-ஆசிரியர் குழு
தமிழன்னையின் தவப்புதல்வர்களுள் முதன்மையானவர் திருவள்ளுவர். பொ.யு.மு 31-ஆம் ஆண்டில் அவர் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்று சான்றோர்களால் குறிப்பிடப்படுகிறது. அவர் மறைந்த (ஆண்டு தெரியவில்லை) நாள் மாசி உத்திர நட்சத்திரம் என்றும் கருதப்படுகிறது.
நமது முன்னோரை அவர்களது நினைவிற்குரிய திருநாட்களில் நினைவுகூர்வதும் வணங்கி மகிழ்வதும் மரபு. அந்த அடிப்படையில், வைகாசி விசாகமான இன்று திருவள்ளுவரைப் போற்றி மகிழ்கிறோம். இந்நாளில் வைகாசி அனுஷமே திருவள்ளுவர் நாள் என்று, 1931-இல் கூடி உறுதி செய்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு நன்றி கூறுகிறோம்.
1970-களிலிருந்து தை இரண்டாம் நாளை திருவள்ளுவர் தினமாக தமிழக அரசு அனுசரித்து வருகிறது. திருவள்ளுவர் ஆண்டும் அன்றுமுதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. திருவள்ளுவர் தினத்திற்கு எந்த வரலாற்று அடிப்படையும் இல்லை என்றபோதும், தமிழகத்தில் அந்நாள் ஒரு விடுமுறை நாளாக கருதப்பட்டு வருகிறது. அதேசமயம், வைகாசி விசாக நட்சத்திரமே திருவள்ளுவர் பிறந்த நட்சத்திரம் என்ற அடிப்படையில் அவரை அந்நாளில் நாயனார்களில் ஒருவராக வழிபடுவது நமது மரபாக உள்ளது.
அந்த வகையில், இன்று தமிழகம் எங்கும் திருவள்ளுவர் திருநாள் (ஜெயந்தி) விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, இந்த வரலாற்றுப் பதிவை இங்கு வெளியிடுகிறோம்…

.
- திருவள்ளுவர் பிறந்த நாள் வைகாசி அனுடமே!
இந்தத் தலைப்பிற்குச் சொந்தக்காரர் இலங்கையைச் சேர்ந்த வித்துவான் பண்டிதர் கா.பொ.இரத்தினம் எம்.ஏ.பி.ஓ.எல். அவர்கள் ஆவர். 23.11.1952 இல் அவரால் நிறுவப்பட்ட தமிழ்மறைக் கழகம் சார்பில் உலகத் தமிழர்கள் மத்தியில் அரும்பாடுபட்டு, வைகாசி அனுட (அனுஷம்) நட்சத்திர நாளையே திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என வேண்டி அதில் வெற்றியும் பெற்றார் திரு இரத்தினம் அவர்கள்.
எங்கிருந்து உதித்தது இக்கருத்து?
திருவள்ளுவர் பிறந்த நாள் வைகாசி அனுடம் என்பது வித்துவான் பண்டிதர் கா.பொ.இரத்தினம் அவர்களின் சொந்தக் கருத்தன்று. அவருக்கு முன்னவர்கள் கொண்ட கருத்து, கடைப்பிடித்த ஒழுக்கம். அப்படியாயின் அதனை எங்கிருந்து கொண்டார்? அதனைத் தெரிந்து கொள்வோம்.
சென்னை, மயிலாப்பூரில் திருவள்ளுவர் கோயில் ஒன்று இருப்பதை யாவரும் அறிவர். அந்தக் கோயிலைப் பற்றி மறைமலை அடிகள் பின்வருமாறு கூறியுள்ளார்:
“இன்றும் அவ்விருப்பை மரமும், அவர் தோன்றிய குடிலின் அடையாளமாக அம்மரத்தின் அருகே அவரது திருவுருவம் நிறுத்திய திருக்கோயில் ஒன்றும் திருமயிலையில் இருக்கின்றன”.

1837 ஆம் ஆண்டிலே திருத்தணிகைச் சரவணப்பெருமாள் ஐயர் பதிப்பித்த திருக்குறள் பதிப்பிலும் இக்கோயிலைப் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது.
ஏறக்குறைய 230 ஆண்டுகட்கு முன்பு சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த எல்லீஸ் துரை அவர்களும் இந்தக் கோயிலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 600 ஆண்டுகட்கு முன்பு இத்திருகோயில் தோன்றியிருக்கலாம் என்பதும், மறைமலை அடிகள் குறிப்பிடும் சடாமுடியுடன் கூடிய சிதைந்த திருவுருவம் திருவள்ளுவருடையதே என்பதும் தொல்லியல் ஆய்வறிஞரான திரு. இராமச்சந்திரன் அவர்களது கருத்தாகும்.
