ஹிந்து வாக்காளர்கள் அரசியல் மயப்பட வேண்டும்

– லக்ஷ்மி மணிவண்ணன்

கவிஞரும் எழுத்தாளருமான திரு. லக்ஷ்மி மணிவண்ணன், முற்போக்கு முகமூடிகளின் முகாம்களில் இருந்தவர்; அவர்களின் நாடகங்களை உணர்ந்து விலகி வந்தவர். தமிழின் தார்மிகக் குரலாக ஒலிக்கும் தனிக்குரல் இவருடையது. இது இவரது முகநூல் பதிவு…

ஹிந்து வாக்காளர்கள் அரசியல் மயப்பட வேண்டும்.

இல்லையென்றால் பிற மத அரசியல் சக்திகளின் அன்றாட  நகக்கீறல்களில் இருந்து தப்பிக்க இயலாது. அவர்கள் பெரிய திட்டங்களின் அடிப்படையில் ஹிந்து எதிர்ப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். 

இந்த நகக் கீறல்கள் ஒவ்வொன்றும் அன்றாடம் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் அருகதை கொண்டவையும் அல்ல; சிறுமையும் , நாலாந்தரமான அரசியல் தன்மையும் கொண்டவை. எல்லாம் தோலுரித்து வெளிப்படை ஆகிவிட்டவையும் கூட. ஒட்டு மொத்தத்தில் ஹிந்து எதிர்ப்பு, ஹிந்து சிதைப்பு என்னும் நோக்கங்களின் அடிப்படையின் பின்னின்று இவை செயல்படுகின்றன. மதமாற்றம் ஆதார நோக்கம்.

ஹிந்து மத எதிர்ப்பை இதுகாறும் சநாதன எதிர்ப்பு என்றும் பிராமண எதிர்ப்பென்றும் பூசி மெழுகி உருட்டிக் கொண்டிருந்தவர்கள், சமீபகாலமாக நேரடியாகவே ஹிந்து எதிர்ப்பில் ஈடுபடுகிறார்கள். இது ஒரு மிஷன். நிறுத்த மாட்டார்கள். எது ஒரு தேசத்தின் தலையாய மதமோ அதனை அழிக்க முற்படுதல் இந்த மிஷனின் உலகளாவிய வேலைத் திட்டம். 

ஹிந்து எதிர்ப்பு என்பது இன்று தமிழகத்தில் வணிகத்திலும் இடம் பெற்றுள்ளது. முக்கியமாக திரைப்படத் துறையில். ஊடகங்களிலும், அரசியலிலும் மட்டுமே அதன் ஊடுருவல் அதிகம் என இதுகாறும் புரிந்து வைத்திருந்தோம். ஹிந்து எதிர்ப்பை முன்வைக்காமல் சூசகமாகவேனும், ஹிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தாமல் சினிமாவில் இன்று ஒருவர் அதன் கதவுகளைத் திறந்து வெற்றி கொள்ள இயலாது. சினிமாவில் பங்காற்றும் பிராமணர்கள் கூட ஹிந்து எதிர்ப்பை வெளிபடுத்தியவாறே தான் தங்கள் இருப்பைப் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. இத்தனைக்கும் நூற்றாண்டுகளாக பிராமணர்கள் தமிழ் சினிமாவில் இழிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். பிராமண எதிர்ப்பு என்பது ஹிந்து மத எதிர்ப்பின் ஒரு பகுதி.

நேற்று வெற்றி மாறன், இன்று கமல் ஹாசன், முந்தின நாள் சிவகுமார், நாளை வேறொருவர் தங்கள் தொழிலின் பொருட்டு, பிழைப்பின் பொருட்டு எதையெனும் சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். இவர்கள் சினிமாவில் தங்கள்  இருப்பின் பொருட்டு  பேசக்கூடியவர்கள். தவிர ஹிந்து எதிர்ப்பைப் பேசும் எத்தனை சில்லறை அமைச்சர்கள்? நரி வண்டுகள்? போதகர்கள்? அரசியல்வாதிகள்? யோசித்துப் பாருங்கள். தினமும் இந்த மிஷன் ஆட்டோமெட்டிக்காக எவரேனும் ஒருவரின் வடிவில் வேலை செய்து கொண்டே இருக்கிறது.

ஹிந்து மதத்தலைவர்கள் இப்படி பிற மதங்களைப் பேசுவதில்லை. இந்தியாவில் ஹிந்து மதத்தைத் தவிர பிற ஒரு மதத்துக்கும் இப்படியான நெருக்குதல்கள் இல்லை. அந்த மதம் சார்ந்தவர்களை நோக்கி,  அப்படி ஒரு மதமே கிடையாது என்று தைரியத்துடன் பேசும் குரல் வேறு எந்த மதத்தின் முன்பும் இல்லை. 

ஹிந்துமத புராணங்கள், நம்பிக்கைகள், சடங்குகள் கொச்சைப்படுத்தப் படுவது போல பிற எந்த மதத்தின் புராணங்களும் பொதுமக்கள் முன்னிலையில் விவாதத்திற்கு உள்ளாகவில்லை. நாம் எதிர்வினைகள் தாம் செய்கிறோம். அதிலும் பலவீனமான எதிர்வினைகள். எதிர்ப் பேச்சுகள். 

