-பிரிட்ஜோப் காப்ரா நேர்காணல்
இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர் பிரிட்ஜோப் காப்ரா (Fritjof Capra -86). மேற்கத்திய அறிவியலையும் கீழையஞானத்தையும் இணைக்கும் பாலமாகக் கருதப்படுவது, இவர் எழுதிய ‘தாவோ ஆஃப் பிசிக்ஸ்’ (இயற்பியலின் வழி). அது மிக அதிக விற்பனையான நூல் மாத்திரமன்று, உலகின் பார்வையை மாற்றிய நூல்களில் ஒன்று. இது வெளிவந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், இன்றைய எண்ம உலகில் தொன்மையான ஆசிய ஞானத்தின் பொருத்தம் பற்றி இந்த நேர்காணலில் அவர் விவாதிக்கிறார். நேர்காணல் செய்த கார்லோ பிஸ்ஸாட்டி பிரபல எழுத்தாளர்.

கேள்வி: மேற்கத்திய அறிவியலுக்கும் ஆசிய தத்துவங்களுக்கும் இடையேயான விவாதத்தில் ‘தாவோ ஆஃப் பிசிக்ஸ்’ இன்றும் நிலைத்திருப்பது எப்படி ?
பதில்: அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக ச் சொன்ன போது நான் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனேன். இயற்பியல் உலகில் இயந்திரத்தனமான உலகியல் பார்வை மாறி முழுமையானதாகவும் சூழலியல் சார்ந்ததாகவும் மாறி விட்டிருந்ததே, அந்த உணர்வுபூர்வமான எதிர் வினைக்கு காரணம். அது இப்பொழுது அறிவியல் துறைகள் எல்லாவற்றிலும் சமுதாயத்திலும் ஏற்பட்டு வருகிறது.
‘நான் நீண்ட காலமாக நினைத்திருந்ததை ஆனால் வார்த்தைகளில் சொல்ல முடியாமல் இருந்ததை நீங்கள் சரியாக சொல்லி இருந்தீர்கள்’ என்றும், ‘இந்த புத்தகம் என் வாழ்க்கையை மாற்றி விட்டது’ என்றும், மக்கள் மீண்டும் மீண்டும் சொல்வதைக் கேட்கிறேன். வாழ்க்கையைப் பற்றிய சீரான பார்வை என்று நான் சொல்லும் புதிய உலக கண்ணோட்டத்தை பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்.
உலகைப் பற்றிய இந்த ஒருங்கிணைந்த பார்வை உருவாகி வருவதும், கிழக்கத்திய தத்துவங்கள் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்பு இருப்பதும், இந்த நூல் நீடித்திருப்பதற்கு காரணம்.
கேள்வி: தாவோ ஆ ஃப் பிசிக்ஸ் நூல் மேற்கத்திய அறிவியலுக்கும் ஆசிய தத்துவங்களுக்கும் இடையே பாலமாக இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் ஆன்மிகத்தை புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ள முடியாதே? ஆசிய தத்துவங்களை மேற்கத்திய அறிவியல் முறைகள்படி விளக்க முடியாவிட்டால் அவற்றின் சாரம் குறைந்து விடுவது மட்டுமின்றி அவற்றை கற்றுக் கொள்வதும் கடினமாகி விடும் இல்லையா?
பதில்: தர்க்கபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் மட்டுமே விளக்க வேண்டும் என்றால் நீங்கள் சொல்லியது போல அது கடினமாக இருக்கும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். நான் தாவோ ஆஃப் பிசிக்ஸ் நூலை எழுதியபோது அறிவுபூர்வமாக மட்டுமன்றி உணர்வுபூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் அதில் ஈடுபட்டேன். அதனால்தான் அந்த நூலுக்கு மக்கள் பெருமளவில் உணர்வுபூர்வமாக பதில் வினையாற்றினர்.
இயற்பியலுக்கும் கிழக்கத்திய ஆன்மிகத்துக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைப் பற்றி விவாதித்த போது அது பற்றி மிக ஆழமான நிலையில் அவற்றை நான் அனுபவித்தேன். எனவே அது வெறும் கொள்கை அளவிலான அலசல் அல்ல. மேலும் இது மக்களை விலகிச் செல்ல செய்யும் என்றோ அல்லது அவர்களால் புரிந்து கொள்வது கடினமாகிவிடும் என்றோ நான் கருதவில்லை.
