-தத்தாத்ரேய ஹோசபலே
நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்த அதன் தேசிய பொதுச்செயலாளர் திரு. தத்தாத்ரேய ஹோஸபலே எழுதி, யுகாதியன்று நாடு முழுவதும் பத்திரிகைகளில் வெளியான கட்டுரை இது…

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில், சங்கம் அதை எவ்வாறு பார்க்கிறது என்று சமுதாயத்தில் ஆர்வம் எழுந்துள்ளது. சங்கம் ஒரு விஷயத்தில் தெளிவாக உள்ளது. அன்றிலிருந்து இன்று வரை, என்றுமே இலக்குகளை அடைந்த பின் நாம் கொண்டாடுவதில்லை. மாறாக, கடந்து வந்த பாதையில் நாம் படித்த பாடங்கள் பற்றியும், அடுத்த இலக்கு என்ன என்று சிந்தித்து அதற்காக நம்மை அர்பணித்துக் கொள்வதற்கான நேரம் எனக் கருதுகிறோம்.
இதுவரை எங்களை வழிநடத்திய பெரியவர்களையும், தவசீலர்களையும் மற்றும் சங்கத்திற்காக தங்களை முழுமையாக அர்பணித்துக்கொண்ட பல லட்சம் ஸ்வயம்சேவகர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களையும் நினைவுகூர்வதற்கான நேரமிது.
சங்கம் கடந்து வந்த நூற்றாண்டையும், இன்றைக்கு நமது லட்சியமான – ஒளிமயமான, உன்னதமான, ஒருமித்த பாரதம் உலக நன்மைக்கும், அமைதிக்கும், வளமான எதிர்காலத்திற்கும் மிக அத்தியாவசியம் என்பதை மீண்டும் ஒரு முறை உரக்கச் சொல்ல, இன்றைய நாளை விட மற்றொரு நாள் கிடையாது என்றே கூறலாம். ஆம், இன்று ஆர், எஸ். எஸ் பேரியக்கத்தின் ஸ்தாபகர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் பிறந்த தினம், தவிர இது வர்ஷ பிரதிபதா அல்லது யுகாதி என்று கொண்டாடப்படும் ஹிந்து புதுவருட முதல் நாளும் கூட.
டாக்டர். ஹெட்கேவார் பிறவியிலேயே ஒரு தேசபக்தர். அவர் சிறு வயதில் செய்த செயல்களைப் பார்த்தோமேயானால் அவர் பாரதத்தின் மீது வைத்திருந்த அளவுகடந்த அன்பு பற்றியும், கலப்படமில்லா அர்ப்பணிப்பு பற்றியும் எளிதாக அறிந்து கொள்ளலாம். அவர் கல்கத்தாவில் மருத்துவப் படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே பாரதத்தை பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க – ஆயுதம் ஏந்திய போராட்டத்திலிருந்து சத்தியாகிரகம் வரை, அனைத்து வழிவகைகளைப் பற்றியும் ஆராய்ந்து அறிந்திருந்தார். டாக்டர்ஜி என அன்புடன் அழைக்கப்பட்ட அவர், விடுதலைப் போராட்டத்திற்கான எந்த ஒரு முறையையும் சிறுமைப்படுத்தியதில்லை. மாறாக , வழி வேறாய் இருப்பினும் இலக்கு ஒன்றே என்பதன் அடிப்படையில், மரியாதை கொண்டிருந்தார்.
சமூக சீர்திருத்தங்களா, அரசியல் விடுதலையா என்ற விவாதம் வியாபித்திருந்த நேரம் அது. சமூகத்தின் மருத்துவர் போல ஹெட்கேவார் அவர்கள், நாம் சுதந்திரத்தைப் பறிகொடுத்ததற்கான மூன்று காரணங்களைக் கண்டறிந்தார். அவை:
- நமது அன்றாட வாழ்க்கையில் தேசபக்தி இல்லாமல் போனது,
- பாரத கலாச்சாரம் சீர்கெட்டு, குறுகிய பார்வை கொண்ட சமுதாயமாய் மாறிப்போனது,
- ஒரு சமுதாயமாய் நாம் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களைக் கைவிட்டது.
