட்டு குறைந்தபட்சம் ஐம்பதடி தூரத்திற்கு வெளியே மக்கள் நிறுத்தப்படுகிறார்கள். சடங்கு மேடையை அவர்கள் எளிதில் நெருங்க இயலாது. சாதி பேதங்கள் கடைபிடிக்கப்படும் தேவாலயங்களும் உண்டு. மட்டுமல்ல கிறிஸ்தவத்தின் ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு சாதிக்குரியது என வகுக்கப்பட்டிருக்கிறது
புரிதலின் நிமித்தம் ஒரு உதாரணமாக, மாண்புமிகு தமிழக முதல்வர் , துர்க்கா ஸ்டாலினை பதவிக்குக் கொண்டுவரவில்லை. மகனை கொண்டு வந்திருக்கிறார், மகளைக் கொண்டு வரவில்லை. மருமகளையும் பதவியில் வருத்தவில்லை. ஏன்? அவர்கள் திறமை அற்றவர்களா? ஆட்சி புரியத் தெரியாதவர்களா? ஒருவேளை இவரைவிட துர்க்கா ஸ்டாலினால் திறம்பட ஆட்சி புரிய இயலுமாக இருக்கலாம். இப்படியாக ஒரு கேள்வியை முன்வைக்கும்போதும் சள்ளைத்தனமான குதர்க்கம் இது என்று தோன்றுகிறதா இல்லையா?
தோன்றுகிறது. தோன்ற வேண்டும். தோன்றினால் மட்டுமே உங்களைப் பொதுப்புத்தி கொண்டவர் என்று சொல்லமுடியும். ஸ்டாலினுக்கு உள்ள மக்கள் ஏற்பே பிறரில் இருந்து அவரை தகுதி உள்ளவராக மாற்றுகிறது. ஐந்தாண்டு அரசியலுக்கே இவ்வாறு எனில் சில ஆயிரம் ஆண்டுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் சமயங்கள்?
அதுபோலத்தான் பண்பாட்டு விஷயங்கள் அனைத்தும் மக்கள் ஏற்பின் மேலே நின்று கொண்டிருக்கின்றன.அனைத்து சமயங்களும் அதனதன் சடங்குகளும் மக்களின் பிரதான ஏற்பின் மீது அமைபவை. அவற்றை எடுத்தேன் கவிழ்த்தேன் என தூக்கி அடிக்க முடியாது. அதனதன் மக்களுக்கு அதனதன் ஏற்பு முக்கியமானது.
பண்பாட்டு ரீதியிலான மக்கள் ஏற்பு என்பது என்ன? அது சடங்குகளுக்கு வழிபாடுகளுக்கு எப்படி கிடைக்கிறது? மடத்தனமாகக் கிடைக்கிறது என்று ஒரு அவ நம்பிக்கைவாதி கருதுவான் எனில் அவன் மடையன். மக்கள் பல ஆயிரம் வருடங்களாக ஒன்றை செய்து செய்து பார்த்து பண்பாட்டில் ஒன்றை நிலை நிறுத்துகிறார்கள். நம்புகிறார்கள். வழிபடுகிறார்கள், கடைபிடிக்கிறார்கள். அவநம்பிக்கையாளன் இன்றில் இருந்து என்று சொல்வதை ,கடைபிடிக்க நிர்பந்திப்பதை மக்கள் சந்தேகிக்கிறார்கள்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சிறுகச் சிறுகக் கண்டடைந்த விஷயங்களின் முன்பாக, இன்று தொடங்கி சொல்லப்படுபவை மிகமிகச் சிறியவை என ஒதுக்குகிறார்கள். நீள் மரபு கொண்ட உலக நாடுகள் அனைத்திலும் உள்ள நிலை இதுவே.
எனக்கு கத்தோலிக்க பாதிரியார்கள் பலர் நண்பர்களும் கூட. இங்கே அவர்கள் புரட்சி வேடமிட்டு நடிப்பவர்கள், புலி ஆதரவு, தமிழ் தேசியம், பெண்ணுரிமை இன்னும் இன்னும் இதுபோன்ற அவஸ்தை கருத்தாக்கங்களில் திளைப்பவர்கள். அவர்களில் சிலரிடம் நான், நீங்கள் அரசியல் விளையாட்டுகளை விட்டுவிட்டு வெறும் தெய்வீகப் பணி மட்டுமே செய்தால் என்ன? என்று கேட்டிருக்கிறேன். உங்கள் பணி அரசியல் அல்லவே?
உங்களைப் போலவே எங்கள் குலப்பூசாரிகள், சாமியாடிகள், அருள் வாக்காளர்கள் என அனைவரும் அரசியலுக்கு வந்தால் நிலை என்னவாக ஆகும்?
உங்களில் அவர்கள் மேலானவர்கள் என்பதே எனது நினைப்பு. உங்கள் நினைப்பு வேறொன்றாக இருக்கலாம். அது பற்றி எனக்கு ஒன்றுமில்லை. கசந்து சிரிப்பார்கள்.
ஒரு கத்தோலிக்க பாதிரிக்கும் ஒரு குல வெள்ளாளனுக்கும் என்ன வேறுபாடு எனில், குல வெள்ளாளன் தான் கொண்டிருக்கும் குலஅறிவு மிகவும் சிறிதே என்பதை வாழ்க்கையின் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலேனும், வாழ்வு விரிவடைவும் போதேனும் கற்றுக் கொள்வான். ஆனால் தனது குலமுறை அறிவே உலக அறிவு என எண்ணிக்கொண்டிருப்பவன் கத்தோலிக்கப் பாதிரி. எது வேண்டும் வேண்டாம் என்பதற்கு அவன் கொண்டுள்ள கணக்குதான் உலகம் முழுதுக்குமானது என அவன் நினைக்கிறான்.அதே சமயத்தில் ஏசு கிறித்துவைப் போலவே வாழ்வை நடத்தும் நிஜ கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். மரபார்ந்த கிறிஸ்தவர்கள் மத விரோதச் சள்ளைகளில் ஈடுபடுவது குறைவு.
