பற்றி எரிகிறது பங்களாதேஷ்!

-சேக்கிழான்

மதரீதியாகக் கொடுமைப்படுத்தப்படுவதால், பங்களாதேஷிலிருந்து ஹிந்துக்கள் அகதிகளாக வந்தால் அவர்களை நம்நாடு அரவணைக்க வேண்டும். ஏனெனில் ஹிந்துக்களுக்கு ஒரே தாயகம் பாரதம் தான். இந்தக் கண்னோட்டத்துடன் தான் இந்திய குடியுரிமை திருத்த சட்டம்-2019 கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
கைமீறிய கலவரமும், பதவி இழந்த ஷேக் ஹசீனாவும்

நமது அண்டைநாடும் நட்புநாடுமான பங்களாதேஷில் ஆகஸ்ட் முதல்வாரத்தில் மிகவும் கொடுமையான நிகழ்வுகள் அரங்கேறின. பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம் வன்முறை வடிவெடுத்து, அந்நாட்டின் அமைதியைக் காவு கொண்டது. இறுதியில் ஜனநாயக முறையில் தேர்வான பிரதமர் ஷேக் ஹசீனா, பதவி விலகி, தாய்நாட்டிலிருந்து தப்பி இந்தியாவுக்கு வர வேண்டியதாகிவிட்டது. அவருக்கு பாரதம் அடைக்கலம் அளித்திருக்கிறது.

1975 ஆக. 15ஆம் தேதி நடந்த ராணுவப் புரட்சியின்போது இவரது தந்தையும் பங்களாதேஷ் உருவாகக் காரணமாக இருந்தவருமான ஷேக் முஜிபுர் ரஹ்மான் கொல்லப்பட்டார். அப்போது அவரது குடும்பமே படுகொலையானது. எனினும், வெளிநாடு சென்றிருந்ததால் ஷேக் ஹசீனாவும் அவரது தங்கையும் உயிர் தப்பினர். அதன் பிறகு 1981இல் நாடு திரும்பிய ஷேக் ஹசீனா ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடி, ஜனநாயகத்தை மீட்டார். என்றபோதும், பங்களாதேஷை ஆள்வது, அதுவும் ஒரு பெண்மணி ஆள்வது என்பது பெரிய சவால். அதில் அவர் மிகச் சிறப்பாக வெற்றியும் பெற்றார்.

இன்றைய பங்களாதேஷ் தொழில் வளத்தில் முன்னேறி இருப்பதற்கும், ஜனநாயகம் அங்கு சிறிதுகாலம் நிலவியதற்கும் காரணம் ஹசீனா தான். 1996- 2001, 2009- 2024 காலகட்டங்களில் அவர் பிரதமராக இருந்தபோது, இந்தியாவுடனான நல்லுறவைக் கொண்டு, தனது நாட்டை மேம்படுத்தினார். எனினும், எதிர்க்கட்சிகளை கடுமையாக நசுக்கினார். குறிப்பாக, தனது அரசியல் எதிரியான, முன்னாள் ராணுவ தளபதி ஜியா உர் ரஹ்மானின் மனைவி பேகம் காலிதா ஜியாவை ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்து சிறையில் தள்ளினார். தனக்கு போட்டியாக வரக் கூடியவர் என்று யூகித்துணர்ந்த, நோபல் பரிசு பெற்ற கிராமின் வங்கி நிறுவனர் முகமது யூனுஸ் மீதும் பல வழக்குகளைத் தொடுத்தார். எனவே அவர் வெளிநாடு தப்பிச் சென்றார்.

என்றபோதும், பங்களாதேஷில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் ஓரளவேனும் நிம்மதியாக வாழ்ந்தது ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் தான். பாகிஸ்தான் ஆதரவு மனப்பான்மை கொண்ட முஸ்லிம் லீக், இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் பரப்பும் ஜமாத்-ஏ-இஸ்லாமி, கலிதா ஜியாவின் பி.என்.பி. கட்சி ஆகியவற்றின் நெருக்கடிகளை லாகவமாகக் கையாண்டு வந்தார். ஷேக் ஹசீனாவும் தீவிர இஸ்லாமியப் பற்றாளரே. எனினும், பிற மதத்தவர்களை ஓரளவேனும் அனுசரித்தார்.