இந்தத் திருவள்ளுவர் கோயிலில், திருவள்ளுவர் அவதார நாளாக வைகாசி அனுடமும் அவர் அடைந்துபோன நாளாக மாசி உத்தரமும் கடைப்பிடிக்கின்றன. அதற்கான பூசைகள் நடைப்பெற்று வருகின்றன. தற்போது இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் 80 ஆண்டுகட்கு முன்பு திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த கழகத்தின் சென்னைப் பொறுப்பாளாராக இருந்த பத்மஸ்ரீ. திரு. வ.சுப்பையா பிள்ளை அவர்கட்கு ஓர் எண்ணம் உருவானது. அந்த எண்ணத்தை அவர் நண்பர் திரு. காழி. சிவகண்ணுசாமி பிள்ளையுடன் பகிர்ந்து கொண்டதின் பயனாக அவ்விருவரும் சேர்ந்து 17.01.35 அன்று ஒரு முடிவு செய்தனர். அந்த முடிவு என்ன?
திருவள்ளுவர் திருநாட் கழகம்:
உலகம் முழுவதும் போற்றிக் கொண்டாடும் தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கென குறிப்பிட்ட நாளில் விழா எடுத்துச் சிறப்பிக்க வேண்டி ‘திருவள்ளுவர் திருநாட் கழகம்’ என்னும் பெயரில் ஓர் அமைப்பினை உருவாக்க வேண்டும் என்பதே அந்த முடிவாகும்.
அந்த முடிவின்படி வித்துவான் பாரிப்பாக்கம் உண்ணப்ப முதலியார், தமிழ்ப்புலவர் சிவ. முத்துக்குமாரசாமி முதலியார், திரு. காழி சிவ கண்ணுசாமி பிள்ளை, பி.ஏ, திரு. எம்.பாலசுப்பிரமணியம் எம்.ஏ, திரு. டி.செங்கல்வராய பிள்ளை பி.ஏ.எல்.டி; திரு. வ.சுப்பையா பிள்ளை, திரு.சி.எம்.கோவிந்தராஜ முதலியார் ஆகிய எழுவரையும் கொண்ட ஓர் இயக்குநர் கழகம் முதலில் தொடங்கப்பட்டது.
இந்த இயக்குநர்களும், இவர்களால் தெரிவு செய்யப்பட்ட செயலுறுப்பினர்களும் சேர்ந்து சென்று, பெரும்புலவர் பேராசிரியர் திரு. கா.நமச்சிவாய முதலியார் அவர்களைச் சந்தித்து, திருநாட் கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டினர். அவர்களும் இவர்கள் வேண்டுதலை ஏற்றுத் தலைவராக இருக்க இசைவு தெரிவித்தனர். இவ்வாறு, திருவள்ளுவர் திருநாட்கழகம் முழுமையாக உருப்பெற்றது.
திருவள்ளுவர் திருநாட் கழகத்தினர் திருவள்ளுவர் திருநாளை 1935 ஆம் ஆண்டு மே 18,19 ஆம் நாட்களில் சென்னையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவது என்றும், தமிழகத்திலும், அண்டை மாநிலங்களிலும், அயல் நாடுகளிலும், இவ்விழாவினைக் கொண்டாட ஏற்பாடு செய்வது என்றும் முடிவெடுத்து அதற்கென மூன்று மாதங்கள் கடுமையாக உழைத்தனர்.
1935 மே 18 ஆம் நாள் அனுட நட்சத்திர நாள் அந்த நாளில் திருநாட்கழகத்தினர் வள்ளுவர் உருவப்படத்துடனும், திருக்குறள் சுவடியுடனும் ஊர்வலமாகச் சென்று மயிலைத் திருவள்ளுவர் கோயிலைச் சேர்ந்து திருவள்ளுவர் திருமேனிக்கு நீராட்டி பூச்சூட்டி பூசைகள் செய்து வழிபாடாற்றினர்.
விழாப் பொதுக்கூட்டம் மே 18, 19 ஆகிய இரண்டு நாட்களிலும் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் கூடியது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

திருநாட் கூட்டத்தில் பங்கு பற்றியோர், கலந்து கொண்டோரில் முக்கியமான பெரியோர்கள்:
பொதுக்கூட்டத் தலைவர் மறைமலை அடிகள், திருநாட்கழகத் தலைவர் கா.நமச்சிவாய முதலியார், ச.சச்சிதானந்தம் பிள்ளை, பி.தாவூத்ஷா, இ.டி.இராஜேஸ்வரி அம்மாள், பா.கண்ணப்ப முதலியார், திரு. வி.கலியாணசுந்தர முதலியார், டி.செங்கல்வராயன், சிவ.அருணகிரி முதலியார், மா.பாலசுப்பிரமணிய முதலியார், சிவ. முத்துக்குமாரசாமி முதலியார், மணி.கோட்டீச்சுர முதலியார், தெ.பொ.மீனாட்சி சுந்தரம் பிள்ளை, டி.செங்கல்வராய பிள்ளை, காழி.சிவ. கண்ணுசாமி பிள்ளை, ஆர்.எஸ்.சாம்பசிவ சர்மா, வ.சுப்பையா பிள்ளை, நின்றை தங்கவேலு முதலியார்.
