வாழும் சனாதனம்!- 20

-ஜெயஸ்ரீ சாரநாதன், சேக்கிழான், மகாத்மா காந்தி

சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் தொடர் பதிவுகள், இத்துடன் நிறைவு பெறுகின்றன… (இது பகுதி-20). இப்பகுதியில் இடம் பெறுவோர்: திருவாளர்கள் ஜெயஸ்ரீ சாரநாதன், சேக்கிழான் மற்றும் மகாத்மா காந்தி. 

64. உடன்கட்டை ஏறுதல் சனாதனம் அல்ல!

-ஜெயஸ்ரீ சாரநாதன்

‘சனாதன தர்மத்தை ஒழிப்போம்’ என்று அறைகூவல் விடுக்கும் உதயநிதி உள்ளிட்ட திமுகவினர் அப்படி எதைத்தான் ஒழிக்க நினைக்கிறார்கள் என்று பார்த்தால், விதவைகள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தைச் சொல்கிறார்கள். இந்த சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு வந்த எதிர்ப்பைப் பார்த்தோ என்னவோ, அமைச்சர் சேகர் பாபுவும், ‘நாங்கள் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களை எதிர்க்கவில்லை; அந்த சனாதன தர்மக் கொள்கைகளான உடன்கட்டை, குலக்கல்வி, தீண்டாமை முதலியவற்றைத்தான் ஒழிக்க விரும்புகிறோம்’ என்றார்.

இவையெல்லாம் சனாதன தர்மத்தின் கொள்கைகள் என்று யார் சொன்னது? இவர்களுக்கு சனாதன தர்மம் என்றால் என்னவென்று தெரியுமா? என்றென்றைக்கும் சாஸ்வதமாக இருக்கும் கொள்கைகள் மற்றும் வழிமுறைகள்தான்   ‘சனாதன தர்மம்’ எனப்படும். எந்த வழிமுறைகள் மற்றும் வழக்கங்கள் அனைவருக்கும் பொருந்துமோ அவையே சனாதனக் கொள்கைகள்.

உதாரணமாக, நியூட்டனது மூன்றாவது விதியான ‘ஒவ்வொரு செயலுக்கும், எதிர் வினை உண்டு’ என்பது என்றென்றும் இருப்பது. அதை அழிக்க முடியாது. மனித வாழ்க்கையில் அதன் பதிப்பாக இருப்பது ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பதே. அதை மறுக்கவோ, அழிக்கவோ இயலாது, அதுவே கர்ம வினைக் கருத்தின் அடிப்படையாகும். ஒரு செயலைச் செய்தால், கண்டிப்பாக அதற்கான மறு வினை நம்மை அடைந்தே தீரும். இந்த கர்மவினைக் கருத்து அனைவருக்கும் பொருந்துவது. ஹிந்துவாக இருந்தாலும், பிற மதத்தவராக இருந்தாலும், பல்லாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களாக இருந்தாலும், இனி வரப்போகும் காலத்தில் வாழப் போகிறவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் பொருந்தும். எனவே கர்ம வினை என்பது சனாதன தர்மக் கருத்து.

அந்த மறுவினையை அனுபவிப்பதற்குள் இந்தப் பிறவி முடிந்து விட்டாலும், அதற்காகவே இன்னொரு பிறவி எடுத்து அந்த வினைப்பயனை  அனுபவிக்க வேண்டும். எனவே மறு பிறவி என்பதும் அனைவருக்கும் பொருந்துவது. அதனால் அதுவும் சனாதன தர்மக் கருத்து.

அப்படிச் செய்யும் செயல்கள் நற்செயல்களாக இருந்தால் நல்ல எதிர் வினைகள் கிடைக்கும். அதை புண்ணியம் என்கிறோம். தீய செயல்களாக இருந்தால் கஷ்டம் ஏற்படும், அதை பாவம் என்கிறோம். எனவே, பாவம், புண்ணியம் என்பதும் சனாதனமானவைதான். அழிக்க இயலாதவை; எல்லோருக்கும் பொருந்துபவை. ஒருவர் அவற்றை நம்பினாலும், நம்பாவிட்டாலும் அவை என்றென்றும் இருக்கும். அழிக்க முடியாததாக இருக்கும்.

இப்படிப்பட்ட சனாதனக் கருத்து தமிழர் மரபில் ஊறி இருந்தது என்பதை விளக்கவும், அதிலும் குறிப்பாக உடன்கட்டை ஏறுதல் என்பது சனாதனக் கருத்துதானா என்பதைப் பற்றியும் எழுதுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

கர்மவினை அழிக்க இயலாததா?

நாம் செய்யும் செயலுக்கு எதிர் வினை ஏற்படும் என்பதால் கர்மவினை என்பதே ஒரு கொடிய போக்கு (fatalistic) என்று நினைத்துவிட வேண்டாம். அந்த எதிர்வினையைக் குறைக்க வழி கூறுவதே சனாதன தர்மத்தின் ஒரு கூறாகும். நன்னடத்தை, நல்வழியைப் பின்பற்றுதல் என நமக்குக் கூறப்படும் பல நீதிக் கருத்துகளும், அனைவருக்கும் பொருந்தும் சனாதன தர்மமே ஆகும்.  ‘அறம் செய விரும்பு, ஆறுவது சினம், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பது போன்ற அனைத்தும் எந்தக் காலத்துக்கும், யாவருக்கும் பொருந்தும் என்பதால் அவற்றைப் போதிக்கும் தர்மம் சனாதன தர்மம் ஆகும். அந்த வகையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பலவும், திருக்குறளும் சனாதன தர்மத்தையே போதிக்கின்றன.