அவர் செய்த ஒரு சிறு தவறு ஊதிப் பெரிதாக்கப்பட்டு, இன்று அவரது நாட்டை விட்டே விரட்டியுள்ளது. பாகிஸ்தானின் ஓர் அங்கமாக இருந்த கிழக்கு பாகிஸ்தானில் பாக். ராணுவம் நடத்திய படுகொலைகள், அத்துமீறல்களைக் கண்டித்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் நிறுவிய அவாமி லீக் போராடியது. அதையடுத்து 1970-71களில் பாகிஸ்தான் அரசின் கடும் அடக்குறைகள் அங்கு ஏவப்பட்டன. அதில் சுமார் ஒரு கோடி பேர் கொல்லப்பட்டனர். அப்போது இந்திய ராணுவ உதவியுடன், அவர் அமைத்த முக்தி வாஹினி போராட்டப் படை, பாக். ராணுவத்தைத் தோற்கடித்தது. 1971இல் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் பங்களாதேஷ் உதயமானது. அவரே நாட்டின் முதல் ஆட்சியாளராகவும் 1971 ஏப். 11இல் பொறுப்பேற்றார்.

ஆனால், 1975 ஆக. 15இல் அவரும் அவரது குடும்பத்தினரும் (ஷேக் ஹசீனா தவிர்த்து) பங்களாதேஷ் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்து பிறந்த நாடு என்பதாலோ என்னவோ, பங்களாதேஷிலும் ஜனநாயகம் நிலைபெறவே இல்லை. அதை மாற்றிக் காட்டியவர் ஷேக் ஹசீனா தான். ஆனால், அவரும் எதிர்க்கட்சிகளை முடக்குவதில் சளைத்தவர் அல்ல.

பங்களாதேஷில் சுமார் ஒரு கோடி ஹிந்துகள் வாழ்கின்றனர். அவர்கள்தான் எப்போதும் எளிய பலியாடுகளாக, பங்களாதேஷில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்படும் ஒவ்வொரு முறையும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான முதல் விதை 1960லேயே விதைக்கப்பட்டது என்பது பலரும் அறியாத அதிர்ச்சித் தகவல்.

ஒன்றுபட்ட பாரதத்தை மதரீதியாக இரு நாடுகளாகத் துண்டாட வேண்டுமென்று கோரிய முகமது அலி ஜின்னாவின் முஸ்லிம் லீக் கட்சி, அதற்கு உடன்படாத காங்கிரஸ் கட்சியை வழிக்குக் கொண்டுவர 1946 ஆகஸ்ட் 16ஆம் தேதியை ‘நேரடி நடவடிக்கை நாளாக’ அறிவித்தது. அன்று, வங்கத்தின் கிழக்குப்பகுதியில் நடந்த மத வெறியாட்டத்தில் ஒரே நாளில் சுமார் 15 ஆயிரம் ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக கொல்கத்தாவிலும் நவகாளியிலும் ரத்த ஆறு ஓடியது. அதைக் கண்டு மிரண்டே மகாத்மா காந்தி பிரிவினைக்கு ஒப்புக் கொண்டார் என்பது வரலாறு.

அன்றுமுதல், கிழக்கு பாகிஸ்தானாக மாறியபோதும், பங்களாதேஷாக விடுதலை பெற்றபோதும், ஒவ்வொரு போராட்டச் சூழலிலும், அங்குள்ள ஹிந்துக்கள் தாக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. ஹிந்துக் கோயில்களை எரிப்பது, ஹிந்துக்களின் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிப்பது, ஹிந்துக்களின் சொத்துக்களை மிரட்டி பறித்துக் கொள்வது, ஹிந்துப் பெண்களைக் கற்பழிப்பது, கடத்திச் செல்வது ஆகியவை அங்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அன்றாடச் செயல்கள். தஸ்லிமா நஸ்ரின் எழுதிய ‘லஜ்ஜா’ புதினம் இந்த அட்டூழியங்களைப் பதிவு செய்திருக்கிறது. எனவேதான் அவருக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ‘ஃபத்வா’ அறிவித்தனர். அவர் அங்கிருந்து தப்பி இந்தியாவில் அடைக்கலமாகி தலைமறைவாக வாழ்கிறார்.

