-ச.சண்முகநாதன், மாலன், வ.மு.முரளி
இன்று மகாகவி பாரதியின் நினைவுநாள். அவரது நினைவைப் போற்றும் மூன்று பதிவுகள் (ச.சண்முகநாதன், மாலன், வ.மு.முரளி) இங்கே…

1. பாரதி நமக்கு குரு!
-ச.சண்முகநாதன்
ஒரு நூறாண்டுக்கும் மேல் கழிந்துவிட்டது, பாரதி எனும் மானுடன் இந்த பூமியில் நடமாடியதை நிறுத்தி. அவன் வீரத் திருவிழிப் பார்வையில் இருந்து இந்த பூமி மறைந்து ஒரு நூறாண்டு கழிந்துவிட்டது.
பாரதி எனும் பெயர் சுயமரியாதை, விடுதலை வேட்கை, ஞானம், தேசியம், பக்தி, காதல் என்று எல்லாவற்றையும் ஒன்றுசேரக் கொண்டு தரும் சூத்திரம்.
எட்டயபுரத்தில் பிறந்தவன், தமிழை எட்டா உயரத்துக்கு எடுத்துச் சென்றவன்.
“செய்யுங்கவிதை பராசக்தியாலே செயப்படுங்காண்” என்று சக்தியால் எல்லாம் நடக்கிறது என்று பக்தியுடன் பேசுவான்.. “கண்ணன் திருவடி எண்ணுக மனமே” என்று மனதுக்கு கட்டளையிடுவான். “பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான்” என்று தன் நன்னெஞ்சுக்கு ஞானவழி காண்பிப்பான்.
அவன் நமக்கு குரு.
அவன் நினைத்திருந்தால் அரசகவியாய் இருந்து அரசனின் சிகையழகைப் பாடி சில்லறை பார்த்திருக்கலாம். அவன் பூமிக்கு வந்தது வயிறு நிரப்ப அல்ல, இந்தப் புவியை தன் கவியால் நிரப்பி ஞானம் அளிக்க வந்தவன்.
சரஸ்வதி தன்னுடைய நாவில் குடிகொண்டதால்
நரஸ்துதி தவிர்த்தவன் பாரதி.
வறுமையில் வாடியவன் அல்லன் அவன். வறுமையை செழிப்போடு தன்னுடன், வைத்துக் கொண்டவன். (அந்தக் காலத்து) 500 ரூபாய் கிடைத்தால் 485 ரூபாய்க்கு, வாசிப்பதற்கு நூல்களும் செல்லம்மாவுக்கு ஒரே ஒரு நூல் சேலையும் வாங்கி கொண்டு, வீட்டுச் செலவுக்கு வெறும் 15 ருபாய் கொடுப்பவன். வறுமையை செழிப்போடு, தன்னுடன், வைத்துக் கொண்டவன் பாரதி.
ஒட்டிய தேகத்தை வைத்துக்கொண்டு “கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்” என்று துணிவு கொண்டு “காலனை காலால் உதைப்பேன்” என்று நெஞ்சில் வீரம் கொண்டவன். காலன் பாரதியின் உயிர் பற்றும் முதன் முதலில் அவன் கால் பற்றி இருப்பான், “உதைத்து விடாதே பாரதி” என்று.
உப்பு, புளி பற்றிய சின்னக் கவலைகள் தன்னை திண்ணத்தகாதென்று அவற்றை இறைவனை பார்க்கச் சொல்லி விட்டு, ‘பெரிதினும் பெரிது’ கேட்டவன் பாரதி. ஒருமுறை, கடையத்தில், ஏழைக் குழந்தைகள் பசியாற வேப்பங்காயை உண்ணுவது கண்டு “பகவான் சிருஷ்டி பொருட்கள் யாவும் அமிர்தம். வேப்பங்காயும் அப்படியே”என்று சொல்லி அன்று முதல் தன் நாவின்பத்தைத் துறந்தவன் பாரதி.
“தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா” என்று பாடிய பாரதி யாரவது தன்னை ‘பைத்தியம்’ என்று யாராவது சொல்லக்கேட்டால், மனம் விட்டு சிரித்து, “சிவபெருமானின் பெயரும் பித்தன் தான்” என்று தேவாரப்பேச்சு பேசியவன்.