ஆன்மிக மரபுகளை அனுபவத்தால் மட்டுமே விளக்க முடியும் என்பது அதன் சாரத்தைக் குறைப்பதற்கு மாறாக ஊக்கமளிப்பதாகவும் உத்வேகம் கொடுப்பதாகவும் ஆக்கி விடுகிறது. பொதுவான கலாச்சார பயணத்தில் இதுவொரு இயல்பான செயல்பாடு.
1960 அல்லது 1970 களில் நீங்கள் ஒரு கம்பெனி வேலையில் இருந்து கொண்டு, ‘எனக்கு யோகா வகுப்பு அல்லது தியான வகுப்பு அல்லது கீகோங் வகுப்பு இருக்கிறது. அதனால் கம்பெனியில் நடக்கும் கூட்டத்திற்கு வர முடியாது’ என்று சொன்னால், சிரித்துக்கொண்டே உங்களை வேலையிலிருந்து நீக்கி விடுவார்கள். இன்று அப்படியல்ல . அதுவொரு வழக்கமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. எனவே ஆன்மிகப் பயிற்சிகளில் ஈடுபடுவது இப்பொழுது மிகவும் விரிவானதாக ஆகியுள்ளது.
கேள்வி: ஆனால் இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆசிய தத்துவ பயிற்சிகளான யோகா மற்றும் தியானத்தை பலரும் உலகியல் லாபங்களுக்காக – தியானம் பயிலும் மேனேஜர்கள் மேலும் திறமையானவர்களாக, யோகாசனம் செய்யும் மக்கள் மேலும் போட்டியில் நிலைத்து நிற்க என்று உலகியல் லாபங்களுக்காக – பயில்வதாகத் தெரிகிறது. தாவோ ஆஃப் பிஸிக்ஸ் நூலை படித்த வாசகர்கள் பலரும் ஆன்மிகத்தின் பயன்பாட்டுத் தன்மையை அந்த நூல் சிதைக்கிறது என்று கருதுகிறார்கள். இதை நீங்கள் ஏற்கிறீர்களா? இந்த தவறான புரிதல் உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லையா?

பதில்: அமெரிக்காவில் உள்ள சில வலதுசாரி குழுக்கள் இந்த புதுயுக கருத்துக்களை கடத்திக் கொண்டு போய்விட்டார்கள் என்பது உண்மைதான். அதே வேளையில் சூழலியல் மாற்றங்கள் தொடர்பான அருணோதய இயக்கம், விடியலுக்கு வெள்ளிக்கிழமை போன்ற பெரிய இளைஞர்களின் இயக்கங்களின் செயல்பாடுகள் மற்றும் செனட்டார் பர்னி சாண்டர்ஸின் பணிகள், ஆக்குபை அமைப்பின் தாக்கம் போன்றவை எல்லாம் உலகில் எல்லா விஷயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று மக்களைக் கருதச் செய்கின்றன. அவர்கள் இந்தப் பூவுலகின் அழகைப் பாதுகாக்க விரும்புகிறார்கள். இங்குள்ள வாழ்வனைத்தையும் பாதுகாக்க விரும்புகிறார்கள்.
ஆனால் நாம் பேசிக் கொண்டிருக்கும் இதே வேளையில் பிளவுவாத சக்திகளின் எழுச்சி, குறுகிய தேச நலன் சார்ந்த செயல்பாடுகள், வன்முறை, போர் ஆகியவற்றின் வேகமான எழுச்சிகளால் மேற்சொன்ன மாற்று இயக்கங்கள் வலிமை பெற முடியாமல் ஆகி வருகின்றன. இது மிகவும் வலி தரக்கூடிய விஷயமாக இன்று இருந்தாலும், இதுவும் கடந்து போகும், இது மாற்றத்திற்கான காலம் என்றே எனக்கு தெரிகிறது. இவை சுழற்சி வட்டங்கள் போல. நாம் இதிலிருந்து வெளியேறி விடுவோம். குறுகிய கால அரசியல் செயல்களை விட மாற்றத்திற்கான பரிணாம வளர்ச்சியின் செயல்பாடுகள் வலிமையானவை.
கேள்வி: முன்னெப்போதையும் விட இப்போது குவாண்டம் இயற்பியலை அதிகமாகக் கற்கிறார்கள். ஆனாலும் சமுதாயத்தில் நியூட்டனின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குவாண்டம் இயற்பியல் இன்னமும் சமுதாயத்தில் அர்த்தமுள்ள வகையில் இணைந்து விடவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? ஏன் அது பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தவில்லை?