உதாரணமாக, பிறன் மனை நோக்காது இருத்தல் சனாதன தர்மம் என்று இராமன், வாலியிடம் சொல்கிறான் (வால்மீகி இராமாயாணம் 4-18-18). அதையே திருவள்ளுவரும் சொல்கிறார். அது உலகின் எந்தப் பகுதியில் வாழும் மனிதனுக்கும் பொருந்தும். ஆனால், தமிழ்ச் சங்க நூல்களில்  ‘பரத்தையரைத் தேடி மக்கள் போனார்கள்’ என்று வந்துள்ளதே என்று கேட்பீர்கள் என்றால், அது மனித இயல்பைக் காட்டுகிறது. அதனால் கர்ம வினை ஏற்படுவது நிச்சயம். அதைக் காட்டும் விதமாக, ‘தெய்வம் அஞ்சல்’ என்னும் மெய்ப்பாட்டியல் சூத்திரம், தொல்காப்பியத்தில் இருக்கிறது (பொருள்: 268)

இதற்குக் கொடுக்கப்பட்டுள்ள பல பொருள்களுள் ஒன்று, தலைவியிடம் உன்னைப் பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்த தலைவன், பரத்தையர் வீட்டில் இருப்பதை அறிந்த தலைவி, அவன் பொய்யாகச் சூளுரைத்ததால் தெய்வம் அவனை என்ன செய்யுமோ என்று அஞ்சுவாளாம். இதைக் காட்டும் விதமாக கலித்தொகைப் பாடல் 75 அமைந்திருக்கிறது. எனவே பரத்தை பின் சென்றாலும், மனைவியைத் தவிர வேறு பெண்ணை நாடினாலும், அதற்கு எதிர் வினையாக கர்ம வினை ஏற்படும் என்பதையே தொல்காப்பியமும் கூறுகிறது. ஆனால் பரத்தையர் பின் செல்வதை அது நியாயப்படுத்தவில்லை. அப்படிச் செல்வது மனித இயல்பு. அந்த இயல்பை மனிதன் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே சனாதன தர்மக் கருத்து.

நல்ல இயல்புகளை மனிதன் வளர்த்துக் கொள்ள, வளர்த்துக் கொள்ள, அவன் அனுபவிக்க வேண்டிய தீய வினைகள் மட்டுப்படும். அதற்கு உதாரணமாக அனுமனைச் சொல்லலாம். சீதையைத் தேடி அவன் இலங்கைக்குச் சென்ற போது, இந்திரஜித் அவனை பிரம்மாஸ்திரத்தால் கட்டி விட்டான். அனுமனால் தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. அப்பொழுது ஒரு பழைய நினைவு அவனுக்கு வருகிறது. அவன் பிரம்மாஸ்திரத்தில் கட்டுப்பட வேண்டி இருக்கும் என்றும், ஆனால் அது ஒரு முஹூர்த்த காலம் (48 நிமிடங்கள்) மட்டுமே இருக்கும் என்றும் பிரம்மா வரம் கொடுத்தது நினைவுக்கு வந்தது. அதாவது பிரம்மாஸ்திரத்தில் கட்டுப்படும் வண்ணம் அனுமனுக்கும் ஏதோ ஒரு முன்வினை இருந்திருக்கிறது. அவன் செய்த செயல்கள், தெய்வ நம்பிக்கை காரணமாக, அதன் தீவிரம் குறைந்து ஒரு முஹூர்த்த காலம் மட்டுமே அவன் அவதிப்பட நேரிட்டது.

இதன்மூலம், கர்ம வினை மாற்றத்துக்குரியது என்று தெரிகிறது. அதற்கு உதவியாக இருப்பது ‘தெய்வம்’. சனாதன தர்மத்தில் இங்குதான் தெய்வம் வருகிறது. மற்ற மதங்களில் தெய்வம் எங்கோ தொலைவில், வெளியில் இருக்கிறது. ஆனால் சனாதன தர்மம் தெய்வம் உனக்குள்ளேயே இருக்கிறது என்கிறது. அதன்மூலமாக, ஒருவன் அதனை அடையலாம். God is both the means and an end என்பதே சனாதனக் கொள்கை. மனிதனே தெய்வமாகலாம்.  ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்று வள்ளுவர் இதனையே கூறுகிறார்.

அந்த வழியில் தெய்வமானவள் கண்ணகி! அவள் வஞ்சியில் ஒரு கோயிலில் தெய்வமாக வழிபடப்பட்ட போது அவளை வணங்க, கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்த மணிமேகலை வருகிறாள். அப்பொழுது கண்ணகி அவளுக்கு முன் தோன்றி அவளுடன் பேசுவதாக மணிமேகலை கூறுகிறது. அப்பொழுது கண்ணகி சொல்கிறாள்:

நான் செய்த நல்வினையால் நான் இப்பொழுது தெய்வமாக இருக்கிறேன். ஆனால் இது என்றுமே நிலைத்திருக்காது. எனது நல்வினையின் பலன் முடிந்ததும், நான் மீண்டும் பூமியில் பிறக்க வேண்டும். ஏனென்றால், என் கணவன் கொல்லப்பட்டான் என்ற கோபத்தில் நான் மதுரையை எரித்தபோது, பலருக்கும் தீயினால் துன்பம் நேரிட்டது. அதற்கு நானல்லவோ காரணம்? அதற்காக நான் பிறந்து அந்த வினைப்பயனை அனுபவிக்க வேண்டும் என்றாள் (மணிமேகலை: வஞ்சிமாநகர் புக்கக்காதை: 35-39)

‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பதும், ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்பது சிலப்பதிகாரம் காட்டும் கருத்துக்களே. அதே நேரம் மனிதனே தெய்வமாகலாம் என்பதையும் காட்டுகிறது. ஆனால் அந்த நிலையைத் தரும் புண்ணியம் தீரும் வரைதான் என்பதை பகவத் கீதையும் கூறுகிறது. ஆனால் பாவ, புண்ணியங்களைத் தாண்டி மனிதன் செல்லும் போது, மீண்டும் பிறவாத தெய்வ நிலையை அடைகிறான்.