பங்களாதேஷில் ஹிந்துக்கள் ஒவ்வொரு நாளும் அஞ்சி அஞ்சித்தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். சக குடிமக்களான இஸ்லாமியர்களின் கருணையால் தான் அவர்கள் இன்றும் ஏதோ வாழ்கிறார்கள். இந்தக் கொடுமைகளுக்கு அஞ்சி முஸ்லிமாக மதம் மாறியவர்கள் பல கோடிப் பேர்.

வங்கமொழி அடிப்படையில் பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிந்தாலும், மத அடிப்படையில் வங்க மொழி பேசும் ஹிந்துக்கள் இரண்டாந்தரப் பிரஜையாகவே அங்கு நடத்தப்படுகிறார்கள். ஆயினும் பல்வேறு நிர்பந்தங்களாலும், வாழ்வியல் காரணங்களாலும்தான், அவர்கள் அங்கு வாழ்கிறார்கள். இந்தச் சூழலில் தான் இன்றைய பங்களாதேஷ் போராட்டங்களை அவதானிக்க வேண்டும்.

1971-இல் பாக். ராணுவத்துக்கு எதிராகப் போராடி பலியான, உடல் ஊனமுற்ற விடுதலைவீரர்களின் குடும்பங்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பில் 30 % இட ஒதுக்கீடு அளித்து ஷேக் ஹசீனா அரசு சட்டம் கொண்டுவந்தது. இது அவாமி லீக் கட்சியினரை மனதில் கொண்டது என்பதை அனைவரும் அறிவர். அதற்கு எதிராக 2018இல் பெரும் போராட்டம் நிகழ்ந்தது. அதையடுத்து அந்த இட ஒதுக்கீடு சட்டத்தை ஹசீனா அரசே திரும்பப் பெற்றது. எனவே அப்போது போராட்டம் ஓய்ந்தது.

அதையடுத்து நிகழ்ந்த பொதுத்தேர்தலில் அதீதப் பெரும்பான்மையுடன் வென்றார் ஹசீனா. ஆனால், பங்காளாதேஷ் போன்ற வாழைப்பழ நாட்டில் ஜனநாயகம் என்பது ராணுவமும், உள்நாட்டுக் கலகக்காரர்களும் விரும்பும் வரை மட்டுமே என்பது இப்போது ஊர்ஜிதமாகி இருக்கிறது.

இட ஒதுகீட்டுக்கு எதிரான பங்களாதேஷ் மாணவர்களின் போராட்டம்

சென்ற ஜூன் மாதம், இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்தது. அரசு பின்வாங்கி ரத்து செய்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து மாணவர்களின் போராட்டம் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் அறப் போராட்டமாகத் தொடங்கிய மாணவர் போராட்டம் சிறுகச் சிறுக வன்முறை வடிவெடுத்தது. அரசு ஆதரவுடன் அவாமி லீக் கட்சியினர் மாணவர்கள் மீது நடத்திய தாக்குதல்களும் எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போலாகிவிட்டது. இந்த மோதல்களில் ஆரம்பத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர். அதையடுத்து, அரசு எதிர்ப்பாளர்களும் அராஜகவாதிகளும் மாணவர் போராட்டத்தில் ஆதரவாளர்களாக ஊடுருவினர். அதன் பிறகு போராட்டம் வன்முறை வடிவெடுத்தது.

அதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, துப்பாக்கிச்சூடு போன்ற கடும் நடவடிக்கைகளை ஷேக் ஹசீனா அரசு மேற்கொண்டது. அதனால் மேலும் பல உயிரிழக்கவே, நாட்டின் உச்சநீதிமன்றம் தலையிட்டு, இட ஒதுக்கீட்டின் அளவை 5 % ஆகக் குறைத்தது (ஜூலை 19). அதையடுத்து, மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக உருவெடுத்தது. அதைக் கையாளத் தெரியாமல் ஹசீனா அரசு திகைத்தது.