பதில்: நீங்கள் சொல்வது உண்மை என்று நினைக்கிறேன். உதாரணத்துக்கு நீங்கள் மருந்து, மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களைப் பாருங்கள். அவை மனித உடலை ஒரு இயந்திரமாகப் பார்க்கின்றன. நோய் என்றால் அந்த இயந்திரத்தின் ஏதோ ஒரு பாகத்தில் தவறு ஏற்பட்டுள்ளது. அதை வேதிப் பொருள்களைக் கொண்டு மாற்ற வேண்டும், சரி செய்ய வேண்டும் அல்லது அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய வேண்டும். இப்போது ஆரோக்கியம் தொடர்பான ஒருங்கிணைந்த முழுமையான கண்ணோட்டத்தை வலியுறுத்தும் இயக்கங்கள் வளர்ந்து வருகின்றன. ஆனால் இயந்திரமாகப் பார்க்கும் கண்ணோட்டமே வலுவாக உள்ளது.
அதேபோல, நீங்கள் நிர்வாகங்களைப் பாருங்கள். மேனேஜர்கள் தங்கள் நிறுவனத்தை ஒரு இயந்திரமாகப் பார்ப்பதையும், அதை நுட்பமாக மேம்படுத்த முயல்வதையும் பார்க்கலாம். இந்த மனப்பான்மை நீண்ட காலமாக இருப்பதால் அது வலிமையாக இருக்கிறது. இயந்திரமாகப் பார்க்கும் மாதிரியில் ஏராளமாக நிதியும் அறிவும் முதலீடு செய்யப்பட்டுள்ளதால் இதை மாற்ற முனைவது கடுமையான எதிர்ப்பைக் கிளப்புகிறது.
இப்போதுள்ள எரிசக்தி நிறுவனங்கள் இந்த உலகையே அழிக்கின்ற வர்த்தக மாதிரிகளைப் பின்பற்றும் விகாரமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த மோசமான நிலை தொடரக் காரணம், அவர்கள் அதில் ஏராளமாக முதலீடு செய்துள்ளது தான். அவர்கள் தங்கள் முதலீட்டை இழக்க விரும்பவில்லை.
இயந்திரமாகப் பார்க்கும் கண்ணோட்டத்தில் இருந்து மாறி, சீரான, சரியான உலக பார்வைக்கு மாறுவது இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது. ஆனால் அந்த மாற்றம் சுலபமாகவும் இலகுவாகவும் நிகழ்ந்து விடாது. என் வாழ்க்கையில் அறிவியல் புரட்சிகளைப் பார்த்திருக்கிறேன். அதற்கு பழமையான உலகப் பார்வையின் அடிப்படையில் எதிர்வினைகளும் எதிர்ப்பு இயக்கங்களும் எதிர்த்தாக்குதல்களும் நடந்துள்ளன.
நம்முடைய உலக பண்பாட்டில் பரிணாம மாற்றம் ஏற்படுவதை தற்காலிக மற்றும் குறுகிய கால அரசியல் செயல்பாடுகள் தடுத்து நிறுத்திவிட முடியாது. ஆனால் இந்த மாற்றத்திற்கான வழி கடினமானது. அது சுலபமான பயணம் அல்ல. கரடு முரடான, கூரான கற்கள் நிரம்பிய சாலையது.
கேள்வி: நம்முடைய மனதில், நீங்கள் வடிவியலின் சிறை (Prison of geometry) என்று சொல்லுகின்ற அழிவுத் திட்டங்கள் எப்படி வந்து சேர்கின்றன? அந்த கணத்தை விளக்க முடியுமா?
பதில்: 1970 களில் ‘தாவோ ஆஃப் பிஸிக்ஸ்’ வெளியானது. 1960 இல் தோன்றிய மாற்றுக் கலாச்சாரம் என்ற உலகளாவிய வலைப் பின்னலில் நானும் ஒரு பகுதியாக இருந்தேன். அதுதான் 1970 களில் புதுயுக இயக்கத்துக்கு வழிகோலியது . உலகைப் பற்றிய புதிய பார்வை, புதிய ஆன்மிகம், புதிய மதிப்பீடுகள், புதிய வாழ்க்கை முறைகள், பாலின விடுதலை, போதை மருந்துகள் என்று லட்சியபூர்வமான இயக்கங்கள் தோன்ற வழி வகுத்தது. அவற்றிற்கு அரசியல் நோக்கம்/ பரிமாணம் இல்லை.
