குடும்ப தெய்வங்கள், குல தெய்வங்கள், கிராம தெய்வங்கள், காவல் தெய்வங்கள்

-கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்

பூர்வகுடி நிலையிலிருந்து நாகரிக சமூகமாக மாறும்போது இந்த தெய்வங்கள் அனைத்தும் உங்களை பெரிய தெய்வங்களிடம் செல்லுமாறு வழிநடத்தும்.பூர்வீகம் மறந்த மமதை நிலையை நீங்கள் காலத்தில் பெற்றால் பெருந்தெய்வங்கள்  ‘என்னால் முடியாது,  முதலில் அவர்களின் கணக்கை முடித்து விட்டு வா...’ என்று திருப்பி இவர்களிடம் அனுப்பி வைக்கும்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குடும்பத்தை அளத்தங்கரை குடும்பம் என்பார்கள். பொன்னார் குடும்பம் பெண் வழி உறவின் நிமித்தம் இங்கே (நாகர்கோவில்) வந்தவர்கள். ராஜாக்கமங்கலம் உப்பளத்தை திருவிதாங்கூர் ராஜாக்கள் காலத்தில் உரிமையாளராக வைத்து நடத்தியவர்களின் குடும்பம் அது. பெரிய குடும்பம். இன்றும் பெரிய குடும்பமே. எங்களுடைய குடும்பத்திற்கும் அவர்களுக்கும் உறவு உண்டு. அவர்களுடைய குடும்ப தெய்வத்தின் பெயர் மனோன்மணி. இன்று வரையில் அவர்கள் குடும்பத்தின் ரகசிய தெய்வமாக மனோன்மணி திகழ்கிறாள். குடும்பத்தினர் எங்கெங்கோ பரந்து விரிந்து பரவியிருந்தாலும், ஆண்டின் எல்லா நாட்களிலும் மனோன்மணிக்கு விளக்கு போட வேண்டும். ஒவ்வொரு நாளும் குடும்ப அங்கத்தினர் யாரேனும் ஒருவர் எங்கிருந்தாலும் வந்து செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளுமென ஆண்டு முழுவதற்கும் யா ர்யார் செய்ய வேண்டும் என்பதனை அவர்கள் பகுத்து வைத்திருக்கிறார்கள். தவறாமல் செய்து வருகிறார்கள்.

உங்கள் உயிருக்கும் உடமைக்கும் இந்த குடும்ப தெய்வங்களே அரண். உடலுக்கோ உடமைக்கோ இடர்பாடு ஏற்படுகிறதெனில், மனோன்மணி முன்னின்று காப்பாள். அவளைச் செய்ய விடாமல் தடுக்கும் சக்தி எந்தப் பேய்களானாலும் சரி, நோய்களானாலும் சரி, கிடையாது. இதுதான் அவளுடைய லிமிடேஷன். அதற்கு மேலுள்ள காரியங்களுக்கு அவள் பொறுப்புதாரி அல்ல. அதற்கு மேலுள்ள காரியங்களுக்கு அவளை வேண்டினால் அவள் மேலுள்ள கர்த்தாக்களிடம் செல்ல வழி காட்டுவாள். எப்படி என்பது உணர்ந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். பெரும்பாலும் குடும்ப கன்னி தெய்வங்களே குடும்ப பிரஜாபதி உடல்களாக, குடும்ப தெய்வங்களாகக் கருதப்படுகின்றன. இந்த வழிபாடுகளில் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர்த்து பிறருக்கு பிரதிநித்துவம் இல்லை.