இங்கு நாம் பார்க்க வேண்டுவது, தெய்வ நிலையை அடைந்தாலும், மீண்டும் கண்ணகி பூமியில் பிறக்க நேரிடும் என்பதற்கான காரணம். அவள் கணவன் கொலயுண்டு அவளுக்கு அநீதி நிகழ்ந்தது என்பதற்காக இயற்கையே மதுரைக்கு எரியூட்டவில்லை. அவளது வஞ்சினத்தின் காரணமாகவும், தான் பத்தினியே என்று நிரூபிப்பதற்காகவும் அவள் சபித்து எரியூட்டினாள். அவள் கொண்ட சினம், பலரும் இறக்கவும், துன்பப்படவும் காரணமாக இருக்கவே, அதற்குப் பிரதிபலனாக அவள் கர்ம வினையை அனுபவிக்க வேண்டும்.

மதுரையை எரித்ததற்கு அவளுக்குக் கர்மவினை வரும் என்றால், அப்பாவியான விதவையை, அவள் கணவன் இறந்தபின் அவன் உடலுக்கு எரியூட்டும் போது, அவளையும் சேர்த்து உயிருடன் எரித்தல், அதாவது உடன்கட்டை ஏறச் சொல்லுதல் எப்பேற்பட்ட பாவச் செயல்? இதை சனாதன தர்மம் எப்படி அங்கீகரிக்கலாம்?

உடன்கட்டை ஏறுதல் சனாதன தர்மம் அன்று.

திமுகவினரது மிகப் பெரிய குற்றச்சாட்டு இந்த உடன்கட்டை விவரம்தான். இதற்காக ஏன் சனாதன தர்மத்தைக் குறை கூறுகிறீர்கள்? குறை கூற வேண்டுமென்றால், தொல்காப்பியத்தைக் குறை கூறுங்கள். அதில்தான்,  ‘கையறு நிலை’ என்று விதவைகளது நிலை குறித்து சூத்திரமே இருக்கிறது. புறத்திணை இயல் 77-இல்

“நல்லோள் கணவனோடு நனி அழல் புகீஇச்
சொல்லிடை இட்ட மாலை நிலை”

என்று  ‘கணவனை எரிக்கும் தீயில் தானும் புகுவாள் நல்லோள்’ என்று கணவனை இழந்த பெண் செய்யும் செயலாக ஏன் சொல்லியிருக்கிறது? மனைவி அல்லது பெண் என்று சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. நல்லோள் என்று சொல்வதன் மூலம், அப்படிச் செய்பவள்தான் நல்லோள் என்று நினைக்கப்படுவாள் என்று எண்ணும் வண்ணம் இருக்கிறதே என்று கேட்கலாமே? இது உடன்கட்டை ஏறுவதை ஊக்குவிப்பதாக இருக்கிறது என்று சொல்லலாமே?

இதுவே சனாதன தர்மம் என்றால், இது எல்லோராலும் பின்பற்றப்பட்டிருக்க வேண்டுமே? அப்படி நிகழவில்லையே? கண்ணகி உடன்கட்டை ஏறினாளா? மாதவி உடன்கட்டை ஏறினாளா?

கண்ணகி உடன்கட்டை ஏறுவதைப் பற்றிப் பேசுகிறாள். கோவலன் கொலை செய்யப்பட்டு விட்டான் என்று மாதரி சொன்னதும், கண்ணகி அழுது புலம்புகிறாள். அப்பொழுது சொல்கிறாள்: கணவன் இறந்ததும் அவனைத் தீண்டும் நெருப்பில் புகாமலும், துன்பம் தரும் கைம்மை நோன்பை நோற்காமலும், ஊரார் தூற்ற, அரசன் செய்த பிழைக்கு நானல்லவா அவல வாழ்க்கை வாழ வேண்டியிருக்கிறது என்கிறாள் (சிலப்பதிகாரம்: துன்ப மாலை: 36 – 40)

இப்படிப்பட்ட பேச்சை மணிமேகலையிலும், மாதவி பேசுகிறாள். மணிமேகலை நூலின் இரண்டாவது காதையான  ஊர் அலர் உரைத்த காதையில், ஊரார் மாதவியைப் பழித்துப் பேசுகின்றனர். எதற்காக? இந்திரவிழா வந்து விட்டது. அதில் முன்பு மாதவி நடனம் ஆடினாள். நாடகக் கணிகையான அவள், கோவலன் இறந்த பிறகு, துறவறம் மேற்கொண்டு விட்டாள். தன் மகளான மணிமேகலையையும் தனது குலத் தொழிலில் ஈடுபடுத்தி நடனக் கணிகையாக வளர்க்காமல், அவளையும் துறவறத்துக்கு தயார் செய்து கொண்டிருக்கிறாள் என்று ஊரார் தூற்றுகின்றனர். தனது தொழிலை விட்டமைக்காக அவள் நாண வேண்டும் என்று பழிச் சொல் சொல்கின்றனர். அந்தப் பழிச் சொற்களை, மாதவியின் தாயான சித்ராபதியால் தாங்க முடியவில்லை. அவள் மாதவியின் தோழியான வயந்தமாலையை அழைத்து ஊரார் சொல்லும் பழிச் சொற்களை மாதவியிடம் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறாள்.

வயந்தமாலை மாதவியை அடைந்து விவரத்தைச் சொல்கிறாள். அதற்கு மாதவி மூன்று விவரங்களைச் சொல்லி, தான் ஏன் நாண வேண்டும் என்று கேட்கிறாள்.

முதல் விவரமாகச் சொல்கிறாள்: கோவலன் இறந்தவுடனேயே, தானும் இறந்திருக்க வேண்டும். ஆனால் தன் உயிர் போகவில்லையே என்று தான் நாணியிருக்க வேண்டும் என்றாள்.