டாக்டர் ஜி அவர்கள் இவை மூன்றுமே அந்நிய சக்திகள் நம் நாட்டில் கால்பதித்ததற்கான முக்கிய காரணங்கள் என்று உணர்ந்தார்.
அடிக்கடி நிகழ்ந்த அந்நியப் படையெடுப்புக்களால், மக்கள் பாரதத்தின் அருமை பெருமைகளை மறந்துவிட்டதால், நம் கலாச்சாரத்தைப் பற்றிய ஒரு தாழ்வு மனப்பான்மையும் அவநம்பிக்கையும் நம்மைச் சூழ்ந்திருப்பதை அவரால் அறிய முடிந்தது. இந்த நிலையில் அரசியல் மட்டுமே செய்வதால், சமுதாயத்தில் உள்ள அடிப்படைப் பிரச்னைகளைக் களைந்து நாம் இழந்த தேசத்தை மீட்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார் டாக்டர்ஜி.
ஆகவே தேசத்தை மீட்டெடுக்க தங்களை அர்பணித்துக்கொள்ள தயாராகவுள்ள ஒரு மக்கள் குழுவை அமைத்து, அந்தக் குழுவை சிறந்த முறையில் பயிற்சியளித்து தயார் செய்தார். இதற்காக தனித்துவமான, மிகப் புதுமையான ‘ஷாகா’ முறையை செயல்படுத்தினார். இன்றைய அளவிலும் இம்முறை அனைத்துத் தரப்பினராலும் சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யுக்தியாகப் பார்க்கப்படுகிறது.
டாக்டர் ஜி அவர்கள் ஒரு புறத்தில் அரசியல் விடுதலைக்கான போராட்டங்களில் தான் பங்கு கொண்டது மட்டுமல்லாமல் பிறரையும் ஊக்குவித்தார். மறுபுறத்தில் ஒட்டுமொத்த சமூகத்தை ஒரு புள்ளியில் ஒருங்கிணைக்கும் செயலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்த இயக்கம் சமூகத்தில் மற்றொரு இயக்கம் என்றில்லாமல், ஒட்டுமொத்த சமூகத்திற்கான இயக்கமாக இருக்க வேண்டும் என்று மிகத் தெளிவாக இருந்தார் டாக்டர்ஜி.
நூறாண்டுகள் ஆன பின்பும், லட்சக்கணக்கான இளைஞர்கள், டாக்டர்ஜி கண்ட பாதையில் பயணித்து ஒரு ஒளிமயமான பாரதத்தை உருவாக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட வண்ணம் உள்ளனர். நாளுக்கு நாள் சமுதாயத்தில் சங்கம் பற்றிய புரிதல் அதிகரித்து, பலர் தங்களை சங்கத்தில் இணைத்துக்கொள்வதை பார்க்கமுடிகிறது. இது டாக்டர் ஜி அவர்களின் புதுமையான முயற்சிக்கும், யுக்திகளுக்கும் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறோம்.
சங்கத்தின் தத்துவங்களும் செயல்முறைகளும் இன்று மெருகு ஏறி மிளிர்வதைப் பார்க்க முடிகிறது. குறுகிய பார்வை கொண்ட மேற்கத்திய தத்துவங்களில் மூழ்கித் திளைத்திருந்த, நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் கனவான்களுக்கு ஹிந்துத்துவத்தையும், தேசம் என்றால் என்ன என்பது பற்றியும் விளக்குவது மிகக் கடினமான விஷயம். ஆகவே டாக்டர் ஜி, தத்துவத்தோடு நிறுத்தாமல் செயல்முறையில் விளக்கி, ஒரு வழிகாட்டும் சக்தியாய் விளங்கினார். அவரது வாழ்நாளிலேயே சங்கம் பாரத்தின் அனைத்து பகுதிகளிலும் செயல்படத் தொடங்கியது.
சுதந்திரம் கிடைத்த போது நம் பாரத மாதா மதத்தின் பெயரால் துண்டாடப்பட்டாள். பிரிவினை நேரத்தில் ஏற்பட்ட கொடிய கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஹிந்து மக்களை சங்க ஸ்வயம்சேவகர்கள் பாகிஸ்தானிலிருந்து மீட்டு, அவர்கள் உயிரையும் மானத்தையும் காத்தது வரலாறு.