தமிழ்ப் பேச்சை வாள் வீச்சென்று மாற்றியவன் அவன். அதனால் தான் அவன் இறந்த பின்னும் அவன் எழுத்தை தடை செய்தது பிரிட்டிஷ் அரசு.
இப்பொழுதும் பாரதி என்று சொன்னால் குனிந்த தலை நிமிரும்; சுருங்கிய மார்பு விரியும்.
பாரதி என்பது வெறும் பெயர் அல்ல. அது ஒரு மந்திரம்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்,
எங்கள் எட்டயபுரத்து பாரதிபோல்
பூமி தனில் யாங்கணுமே பிறந்ததில்லை!
உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை.
எங்கள் எட்டயபுரத்து பாரதிபோல்
பூமி தனில் யாங்கணுமே பிறந்ததில்லை!
- திரு. ச.சண்முகநாதன் தனது முக்நூல் பக்கத்தில் எழுதியது இக்கட்டுரை…
$$$
2. பாரதியின் மரணம் எழுப்பும் கேள்விகள்
-மாலன்
ஏனோ தெரியவில்லை, தமிழ்நாட்டில் செப்டம்பர் 11ஆம் தேதி பாரதியார் தினமாகக் ‘கொண்டாடப்பட்டு’ வருகிறது. ‘கொண்டாடப்படுவதால்’ அது அவரது பிறந்த தினமோ என்ற மயக்கம் பலருக்கு ஏற்படுவதுண்டு. தஞ்சைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆராய்ச்சிப் பதிப்பின் ஆசிரியர்கூட ஒரு கடிதத்தில் அதை பிறந்த தினம் எனக் குறிப்பிட்டுள்ளார். அது உண்மையில் பாரதி மறைந்த தினம்.
மகாகவி பாரதிக்கு யானையால் முடிவு ஏற்பட்டதாக ஒரு கருத்து பலகாலமாக நிலவி வருகிறது. ஆனால் அது உண்மை அல்ல, பாரதியின் முடிவு யானையால் ஏற்படவில்லை. யானைச் சம்பவம் நடந்தது ஜூனில். பாரதி மறைந்தது செப்டம்பரில்.
யானைச் சம்பவத்திற்குப் பிறகு ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் வேலைக்குப் போய்வந்தார். ஆகஸ்ட் 4ஆம் தேதி சுதேசமித்ரனில் ‘எனது ஈரோடு யாத்திரை’ என்று ஒரு கட்டுரை எழுதினார். ஆகஸ்ட் 11ஆம் தேதி ‘காந்தியடிகளின் ஒரு கோடி ரூபாய் திலகர் நிதி’ பற்றி எழுதியிருக்கிறார். அதன் பின்னர் ரவீந்திரநாத் தாகூரின் ஐரோப்பிய விஜயம் பற்றிக் கட்டுரை எழுதினார். இதுதான் அவரது கடைசிக் கட்டுரை (இதில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால் சுதேசமித்ரனில் அவர் எழுதிய முதல் கவிதையும் வங்கம் சார்ந்தது. (கவிதையின் பெயர்: வங்கமே வாழிய)
யானைச் சம்பவத்திற்குப் பின் உடல்நலம் தேறிவிட்டதாக பாரதிதாசனுக்குக் கடிதம் எழுதினார். ‘நான் நம்ப மாட்டேன், படம் எடுத்து அனுப்புங்கள்’ என்று அவர் வற்புறுத்தியதின் பேரில், சென்னை பிராட்வேயில் இருந்த ரத்னா கம்பெனி என்ற ஸ்டுடியோவிற்குச் சென்று ஜூலை 1921இல் படம் எடுத்துக் கொண்டார். அதுதான் இன்று பிரபலமாகக் காணப்படும் முண்டாசுடன் கூடிய படம்.
யானைச் சம்பவத்திற்குப் பின் திருவல்லிக்கேணி வீதிகளில் தேசிய பஜனை நடத்தினார். ஒரு முறை செல்லம்மாவை சென்னை, கோவிந்தப்பநாயக்கன் தெருவில் நடந்த ஒரு மாதர் அமைப்பின் பொதுக்கூட்டத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு அலுவலகம் போயிருக்கிறார். அவரே வெளியூர் பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கிறார்.