எனது நெருங்கிய நண்பர் ஒருவரின் குடும்ப தெய்வம், மாலைப் பிள்ளை கன்னி. திருவிதாங்கூர் மகாராஜா ஊர்வலம் போகும் சமயத்தில் இந்த சகோதரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள். மகாராஜா திரும்பி வருவதற்குள் இந்த சகோதரிகளை புறப்பாடு செய்து வைத்திருக்க வேண்டும் என்று ராஜாவின் ஏவல் ஆட்கள் குடும்பத்தினரிடம் கட்டளையிட்டு கடந்து செல்கிறார்கள். சரி என்று ஒப்புக்கொண்ட குடும்பத்தினர், அவர்கள் படை திரும்புவதற்குள் வீட்டிற்குள்ளேயே சமாதி அமைத்து இரண்டு சகோதரிகளையும் உள்ளொடுக்கி விடுகிறார்கள். சகோதரிகளில் ஒருத்தி “ராஜா எங்களை விரும்பினால் நீங்கள் ராஜாவை அல்லவா கேட்க வேண்டும்? விட்டு விட்டு எங்களை எதற்காக கொல்கிறீர்கள்,நாங்கள் என்ன தவறு செய்தோம்?” எனக் கேட்டு உயிர் போகும் வாதையில் வலித்துக் கதறுகிறாள்.  “உங்கள் குடும்பத்தில் பெண்மகவுகள் எதுவும் உருப்படாது” என்று சபித்துச் செல்கிறாள் மற்றொருத்தி. இன்று வரையில் ஆண் மகவுகளுக்கு பிரச்சினைகள் கிடையாது. பெண் வழி வாரிசுகள் அல்லல்படுகிறார்கள். அவர்களுக்கு அவளே நின்று அருளும் செய்கிறாள். வெகு காலம் அவர்கள் குடும்பத்திற்குள் வைத்தே அந்த கன்னியரை வழிபட்டார்கள். இப்போதுதான் பொதுவில் கட்டி வைத்திருக்கிறார்கள்.

கன்னிக்கு வைத்துக் கொடுப்பது என்பது ஆண்டிற்கு ஒருமுறை குடும்ப கன்னியை குடும்பத்துக்குள் வரவழைக்கும் ஒரு பூஜை முறை. இப்போதும் குமரி மாவட்டத்தில் குடும்பங்களுக்குள் நடந்து வருவது. நீங்கள் குடும்ப கன்னியரைக் கவனியாது புறக்கணித்து வந்தால் அவள் வெளியேறிவிடுகிறாள். பேய்களோடும் தெய்வங்களோடும் கலந்து பெருவெளியில் உலவுகிறாள். கன்னிக்கு வைத்துக் கொடுப்பதற்கு வீட்டிற்கு முன் வாசலும் பின்வாசலும் தேவை. ஒரு நூலை முன்வாசலில் இருந்து பின்வாசலுக்குக் கட்டுவார்கள். தென்மேற்கில் அவளுக்கு பூஜை அமைத்து படுக்கையிடுவார்கள். அவளுடன் இருக்கும் பேய்களும் தெய்வங்களும்  ‘உன்னை உள்ளே வைத்துப் பூட்டி விடுவார்கள்,அதனால் போய் சிக்கிக் கொள்ளாதே ’என எச்சரிப்பார்கள்; தடுப்பார்கள்.

ஆனால் அவர்களின் எச்சரிக்கையை அவள் புறக்கணித்து விடுவாள்.  ‘என்னை என்னுடைய உறவினர்கள் தேடும் போது நான் செல்லாமலிருந்தால் அது எப்படி?’ என்று அவர்களை நோக்கிக் கேள்வி கேட்டு விட்டு பூஜையை நோக்கி வரத் தொடங்குவாள். அவர்களும் உடன் தானே வருவார்கள். ஆனால் கன்னி மட்டுமே வீட்டிற்குள் நுழைய வேண்டும். பிற அரூபங்கள் நுழைதல் ஆகாது. ஒரு வீட்டில் கன்னிக்கு வைத்துக் கொடுக்கும் போது பிறர் இதனை அறியக் கூடாது என்பது நிபந்தனை. அவளை வர விடாமல் அவர்கள் கோள் மூட்டி விட்டால் பின்னர் அவள் வருவது தாமதமாகும். கன்னியைப் பொறுத்தவரையில் யார் கோள் மூட்டினாலும் நிற்க மாட்டாள், உறவுகளிடம் வந்தே தீருவாள். கன்னி வீட்டிற்குள் நுழைந்ததும் நூலில் வித்தியாசம் தெரியும். பிறர் அந்த நூலில் ஏறி வருவதற்குள் நூலினைத் துண்டித்து பின்வாசல் வழியே உள்நுழைந்து கதவினை அடைத்து விடுவார்கள். கன்னி அந்தக் குடும்பத்திற்கு மட்டுமே முழு விசுவாசமாக இருக்கத் தகுந்தவள். ஆனால் குடும்பம் அவளைப் புறக்கணிக்கும் போது பிறர் கன்னியை குடும்பத்திற்கு எதிராகப் பயன்படுத்த முடியும் என்பது நம்பிக்கை.