1980 களில் பசுமை/ சூழலியல் இயக்கங்கள் மூலம் அரசியல் பரிமாணம் ஏற்பட்டது. 1983 இல் ஜெர்மானிய பசுமைக் கட்சி அதிகாரத்துக்கு வந்தது. அதன் பிறகு அந்த இயக்கம் உலகமெங்கும் பரவியது. 1986 இல் கோர்பச்சேவின் செயல்களால் 1980 களின் இறுதியில் புதுயுக இயக்கங்கள் திருப்புமுனையைச் சந்தித்தன. சமுதாயத்தை முற்றிலும் வேறுவிதமாக வடிவமைப்பதற்கான எல்லா விஷயங்களும் எங்களுக்குக் கிடைத்தன.
அப்போதுதான் நாங்கள் யாரும் எதிர்பார்க்காத தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டது. அது உலகின் பல பகுதிகளுடனான தொடர்பை, இணைப்பை அதிகரித்தது. ஆனால் ,அதே வேளையில், பணம் பண்ண வேண்டும் என்கின்ற புது வகையான முதலாளித்துவத்தை உலகில் உருவாக்கியது. பணம் சம்பாதிப்பதா அல்லது ஆரோக்கியம் , சமூக நீதி, பொருளாதார சமத்துவம் போன்ற மனித விழுமியங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதா என்ற தேர்வு முன்வந்தபோது, செல்வம் சேர்ப்பதற்கே முன்னுரிமை என்ற முடிவை கணிணிகள் மேற்கொண்டன.
எனவே புதுவகையான உலகியல் உருவானது. ‘உலகமயமாக்கல்’ என்பது அந்த மாயச் சொல். எல்லோரும் அதைப் பயன்படுத்தத் தொடங்கினர். உலகமயமாக்களில் பல நல்ல, பயனுள்ள அம்சங்கள் இருந்தன. ஆனால் அதில் உள்ள கார்ப்பரேட் மற்றும் பொருளாதார உலகமயமாக்கல் மிகவும் கேடு விளைவிக்க கூடியவை. நான் அங்கம் வகித்த மாற்று கலாச்சார இயக்கங்களுக்கு புதிய உலகமயமாக்களை எதிர்கொள்ள ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலம் தேவைப்பட்டது. 1990 களில் இறுதியில் சியாட்டிலில் நடந்த உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டை எதிர்த்து உலக குடிமை சமுதாயம் ஆர்ப்பாட்டம் நடத்திய போது தான், நாங்கள் 1980 களில் இருந்த நிலைக்கு மீண்டும் வந்தோம்.
தாவோ ஆஃப் பிசிக்ஸ் உருவாக்கிய , நான் அங்கம் வகித்த இயக்கம், எதிர்காலத்தைப் பற்றிய மாற்றுப் பார்வையை உருவாக்கியது என்று சொல்லலாம். ‘மற்றொரு உலகம் சாத்தியம்தான்’ என்ற கோஷத்துடன் உலக சமுதாய அமைப்பின் சார்பில் சர்வதேச அளவில் பல மாநாடுகள் நடத்தப்பட்டன. அது ஒரு உலகக் கண்ணோட்டம். அந்த உலகக் கண்ணோட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் ‘தாவோ ஆஃப் பிசிக்ஸ்’ இடம் பெற்றிருந்தது. அந்த வகையில் இதுவொரு மரபின் தொடர்ச்சி எனலாம்.
கேள்வி: திட்டமிட்ட ரீதியிலான உங்கள் கண்ணோட்டத்தின்படி பர்மெனிடேஸூக்கும் ஹெராக்களிட்டஸூக்கும் இடையேயான முரண்பாடு – இருப்பது × விழைவு – விஷயத்தில் ஆசிய தத்துவங்கள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துமா?