சென்னை அரசாங்க மந்திரியாயிருந்த உயர்திரு. எல்.முத்தைய முதலியார், திவான் பகதூர், தெய்வசிகாமணி முதலியார், செ.தெய்வநாயகம் பிள்ளை முதலியோர் உள்ளிட்ட பல பெரியவர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்த இருநாட் பொதுக்கூட்டம் திருவள்ளுவர் பிறந்த நாளைக் கொண்டாடும் முகத்தான் கூடிய கூட்டமே தவிர, திருவள்ளுவர் பிறந்த ஆண்டு பற்றியது அல்ல.
1935 மேத் திங்கள் 18,19 ஆகிய நாட்களில் தமிழகத்தின் பல இடங்களில் திருவள்ளுவர் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டங்கள் நடைப்பெற்றன. 1935 ஆண்டிற் போலவே 1936 ஆண்டில் வைகாசி அனுடநாளை சென்னை திருநாட்கழகம் நடத்தியது. அந்நாள் விழாவிற்குத் தலைமையேற்றவர் டாக்டர் உ.வே.சாமிநாதையர். தென்காசித் திருவள்ளுவர் கழகம் நடத்திய விழாவிற்குத் தலைமை தாங்கியவர் அக்காலம் சென்னைத் திருநாட்கழகத் தலைவராக இருந்த திரு.வி.க. அவர்கள். கோவையில் துடிசைக்கிழார் அ.சிதம்பரனார் தலைமையேற்றனர். 1937இல் திருவள்ளுவர், திருநாட்கழகத்தின் விழா பாசனேரியில் சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார் தலைமையில் நடந்தது.
இவ்வாறு வைகாசி அனுடநாளில் நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் காலப்போக்கில் தமிழ்நாட்டு வழக்கப்படி வலிமை குன்றி வழக்கொழிந்தது. இந்தப்படிக்கு வழக்கு ஒழிந்துப் போன அந்த நாள் விழாவினைத்தான் 17 ஆண்டுகள் கழித்து 1952இல் மீண்டும் புதுப்பித்து உலகம் முழுவதும் கொண்டாட வகைச் செய்தார் பண்டிதர் கா.பொ.இரத்தினம்.
1935இல் தொடங்கி 1940 முடிய திருவள்ளுவர் திருநாள் வைகாசி அனுடத்தில் கொண்டாடியதை எவரும் மறுக்கவில்லை. ஈ.வே.ரா., சி.என்.அண்ணாதுரை, சர்.பி.டி.ராசன், ஆ.கசபதி நாயகர் முதலிய பெரியோர்களும் சேர்ந்து அந்த நாளைக் கொண்டாடியிருக்கிறார்கள்…
***
சர்ச்சையைக் கிளப்பியவருக்கு பண்டிதரின் பதில்:
பின்னாளில் (1953-இல்) கி.ஆ.பெ.விசுவநாதம், தை முதல் நளை திருவள்ளுவர் நாளாக கொண்டாட வேண்டும் என்று கூறி சர்ச்சையைத் தொடங்கிவைத்தார். அப்போது கி.ஆ.பெ.விசுவநாதத்திற்கு பண்டிதர் கா.பொ.இரத்தினம் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளவை இவை:
…தமிழகத்திலே தை முதல் நாளைச் சிலர் கொண்டாடுகிறார்கள் என்பதை அன்பர் விசுவநாதம் இப்பொழுது தான் கூறுகிறார். வைதிகக் கொள்கை, தனித்தமிழ்க் கொள்கை, திராவிடக் கொள்கை முதலிய பல கொள்கைகளையுடைய பத்திரிகைகளின் ஆதரவு கிடைத்தமை எமக்கு பேரூக்கத்தைத் தந்தது; ஒருவரேனும் வைகாசி அனுடத்தை விட்டுவிட்டுத் தைமாதம் முதல் நாளைக் கொண்டாடவேண்டும் என்று எமக்கு எழுதவும் இல்லை.
அக்காலத்தில் 1935இல் தமிழ்நாட்டிலிருந்த தமிழ்ப் பேரறிஞர்கள் யாவரும் சாதி, மத, அரசியற் கட்சி வேறுபாடுகளின்றி ஒன்று சேர்ந்து கொண்டாடினார்கள். தமிழ்நாட்டிலுள்ள பல கட்சித் தலைவர்களும் ஈ.வே.இராமசாமி நாயக்கர், அறிஞர் சி,என்.அண்ணாத்துரை முதலியோரும் கூட அவ்வாண்டில் நடைபெற்ற கொண்டாட்டங்களிலே கலந்து கொண்டனர்.
