-சேக்கிழான்
தமிழக அரசு தொடர்ந்த வழக்கு ஒன்றில், தனது எல்லையை மீறிச் செயல்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது. இந்நிலையில் இன்று (2025 மே 16) உச்ச நீதிமன்றத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அனுப்பிய கடிதம் பெரும் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. ‘ஜனநாயக நாட்டில், மக்களின் பிரதிநிதிகள் உருவாக்கும் சட்டத்தைக் கண்காணித்து நடைமுறைப்படுத்தும் கடமை கொண்ட நீதித்துறை சட்ட நிறைவேற்றத்தை தானே கையில் எடுக்கலாமா?’ என்பதுதான் ஜனாதிபதி எழுப்பியுள்ள கேள்விகளின் அடிநாதம்.

‘அரசுகளின் மசோதாவுக்கு ஒப்புதல் கொடுப்பதா வேண்டாமா என்று முடிவு எடுக்க ஆளுநர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயிக்க அச்ச நீதிமன்றத்திற்கு அரசியல் சாசனம் அதிகாரம் அளித்துள்ளதா?’ என, ஜனாதிபதி திரௌபதி முர்மு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக 14 கேள்விகளை வினவி, அவற்றுக்கு பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றத்தை ஜனாதிபதி கேட்டுள்ளார். இந்திய அரசியல் வரலாற்றில் இது முக்கியமானதொரு தருணம்….
மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்குமான பலப்பரீட்சையாக இந்த நிகழ்வு கவனிக்கப்படுகிறது. இந்தப் பிரச்னை தொடங்கியது தமிழகத்தில்தான். தமிழக சட்டசபையில் திமுக அரசு நிறைவேற்றி அனுப்பிய பல மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தராமலும், திருப்பி அனுப்பாமலும் வைத்திருந்தார்.
வேண்டுமென்றே ஆளுநர் இழுத்தடிப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அதனை, நீதிபதிகள், ஜே.பி. பர்த்திவாலா, அரங்க.மகாதேவன் அமர்வு, ஏப்ரல் 8ஆம் தேதி விசாரித்தது.
எல்லை மீறிய நீதிமன்றம்:
அப்போது, மாநில அரசுகள் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று ஆளுநர்களுக்கும் ஜனாதிபதிக்கும் நீதிபதிகள் காலக்கெடு நிர்ணயித்தனர்.
தன்னால் முடிவு எடுக்க முடியாத மசோதாக்களை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைப்பது வழக்கம். எனவே, ஜனாதிபதியும் இந்த விவகாரத்தில் இழுக்கப்பட்டார். இதுவரை ஜனாதிபதி, ஆளுநர் அதிகாரங்களில் நீதிமன்றம் தலையிட்டு அதிகார வரம்பை நிர்ணயம் செய்ததில்லை என்பதால், காலக்கெடு தீர்ப்பு பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
இவ்வழக்கில் மேலும் ஒரு படி சென்ற நீதிபதிகள், ‘உச்ச நீதிமன்றத்திற்கு அரசியல் சாசனத்தின் 142வது பிரிவு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி’, தமிழக ஆளுநர் மற்றும் ஜனாதிபதியிடம் கிடப்பில் இருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதாக அறிவித்தனர். இவ்வாறு நடப்பது இதுவே முதல் முறை என்பதால், நாடு முழுதும் பெரும் அரசியல் அதிர்வை உண்டாக்கியது.
மத்திய அரசும் ஜனாதிபதியும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் இது குறித்து கருத்து வெளியிடாமல் மௌனம் காத்தனர். துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மட்டும், உச்ச நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்து வந்தார். “ஜனாதிபதிக்கும் ஆளுநருக்கும் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? சட்டம் இயற்றும் வேலையை நீதிமன்றம் எப்படி தன் கையில் எடுத்துக் கொள்ள முடியும்?” என்று அவர் கொந்தளித்தார்.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யும்; அவ்வாறு செய்தால், இதே நீதிபதிகள் விசாரித்து, முடிவு சொல்வார்கள்; அல்லது கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்பி வைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை.
புதிய திருப்பம்:
மாறாக, அரசியல் சாசனத்தின், 143 (1) பிரிவின் கீழ் உள்ள சிறப்பு அதிகாரத்தை ஜனாதிபதி பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்திடம் சில விளக்கங்களைக் கேட்டுள்ளார். சட்டம் சம்பந்தப்பட்ட சந்தேகத்தை ஜனாதிபதி கேட்பதற்கும், அதற்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் அல்லது பதில் அளிப்பதற்கும் இந்த சட்டப்பிரிவு இடமளிக்கிறது. அதன்படி, ஆளுநருக்கும் ஜனாதிபதிக்கும் காலக்கெடு விதித்தது தொடர்பாக, 14 கேள்விகளை முர்மு கேட்டுள்ளார்.