உண்மையில் மகாகவியின் முடிவு எப்படி ஏற்பட்டது? ரா.அ.பத்மநாபன் தனது சித்திரபாரதி நூலில் குறிப்பிடுவது:
“1921 செப்டம்பர் முதல் தேதி பாரதிக்கு வயிற்றுப் போக்கு (டயரியா) ஏற்பட்டது. பூஞ்சை உடல் தாங்கவில்லை. விரைவில் அது வயிற்றுக் கடுப்பாக (டிசன்ட்ரி) மாறியது. முதல் தேதியிலிருந்து லீவில் இருந்த பாரதி எப்போது வேலைக்க்குத் திரும்புவார் என்றறிய ஒரு சக ஊழியர் வந்து விசாரித்தார். சரியாக செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி, திங்களன்று வேலைக்குத் திரும்பிவிடுவதாக பாரதி சொல்லியனுப்பினார். அன்றுதான் அவரது பூத உடல் எரிகாடு சென்றது.
பாரதிக்கு உடல் நலமில்லை என்ற செய்தி பல நண்பர்களுக்குத் தாமதமாகவே தெரிந்தது. தாம் எழுதாத ஒரு தலையங்கத்திற்காகக் செப்டம்பர் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று கொண்டிருந்த வ.வே.சு ஐயர் நிலைமையறிந்து, போகும் வழியில், போலீஸ் துணையோடு பாரதியின் வீட்டுக்கு வந்து அவரைப் பார்த்தார். அவரது குடும்பத்தாருடன் பேசினார். அவர்கள் பாரதி மருந்துட்கொள்ள மறுப்பதைச் சொன்னர்கள். “பாரதி, நீ மருந்து சாப்பிட மாட்டேன் என்கிறாயாமே? சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டாமா?” என்று பரிவோடு அறிவுறுத்திவிட்டுச் சென்றார்.
பாரதிக்கு சிகிச்சை அளித்தவர் டி.ஜானகிராம் என்ற ஹோமியோபதி வைத்தியர். அவர் ஆந்திரக் கேசரி என்று அழைக்கப்பட்ட டி.பிரகாசத்தின் சகோதரர். அவர் பாரதியை அணுகி, “உங்களுக்கு என்ன செய்கிறது?” என்று கேட்டதும் சீறினார்: “யார் உங்களை இங்கே அழைத்தது? எனக்கு உடம்பு சரியில்லை என்று யார் சொன்னது? எனக்கொன்றும் இல்லை”என்று கோபப்பட்டார்.
பாரதியின் கடைசி சில மணி நேரங்கள் பற்றி அவரது மகள் சகுந்தலா சொல்கிறார். “அப்பாவிற்கு நீ மருந்து கொடுத்தால் ஒரு வேளை கோபிக்காமல் சாப்பிடுவார் என்று என் தாயார் மருந்து எடுத்துக் கொடுக்கும்படி சொன்னார். மங்கலான விளக்கு வெளிச்சம். நான் மருந்து என்று நினைத்து பக்கத்தில் கிளாசில் வைத்திருந்த பார்லித் தண்ணீரை எடுத்து அவரிடம் கொடுத்தேன். மருந்து வேண்டாம் என்றார். உடனே அவர் மனதில் என்ன தோன்றியதோ, என் கையில் உள்ள கிளாசை வாங்கி ஒரு வாய் குடித்தார். ‘நீ கொடுத்தது மருந்து இல்லையம்மா கஞ்சி’ என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடிவிட்டார். எனக்கு அவரை மறுபடி இம்சை பண்ண மனமில்லை. அப்படியே வெளியில் கூடத்தில் வந்து படுத்திருந்தேன். தூங்கி விட்டேன் போலும்.”