அன்பர் விசுவநாதம் அப்பொழுது அந்த விழா நாளை வேண்டாம் என்று கூறியதாகவோ தை முதல் நாளைத்தான் கொண்டாடுவோம் என்று கூறியதாகவோ அறிய முடியவில்லை. அவர் கூறியிருக்க மாட்டார் என்றே நாம் கருதுகிறோம்.
அப்பொழுது தை முதல் நாளிலே தான் வள்ளுவர் திருநாளைக் கொண்டாடவேண்டும் என்னும் புதுக்கருத்து மரபு வழிவந்த வைகாசி அனுட நாளுக்கு மாறாக தோன்றவில்லை.
தமிழினத்துக்குத் தொண்டு செய்கிறோம் என்று கூறுகிறவர்கள் ஒற்றுமைக்கு வழிகாட்ட வேண்டுமேயன்றி, வேற்றுமையை உண்டாக்கும் முறையில் வேசுதலோ, எழுதுதலோ கூடாதென்பதை அன்பர் விசுவநாதம் அவர்களும் ஏற்றுக் கொள்வார்கள்.
நம் முன்னோர்கள் பெருந்செயலைப் பின்பற்றாமலும், சிறந்த மரபதைத் தழுவாமலும், நம்மினத்தின் ஒற்றுமையைச் சிதைத்துப் பழியையும், அழிவையும் தேடிக்கொள்ளும் நிலைமைக்கு நாம் வந்துவிட்டோம். இந்த நிலைமையை மாற்ற இனியாவது யாம் எல்லோரும் முயலல் வேண்டும்.
-என்று குறிப்பிட்டுள்ளார்.
***
பண்டிதரை ஆதரித்த சான்றோர்கள்:
திரு. இரத்தினம் அவர்களின் வேண்டுதலைக்கு உடன்பட்டு அவருடைய கருத்துக்கு ஆதரவு தெரிவித்த பெருமக்களில் சிலர்:
1. தவத்திரு குன்றக்குடி அடிகளார்:
“தாங்கள் முடிவு செய்த குறிப்புப்படியே வைகாசி அனுடத் திருநாளில் கொண்டாடுவதற்குத் தடையில்லை” (13.2.53)
2 .நாவலர் ச. சோமசுந்தர பாரதியார்
“தமிழுக்கு மாட்சி தருவது குறளை ஆக்கிய புலவர் பெருநாள்” (1.4.54)
3. பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை
“மாசி உத்தரத்தை அடைந்த குருபூசைத் தினமாகக் கொண்டாடுவதில் தங்களுக்கும் பிறருக்கும் அபிப்பிராய பேதமில்லாத போது வைகாசி அனுடத்தை அவதரித்த தினமாகக் கொண்டாடுவதில் நிறையன்றிக் குறையொன்றுமில்லையே” (13.6.53)
4. பெங்களூர் மத்திய கல்லூரிப் பேராசிரியர் எஸ். உருத்திரபதி எம்.ஏ:
“தாங்கள் முயற்சியானது மிகவும் சாலப் பொருத்தமான நன் முயற்சியாகும்” (19.7.54)
5. பாலம் கோட்டை புனித சவேரியார் கல்லூரி பேராசிரியர் ஆ, அருளப்பன் பி.ஏ:
“1935 முதல் வைகாசி அனுடநாள் அந்நன்னாளாக அமைந்து விட்டது எனலாம். ஆதலின் அதனை நிலைத்திடச் செய்தல் நன்றே” (19.8.54)
6. பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை:
“திருவள்ளுவர் திருநாள் தமிழ்நாட்டில் பெரும்பாலும் வைகாசி அனுடத்திலேதான் நடைபெறுகிறது” (24.2.54)
7. திரு. ம.பொ.சிவஞான கிராமணி:
“வைகாசி அனுடத்தில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடுவதில் நானும் தமிழரசு இயக்கத்தாரும் பரிபூரணமாக ஒத்துழைப்போம்” (15.3.54)
8. வித்துவான் பண்டிதர் லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார்:
“தங்கள் தொண்டு பெரிதும் பாராட்டுதற்கு உரியதாகும்”(20.3.54)
9. டாக்டர் மா.இராசமாணிக்கனார்:
“திருவள்ளுவர் திருநாள் கொண்டாட்டம் மிகப் பாராட்டத்தக்கது. தங்களது பெருமுயற்சிக்கு எனது வாழ்த்தும் ஒத்துழைப்பும் உரியதாகுக” (12.3.54)
10. சித்தாந்த சிரோன்மணி சி.எஸ்.கந்தசாமி முதலியார்:
“தாங்கள் கழகத்தின் பெருமுயற்சியால் வள்ளுவர் திருநாள் வைகாசித் திங்கள் அனுடநாள் என்பது உறுதியாய் நிலைபெற்றுவிட்டது. “(16.3.54)
11. கவியோகி சுத்தானந்த பாரதியார்:
“முயல்க முயல்க முயல்க மேன்மேலும்
பயன்களை வைத்தீசன் பதம்” (15.3.54)
12. புலவரேறு அ.வரத நஞ்சையன்:
“தங்கள் அடிச்சுவட்டைப் பின்பற்றி ஒழுக எம் போல்வார் பெரிதும் கடப்பாடுடையவர்களேயாவர்”(12.3.54)
13. பாலகவி வயிநாகரம் வே.இராமநாதன் செட்டியார்:
“மயிலை திருக்கோயிலில் திருவள்ளுவர் திருநாள் வைகாசி அனுடத்தில் கொண்டாடப்பெற்று வருவதொன்றே தங்கள் கருத்துக்குப் போதிய சான்றாகும்” (விசய. மாசி.30)
14. டாக்டர். மு.வரதராசன்:
“தங்கள் முயற்சியைப் போற்றுகிறேன்.