(இருவரும் பண்டைய கிரேக்க தத்துவவாதிகள். ஒருவர் எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்பது ஒன்றுதான் என்றார். மற்றவர் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன என்றார். – மொழிபெயர்ப்பாளர்)
பதில்: தாவோ ஆஃப் பிசிக்ஸில் ஹெராக்ளிட்டஸை நான் கிரேக்க தாவோயிஸ்ட் என்று சொல்லியிருந்தேன். ஏனென்றால் அவரிடம் அந்தக் கருத்துக்கள் வலுவாக இருந்தன. ஒவ்வொரு கட்டமைப்புக்கும் அடியில் ஒரு வழிமுறை உள்ளது. அந்த வழிமுறைகளின் மூலமாகத்தான் அந்தக் கட்டமைப்பே வெளிப்படுகிறது. எனவே அந்த இயக்க விசை பற்றியும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
நவீன அறிவியலையும் கீழைய ஆன்மிகத்தையும் இணைக்கின்ற இரண்டு பெரிய அம்சங்களை என்னுடைய நூலில் சுட்டிக்காட்டி இருந்தேன். ஒன்று, எல்லாப் பொருள்களும் அடிப்படையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இரண்டு, உலகின் மாறிக்கொண்டே இருக்கும் இயல்பு. இரண்டும் வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டங்கள். வாழ்க்கை ஒரு வழிமுறை;. வாழ்க்கை ஒரு வலைப் பின்னல். நீங்கள் பர்மெனிடெஸ் மற்றும் ஹெராக்ளிட்டஸ் என்று சொன்ன போது இருப்பு, விருப்பு என்ற சுவாரஸ்யமான சிந்தனை என் மனதில் எழுந்தது.
திட்டமிட்ட ரீதியில் வாழ்க்கையைப் பார்த்தோமானால் வளர்சிதை மாற்றமே வாழ்க்கையின் முக்கிய அம்சமாக இருப்பதைப் பார்க்கலாம். சக்தியின் தொடர் ஓட்டம் மூலமாகவும் வேதிப்பொருள்களின் வினைத் தொகுப்பின் மூலமாகவும் பொருள்களின் வலைப் பின்னலும் வளர்சிதை மாற்றமும் நிகழ்கின்றன. இரண்டு அம்சங்கள் இதில் உள்ளன. ஒன்று, தொடர்ச்சியான ஓட்டம். இரண்டு, வலைப் பின்னல் . வலைப் பின்னல் தான் கட்டமைப்பு. சக்தி ஓட்டம் தான் வழிமுறை. ஒருவகையில் தொன்மையான இருப்பு , விருப்பு என்ற இரட்டையை இது பிரதிபலிப்பதாக உள்ளது. இந்த இரண்டின் இணைப்புதான் வளர்சிதை மாற்றத்துக்கு வழிகோலுகிறது . இந்தக் கோணத்தில் யோசிக்கும் போது இதுபற்றி மேலும் எழுத வேண்டுமென நினைக்கிறேன்.
கேள்வி: இந்தக் கருத்தை மேலும் விரிவாக்கி நீங்கள் எழுதுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இப்போது செயற்கை நுண்ணறிவு – ஏ.ஐ. – வந்துள்ளது. இது உலக அளவில் வேறொரு வகையான வளர்சிதை மாற்றத்திற்கு வழி வகுக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். இயந்திரவியலை அடிப்படையாகக் கொண்ட தொழிற்புரட்சியைக் கடந்து நாம் புதிய தொழில்நுட்பமான அல்கரிதம், சர்வர்கள், இப்போது ஏ.ஐ.க்கு வந்துள்ளோம். ஏ.ஐ. என்பது இன்னொரு கருத்தியல் சிறை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது மனித சமுதாயத்தை, மனிதனின் தினசரி வாழ்க்கையை மாற்றி அமைக்க ஒரு வாய்ப்பு என்று கருதுகிறீர்களா?
பதில்: இரண்டுமாகவும் அது இருக்கலாம். எதற்காக அது பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து அது சிறையாகவும் மாறலாம். இப்போது அது பயன்படுத்தப்படுவதைப் பார்க்கும் போது, உற்பத்தி வழிமுறைகளை நெறிப்படுத்துவது, அதன்மூலம் உற்பத்தித் திறனை அதிகரிப்பது என்பதைப் பார்க்கும்போது, அது மேலும் அதிக பணம் பண்ணுவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பொருளாதார லாபத்தில் கவனத்தைக் குவிப்பது ஆபத்தானது.
எல்லா உயிரினங்களின் வாழ்க்கையிலும் உள்ள இயற்கையான அறிவிலிருந்து வேறுபட்டது இந்த ஏ.ஐ. என்கின்ற செயற்கை நுண்ணறிவு. வாழும் அறிவு என்பது எல்லா வாழ்க்கை முறையிலும், உயிரினங்களிலும் உள்ளது. அது (சொல்ல முடியாத ஆனால்) உணர்வதையும், உயிரின் இயல்பையும், ஒழுங்கையும் கொண்டது. இந்த உலகில் இருப்பதையும், சுற்றி வருவதையும், உயிர் பிழைத்து இருப்பதையும், மேலும் வளர்ச்சியை, மாற்றத்தை அடைவதையும் தனது முக்கிய தன்மையாகக் கொண்டுள்ளது. இது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது.