இரண்டாவதாக, கோவலன் உடலை நெருப்பு தீண்டியபோது, தானும் அவனை விட்டுப் பிரிய மாட்டேன் என்று அந்த நெருப்பில் விழுந்து மாயவில்லையே என்று தான் நாண வேண்டும் என்கிறாள். அதாவது தான் உடன்கட்டை ஏறாததற்கு நாண வேண்டும் என்கிறாள்.

மூன்றாவதாக, அவனை அடுத்த பிறவியிலாவது அடைய வேண்டும் என்று கடுமையான கைம்மை நோன்பு இருந்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லையே என்று தான் நாண வேண்டும் என்கிறாள்.

இதற்கெல்லாம் நாணாமல், நாடகக் கணிகையாக குலத்தொழிலைச் செய்யவில்லையே என்று நாணப்படச் சொல்கிறாயே என்று கேட்கிறாள்.

இதன்மூலம் தெரிவது என்னவென்றால், உடன்கட்டை ஏறுவதாக இருக்கட்டும், குலத் தொழிலைச் செய்வதாக இருக்கட்டும், அது அவரவர் விருப்பம். அது சனாதனமானது என்றால், அனைவரும் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. ஒரு மக்கள் கூட்டத்தில் இருந்து வந்த கருத்துக்களை ஒட்டியே இவை எழுந்திருக்கின்றன.

சங்க காலத்திலேயே ஓர் அரசி உடன்கட்டை ஏறியிருக்கிறாள். பூதப் பாண்டியன் என்னும் அரசன் இறந்து விட்டான். அவன் மனைவி – சற்று முதிர்ந்த வயதினள்தான் –  தானும் அவனுடன் தீயில் இணைவேன் என்று பிடிவாதம் செய்கிறாள். அவையோர், மக்களெல்லாம் தடுத்தனர். எவ்வளவோ சமாதானங்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால் அவள் கேட்கவேயில்லை. அவள் உடன்கட்டை ஏறின செய்தி  புற நானூறு 246, 247 இல் வருகிறது.

246 ஆம் செய்யுளில் அந்தப் பாண்டிய அரசி பெருங்கோப்பெண்டு சொல்லும் ஒரு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவள் சொல்கிறாள்: “நான் உடன்கட்டை ஏறவில்லை என்றால், என் கணவனுக்காக கைம்மை நோன்பு இருக்க வேண்டும். வேகாத அரிசியில் வெள்ளை எள்ளை அரைத்த விழுதைக் கலந்து புளியை ஊற்றி உண்ண வேண்டும். பருக்கைக் கற்களால் ஆன படுக்கையில் படுக்க வேண்டும். அந்த அவதியைப் பொறுத்துக் கொள்வதற்கு பதில், தீயில் விழுந்து செத்து விடலாம்” என்கிறாள். கைம்மை நோன்பு என்பது இதுதான். இதைத்தான் கண்ணகியும் சொன்னாள். மாதவியும் சொன்னாள். இவ்வாறு செய்ய வேண்டும் என்று யார் சொன்னார்கள் என்று பார்த்தால், தொல்காப்பியம் சொன்னதே, ‘நல்லோள்’ என்ற அந்தப் பெயரும், பத்தினி என்ற பெருமையும் மக்கள் தர வேண்டுமென்பதற்காக, பெண்கள் இப்படிப்பட்ட முடிவை எடுத்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த விதமான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தொல்காப்பியம் ஒரு விதியாகச் சொல்லவில்லை. இவ்வாறும் பெண்கள் இருந்தனர் என்று சிலர் இருந்த நிலையைச் சொல்கிறது. இந்த நிலைமைக்கு கைம்மை நோன்புதான் காரணம் என்றால், மாதவியின் கூற்றுப்படி, அந்த நோன்பை, இறந்து போன தனது கணவனே அடுத்த பிறவியில் தனக்குக் கணவனாக வர வேண்டும் என்பதற்காகச் செய்வார்கள் என்று சொல்வதால், ஒரு மக்கள் கூட்டத்தில், ஒரு காலத்தில் இருந்த கருத்து அது என்று தெரிகிறது.