பாரதியின் உடல்நிலையை முன்னிட்டு அவரது நண்பர்கள் நீலகண்ட பிரம்மச்சாரி, பரலி.சு.நெல்லையப்பர், லட்சுமண ஐயர் மூவரும் இரவை பாரதி வீட்டில் கழிப்பதென்று முடிவு செய்தார்கள். நீலகண்ட பிரம்மச்சாரி சொல்கிறார்:
“அன்றிரவு பாரதி, தமது நண்பர்களிடம், ‘அமானுல்லாகானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபீசுக்கு எடுத்துக்கொண்டு போக வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். அமானுல்லாகான் அப்பொழுது ஆப்கானிஸ்தானத்து மன்னராக இருந்தார். 1914-15 மகாயுத்தத்தில் ஜெர்மானியருக்கு சாதகமாக இருந்தாரென்று சண்டையில் வெற்றி பெற்ற பிரிட்டீஷ் அவர் மீது கருவிக் கொண்டிருந்தார்கள். முன்னிரவில் பெரும்பாலும் மயக்கத்திலிருந்த பாரதி, இறப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னால் சொன்ன இந்த வார்த்தைகளே அவரது கடைசி வார்த்தைகளாகும்” என்கிறார் நீலகண்ட பிரம்மச்சாரி.
பாரதி அமரரான நேரம், சரியாக இரவு ஒரு 1:30 மணி.
பாரதியின் மரணச் செய்தியைப் பொழுது விடிந்ததும் நண்பர்களுக்குச் சொல்லி அனுப்பினார்கள். வக்கீல் துரைசாமி ஐயர், ஹரிஹர சர்மா, வி.சக்கரைச் செட்டியார், சுரேந்திரநாத் ஆர்யா, மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார், என்.திருமலாசாரியார், குவளைக் கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் வந்திருந்தனர். சுமார் 100 பவுண்டிற்கும் (45 கிலோ) குறைவாக இருந்த பாரதியின் உடலை குவளைக் கிருஷணமாச்சாரி, பரலி.சு.நெல்லையப்பர், ஆர்யா, ஹரிஹரசர்மா ஆகியோர் காலை எட்டு மணிக்கு திருவல்லிக்கேணியில் உள்ள கிருஷ்ணாம்பேட்டை மயானத்திற்கு எடுத்துச் சென்றனர்.
பாரதிக்கு மகன் இல்லாததால் இறுதிச் சடங்குகளை யார் செய்வது என்ற பிரச்சினை எழுந்தது. நீலகண்ட பிரம்மசாரி அவருக்குக் கொள்ளியிடலாம் என்று சொன்னார்கள். உடனே அவர், “என்ன நானா? இந்தச் சடங்குகளில் எல்லாம் துளிக் கூட நம்பிக்கை இல்லாதவன் நான். என் தகப்பனாராகவே இருந்தாலும் நான் இந்தச் சடங்குகளைச் செய்ய மாட்டேன். அப்படியிருக்க பாரதிக்காக நான் செய்வேன் என்று எப்படி எதிர்பார்த்தீர்கள்?” என்று மறுத்து விட்டார்.
முடிவில் பாரதியின் தூரத்து உறவின்ரான ஹரிஹர சர்மாதான் அவருக்குக் கொள்ளி வைத்தார்.
பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்ட தலித் இளைஞர் கனகலிங்கம் அவரது மரணத்தின் போது அவரது அருகில் இருந்ததாகவும், அவரது முகத்தைப் பார்த்த பின்னே பாரதியின் உயிர் பிரிவதாகவும், அவரை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றவர்களில் அவரும் ஒருவர் என்று ‘பாரதி’ படத்தில் சித்தரித்திருந்தார்கள். ஆனால் அது பிழையானது. கனகலிங்கம் பாரதியைப் பற்றி ‘என் குருநாதர்’ என்று ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதில், ‘நான் அந்திமக் காலத்தில் அவரது திருமுகத்தைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே’ என்று எழுதியிருக்கிறார். தனது கடைசி சில மணிநேரம், யாரையும் பார்க்கவோ, பேசவோ இயலாத மயக்க நிலையில் இருந்துதான் மரணமடைந்தார் பாரதி.