சமுதாயத்தில் உயிர்ப்பை ஏற்படுத்தும் கருவியே சங்கம் என்பதற்கிணங்க, சங்கம் நம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து மக்களுக்காகவும் சேவை செய்கிறது. சமுதாயத்தின் மீது அக்கறையும் பொறுப்பும் கொண்ட ஒருவரே ஸ்வயம்சேவகர் என்பதற்கிணங்க, இன்று ஸ்வயம்சேவகர்கள் கல்வி, தொழிற்சாலைகள், அரசியல் என்று வாழ்வின் பல பரிமாணங்களிலும் சேவை செய்து வருகின்றனர்.
சங்கத்தின் இரண்டாவது சர்சங்கசாலக் (தலைவர்) ஸ்ரீ குருஜி (மாதவ சதாசிவ கோல்வல்கர்) அவர்களது காலத்தில் அந்நாளைய தேவைகளுக்கு ஏற்ப சங்கத்தின் செயல்பாடுகளில் சிறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. பண்பாடும் கலாச்சாரமும் செறிந்த பாரத்தின் பங்களிப்பு உலக நன்மைக்கு மிக அவசியம் என்பதை உணர்ந்திருந்தார் ஸ்ரீ குருஜி. பாரதம் உலகத்தின் ஒருமைப்பாட்டிற்கும், அமைதிக்கும் வழிகாட்டியாய் இருக்கவேண்டும் என்றால், பாரதம் இந்த உன்னதமான காரியத்திற்கு தன்னை தயார் செய்து கொள்ளவேண்டும். இதற்கான அடித்தளத்தை ஸ்ரீ குருஜி அவர்கள் அமைத்தார் என்று கூறினால் மிகையாகாது.
ஹிந்து சமுதாயம் மீண்டும் உயிர்த்தெழ சீர்திருத்தங்கள் அவசியம் என்ற கருத்து கொண்டிருந்தார் ஸ்ரீ குருஜி. ஹிந்து சமுதாயத்தில் உள்ள துறவிகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, அவர்கள் மூலமாக வேதங்களிலும், புராண இதிகாசங்களிலும், வேதாந்தத்திலும், மனிதர்கள் மத்தியில் பிறப்பிலான பாகுபாடு என்பதற்கான இடமே இல்லை என்று பறைசாற்ற வைத்தார். இந்த அறிவிப்பு சமுதாயத்திற்கு ஒரு புது உத்வேகத்தை கொடுத்தது. எமர்ஜென்சி எனப்படும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் நிறுவுவதற்கு ஸ்வயம்சேவகர்கள் முக்கிய பங்காற்றினர்.
கடந்த தொண்ணூற்று ஒன்பது ஆண்டுகளில், ஷாகாவைத் தாண்டி, சமுதாயத்தின் ஆக்கபூர்வ சக்தி மூலம் எண்ணற்ற சேவைப் பணிகளைச் செய்து வருகிறது. ராமஜென்மபூமி இயக்கம் பாரதத்தின் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து வெற்றிகண்ட ஒரு மாபெரும் கலாச்சார மீட்புப் போராட்டம். தேசப்பாதுகாப்பு, எல்லை மேலாண்மை, கிராம வளர்ச்சி என்று தேசத்தின் அனைத்து துறைகளிலும் தங்கள் பங்களிப்பை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் செய்து வருகின்றனர். இன்று அந்தப் பங்களிப்பை சமுதாயம் உணர ஆரம்பித்துள்ளது.
அனைத்து விஷயங்களையும் அரசியல் கண்ணோட்டத்திலேயே கண்டு பழகியவர்களுக்கு மத்தியில், சங்கம் எவ்வித விருப்பு வெறுப்பின்றி, கலாச்சார மற்றும் சமுதாய விழிப்புணர்வு, ஒத்த கருத்துள்ள மக்களையும், அமைப்புகளையும் ஒருங்கிணைத்தல் போன்ற முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. குடும்பம் என்ற அழகான அமைப்பை மீண்டும் அதன் பெருமைக்குரிய இடத்தில் வைப்பதே சமுதாய சீர்திருத்தத்தின் முதல் படி என்பதையும் அதில் பெண்களின் பங்கு மிக முக்கியம் என்பதை உணர்ந்து, கடந்த பல வருடங்களாக சங்கம் இதில் கவனம் செலுத்தி வருகிறது.