பெண் மட்டுமல்ல, ஆணும் இப்படியெல்லாம் சிந்தித்திருக்கின்றனர். சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, தனது மனைவி இறந்தபோது, தனது மனைவி தீயில் மறைந்து போனாள்; நான் மட்டும் உயிரோடு இருக்கிறேனே என்று புலம்புவது புறநானூறு 245 ஆம் பாடலில் காணப்படுகிறது. அவன் புலம்பினாலும், உயிரை விடவில்லை. பெண்களைப் பொறுத்தமட்டில், உணர்ச்சி வயப்பட்டுவிடுகிறார்கள். அவர்கள் உடன்கட்டை ஏறினது தற்கொலைக்குச் சமமானதே. அதைத் தடுக்க அவர்களுக்கு உளவியலாக ஆறுதல் சொல்லித் தடுக்க வேண்டும். அதைச் சிறப்பித்து இருக்கக் கூடாது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் தற்கொலை செய்து கொண்டால், அதற்கு நீட் தேர்வையா குற்றம் சொல்ல முடியும்? தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத மனநிலையை மாற்ற உதவ வேண்டும் என்கிறோம் அல்லவா? அது போலத்தான் அன்றைய பெண்ணுக்குத் தாங்கும் மனோசக்தியை அளித்திருக்க வேண்டும். உடன்கட்டை ஏறுவதைத் தடுக்க ஆங்கிலேய அரசு சட்டம் இயற்றியபோது, அவ்வாறுதான் செய்தனர் என்று சான்றுகள் இருக்கின்றன. எங்கேனும் யாரேனும் உடன்கட்டை ஏறுவதாக செய்தி வந்தால், உடனேயே அங்கு சென்று அந்தப் பெண்ணுக்கு உளவியல் மாற்றம் செய்ய ஆலோசகர்கள் அனுப்பப்பட்டனர். தென் கொங்கண் பகுதியில்  வைஜாத்ரூக்  (Vizadroog) என்னுமிடத்தில் ஒரு பெண் உடன்கட்டை ஏறப் போவதைக் கேள்விப்பட்டு, அந்தப் பகுதியின் நீதிபதி ஒருவர், பார்ப்பனரை அனுப்பி, அவளது மனதை மாற்றுமாறு கேட்டுக் கொண்டார். அவரும் ஆத்மஞானம் பற்றிப் பேசி மனதை மாற்றி உடன்கட்டை ஏறும் எண்ணத்தைத் தடுத்தார். பார்ப்பனர் உடன்கட்டை ஏறுவதைத் தடுத்திருக்கின்றனர். உடன்கட்டையை ஊக்குவிக்கவில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், யாரும் எந்தப் பெண்ணையும் உடன்கட்டை ஏறுமாறு வற்புறுத்தியதாக வரலாறு கிடையாது. சனாதன தர்மமும் அவ்வாறு சொல்லவில்லை. ஆனால் அப்படித் தீப்பாய்பவளை நல்லோள் என்று தொல்காப்பியம் சொல்வதைப் பார்த்தால், அந்தச் செயலை சிலாகித்துப் பேசுகிறாற்போல இருக்கிறது. அதற்காக, உதயநிதி உள்ளிட்ட திமுகவினர்  ‘தொல்காப்பிய ஒழிப்பு மாநாடு’ நடத்துவார்களா? தொல்காப்பியத்தில் ஏன் அப்படி ஒரு வரி வருகிறது? இதை எப்படி சனாதன தர்மம் காட்டும் வழி என்று சொல்லலாம்? சனாதன தர்மம் என்றென்றும், எல்லோருக்கும் பொருந்துவதாகத்தானே இருந்திருக்கும்? சனாதன தர்மம் காட்டாத ஒன்றை, எப்படி சனாதன தர்மம் கொண்டு வந்த விதிமுறை என்று சொல்ல முடியும்? உடன்கட்டை என்பது சனாதன தர்மம் வலியுறுத்திய செயல் என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருவது தவறு என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • திருமதி ஜெயஸ்ரீ சாரநாதன், ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், ஜோதிடத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்தியவியல், ஹிந்து இதிகாசங்கள், தமிழ்ச் சங்க இலக்கியம், வானியல்- வானிலையியல் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருப்பவர்.
  • இது தனது வலைப்பூவில் இவர் எழுதிய கட்டுரை…

$$$

65. பாரதி காட்டும் சனாதனம்

-சேக்கிழான்

அண்மையில் சனாதனம் குறித்த விவாதத்தில் பேசிய தமிழறிஞர் ஒருவர், “சனாதனம் என்பது தமிழ்க் கலாச்சாரத்திற்கு மாறானது. எனவேதான் மகாகவி பாரதியார் சனாதனம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை” என்று போகிற போக்கில் தவறான ஒரு தகவலை அள்ளித் தெளித்திருக்கிறார். அது உண்மையல்ல. திராவிட பாணியில் சொன்னால், அது ‘ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்!’

மகாகவி பாரதி, ஒன்றல்ல, இரு இடங்களில் சனாதனம் குறித்து நேரடியாகவே பதிவு செய்திருக்கிறார். அதுவும் ஹிந்து சமயத்தைக் குறிப்பிட்டே இந்தச் சொல்லை அவர் எழுதி இருக்கிறார். அது மட்டுமல்லாது, ஹிந்து சமயம் குறித்து அவர் எழுதி இருப்பவை அநேகம்.

பாரதியின் சுயசரிதைப் பகுதியான பாரதி அறுபத்தாறில், ’சர்வ மத சமரசம் (கோவிந்த சாமியுடன் உரையாடல்)’ என்ற கடைசிக் கவிதையில் 65வது பாடலில் சனாதனம் குறித்துக் குறிப்பிடுகிறார் மகாகவி பாரதி. இதோ அந்தப் பாடல்…

“பூமியிலே, கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!
      புத்த மதம், சமண மதம், பார்ஸி மார்க்கம்,
சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,
      சநாதனமாம் ஹிந்து மதம், இஸ்லாம், யூதம்,
நாமமுயர் சீனத்துத் ‘தாவு’ மார்க்கம்,
      நல்ல ‘கண் பூசி’ மதம் முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;
      யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே.”

      (பாரதி அறுபத்தாறு- 65)

-இப்பாடலில், இந்த உலகில் கடைப்பிடிக்கப்படும் சமயங்களை எல்லாம் பட்டியலிடுகிறார் பாரதி- கோவிந்தசாமியின் கூற்றாக.

இதில் அவர் குறிப்பிடும் சமயங்கள்: புத்த மதம், சமண மதம், பார்ஸி மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாம் மதம், யூத மதம், தாவு மதம், கண்பூஷியஸ் மதம், மற்றும்  ‘சநாதனமாம் ஹிந்து மதம்’ ஆகியவை.

இப்பாடலில் மகாகவி பாரதி ஹிந்து மதத்தை ‘சநாதனமாம் ஹிந்து மதம்’ என்று வர்ணிக்கிறார். சநாதனம் என்றால் ‘மிகவும் பழமையானது’ என்ற பொருளிலேயே இந்த இடத்தில் இச்சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார் மகாகவி பாரதி.