ஜனாதிபதியின் கேள்விகள் தொடர்பாக விவாதிக்க, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதே சமயம், ஜனாதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுப்பதற்கும் உச்ச நீதிமன்றத்திற்கு உரிமை உள்ளது என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள்: 1) ஒரு மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும் போது, அரசியல் சாசனத்தின் 200வது பிரிவின் கீழ் அவருக்கு உள்ள சட்ட ரீதியான வாய்ப்புகள் என்ன? 2) அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்த, அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரா? 3) இந்தப் பிரிவின்கீழ், ஆளுநருக்கு உள்ள சட்ட ரீதியான தனி உரிமை என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதா? 4) அதன்படி ஆளுநர் எடுக்கும் முடிவுகளை ஆய்வு செய்வதற்கு, 361வது பிரிவு தடை விதிக்கிறதா? 5) அரசியல் சாசனம் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்காத நிலையில் கோர்ட் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? 6) 201வது பிரிவின்படி, மசோதா மீது முடிவு எடுக்க ஜனாதிபதிக்கு உள்ள தனி உரிமைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதா? 7) அரசியல் சாசனத்தில் ஜனாதிபதியின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில், கோர்ட் அவ்வாறு நிர்ணயிக்க முடியுமா? 8) ஆளுநர் ஒரு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும்போது, தனக்குள்ள அதிகாரம் குறித்து, உச்ச நீதிமன்றத்திடம் ஜனாதிபதி ஆலோசனை பெற வேண்டுமா? 9) பிரிவு 200ன் கீழ் ஆளுநரும், 201ன் கீழ் ஜனாதிபதியும் முடிவு எடுப்பதற்கு முன்பாக, மசோதா சட்டமாகுமா? சட்டமாகாத மசோதாவில் உள்ளது பற்றி கோர்ட் விசாரிக்க முடியுமா? 10) ஆளுநர் அல்லது ஜனாதிபதி வழங்க வேண்டிய உத்தரவுகளை, 142வது பிரிவின்கீழ் வேறு வகையில் நீதிமன்றம் பிறப்பிக்க முடியுமா? 11) சட்டசபையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவை, ஆளுநர் ஒப்புதல் தராமலேயே சட்டமாக அமல்படுத்த முடியுமா? 12) ஒரு வழக்கில்,அரசியலமைப்பு சட்டம் தொடர்பான கேள்வி எழும்போது, அச்சட்டத்தின் 145 (3) பிரிவின்படி, குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் உள்ள அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பது கட்டாயமா? 13) பிரிவு 142ன் படி, அமலில் உள்ள சட்ட நடைமுறைகளுக்கு எதிராக, முரண்பட்ட, குறைபாடான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வழி இருக்கிறதா? 14) மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான விவகாரத்தில், 131வது பிரிவின்படி சிறப்பு வழக்கு தொடுப்பதைத் தவிர, உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பை எந்த வகையிலாவது அரசியல் சாசனம் தடுக்கிறதா?
இனி என்ன நடக்கும்?
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநருக்கு உள்ள பங்கை சட்டப்பிரிவு 200 கையாள்கிறது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது, நிறுத்தி வைப்பது, திருப்பி அனுப்புவது, ஜனாதிபதியின் பரிசீலனைக்காக அனுப்புவது ஆகிய ஆளுநரின் வாய்ப்புகளை இது வழங்குகிறது. இதனை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மீறுகிறது.
எனவே, ஜனாதிபதியின் 14 கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் அளிக்கும் விளக்கத்தைப் பொருத்தே மத்திய அரசு மேல்முறையீடு செய்யவோ அல்லது அவசரச் சட்டம் பிறப்பிக்கவோ வாய்ப்புள்ளது.
அதேநேரம் இந்த வழக்கில் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் அரசியல் சாசனத்தின் 145(3)-வது பிரிவின்படி, அரசியல் சாசனம் குறித்த ஆழமான கேள்விகள் எழுப்பப்படும் வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்பவும் வாய்ப்பு உள்ளது. அதுவரை, தமிழக அரசு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கான கெடு தேதியைக் குறிப்பிடவில்லை. என்றபோதும், உச்ச நீதிமன்ரம் காலம் கடத்தினால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நேரில் அழைத்துக் கண்டிக்கவும் அவருக்கு உரிமை உண்டு. இந்திய அரசியல் சாசனத்தின்படி ஜனாதிபதியே தலைமை அதிகாரம் கொண்டவர். எனவே, வரும் நாட்களில், நாடாளுமன்றம் (அரசு) – நீதித்துறை இடையிலான மோதலுக்கு ஒரு தெளிவான தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்.
$$$