ஆக்கம் அதர்வினாய்ச் சேர்வதாக” (17.3.54)
15. புலவர் சி.இலக்குவனார்:
“தங்கள் வேண்டுகோளின்படி மே 18இல் (வைகாசி 3இல்) திருவள்ளுவர் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றோம்” (23.3.54)
16. பேராசிரியர். அ.ச.ஞானசம்பந்தன்:
“இந்நாட்டில் இயற்கையாகவே வைகாசி அனுடத்தில் இந்நாள் பலராலும் கொண்டாடப் பெறுகிறது”. (6.3.54)
17. சுவாமி சித்பவானந்தர்:
“தாங்கள் எடுத்துள்ள முயற்சி மிக மேலான முயற்சியாகும். இது நன்கு நடைபெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்” (13.3.54)
18. திரு. கி.வா.ஜகந்நாதன்:
“குறள்நூலை வேதமெனக் கொண்டுதிரு வள்ளுவரைக்
கொண்டாடற்குத்
திறமுறுநாள் வைகாசி அனுடமென மரபறிந்து
சிறப்ப ஏற்றே”…… (26.5.54)
19. ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்:
“திருவள்ளுவர் திருநாளை மிக்க சிறப்போடு நடத்துகிறீர்கள். என் சந்தோஷத்தைத் தங்களுக்கும் மற்ற தொண்டர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.” (28.1.53)
20. கலைவாணர் என்.எல்.கிருஷ்ணன்:
“தங்கள் அருமுயற்சிக்கு எனது பாராட்டுதல்கள்”
***

பண்டிதரின் வேண்டுதலை ஏற்றுக் கருத்துரைத்த பத்திரிகைகள்:
1. கல்கி – ஏப்ரல் 12 – 1958
“மகான்களுடைய திருநாட்களைக் கொண்டாடவேண்டியது அவசியம்”. என்றைக்குக் கொண்டாடினால் என்ன? என்னும் கேள்விக்குத் திருப்திகரமான விடையிறுப்பது கடினமான காரியம். ஆயினும் நாடெங்கும் ஒரே தினத்தில் கொண்டாடுவதில் சில அனுகூலங்கள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. அவ்விதம் ஒரு தினத்தைக் குறிப்பிடவேண்டும் என்று ஏற்ப்டும்போது, மறைமலையடிகள் போன்றவர்கள் ஒப்புக்கொண்ட வைகாசி அனுடத்தையே வைத்துக்கொள்வது சாலச் சிறந்ததாகும்.”
2. செந்தமிழ்ச்செல்வி – வைகாசி, 1953
“ஆண்டுகள் தோறும் தவறாது இத்திருநாளை வைகாசித் திங்களில் வரும் பனை (அனுட) நன்னாளில் சிறப்பாகக் கொண்டாடுமாறு தமிழக மாந்தர்களையும் கழகங்களையும் நூல் நிலையங்களையும், பள்ளிகளையும் பிற பொது நிலையங்களையும் வேண்டுகிறோம்”
3. ஆத்ம சோதி – வைகாசி 1953
“திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடுவதில் எல்லாரது கவனத்தையும் கருத்தையும் ஒரு நாளைச் சிறப்பாகக் கொண்டாடுவது நற்பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை. அவ்வித விழாவிற்கும் பெரும்பாலார் ஏற்றுக்கொண்ட வைகாசி அனுடமே பொருந்தியதெனலாம். மாசி உத்தரத்தை வள்ளுவர் பரகதியடைந்த நாளாகப் பாவிப்பதில் குற்றமொன்றில்லை”
4. குமுதம் – 20.4.54
“வருகிற 18.5.54 (அனுட நட்சத்திரம் அமையும் நாள்) அன்று தமிழ்மறை தந்த தெய்வத் திருவள்ளுவரின் பெருநாள் வருகிறது. அன்றைய தினத்தை விடுமுறை நாளாக்கும்படி அரசாங்கத்தை வற்புறுத்தவும் வேண்டும் என்று இக்கழகத்தினர் கோருவதைத் தமிழபிமானிகள் அனைவரும் ஆதரிப்பாளர்கள் என்பது திண்ணம்”
5. திருவள்ளுவர் – மே, 1953
“மறைமலையடிகளார் போன்ற பேரறிஞர்கள் பலரும் வைகாசி அனுடத்தையே துணிந்துள்ளார்கள். ஆதலின், வரும் வைகாசி அனுடமே பொருந்துமெனக் கொள்கின்றோம்.