இது மட்டுமல்ல, இந்த பூமியில் உள்ள மதங்கள் எல்லாம் கூறும் பொருள் ஒன்றே என்கிறார் பாரதி. அது ‘நீயே கடவுள்’ (தத்வமஸி) என்பது தான். இந்தச் சிந்தனை வந்துவிட்டால், மத வேற்றுமை எவ்வாறு உருவாகும்? இதுவல்லவா சனாதனத்தின் பெருமை! சனாதனத்தின் உட்பொருளை இத்துணை செறிவாக விளக்கியவர், தமிழன்னையின் தவப்புதல்வர் மகாகவி பாரதி என்பது நமக்குப் பெருமை அல்லவா?

மேலும், ‘விவேகானந்த பரமஹம்சமூர்த்தி’ என்ற கட்டுரையிலே, ஸ்ரீ சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமயப் பேரவையில், நமது பாரதநாட்டு ஆரிய சனாதன தர்ம மதத்தைப் பற்றி சண்டமாருதமாக முழங்கியதை பெருமையுடன் பதிவு செய்கிறார் மகாகவி பாரதி. அக்கட்டுரையின் சில பகுதிகள் இதோ…

ஆஹா! சுவாமி விவேகானந்தரைப் போன்று பத்து பேர் இப்போது இருந்தால், இன்னும் ஒரு வருடத்திற்குள் ஹிந்து தர்மத்தின் வெற்றிக்கொடியை உலகம் எங்கும் நாட்டலாம்.

சுவாமி விவேகானந்தர், யோசனை செய்யாத பெரிய விஷயமே கிடையாது. அவருக்குத் தெரியாத முக்கிய சாஸ்திரம் எதுவுமே கிடையாது. அவருடைய அறிவின் வேகத்திற்குத் தடையே கிடையாது. அவருடைய தைரியத்திற்கோ எல்லையே கிடையாது.

கண்ணபிரான் கீதை உபதேசம் செய்து, எல்லா விதமான மக்களின் சந்தேகங்களையும் அறுத்து வேதஞானத்தை நிலைநிறுத்திய காலத்திற்குப் பிறகு, ஹிந்து மதத்தின் உண்மைக் கருத்துக்களை முழுவதும் மிகவும் தெளிவாக, எல்லா மக்களும் புரியும் வகையில் எடுத்துக் கூறிய ஞானி விவேகானந்தரே ஆவார் என்று தோன்றுகிறது.

‘அமெரிக்காவிற்குச் சென்று ஹிந்து மதப் பிரச்சாரம் செய்ய வேண்டும்’ என்ற நோக்கத்தில், சுவாமி விவேகானந்தர் இந்தியாவிலிருந்து ஜப்பானுக்குச் சென்ற மாத்திரத்தில், வேதசக்தியாகிய பாரசக்தி அவருக்கு ஞானச்சிறகுகள் அருள் புரிந்துவிட்டாள். அவர் ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு எழுதிய கடிதங்களில், புதிய ஜ்வாலை தோன்றத் தொடங்கிவிட்டது; நவீன ஹிந்து தர்மத்தின் அக்கினி அவருடைய உள்ளத்தில் இறங்கி நர்த்தனம் செய்யத் தொடங்கிவிட்டது.

‘பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பிய நாகரிகத்துக்கு லட்சிய பூமியாக விளங்கிய அமெரிக்க ஐக்கிய நாடுகளில், ஹிந்து தர்மம் தன வெற்றிக் கொடியை நிலைநாட்ட வேண்டும்’ என்று, இறைவனின் சங்கல்பம் இருந்தது. அதற்கு சுவாமி விவேகானந்தர் கருவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹிந்து தர்மத்தின் புதிய கிளர்ச்சிக்கு, ஹிந்து தர்மத்தின் மறுமலர்ச்சிக்கு விவேகானந்தர் ஆரம்பம் செய்தார். அவரை தமிழ்நாடு முதலில் அங்கீகாரம் செய்த பிறகு தான், வங்கம், மகாராஷ்டிரம் போன்ற இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன.

‘விவேகானந்த பரமஹம்சமூர்த்தியே இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அஸ்திவாரம் போட்டவர்’ என்பதை உலகம் அறியும்.

ஸ்ரீ சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமயப் பேரவையில், நமது பாரதநாட்டு ஆரிய சனாதன தர்ம மதத்தைப் பற்றி, சப்த மேகங்கள் ஒன்றுகூடி மழை பொழிந்ததுபோல் சண்டமாருதமாகச் சொற்பொழிவு செய்து, மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை வென்று வெற்றிவீரராக இந்தியாவிற்குத் திரும்பி வருவதற்கு, பாஸ்டன் என்ற துறைமுகத்தில் கப்பலில் ஏறினார்…

     (ஆதாரம்: ஸ்ரீ மீனாட்சி மலர்- 2010; தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்)

-இவ்வாறு எழுதிச் செல்கிறார் மகாகவி பாரதி. ‘நமது பாரதநாட்டு ஆரிய சனாதன தர்மம்’ என்று ஹிந்து மதத்தை இங்கு குறிப்பிடுகிறார் பாரதி.

ஹிந்து மதத்தின் பெருமைகளை எழுதிச் செல்லும் அதே நேரத்தில், இங்குள்ள ஜாதி வேறுபாடுகள், தீண்டாமைக் கொடுமை ஆகியவை குறித்த கண்டனங்களைப் பதிவு செய்யவும் பாரதி தயங்கவில்லை. இவை நமது சமுதாயத்தில் காலப்போக்கில் நேரிட்டுவிட்ட கேடுகள் என்பதிலும், இவற்றுக்கு சாஸ்திரப் பிரமாணம் இல்லை என்பதிலும் பாரதிக்கு தெளிவான பார்வை இருந்ததை அவரது கவிதை, கட்டுரை, கதைகளில் நாம் காண்கிறோம்.