புலிப்படை பாதிரிகளெல்லாம் கூட இங்கே இருக்கிறார்கள். ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை இலங்கைத் தமிழனுக்காக நீலிக்கண்ணீர் சிந்தும் பாதிரிகள். சிரிப்பாக இருக்கும் இவர்கள் உண்மையாகவே கண்ணீர் சிந்துகிறார்களா? இல்லை மக்களை பிளவிலும், பிரிவிலும் நிர்பந்திக்கிறார்களா என கண்டுபிடிக்கவே முடியாது. உண்மையாகவே கண்ணீர் விடுகிறார்கள் எனில் இவர்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொல்ல வேண்டியதுதான். மடையர்களுக்காக பிரார்த்திப்பதே சிறந்த வழி.
கஸ்பர் டைப் பாதிரிகளிடம் ‘கர்த்தருக்கு ஸ்தோத்திரம்’ என்று சொல்லி உடனடியாக விலகிவிடவேண்டும். இல்லையெனில் நாராசமான ஒரு தமிழ் தேசியம் உள்ளிருந்து குதித்து வாந்தியாகும். சகிக்க இயலாது. புரட்சிக்கர பாதிரிகள் மேடையில் பேசும் பெண்ணியமும் தேவாலய உள்ளரங்கங்களில் பேசுவதும் ஒன்று அல்ல. பொது மேடைகளில் பெண்கள் அனைத்தையும் உடைக்கக் கத்தும் பாதிரிகள், அதே வாயால் உள்ளரங்கங்களில் குடும்ப அமைதி காக்கவும், விட்டுக் கொடுக்கவும், நெறிகள் பயிலவும் கேட்டு பெண்களிடம் கெஞ்சுகிறார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை தளம் மிகவும் சிக்கலானது.
புலிப்படை பாதிரி ஒருவரிடம், ஐயா, ரஷ்யாவில் யோனிக்கலகிகள் கத்தோலிக்கத்தைத் தான் எதிர்க்கிறார்கள் என்பது உங்கள் கலகத் தலைமைகளுக்குத் தெரியுமா என்று கேட்டிருக்கிறேன்
நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஸ்டாலின் தலைமையிலான திராவிட்ஸ் முதலில் மசூதிகள், தேவாலயங்கள் என பணி துவங்குங்கள். அங்கே தூர்வாரி விட்டு வாருங்கள், நாங்களும் இங்கே கிணறுகளை திறந்து வைக்கிறோம். தூர் வாரலாம். பூஜாரிகளை எல்லா இடங்களிலும் நியமியுங்கள். சங்கிகளும் முன்னின்று தூர்வாருகிறோம். பாரபட்சமான இந்து மத வேட்டை இனி உங்களுக்கு அனுமதிக்கப்படாது.
ஸ்டாலின் ஆட்சி பற்றி சுப்ரமணியன் சாமி ஒரு புரிதலை முன்வைத்திருந்தார். அவர் எதிர்மறை அரசியலுக்கு முதலிடம் தராமல், பிராமண எதிர்ப்பு , இந்து எதிர்ப்பு என இராமல், பிளவு வாதிகளை ஊக்கமூட்டாமல் ஆட்சி நடத்த வேண்டும் என்பதே அது. எனக்கும் அதே அபிராயம் தான்.
தமிழ் நாட்டில் பிளவுவாதிகள் சுமார் இரண்டாயிரம்பேர் இருப்பார்கள். தி.கவினர், ஊடகத்தினர், திமுகவினர், இடதுசாரிகள் என அனைவரையும் சேர்த்து. அவர்களின் கைப்பாவையாக தி.மு.க இருக்கிறது. அவர்கள் தங்கள் அனைத்து கருத்தியல், ஊடக பலத்தையும் ஸ்டாலினுக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறார்கள். அவரை முன்னிறுத்தியிருக்கிறார்கள். தி.மு.க. தவிர அவர்களுக்கு தமிழ் நாட்டில் ஒரு போக்கிடமும் கிடையாது. இதிலிருந்து ஸ்டாலின் எப்படி தப்பிப்பார் என்பதைப் பொறுத்ததே அவருடைய அரசியல் எதிர்காலம் அமையும். சந்தேகமே வேண்டாம். அவர்களை நிறைவு செய்யும் பணியை அவர் கைவிட்டால், உடனடியாக அவர்கள் அவரை நிந்திக்கத் தொடங்குவார்கள். ஒன்றிய அரசு என்று அவர்களுக்கு பிஸ்கட் போடுவதெல்லாம் வேறு எதற்காக ?
நீட் தேர்வை நிறுத்திவிடுவேன் என்றாயே, எப்போது நிறுத்துவாய்? மாணவர்களின் கல்விக்கடன் ரத்து என்றாயே எப்போது செய்வாய்? என்னும் கேள்விகள் பகிரங்கமாக எழும் சூழலில் அதிலிருந்து தப்பிக்க, நாவாய் படைகளுக்கு தீனி கொடுத்து மடக்க இந்து எதிர்ப்பை அவர் சொடுக்குவார் எனில் அதனால் பாடம் கற்கப் போகிறவரும் அவராகவே இருப்பார். உண்மையில் இந்து எதிர்ப்பாளர்கள் கற்பனை செய்து கொண்டிருப்பது போல இது 1960 அல்ல, நடப்பது 2020.
- (மீள் பதிவு: ஜூன் 13 ,2021)
$$$