பொது உரிமையியல் சட்டம்: காலத்தின் தேவை

-சேக்கிழான்

ஒருவர் பூணூல் அணிகிறாரா, திருநீறு பூசுகிறாரா, நாமம் தரிக்கிறாரா, தொப்பி அணிகிறாரா, சிலுவையை அணிகிறாரா, டர்பன் அணிகிறாரா என்பதல்ல பிரச்னை. அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமமாகக் கருதப்படுகின்றனரா என்பதே கேள்வி. குறிப்பாக அனைத்து சமயங்களிலும் சரிபாதியாக இருக்கும் மகளிருக்கு சமுதாய வாழ்வில் சமமான நீதியை வழங்குவது அரசியல் சாசனத்தின் கடமை.

பொது உரிமையியல் சட்டம் அல்லது பொது சிவில் சட்டம் (Uniform civil code) என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொதுவான உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டங்களைக் குறிக்கிறது.

திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்துப் பகிர்வு, வாரிசுரிமை, பரம்பரை, தத்தெடுக்கும் உரிமை, குடும்ப உரிமைகள் போன்ற வாழ்வியல் அம்சங்கள் தொடர்பானதே உரிமையியல் சட்டம். உலகில் பெரும்பான்மையான நாடுகளில் அனைத்து சமயத்தினருக்கான பொது உரிமையில் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டம் நடைமுறையில் உள்ளது.

இஸ்லாமிய நாடுகளான சௌதி அரேபியா, ஏமன், இரான், ஜோர்டான், சிரியா, லெபனான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மட்டும் உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டங்களில், ஷரீஅத் சட்டம் முழுமையாக நடைமுறையில் உள்ளது. சில நாடுகளில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் மட்டுமே ஷரீஅத் சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியா மதச்சார்பற்ற நாடாக உள்ள போதிலும், இஸ்லாமியர்களுக்கான உரிமையியல் சட்டத்தைப் பொருத்த வரை, ஷரீஅத் சட்டமே நடைமுறையில் உள்ளது. இது மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டுக்கே எதிரானது.

இந்திய அரசியலமைப்பின் பகுதி 4 மற்றும் பிரிவு 44-இல் அனைத்து இந்திய சமயங்கள் மற்றும் சமூகங்களுக்கும் பொருந்தும் வகையில் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற பொது சிவில் சட்டத்தை வலியுறுத்துகிறது. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 44,  “இந்தியாவின் எல்லை முழுவதும் குடிமக்களுக்கு ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைப் பாதுகாக்க அரசு முயற்சிக்கும்” என்று கூறுகிறது.

பொது சிவில் சட்டமானது, ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொது உரிமையியல் சட்டங்களைக் குறிக்கிறது. அதாவது, பொது சிவில் சட்டம் என்பது, மதத்தின் அடிப்படையில் இல்லாமல், நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒரேமாதிரியான பொதுவான உரிமையியல் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவது ஆகும்.

நம் நாட்டில் ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், பௌத்தம், சமணம், யூதம், பார்சி உள்ளிட்ட பல மதத்தவர்கள் உள்ளனர். இதில் ஹிந்து மதம் பெரும்பான்மையானதாகவும், இதர மதங்கள் சிறுபான்மையானதாகவும் உள்ளது. இதனால் மதம் சம்பந்தப்பட்ட திருமணம், சொத்துப் பகிர்வு, பழக்கவழக்கம் உள்ளிட்டவற்றில் ஒவ்வொரு மதத்தவருக்கும் தனித்தனியாகச் சட்டங்கள் உள்ளன. அதாவது, ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு தனிநபர் சட்டத்தைப் பின்பற்றுகிறது. இது மதங்களிடையே திருமண உறவு ஏற்படும்போது பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

ஹிந்து மதத்தைப் பொறுத்த வரை தனியாகக் குடும்பவியல் சட்டம் இருக்கிறது. நாட்டின் சட்டம் உருவாக்கப்பட்ட போது, உரிமையியல் சட்டம் குறித்த தீவிரமான விவாதங்கள் நிகழ்ந்தன. ஆனால், அனைத்து சமயத்தினருக்கும் ஒரே மாதிரியான உரிமையியல் சட்டம் என்பது கொள்கையளவில் ஏற்கப்பட்டபோதும், அதை நடைமுறைப்படுத்தும் அரசியல் துணிவு அப்போதைய அரசியல் தலைவர்களிடம் இருக்கவில்லை.

1950களில் ஹிந்து குடும்பச் சட்டம் பல சீர்திருத்தங்களுடன் வடிவமைக்கப்பட்டது. அது வரையிலான தங்கள் பழக்க வழக்கங்களை சட்டத்திற்கேற்ப மாற்றி, ஹிந்துக்கள் தங்களை வடிவமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சீக்கியர்களின் மத உணர்வுகளை மதிக்கும் வகையில், அவர்களின் மதச் சட்டப்படி, சுய பாதுகாப்பிற்காக எந்நேரமும் கத்தி வைத்திருக்கவும், காவல் துறை மற்றும் ராணுவத்தில் பணிபுரிந்தாலும்கூட அங்குள்ள விதிகளுக்கு மாறாக சீக்கியர்கள் தாடி, தலையில் டர்பன் வைத்துக் கொள்ளவும் அவர்களுக்கான தனிநபர் சட்டம் அனுமதி அளிக்கிறது.