கிராம தெய்வங்கள் ஊரில் எல்லோருக்கும் பொதுவானவை. சொந்தங்களைத் தவிர்த்து இதிலும் பிறருக்கு இடமில்லை, பிரதிநித்துவம் இல்லை; வழிபடலாம். ஆனால் பெரிதாக அது சட்டை செய்யாது. “உனக்கு உரிமைப்பட்டவர்களிடம் போய் கேள்” என்று சொல்லும். பொதுவான கதைகளுக்கு வாய்ப்பற்ற,தனித்த கதைகள் கொண்ட தெய்வங்கள். ஆனால் இவை அனைத்திற்கும் பொதுக்கதைகள் அமைத்து விட்டன. முத்தாரம்மன், சுடலை மாடன், இசக்கி போன்றவை கிராம தெய்வங்கள்.

குல தெய்வங்கள் எனப்படுபவை, உங்கள் குலத்தின் மூத்த பிரஜாபதியைச் சுட்டுவது. நீங்கள் அதன் மூல உடலில் இருந்து உதித்து புறப்பட்டு வந்த கைக்கிளை. சில ஜாதகர்களுக்கு குல தெய்வப்பகை அமையும். மூத்த பிரஜாபதியை இழிவு படுத்தியிருப்பார்கள். ஆனால் குலசாமி எதுவெனத் தெரியாமல் மங்கிப் போயிருப்பார்கள். அவர்களுக்கு திருச்செந்தூர் முருகனே குல தெய்வம். குல சாமியை மறந்து போனவர்கள் அதே முறையீடை முருகனிடம் கொண்டு செல்லலாம். காப்பான். பத்திர காளி, சாஸ்தா போன்றவை குல தெய்வங்களாக ஒருவருக்கு இருக்க முடியும்.

குடும்பத்திற்காகவோ, ஊருக்காகவோ, பொது நியதிகளைக் காப்பதன் பொருட்டோ உயிர் நீத்த முன்னோரே காவல் தெய்வங்கள்.

பூர்வகுடி நிலையிலிருந்து நாகரிக சமூகமாக மாறும்போது இந்த தெய்வங்கள் அனைத்தும் உங்களை பெரிய தெய்வங்களிடம் செல்லுமாறு வழிநடத்தும்.பூர்வீகம் மறந்த மமதை நிலையை நீங்கள் காலத்தில் பெற்றால் பெருந்தெய்வங்கள்  ‘என்னால் முடியாது,  முதலில் அவர்களின் கணக்கை முடித்து விட்டு வா…’ என்று திருப்பி இவர்களிடம் அனுப்பி வைக்கும்.

குல தெய்வங்களிடம் நின்று விட்டால் வெளியில் வர முடியாது. வெளியிலேயே சுற்றிக் கொண்டிருந்தால் முடக்கப்படுவீர்கள். இங்கும் அங்குமான வாழ்தலுக்கான சமச்சீரான பாதைகள் இவை.

இவையெல்லாம் மூடத்தனங்கள் அல்ல. வாழ்வின் சாராம்சம் நிறைந்த பாதைகள். நீங்கள் யாரையும் விட்டு விட்டு எங்குமே செல்ல முடியாது. இதன் சாராம்சங்கள் உங்களுக்கு விளங்கவில்லையெனில் உங்களுடைய அடுத்த தலைமுறையில் ஒருவன் இங்கு நோக்கி ஓட வேண்டியிருக்கும். எங்கு விட்டீர்களோ அங்கு….

$$$

Leave a comment