ஏ.ஐ.யின் பயன்பாட்டை நாம் அதிகரிக்கும்போது அது நம்முடைய இயல்பான அறிவுச் செயல்பாட்டில் , வாழும் முறையில் குறுக்கிடும் அபாயம் உள்ளது. சற்றே சிந்தித்துப் பாருங்கள், இப்போது நம் சமுதாயத்தில் ஆரோக்கியத்தை விட பணத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எல்லா நேரங்களிலும் இல்லை, ஆனால் பெரும்பாலான நேரங்களில் பணத்துக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
பணம் சம்பாதிப்பதற்காக, அதிக பணம் சம்பாதிப்பதற்காக இயற்கைச் சூழலை நாம் அழிக்க ஆரம்பித்து விட்டோம். ஆனால் நம் வாழ்க்கையே இயற்கைச் சூழலைச் சார்ந்து தான் இருக்கிறது. வெளியில் இருந்து நம்மைப் பார்த்தீர்களானால், நம்முடைய நாகரிகமே மனித நலனை விட பணம் சம்பாதிப்பதற்கே அதிக முன்னுரிமை கொடுப்பதாக, அதற்காக இயற்கைச் சூழலியலையே அழிப்பதாக இருப்பதைக் காணலாம் . இதனை மிகவும் அறிவார்ந்த செயலாக, நாகரிகமாகக் கருத முடியாது. எனவே வாழும் அறிவுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையே மோதல் இருக்கிறது.
கேள்வி: இன்றுள்ள எண்மப் புரட்சி, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் ஒளியில் தாவோ ஆ ஃப் பிசிக்ஸை மீண்டும் எழுவதுவாக இருந்தால் அதில் எதை அப்படியே தக்க வைத்திருப்பீர்கள்? எதை மாற்றி எழுத முனைவீர்கள்?
பதில்: எதற்கு அழுத்தம் கொடுத்து எழுதுவது என்பது மாறிவிடும். அந்த நூலில் பூட்ஸ்ட்ரேப் (Bootstrap) கொள்கையின் மீது கவனத்தை ஈர்த்திருந்தேன். அது இயற்பியலில் இப்போது பின்னகர்ந்து விட்டது. இப்போது சரக்கோட்பாடு (Sting Theory) என்ற நேர்த்தியான, அதே வேளையில் சிக்கலான கோட்பாடு இயற்பியலின் மையமாக உள்ளது. அது பற்றிய விவாதத்தை முழுமையாக ஒருங்கிணைக்க விரும்புகிறேன்.
ஆனால் கீழைய ஆன்மிகம் மற்றும் அதன் இணைகளைப் பற்றிய எனது கருத்துக்களை மாற்றிக் கொள்ள மாட்டேன். இப்போதும் அந்த நூலைப் புரட்டிப் பார்க்கும்போது அதில் உள்ள அஸ்வகோஷ் , நாகார்ஜுனரின் மேற்கோள்களின் அழகு என்னை ஈர்க்கிறது. அவை காலத்தை மீறி நிற்பவை.
அந்த நூலின் கடைசி பத்தியை இன்று ஏறத்தாழ ஒரு கோட்பாடாகவே படிக்க முடியும். :
‘உலகத்தைப் பற்றிய இயற்பியலின் பார்வை இன்று நம்முடைய நவீன சமுதாயத்திற்கு சற்றும் பொருத்தம் இல்லாமல் இருப்பதைக் காணலாம். இயற்கையில் ஒத்திசைவும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டும் இருப்பதைப் பார்க்கலாம். அது நம்முடைய சமுதாயத்தில் இன்று பிரதிபலிக்கவில்லை. அந்த சமநிலையைக் கொண்டு வர வேண்டுமென்றால் சமூக, பொருளாதாரக் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றம் தேவை. வார்த்தையின் உண்மையான பொருளில் சொல்ல வேண்டுமென்றால், கலாச்சாரப் புரட்சி ஏற்பட வேண்டும்.’
என்னைப் பொருத்த வரையில் தாவோ ஆஃப் பிஸிக்ஸின் உண்மையான தொடர்ச்சி அதுதான்.
- நன்றி: ‘ஓப்பன்’ மேகஸீன்
- மிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
$$$