இதேபோன்று, ‘ஷரீஅத்’ சட்டத்தைப் பின்பற்றுவது முஸ்லிம்களின் மத நம்பிக்கையில் ஒன்றாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் இது ‘முஸ்லிம் தனிநபர் சட்டம்’ என்கிற பெயரில் 1937இல் இயற்றப்பட்டது. முஸ்லிம் தனிநபர்கள், அவர்கள் குடும்பம் பற்றிய அக்கறை, முஸ்லிம் சமூகம் சார்ந்த திருமணம், மணமுறிவு, வாரிசு, வக்பு நிறுவனங்களைக் கையாள்வது குறித்த விவகாரங்களுக்குப் பொருந்துவதாக இச்சட்டம் உள்ளது. எனினும், இதில் நீதிமன்றமே உச்சபட்ச அதிகார அமைப்பாக உள்ளது.

இப்படி, சட்டங்கள் ஒவ்வொரு மதத்தவருக்கும் தனித்தனியாக இருப்பது நீதி நிர்வாகத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துகிறது. இப்படியான அனைத்து மதங்களின் தனிநபர் சட்டங்களுக்கும் பொதுவான நெறிமுறைகளைக் கொண்டதாக பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றே,  அரசியலமைப்புச் சட்டத்தின் 44-வது பிரிவும் வலியுறுத்துகிறது.  

பல வழக்குகளில் அரசியல் சாசனத்தின் 44-வது பிரிவு பற்றியும், பொது சிவில் சட்டத்தின் தேவை குறித்தும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதுடன், பல்வேறு தீர்ப்புகள் மூலமாக பொது சிவில் சட்டத்தை நாட்டின் ஒருமைப்பாட்டுக்காகக் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது. அரசியல் சாசன சிற்பியான டாக்டர் பீமராவ் ராம்ஜி அம்பேத்கரும் இதனையே வலியுறுத்தி உள்ளார்.

ஆனால், இஸ்லாமியர்கள் இதனை கடுமையாக எதிர்க்கின்றனர். அவர்கள் நாட்டின் சட்டதிட்டங்களுக்குள் அடங்கிப் போக விரும்பவில்லை என்பதே இதற்குக் காரணம். ஆனால் இந்த எதிர்ப்பை சீனாவிலோ, அமெரிக்காவிலோ  அவர்கள் காட்ட இயலாது. ஏனெனில் இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியல்வாதிகள் போல அந்நாடுகளில் எவரும் இல்லை.

இந்த இடத்தில் இஸ்லாமியர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி, “ஷரீஅத் சட்டமே தேவை என்றால் அதில் குற்றவியல், தண்டனைச் சட்டங்களை ஏன் இந்தியாவில் தவிர்க்கிறீர்கள்? உரிமையியல் சட்டங்களில் மட்டும் ஷரீஅத் சட்டம் தேவை என்பவர்கள், அரபு நாடுகள் போல கொடிய தண்டனை சட்டங்களைப் பின்பற்றத் தயாரா?” என்பது தான்.

அனைவருக்கும் பொதுவான உரிமையியல் சட்டத்தால் சிறுபான்மை மதங்களின் தனிப்பட்ட வழக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் தேவையில்லை. மத வழக்கங்களில் சட்டம் தலையிடுவதில்லை. சட்டம் சார்ந்த திருமணம், வாரிசுரிமை, சொத்துரிமை, பரம்பரை தொடர்பான வாழ்வியல் அம்சங்களே இச்சட்டத்தில் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

ஒருவர் பூணூல் அணிகிறாரா, திருநீறு பூசுகிறாரா, நாமம் தரிக்கிறாரா, தொப்பி அணிகிறாரா, சிலுவையை அணிகிறாரா, டர்பன் அணிகிறாரா என்பதல்ல பிரச்னை. அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமமாகக் கருதப்படுகின்றனரா என்பதே கேள்வி. குறிப்பாக அனைத்து சமயங்களிலும் சரிபாதியாக இருக்கும் மகளிருக்கு சமுதாய வாழ்வில் சமமான நீதியை வழங்குவது அரசியல் சாசனத்தின் கடமை.

சட்டம் என்பது மக்களுக்காக, மக்களே நிறைவேற்றுவதாகும். நாடும் மக்களால் உருவானதே. எனவே ஒரு நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால், ஒரே சட்டம் அவசியம் என்பது தெளிவு. இதனை நாட்டு மக்கள் அனைவரும் உணரும்போது நாடு முழுவதும் ஒரே சட்டம் தானாக அமையும். அந்தத் திசையில் தான் தற்போது நாடு சென்று கொண்டிருக்கிறது.

  • நன்றி: விஜயபாரதம்

$$$

Leave a comment