ஏனெனில் இந்தப் போராட்டங்கள் அனைத்தும், திட்டமிட்ட ஒரு வழிமுறையில் இயங்கின. வெளிநாட்டு ஆதரவுடன் செயல்படும் தன்னார்வ இயக்கங்கள், கம்யூனிஸ்ட்கள், மாணவர்கள், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள், பாக். ஆதரவு மனப்பான்மை கொண்ட தீவிர முஸ்லிம்கள், அரசு எதிர்ப்பு அராஜகக் கும்பல்கள் ஆகியோரின் ஒருங்கிணைப்பை அரசால் முறியடிக்க முடியவில்லை; காவல் துறையும் ராணுவமும் பின்வாங்கின. டாக்காவிலும் பிற நகரங்களிலும் வன்முறை இயல்பான நிகழ்வாகி விட்டது. குறிப்பாக ஹிந்துக்களும், அவாமி லீக் கட்சியினரும் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகினர். நூற்றுக்கணக்கான காவல் நிலையங்களே எரிக்கப்பட்டன என்றால், அங்குள்ள மக்களின் பரிதாப நிலையை யூகிக்கலாம்.

அதன் உச்சமாக ஆக. 5இல், பிரதமர் வீட்டை முற்றுகையிடப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர். அதையடுத்து ராணுவம் ஷேக் ஹசீனாவை 45 நிமிடங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு ஆணையிட்டது. எனவே அவர் பதவி விலகி, இந்தியாவுக்கு தப்பி வந்திருக்கிறார். அவரது அரசும் கலைக்கப்பட்டுவிட்டது.

அதன்பிறகு, பிரதமர் மாளிகை, அமைச்சர்களில் இல்லங்கள், அவாமி லீக் கட்சி அலுவலகங்கள், ஆளும் கட்சி ஆதரவாளர் வீடுகள், கடைகள், ஷேக் ஹசீனாவால் இதுவரை பாதுகாக்கப்பட்ட ஹிந்துக்களின் வீடுகள், கோயில்கள் எனப் பலவும் போராட்டக்காரர்களின் தாக்குதலுக்கு இலக்காகின; சூறையாடப்பட்டன. இதுவரை அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி சுமார் 500 பேர் இந்தப் போராட்டங்களில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பகுதியினர் ஹிந்துக்கள். பல லட்சம் பேருக்கு உணவளித்த மெஹர்பூர் இஸ்கான் கோயில் உள்பட நூற்றுக் கணக்கான ஹிந்துக் கோயில்கள் தகர்க்கப்பட்டிருக்கின்றன; தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. இதில் வேதனையான வேடிக்கை என்னவென்றால், ஷேக் ஹசீனாவை எதிர்த்து மாணவர் போராட்டங்களில் உடன் போராடிய ஹிந்து மாணவர்களும் கூட இப்போது தாக்கப்படுவது தான்.

தகர்க்கப்பட்ட இஸ்கான் ஆலயம்

தற்போது ராணுவ உதவியுடன் நோபல் விருதாளர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது. இவரது அமைச்சகத்தில் போராட்டக்காரர்களான மாணவர்களும் இடம் பெற்றுள்ளனர். இது வெளிநாடுகளின் ஆட்சிமாற்றச் சதி என்பதற்கான அடையாளங்கள் மெதுவாக வெளிப்படத் தொடங்கி இருக்கின்றன.

பங்களாதேஷில் நடைபெற்றுள்ள ஆட்சிமாற்றம், அண்டை நாடான இந்தியாவுக்கு பெரும் சிக்கலே. இதுவரை நமக்கு இணக்கமாக இருந்த ஷேக் ஹசீனாவால், எல்லையில் பதற்றம் குறைந்திருந்தது; இந்திய விரோதிகள் பங்களாதேஷ் மண்ணில் செயல்பட இயலாதிருந்தது. இனி நிலைமை மாறும். முகமது யூனுஸ் ஏற்கனவே இந்தியாவை கடும் எதிரியாக பாவித்து வந்தவர். தவிர, இன்னொரு இந்திய எதிர்ப்பாளரான பேகம் கலீதா ஜியாவும் புதிய அரசால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அவாமி லீக் கட்சி கடும் சேதாரத்துக்குள்ளாகி இருக்கும் நிலையில், அடுத்து எப்போது தேர்தல் நடந்தாலும், ஆக்கப்பூர்வமான மாற்றம் ஏற்பட வழியில்லை.