6. தமிழோசை – ஏப்ரல் 1954 (சிங்கப்பூர்)
“வள்ளுவர் பெருந்தகையின் திருநாள் வரும் வைகாசித் திங்கள் 5 ஆம் (18.5.54) நாளாகும். இத்திருநாளைத் தமிழரனைவரும் தத்தம் இல்லங்கள், கழகங்கள், சங்கங்கள், கல்விச்சாலைகள் தோறும் கொண்டாடுக. இன உணர்ச்சி கொண்டு இணைந்து நின்று எழுச்சி கொள்க”
7. குறள் மலர் – 12.3.54
“ஒரு பெரியாரை உலக அறிஞரை எப்போது எம்முறையில் கொண்டாடினால் தான் என்ன? [இந்த வினாவிற்குக் கல்கி நல்ல விடை தருகிறது]
8. தர்ம சக்கரம் – சித்திரை 1953 – சித்திரை 1954
“உலகத்தில் உள்ளவற்றுள் தலைசிறந்த இலக்கியமாகிய குறள் தமிழிலே இருப்பதும் அதனையாத்த பெரியோன் தமிழ் மகனாக இருப்பதும் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஓர் தனிப்பெருமையாகும். இப்பெருமைக்குப் பாத்திரமாகத் தம்மை ஆக்கிக் கொள்வதற்குரிய வழி தமிழர் தாம் வாழும் மூலை முடுக்குகளிலெல்லாம் வள்ளுவர் விழாக் கொண்டாடுவதாகும். ஆகவே, இவ்வாண்டு வைகாசித் திங்கள் ஐந்தாம் நாளாகிய (18.5.54) திருவள்ளுவர் திருநாளை எல்லா இடங்களிலும் எல்லாரும் கொண்டாடவேண்டும்”
9. கலைமகள் – வைகாசி 1952
”வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் மயிலையில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் குருபூசை நிகழ்கிறது. அந்த மரபை ஒட்டித் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடலாம். எல்லா நாளிலும் திருவள்ளுவரைக் கொண்டாடவேண்டியது தான். ஆயினும் எல்லோரும் ஒருமுகமாக் ஒருநாளில் விழாக் கொண்டாடுவதினால் நல்ல பயனுண்டாகும். இந்த ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி வள்ளுவர் திருநாள் வருகிறது. எதிலும் வரையறையோடு செய்வது அவசியம். மரபைப் பின்பற்றி விழாக் கொண்டாடலாம்”
10. சமூகத் தொண்டன் – 13.4.58
“28.5.53 திருவள்ளுவர் திருநாள். இந்த நாளை எல்லா நிலையங்களிலும் கொண்டாடித் தமிழினத்தின் வாழ்க்கை பொங்கி வழிய வேண்டும் என்று வற்புறுத்துகின்றோம்.”
மேலும் சுதந்திரன், தமிழ்நாடு, தினமணி கதிர் முதலிய பத்திரிகைகள், ஆசிரியருரை, குறிப்புரை எழுதியுள்ளன. காவேரி, குமரகுருபரன், சங்கப்பலகை, சித்தாந்தம், செங்கோல், செட்டிநாடு, திருப்புகழமிர்தம், திராவிடநாடு, திராவிடன், தினமணி, தொண்டன், விந்தியா, அமுதசுரபி, மாணவர் சோதி, உதயம், தமிழ்முழக்கம், ஈழகேசரி, தினகரன், தமிழ்முரசு, தமிழ்நேசன், ஆகிய பத்திரிகைகள் திரு. இரத்தினம் அவர்கள் கண்ட கழகத்தின் அறிக்கைகளை வெளியிட்டு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளன.
இவற்றில் ஒன்றான திராவிடநாடு அறிஞர் அண்ணாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த இதழ் என்பது கவனத்திற்குரியது.