ஹிந்து வாக்காளர்கள் அரசியல் மயப்படுத்தப்படுவார்கள் எனில், இவர்களைப் பொருட்படுத்த வேண்டியது வராது. இப்படிப் பேசவும்  மாட்டார்கள். ஓக்கி புயல் சேதத்தில் இறந்த ஹிந்துகளுக்கு பத்து லட்சம் ஈடும், இறந்த கிறிஸ்தவர்களுக்கு இருபது லட்சம் ஈட்டுத் தொகையும் தமிழகத்தில் வழங்கப்பட்டது. பாரபட்சமாகவே இன்னும் உணரப்படாத பாரபட்சம் இது. கிறிஸ்தவப் பாதிரியார்கள் முழுநேர அரசியல் வேலை செய்து கிறிஸ்தவர்களை அரசியல் ரீதியில் திரட்டி வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து பெறுகிற பாரபட்சமே இந்தக் கூலி. 

ஹிந்து வாக்காளர்கள் அரசியல் மயப்படுவது வரையில் இத்தகைய பேச்சுகளை நிறுத்துவதற்கில்லை. எல்லா துறைகளிலுமே சின்ன சின்ன சமரசங்கள் இல்லாமல் உயிர் வாழ இயலாது. அது வேறு விஷயம். தமிழகத்தில் ஊடகம், அரசியல், கலை, இலக்கியம், சினிமா எல்லாவற்றிலும் முன் நிபந்தனையாக உங்கள் சுய அடையாளங்களின் மீது காறி உமிழ்ந்துவிட்டு உள்ளே செல்ல வேண்டியிருக்கிறது. இது மிகவும் தரம் தாழ்ந்த ஒரு நிலை. ஹிந்துவாக ஒருவன் உள்ளே செல்ல விருப்புவானாயின், தன்னை இழிவு செய்துவிட்டு, தன் மீது செய்யப்படுகிற சிறுமைகளில் தானும் உடன் நின்று தன்னுடைய புரமோஷனின் நிமித்தம் உள்ளே செல்ல வேண்டியிருக்கிறது. பிற மதத்தினரும், பிற மதத்தினரின் அரசியல் சக்திகளும் சூழலை அந்த அளவிற்குக் கைப்பற்றி வைத்திருக்கிறார்கள். ஏறக்குறைய நானூறு-  ஐனூறு ஆண்டுகால சிந்தனைப் படையெடுப்பின் உச்ச நிகழ்வுகள் இன்று தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறுகின்றன. இவை ஏற்கத்தக்கனவோ, பொறுத்துக் கொள்ளும்படியானவையோ அல்ல.

அறுபதினாயிரம் தேவாலயங்கள் ஐரோப்பா முழுவதிலும் பூட்டிக் கிடக்கின்றன. விலைக்கு செல்கின்றன. ஏன்?  தத்துவரீதியாக தனக்கு என்ன நடந்தது என்று ஆராய்வது இந்த மிஷனின் பணியாக இல்லை. பிற மதங்களுக்குள் தலையிட்டு கலகம் செய்து அங்கே ஒட்டிக் கொள்ள முயல்வதே இந்த மிஷன் ஏற்றிருக்கும் வேலை. அதனாலேயே ஹிந்துகளின் ஒருங்கிணைவை இந்த சக்திகள் குலைக்கிறார்கள். ராமசாமி ஐம்பது வருடங்களுக்கு முன்னர்  ‘ஹிந்துகள் வேசை மக்கள்’ என்றதை இடைவெளியில் புதிது புதிதாக ஆட்கள் வந்து நிரப்புகிறார்கள்.  ‘ஹிந்துப் பெண்கள் ஆண்களை உரசி மகிழ்வதற்காக கோயிலுக்குச் செல்கிறார்கள்’ எனக் கூறியவன் ராமசாமி; எழுதி வைத்திருக்கிறான். இதனைக் காட்டிலும் கீழாக ஹிந்து வழிபாட்டு முறைகளை எந்த பைத்தியக்காரனாலும் புரிந்து கொள்ள முடியாது.

இவர்களைப் பொருட்படுத்தத் தேவையற்ற நிலைக்கு உயர வேண்டுமாயின் ஹிந்துக்கள் ஒன்று படவேண்டும். தமிழகத்தில் இருக்கும் ஹிந்துக்களில் இருபது சதவீதம் வாக்காகத் திரள இயலுமாயின் இந்த ஹிந்து எதிர்ப்பு மிஷனை நம்மால் என்கவுன்டர் செய்து விட முடியும்.

அப்படி ஹிந்துக்கள் அரசியல் மயப்படுத்தப்பட ஏற்ற காலம் இதுவே. கடைசித் தரப்பினர்களாக ஹிந்துக்கள் அரசியல் மயப்படுதல் அவசியம்; வேறு வழி கிடையாது.

முயற்சி திருவினையாக்கும்.

$$$

Leave a comment