ஒரு சன்னியாசி, எலி உபத்திரவத்தைப் போக்க ஒரு பூனை வளர்த்தார் என்றும் பூனைக்குப் பால் வேண்டுமே என்பதற்காகப் பிறகு ஒரு பசுவும் வளர்த்தார் என்றும், பசுவைக் கவனிக்க ஓர் ஆள் வைத்தார் என்றும், அப்புறம் சன்னியாசி ஒரு குடும்பஸ்தர் ஆகிவிட்டார் என்றும் ஒரு கதை உண்டு. துறவியின் குடும்பம் வளர்ந்ததைப் போல என்னுடைய ஆசைகளும் வளர்ந்தன. மேனாட்டுச் சங்கீதத்தை ரசிக்கத் தெரிந்து கொள்ளுவதற்காக நான் பிடில் வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். ஆகவே, மூன்று பவுன் கொடுத்து பிடில் வாங்கினேன். அதைச் சொல்லிக் கொடுக்க அதைவிட அதிக தொகை கொடுத்தேன். பிரசங்கத் திறமை வர போதிப்பதற்காக மூன்றாவது ஆசிரியர் ஒருவரைப் பிடித்து அவருக்கு ஆரம்பக் கட்டணமாக ஒரு கினி (21 ஷில்லிங்) கொடுத்தேன். இதற்குப் பாடப் புத்தகமாக பெல் எழுதிய ‘ஸ்டான்டார்டு எலக்யூஷனிஸ்ட்’ என்ற புத்தகத்தை அவர் சிபாரிசு செய்தார். அதையும் வாங்கினேன். பிட்டின் பிரசங்கம் ஒன்றைப் படிக்கத் தொடங்கினேன்.....
Tag: சத்திய சோதனை
சத்திய சோதனை 1(6-10)
என் குற்றத்தை ஒரு கடிதத்தில் எழுதி என் தந்தையிடம் கொடுத்து, மன்னிப்புக் கேட்பதென்று கடைசியாகத் தீர்மானித்தேன். ஒரு துண்டுக் காகிதத்தில் அதை எழுதி நானே என் தந்தையாரிடம் கொடுத்தேன். அக்குறிப்பில் நான் என் குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்ததோடு அதற்குக் தக்க தண்டனையை எனக்குக் கொடுக்குமாறும் கேட்டிருந்தேன். என் குற்றத்திற்காக அவர் தம்மையே தண்டித்துக் கொள்ள வேண்டாம் என்றும் முடிவில் அவரைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இனித் திருடுவது இல்லை என்றும் நான் பிரதிக்ஞை செய்து கொண்டேன்..... அவர் முழுவதையும் படித்தார். முத்துத் துளிகள் போல் அவர் கன்னங்களில் கண்ணீர் வழிந்து காகிதத்தை நனைத்தது. ஒரு கணம் கண்ணை மூடிக்கொண்டு சிந்தித்தார். பிறகு கடிதத்தைக் கிழித்தெறிந்தார். அக்கடிதத்தைப் படிப்பதற்காக எழுந்து உட்கார்ந்தவர், திரும்பவும் படுத்துக் கொண்டார். நானும் கதறி அழுதேன். என் தந்தையார் அனுபவித்த வேதனையை நான் காண முடிந்தது. நான் ஓவியக்காரனாக இருந்தால் அக்காட்சி முழுவதையும் இன்று சித்திரமாக எழுதிவிட முடியும். அது இப்பொழுதும் மனத்தில் தெளிவாக இருந்து வருகிறது....
சத்திய சோதனை 1(1- 5)
உலகப் புகழ் பெற்ற சுய சரிதைகளில் மகாத்மா காந்தியின் (மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி) ‘சத்திய சோதனை’க்கு பிரதான இடமுண்டு. சத்திய சோதனை (The Story of my Experiments with Truth) என்பது அவர் எழுதிய சுய வாழ்க்கை வரலாற்று நூல். ‘என்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல’ எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தியடிகள், தன் வாழ்க்கையை ’ஒரு திறந்த புத்தகம்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தம் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு நினைவுபடுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார். அவை யாவும் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் என்பது அவரது எண்ணம். அதனால் இந்நூலுக்கு ’சத்தியசோதனை’ என்று அவர் பெயர் சூட்டினார். தம் பிறப்பு முதல் 1921 ஆம் ஆண்டு வரையிலான சுய சரிதையை காந்தியடிகள் எழுதியுள்ளார். இது, குஜராத்தி மொழியில் வெளிவந்த ‘நவஜீவன்’ வாரப் பத்திரிகையில் 1925 முதல் 1929 வரை எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் காந்தியடிகளின் தனிச் செயலர் மகாதேவ தேசாய். தமிழில் ரா.வேங்கடராஜுலு மொழிபெயர்த்துள்ளார்.