***
திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடிய சங்கங்கள்:
தமிழ்மறைக் கழகத்தின் வேண்டுதலை ஏற்று வைகாசி அனுடத்தில் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடிய சங்கங்கள், சபைகள், மன்றங்கள் சில:
இலங்கை
1. யாழ்பாணம் ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்கம்
2. கொழும்பு சைவ மங்கையர் கழகம்
3. கொழும்பு விவேகானந்த சபை
4. இலங்கை வானொலித் தமிழ்க் கலை மன்றம்
5. கொழும்பு, திருவள்ளுவர் நாடக சபா
6. நெல்வீதி, அரசினர் மத்தய சல்சாரித் தமிழ்மன்றம்
7. பாரதி கழகம்
8. உனுப்பிட்டி இந்து சன்மார்க்க சங்கம் – என 65 அமைப்புகள் இலங்கையில் கொண்டாடியுள்ளன.
இந்தியா
1. திருவள்ளுவர் ஆலயம், மயிலாப்பூர்
திரு. சி.இராசகோபாலாச்சாரியார், திரு ஓ.பி. இராமசாமி செட்டியார், திரு. சி.நரசிம்மன், திரு.ஆ.கசபதி நாயகர். திரு.வி.சி.பழனிசாமி கவுண்டர், திரு. சி.சுப்ரமணியம், திரு. எம்.மாணிக்கவேலு ஆகியோர் தலைமையில் ஒவ்வோர் ஆண்டும் திரு. ரா.பி.சேதுப்பிள்ளை போன்றோர் சொற்பொழிவாற்ற வைகாசி அனுடநாளைக் கொண்டாடியுள்ளனர்.
2. தியாகராய நகர் திருவள்ளுவர் கழகம்
3. தென்காசித் திருவள்ளுவர் கழகம்
4. புதுச்சேரி மங்கள கான சபா
5. புதுக்கோட்டை திருக்கோகரண நிலையம்
6. சென்னைத் திருவள்ளுவர் மன்றம்
7. குன்னூர் பாரதி பழஞ்சிக வாலிபர் மன்றம்
8. தேவகோட்டை திருவள்ளுவர் சங்கம்
9. தியாகராய நகர் இந்திப் பிரச்சார சபை
10. மதுரை திருவள்ளுவர் கழகம்
-இப்படியாக பல ஊர்களில் வைகாசி அனுடநாளில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடியுள்ளனர்.
குண்டக்கல், சித்தூர், கல்கத்தா, பம்பாய், பெங்களூர், ஆகிய இந்திய மாநிலத் தலைநகர்களில் விழாக் கொண்டாடியுள்ளனர்.
அகில பர்மாத் தமிழர் சங்கச் சார்பில் பர்மாவிலும், கோலால்ம்பூர், சமயப் பிரச்சார சபை, மலாயா தமிழ்ப் பண்ணை சிலாங்கர் கிளை, மலாயா தமிழ் இளைஞர் சங்கம், சிறம்பான் தமிழ்ப் பண்ணைக்கிளை ஆகியவற்றின் சார்பில் மலாயாவிலும் (மலேசியா), சிங்கப்பூர் தமிழர் சங்கம், சிங்கப்பூர் தமிழர் எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் சிங்கப்பூரிலும் திருவள்ளுவர் திருநாளை வைகாசி அனுடத்தில் கொண்டாடியுள்ளனர்.
யோகேனஸ்பேக் திருவள்ளுவர் மறைக்கழகம் சார்பில் தென்னாப்பிரிக்காவில் விழாக் கொண்டாடப்பட்டிருக்கிறது. மேலும், டர்பன் டிரான்ஸ்வால் முதலிய இடங்களிலும் கொண்டாடப்பட்டுள்ளது.
***


நமது கடமை:
தை இரண்டாம் நாளில் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பது மரபுக்கு மாறானது. திருவள்ளுவர் ஆண்டை நிலைநாட்டிய மறைமலையடிகள் போன்றோர் கருத்துக்கும் மாறானது என்பது வெள்ளிடைமலை.
இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 30 ஆண்டுகட்கு முன்பு திருவள்ளுவர் தோன்றினார் என்பது எனது ஆராய்ச்சி முடிவு எனச் சொல்லி திருவள்ளுவர் ஆண்டினை நிலைநாட்டிய மறைமலையடிகளின் கருத்தினை ஏற்றுக்கொண்ட கி.ஆ.பெ.விசுவநாதம், கலைஞர். கருணாநிதி போன்றோர், அதே மறைமலையடிகள் திருவள்ளுவர் பிறந்தநாளாக ஏற்றுப் போற்றிக் கொண்டாடிய வைகாசி அனுட நாளை மறுக்கிறார்கள் என்றால், அதில் ஏதோ சுயநலம் கலந்துள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.