தனது  ‘பஞ்சகோணக் கோட்டையின் கதை’ என்ற கட்டுரையில், நான்காவது வர்ணத்துக்கும் கீழாக உள்ள பஞ்சமர்களின் அவலநிலையை எழுதுகையில் எரிமலைப் பிழம்பாகவே மாறுகிறார் மகாகவி. இதோ அக்கட்டுரையின் ஒரு பகுதி…

பஞ்சமர்களை நாம் எவ்வளவு அனாதரவாயும் கொடுமையாயும் நடத்தி வருகிறோம்! மேல்குலத்தார் குடியிருக்கும் தெருக்களில் அவர்கள் குடியிருக்கக் கூடாதென்று தடுக்கிறோம். அவர்களை நாம் தொட்டாலே பாவம் வந்து விடும் என்று விலகி யோடிப்போகும்படி ஏவுகிறோம்.

விராட் புருஷனுடைய அங்கமாகிய ஒரு வகுப்பாரை ஈன ஜாதியாரென்று நிராகரித்துத் தள்ளிவிடல் தர்ம மாகுமோ? அது ஈஸ்வர சம்மத மாகுமா?

ஒரே தேசத்தில் எத்தனையோ யுகங்களாய் வசித்துவரும் நமது சகோதரர்களாகிய பஞ்சமர்களை நாம் அவ்வாறு நடத்திவந்தால், அவர்களுக்குச் சுதேசாபிமானம் எவ்வாறு ஏற்படும்? அன்னியர்கள் அவர்களை நாம் நடத்துவதைக் காட்டிலும் மேலாக நடத்தினால், அவர்கள் அந்த அன்னியர்களுக்கு வசப்பட்டுப் போகிறார்கள்.

கடவுள் எல்லாரையும் சமமாகவே சிருஷ்டித்தார். கடவுள் முன்னிலையில் ஜாதி வித்தியாசம் நிற்குமா? நல்வினைக்கு நற்பலனும் தீவினைக்குத் தீயபலனும் சித்தித்தல் அனாதியான பிரமாணம்.பஞ்சமர்களை நாம் எவ்வாறு சகிக்க முடியாத கொடுமைக்கிடமாக நடத்தினோமோ அவ்வாறே நம்மையும் அன்னியர் நடத்திக்கொண்டு வருகிறார்கள்.

இனியேனும்  நாம் ஈன ஜாதியாரை ஆதரித்து, அவர்களுக்குக் கல்வி புகட்டி, சுசீலமான வழக்கங்களை அவர்கள் அனுசரிக்கும்படி செய்து, அவர்களையும் நாகரீகத்தில் நமக்குச் சமமாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்து நாம் எல்லோரும் ஒற்றுமைப்பட்டால் நம்மை வெல்ல வல்லவர்கள் இவ்வுலகத்தில் யாரேனும் இருப்பார்களோ?

      (இந்தியா- 02.01.1909)

ஜாதி வேற்றுமை ஒழிய வேண்டும் என்று விரும்பிய அதே மகாகவி பாரதி ஹிந்து மதத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘சநாதனமாம் ஹிந்து மதம்’ என்று பெருமிதத்துடன் கூறுவதில் இருந்தே, சனாதனத்திற்கும் இந்த பிற்காலக் கேடுகளுக்கும் தொடர்பில்லை என்ற அவரது கருத்து புலப்படும்.

தனது ‘வந்தேமாதரம் என்போம்’ பாடலின் முதல் சரணத்திலேயே,

ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
   ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
   வேறு குலத்தின ராயினும் ஒன்றே 

என்று பாடுவார் மகாகவி பாரதி. இதே பாடலில் நான்காவது சரணத்தில் அவர் பாடுவதே நமக்கு இன்று தேவையான அறிவுரை:

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
   ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
   ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? 

    (தேசிய கீதங்கள்- வந்தேமாதரம் 1)

இந்த ஞானத்தால் தான் மகாகவி அமரகவியாக நம்மை இன்றும் வழிநடத்துகிறார். சனாதனம் என்ற சொல்லுக்கு தவறாகப் பொருள் கூறி சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் சுய உணர்வற்ற அறிவிலிகளுக்கு மகாகவி பாரதியின் இந்தப் பாடலே அருமருந்து.  

  • திரு. சேக்கிழான் பத்திரிகையாளர்.
காண்க: 

பாரதி அறுபத்தாறு (57-66)
விவேகானந்த பரமஹம்சமூர்த்தி
பஞ்சகோணக் கோட்டையின் கதை
தேசிய கீதங்கள் 

$$$

66. நான் ஒரு சனாதனி ஹிந்து!

 -மகாத்மா காந்தி

என்னை நான் ஒரு சனாதனி ஹிந்து என்றே கூறுவேன். ஏனெனில்,

  • நான் வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், ஹிந்து நூல்களில் கூறப்பட்டுள்ள கடவுள்கள், அவதாரங்கள் மற்றும் மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டவன்.
  • நான் வர்ணாசிரம தர்மத்தில் நம்பிக்கை கொண்டவன். இப்போது பரவலாகவும் கொடுமையானதாகவும் புரிந்து கொள்ளப்பட்டுள்ள முறையில் அல்ல; மாறாக முற்றிலும் வேதத்தில் கூறப்பட்டுள்ள வகையில் ஏற்றுக்கொண்டு அதை நம்புபவன்.
  • இப்போது பொதுவாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளதை விட மிக மேலான விதத்தில் பசுப் பாதுகாப்பை நம்புபவன்.
  • உருவ வழிபாட்டை நம்ப மறுப்பவன் அல்ல.

வேதம் மற்றும் இதர புனித நூல்கள் தெய்வத்திடம் இருந்து தோன்றியது என்ற தெய்வீகத் தொடக்கத்தை நான் கவனமாகத் தவிர்த்துள்ளதை வாசகர்கள் கவனித்திருக்கலாம். ஏனெனில் வேதங்கள் மட்டுமே தெய்வீகமானவை என்று நான் நம்பவில்லை. விவிலியமும் குர்ஆனும், ஜென்த் அவஸ்தாவும் (சௌராஸ்டர்களின் புனித நூல்) வேதங்களைப் போலவே தெய்வீகமானவை என்று நான் நம்புகிறேன். ஹிந்து புனித நூல்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் பாடல்களையும் தெய்வீகமானவை என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவை என்னிடம் எதிர்பார்க்கவில்லை என்று நம்புகிறேன்.