தற்போதைய பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷகாபுதீனும், ராணுவ தலைமை தளபதி வாக்கர்-உஸ்-ஜமானும் ஷேக் ஹசீனாவையும் இந்தியாவையும் பரம வைரியாகக் கருதாதவர்கள் என்பதால்தான், அவர் உயிர் தப்பி இந்தியாவுக்கு வர முடிந்திருக்கிறது. அவருக்கு தற்போது தற்காலிக அடைக்கலம் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் தஞ்சம் அடைய விரும்பிய பிரிட்டன் அவரை அனுமதிக்க மறுத்துவிட்டது. இத்தனைக்கும் அவரது மகள் பிரிட்டனில் தான் பணிபுரிகிறார். (முஜிபுர் ரஹ்மான் கொலையாளிகள் பலர் பிரிட்டனில் அடைக்கலம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிட வேண்டிய முரண் தகவல்).

கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவுக்குள் ஊடுருவிய பங்களாதேஷிகள் சுமார் ஒரு கோடிப் பேர் இந்தியக் குடியுரிமை பெற்றுள்ளனர். இவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினரும், மமதா பானர்ஜியும் தான். தற்போதைய கலவரச் சூழல் நீடிப்பதால், மேலும் பலர் இந்தியா வர வாய்ப்புள்ளது. குறிப்பாக அங்கு சொல்லொனாக் கொடுமைகளுக்கு இரையாகும் ஹிந்துக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு பெருமளவில் வர வாய்ப்புள்ளது. இவர்களை இந்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பது சவாலான கேள்வி.

மதரீதியாகக் கொடுமைப்படுத்தப்படுவதால், அங்கிருந்து ஹிந்துக்கள் அகதிகளாக வந்தால் அவர்களை நம்நாடு அரவணைக்க வேண்டும். ஏனெனில் ஹிந்துக்களுக்கு ஒரே தாயகம் பாரதம் தான். இந்தக் கண்னோட்டத்துடன் தான் இந்திய குடியுரிமை திருத்த சட்டம்-2019 கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

தேசத்தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையைத் தகர்க்கும் போராட்டக்காரர்கள்.

பங்களாதேஷில் ஹிந்துக்கள் கொடுமைப்படுத்தப்படுவது குறித்து பாஜக தவிர்த்து வேறெந்தக் கட்சியும் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதும் கவலை அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்கள் இதுதொடர்பாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். எனினும் எப்போதும் சண்டைக்கோழியாக இருக்கும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி,  “பங்களாதேஷ் விவகாரம் வெளிநாட்டு விவகாரம். இதில் மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை ஆதரிக்கிறோம்” என்று பதுங்கி இருக்கிறார். பங்களாதேஷிகளின் சுயரூபத்தை முழுவதும் உணர்ந்திருக்கும் ஒருவர், அவர்களால் ஆதாயம் பெற்றவரான  ஒருவர் இவ்வாறு கூறியிருப்பதும் கவனிக்கத் தக்கதே.

நமது கவலை அங்குள்ள ஹிந்துக்களின் வாழ்க்கை பற்றி மட்டுமல்ல. “இந்தியாவிலும் பங்களாதேஷில் நடந்தது போன்ற சம்பவங்கள் நிகழும்” என்ற காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளின் மிரட்டல்தான் ஆபத்தானது. காங்கிரஸ் தலைவர்கள் சல்மான் குர்ஷீத்தும், சஜ்ஜன் குமாரும் (ம.பி.) வெளிப்படையாகவே இந்த மிரட்டலை விடுத்திருப்பது கவலை அளிக்கிறது. இதனை பாஜக கடுமையாகக் கண்டித்துள்ளது.  