பெரும்பாலும் தை முதல் நாள் பொங்கல் திருநாள் என்பதுதான் தமிழ் மக்கள் கொண்டுள்ள வழக்கம். பல காரணங்களுக்காகக் கொண்டாடப்படும் தைத் திங்கள் முதல் நாள் திருவள்ளுவர் தினமாகக் கொண்டாடச் சரிப்பட்டு வராது எனக் கருதிய தமிழ்நாடு அரசு (திமுக) 1970களில் தை இரண்டாம் நாளைத் (அதாவது மாட்டுப் பொங்கல் நாளை) திருவள்ளுவர் தினமாக அறிவித்ததையே, இன்றுவரை கடைப்பிடித்து வருகிறது.
அரசு தான் அந்த நாளை திருவள்ளுவருக்குரியது எனக் கொண்டாடுகிறதே தவிர தமிழ்மக்கள் ஒட்டுமொத்தமாகக் கொண்டாடுகிறார்கள் எனச் சொல்ல முடியாது. திருவள்ளுவர் தினத்தில் திருவள்ளுவர் சிறப்பிக்கப்படுவதில்லை.
தனித் தமிழ்க் கொள்கையுடையவர் அனுடத்தைப் பனைநாள் எனக் கொண்டு கொண்டாடலாம். நாற்களும், கோள்களும் நமக்காகா எனக் கூறும் பகுத்தறிவாளர்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை மறுக்க முடியாது. பழந்தமிழ் மக்களின் கொள்கைகளையும் வரலாறுகளையும் நன்கு அறிந்தவர்கள் சங்ககாலத் தமிழர் நட்சத்திரங்களிலேயே விழாக் கொண்டியுள்ளனர் என்பதை உணர்வர்.
பண்டைத் தலைவர்கள் தாம் பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டாடி வந்தனர் என்பதற்கு தொல்காப்பியமே சான்று பகிர்கிறது. முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களின் பாடல்களில் தமிழ்நாட்டு முடியுடை மூவேந்தர்களுக்கும் உரிய சில நட்சத்திரங்கள் கூறப்படுகின்றன. இவற்றை தொல்காப்பிய புறத்திணையியல் 36ஆம் சூத்திர உரையில் காணலாம். நட்சத்திரத்தைக் கொண்டாடுவது தான் தமிழ்மரபு என்பதை உணர வேண்டும். நாளைக் கொண்டாடுவது பிற நாட்டார் மரபு.
நாள்களையும், கோள்களையும் ஆதாரமாகக் கொண்டு காலத்தைக் கணிப்பதில் நமது முன்னோர் சிறந்து விளங்கினார். அவர்களையே அக்காலத்தில் கணியர்கள் என்றனர். அவர்கள் கண்டுபிடிப்யே ‘பஞ்சாங்கம்’ என இன்று வழங்குகிறது. பஞ்சாங்கத்தை ‘ஐந்து கேள்வி’ எனச் சிலப்பதிகாரம் செப்புகிறது.
தை மாதம் முதல் நாளை மாத்திரமின்றி ஏனைய தமிழ் மாதங்களின் முதல் நாளையும் பஞ்சாங்கம் உதவியின்றி அறிந்துகொள்ள முடியாது என்பதை உள்ளத்தில் கொள்ள வேண்டும்.
தை முதல் நாள், இரண்டாம் நாள் ஆகிய பொங்கல் நாள்கள் வெவ்வேறு காரணங்களால் போற்றப்படுவதால், வள்ளுவருக்கு மட்டுமே உரியதாகக் கொண்டாடுவதற்கு எனத் தனியே ஒரு நாள் வேண்டும். புத்தர், மகாவீரர், இயேசு, நபிகள் நாயகம் போன்றோர்க்கெனத் தனிநாட்கள் அவர்கள் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகின்றன என்பதை நாம் அறிவோம்.
அந்த வரிசையில் நமது வள்ளுவரையும் வைத்து அவரின் அவதார நாளாக தனிநாள் ஒன்றைக் கடைப்பிடிக்க வேண்டும். பொங்கல் நாட்களோடு சேர்த்துக் குழப்பக் கூடாது. அந்த வகையிலேதான் வைகாசி அனுட நட்சத்திரத்தை திருவள்ளுவருக்குரியது என, குறைந்தது 300 வருடங்களாக மயிலைத் திருவள்ளுவர் கோயிலில் கொண்டாடி வருகிறார்கள். இதனை உணர்ந்து தான் மறைமலையடிகள், திரு.வி.க., அண்ணா போன்றோர் நட்சத்திர நாளை உடன்பட்டுக் கொண்டாடியுள்ளனர். நட்சத்திரத்தைக் கொண்டாடுவது பழந்தமிழர் கொள்கை என்பதை அவர்கள் நன்றாகவே அறிந்துள்ளனர்.
ஆகவே தமிழ்மக்கள் அனைவரும் எவ்வித மாறுபாடுமின்றி வைகாசி அனுட நாளை திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாட வேண்டும்.
- தகவல் உதவி: வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம், சென்னை.
$$$