பாரதியின் மரணம் பல கேள்விகளை எழுப்புகிறது பத்து நாட்களாக வயிற்றுக் கடுப்பு இருந்தும் ஏன் அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை? அவருக்கு புதுவையில் இருந்த போது கஞ்சா பழக்கம் ஏற்பட்டது என்று தெரிகிறது. அது திடீரென்று நிறுத்தப்பட்டு withdrawal symptoms ஏற்பட்டிருக்குமோ? அல்லது அந்தப் பழக்கம் அவரது உடல்நலத்தைப் பாதித்திருக்குமோ? “அவரது தேகம் மெலிந்து போய் பழைய பாரதியின் சாயல் போல் இரண்டு வருஷங்களுக்கு முன் அவர் புதுச்சேரியிலிருந்து திரும்பி வந்தார்” என்கிறது மித்ரன் தலையங்கம்.
(செப்டம்பர் 12ஆம் தேதி சுதேசமித்ரன் செய்தியும் வெளியிட்டு, ஓர் துணைத் தலையங்கமும் எழுதியது. ‘அவருடைய ஞாபகத்தைப் பாராட்டி மதியம் இரண்டு மணியோடு வேலையை நிறுத்தப்படுவதால் ஏகப்பட்ட சமாசாரங்கள் இன்று மித்ரனில் பிரசுரமாக மாட்டா’ என்ற ஓர் குறிப்பும் தலையங்கத்தில் காணப்படுகிறது.)
அவர் ஏன் மருந்து உட்கொள்ள மறுத்தார்? ஏதேனும் ஓர் காரணத்தால் மனச் சோர்வு, விரக்தி ஏற்பட்டிருந்திருக்குமோ? ‘நிலச் சுமையென’ வாழ்கிறோமோ என்று எண்ணியிருந்திருப்பாரோ? குடும்பத்தினர் மீது கோபமோ? பணியிடத்தில் வருத்தம் இருந்த்தாகத் தெரியவில்லை. அவர்கள் எப்போது இவர் வேலைக்குத் திரும்புவார் என கேட்டனுப்புவதும், இவர் கட்டுரை ஒன்று எழுத வேண்டியிருக்கிறது என்று நண்பர்களிடம் சொல்லுவதும் இதைக் காட்டுகிறது. பாரதியின் கடைசிக்கால எழுத்துக்கள் ஆட்சியைப் பற்றிய விமர்சனமாக இல்லாமல், சமூக விமர்சனமாகவும், ஆன்மிக விசாரமுமாக இருக்கிறது. கடலூர் சிறையிலிருந்து வெளிவரும் போது எழுதிக் கொடுத்த உறுதிமொழி அவர் கையைக் கட்டிப் போட்டிருக்கலாம். அதனால் மனமொடிந்து போயிருந்திருக்கலாம். ஓர் எழுத்தாளனுக்கு எழுதுவதைத் தடை செய்வதைப் போல ஓர் தண்டனை இல்லை.
1921ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் கருங்கல்பாளையத்தில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுதான் கடைசிச் சொற்பொழிவு. அதன் தலைப்பு: ‘மனிதனுக்கு மரணமில்லை!’
- தகவல்களின் மூலம்: ரா.அ.பத்மநாபன்/சித்ர பாரதி
- நன்றி” ‘என் கயல் பருகிய கடல்’ நூலில் இருந்து.
$$$
3. பத்தொன்பதாவது சித்தன்!
-வ.மு.முரளி
என்றும் எந்தன் நாடியில் துடிப்பவன்.
என்றும் எனது நினைவில் நிலைத்தவன்.
என்றும் என்னை இயங்க வைப்பவன்.
எனக்குள் சுடராய் எரிந்து கொண்டிருப்பவன்.
எனது மூச்சாய் உலவும் உயிர் அவன்.
எனது பேச்சாய்த் திகழும் தமிழ் அவன்.
எனது எழுத்தில் மிளிரும் குரு அவன்.
எந்தன் வாழ்வின் இலக்காய் ஆனவன்!
காலனைத் தனது காலால் உதைத்தவன்.
கன்னித்தமிழாய் என்றும் வாழ்பவன்.
எண்ண உயர்வை, எழுத்தின் தேவையை
என்றும் உணர்த்தும் எளியோர் கவி அவன்!
பாரதி போற்றுதும்! பாரதி போற்றுதும்!
.
- திரு. வ.மு.முரளியின் முகநூல் பதிவு.
- இன்று (செப். 11) மகாகவி பாரதி நினைவுதினம்.
$$$