பங்களாதேஷில் தற்போது (2024) நிகழ்ந்த ஆட்சி மாற்றப் போராட்டங்களுக்கும், ஏற்கனவே இந்தியாவில் நிகழ்ந்த குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் (2019), வேளாண் சட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் (2021) ஆகியவற்றுக்கும் ஓர் ஒற்றுமை காணப்படுகிறது. இவை அனைத்தும் வெளிநாட்டு ஆதரவு பெற்று உள்ளூர் ‘டூல்கிட்’ கும்பலால் தூண்டிவிடப்பட்டவை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. காவல்துறையைச் சீண்டிவிட்டு அவர்களின் தாக்குதலை உருவாக்கி, அதில் பலியாகும் போராட்டக்காரர்களை தியாகியாகச் சித்தரித்து போராட்டக் களத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதே இத்திட்டம். இந்த சதிவலையில் சிக்காமல் மோடி அரசு சமயோசிதமாகத் தப்பியதுடன், போராட்டக்கார்களின் பின்னணியையும் அம்பலப்படுத்தியது. ஆனால், ஷேக் ஹசீனா இந்த சதிவலையில் சிக்கி ஆட்சியை இழந்திருப்பதுடன், அகதியாகவும் ஆகி இருக்கிறார்.

பங்களாதேஷ் உருவாகக் காரணமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலைகளை உடைத்தெறிவதும், அவரது சிலை மீது விடலைகள் சிறுநீர் கழிப்பதும் காலத்தின் கோலங்கள். இதுவே, இந்தப் போராட்ட்த்தின் பின்னணியில் இருக்கும் பாகிஸ்தானின் சுயரூபத்தை அம்பலப்படுத்துகின்றன. சீனாவும் அமெரிக்காவும் கூட இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பங்களாதேஷின் பல இடங்களில் ஹிந்துக்கள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் மாணவத் தலைவர்கள், அவர்கள் யாரால் இயக்கப்படுகிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள்.

முகமது யூனுஸ்

பங்களாதேஷில் தற்போது பிரதமராகி இருக்கும் முகமது யூனுஸுக்கு வாழ்த்துக் கூறியுள்ள இந்திய பிரதமர், அங்குள்ள ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது மட்டும் போதாது. இந்தியாவின் உதவிகளை தொடர்ந்து பெறும் நாடு அது என்ற முறையில், ஒரு கண்காணிப்புக் குழுவை அங்கு அனுப்பி, அமைதி திரும்பவும் இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். போராட்டக் காலத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணமும், வன்முறையில் இறங்கி குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனையும் பெற்றுத் தருவது, பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் கடமை.

இப்போதைக்கு பங்களாதேஷ் விவகாரத்தை “இது உள்நாட்டு விவகாரம். இந்தியா உன்னிபாகக் கவனிக்கிறது” என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறி இருக்கிறார். இது ஒரு ராஜதந்திர அறிவிப்பு மட்டுமே. இந்தியா செய்ய வேண்டியதைச் செய்யும்; செய்ய வேண்டும். “பங்களாதேஷில் நடப்பவை இந்த நாட்டின் உள்விவகாரங்கள் என்று சொல்லி அண்டைநாடான இந்தியா கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது” என்று புதிய பிரதமர் முகமது யூனுஸ் சொல்லி இருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், இந்தியாவின் ஆதரவோ, பங்களிப்போ இல்லாமல், அங்கு அமைதி திரும்புவது சாத்தியமே இல்லை.

ஒரு நாடு எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும், நல்ல அரசனும் அரசும் அமையாவிட்டால் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும் என்று சொல்லி இருக்கிறார் திருவள்ளுவர் (குறள்- 740). இதனையே பங்களாதேஷில் மட்டுமல்லாது, இந்தியாவின் பிற அண்டைநாடுகளிலும் காண்கிறோம். ஒரு வலிமையான, தேசநலன் விழையும் அரசின் தேவையையே, பங்களாதேஷில் நிகழ்ந்துவரும் வன்முறையும் ஆட்சிமாற்றமும் காட்டுகின்றன.

$$$

Leave a comment