அந்த அற்புதமான நூல்களைப் பற்றி ஆழ்ந்த அறிவுள்ளவன் என்று என்னைச் சொல்ல முடியாது. ஆனால் அந்தப் புனித நூல்கள் போதிக்கும் சாரமான விஷயத்தை, உண்மையை எனக்குத் தெரியும் என்றும், நான் அதை உணர்ந்துள்ளேன் என்றும், உறுதியாகக் கூற முடியும். அந்த நூல்களைப் பற்றி எந்த விதமான விளக்கவுரையும், அது எவ்வளவுதான் உயர்ந்த அறிவுள்ளவரால் விளக்கப்பட்டு இருந்தாலும், அவை தர்க்க அறிவுக்கும் தார்மிகத்துக்கும் முரணாக இருந்தால் அந்த விளக்கத்தை நான் ஏற்க மறுக்கிறேன்.

அகிம்சை, சத்தியம், பிரம்மச்சரியம், சம்பாதித்த செல்வம் அனைத்தையும் தியாகம் செய்தல் ஆகியவற்றில் உறுதியாக இல்லாதவர்களால் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதை உண்மையில் தெரிந்துகொள்ள முடியாது என்ற ஹிந்துச் சொல்லாடலில் உள்ள நடைமுறை உண்மையை நான் நம்புகிறேன்.

குரு – சிஷ்ய பாரம்பரிய முறைமையை நான் நம்புகிறேன். அதே வேளையில், இந்தக் காலத்தில் தூய்மையும் ஞானமும் ஒருங்கே சேரப்பெற்ற குருமார்கள் அரிதாகிவிட்டதால் லட்சக்கணக்கானோர்  குரு கிடைக்காமல் போய்விடுவார்கள். இதனால் ஒருவர் தன்னுடைய மதத்தின் உண்மை தெரியாமல் போய்விடுமோ என்று அவநம்பிக்கை கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் ஹிந்துயிஸத்தின் அடிப்படைகள் – மற்றெந்த உயர்ந்த மதங்களைப் போலவே- மாறாமலும் சுலபமாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் உள்ளன. ஒவ்வொரு ஹிந்துவும் கடவுளை,  ‘கடவுள் ஒருவரே’ என்றும் நம்புகிறார். மறுபிறப்பையும் முக்தியையும் ஒவ்வொரு ஹிந்துவும் நம்புகிறார்.

ஹிந்துயிஸத்தின் மீது எனக்குள்ள உணர்வுகளை என் மனைவியின் மீது எனக்குள்ள பிணைப்புடன் ஒப்பிட்டுச் சொல்ல முடியும். உலகில் வேறெந்தப் பெண்ணையும் விட அவளை நான் நேசிக்கிறேன். அவளிடம் குறையேயில்லை என்று கூற முடியாது. என்னிடம் இருப்பதை விடவும் அதிகக் குறைகள் அவளிடம் இருப்பதை நான் பார்க்கிறேன். ஆனால் அவளுடன் பிரிக்க முடியாதபடி நான் பந்தப்பட்டுள்ளேன். அதைப் போலவே, ஹிந்துயிஸத்தின் மீது எனக்குள்ள பிணைப்பும், அதன் குறைகளையும் வரம்புகளையும் மீறி, உணர்வுப்பூர்வமானதாக உள்ளது.

துளசிதாசரின் ராமாயணமும் பகவத் கீதையும் என்னை பரவசத்தில் ஆழ்த்துகின்றன. அந்த இரண்டு ஹிந்து நூல்கள் மட்டுமே எனக்குத் தெரியும். என் இறுதிக் காலத்தில் கீதை மட்டுமே எனக்கு ஆறுதலாக இருக்கும். ஹிந்துக் கோயில்களில் இன்று நடக்கும் கீழான செயல்கள் எல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் அந்தச் சரிவினையும் மீறி அவற்றை நான் நேசிக்கிறேன். அவற்றின் மீது எனக்குள்ள ஆர்வம் வேறு எதிலும் இல்லை. நான் முழுக்க முழுக்க ஒரு சீர்திருத்தவாதி. ஆனால் சீர்திருத்த ஆர்வ மிகுதியால் ஹிந்துயிஸத்தின் அடிப்படையான விஷயங்கள் எதையும் நிராகரிக்கும் அளவுக்கு நான் போக மாட்டேன்.

ஹிந்து மதமானது தனித்துவமான மதம் அல்ல. உலகில் உள்ள எல்லா தீர்க்கதரிசிகளையும் வழிபட அதற்குள் இடம் இருக்கிறது. மதமாற்றத்தை வலியுறுத்தும் மதமல்ல அது. தனக்குள் பல இனக்குழுக்களை உள்ளிழுத்துக் கொண்டது அது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உள்ளிழுக்கப்பட்டவை எல்லாம் மெதுவாக, உயர்நிலை நோக்கியதாகவே அமைந்தன. ஒவ்வொருவரையும் தங்கள் நம்பிக்கைக்கு அல்லது தர்மத்துக்கு ஏற்புடைய வகையில் இறைவனை வழிபடச் சொல்கிறது ஹிந்துயிஸம். அதனால் தான் அது மற்ற மதங்களுடன் மோதல் இல்லாமல் வாழ்கிறது.

  • ஆதாரம்: யங் இந்தியா (06.10.1921)
  • தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்.

.

(’வாழும் சனாதனம்’ தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது)

$$$

One thought on “வாழும் சனாதனம்!- 20

Leave a comment