லோகமாதா ராணி அஹில்யாபாய் ஹோல்கர் அவர்களின் முன்னூறாவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சங்கம் பத்தாயிரத்திற்கும் மேலான நிகழ்ச்சிகளை நடத்தியது. இதில் இருபத்தியேழு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்குகொண்டு சிறப்பித்தது, நம் தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்தவர்களை நாம் எவ்வளவு மதித்து மரியாதை செய்கிறோம் என்பதற்கான ஒரு உதாரணம்.
தன்னுடைய நூற்றாண்டு வருடத்தில், ஒவ்வொரு கிராமத்திலும் தேசத்திற்காக உழைக்கக் காத்திருக்கும் மனிதர்களைக் கண்டறிவது சங்கத்தின் நோக்கமாக உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் பத்தாயிரம் புதிய ஷாகாக்களை ஆரம்பித்துள்ளோம். இது மக்கள் மத்தியில் சங்கத்திற்கான வரவேற்பின் அறிகுறி. சங்கத்தின் முக்கிய குறிக்கோள் பாரதத்தில் உள்ள எல்லா கிராமங்களிலும், எல்லா பகுதிகளிலும் ஷாகாக்களை தொடங்க வேண்டும் என்பது. இதற்கான முயற்சிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வரும் காலங்களில் சங்கத்தின் முக்கிய செயல்திட்டமாக பஞ்ச பரிவர்த்தன் எனப்படும் ஐந்து முன்னெடுப்புகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்ல உள்ளோம்.
- குடிமக்கள் கடமைகள் பற்றி எடுத்துச் சொல்லுதல்,
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு,
- சமூக நல்லிணக்கம் பேணுதல்,
- குடும்ப நலன் பாதுகாத்தல்,
- ஸ்வ எனப்படும் சிந்தனையிலும் செயலிலும் சுயத்தன்மை
-ஆகிய ஐம்பெரும் மாற்றங்களை உருவாக்கி நம் தேசத்தை புகழின் உச்சிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் – ‘ பரம்வைபவம் நேதுமேதத் ஸ்வராஷ்ட்ரம்’ என்பது சங்கத்தின் பிரார்த்தனை.
கடந்த நூறு வருடங்களாக தேச நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ள சங்கம், புறக்கணிப்பு, அவமானங்கள், அவர்கள் என்ன தான் செய்கிறார்கள் என்று பார்ப்போம் என்ற ஆர்வம் என்று பல கட்டங்களைக் கடந்து, இன்று பலதரப்பட்ட மக்களால் அங்கீகரிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளது. சங்கத்திற்கு யாரும் எதிரிகள் கிடையாது, இன்று நம்மை எதிர்ப்பவரும் ஒரு நாள் நம்மை ஏற்று சங்கத்தில் இணைவார்கள் என்ற நம்பிக்கை நிறையவே உள்ளது.
உலகம், தட்பவெப்ப நிலை மாற்றங்கள், தீவிரவாத அச்சுறுத்தல், போர் என்று பலதரப்பட்ட, சவால்களை எதிர்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், பாரதம் தன் ஞானப் பாரம்பரியத்தின் உதவியோடு இந்தச் சவால்களுக்கான தீர்வை அளிக்கும் இடத்தில் இருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இது வெளியிலிருந்து பார்க்கும் போது ஒரு மலை போலத் தோன்றினாலும், பாரதமாதாவின் குழந்தைகளான நாம் எல்லோரும் சேர்ந்து நம் கடமைகளைச் செய்து, பிறரையும் ஊக்குவித்தால், இந்தக் கனவு மெய்ப்படும்.
பாரதத்தை உலக நாடுகளுக்கான ஒரு முன்மாதிரியாக மாற்ற நாம் ஒவ்வொருவரும் சங்கல்பம் எடுத்துக் கொண்டு அந்த இலக்கை நோக்கிப் பயணிக்கும் நேரமிது. ‘ஸஜ்ஜன சக்தி’ எனப்படும் நல்லோர் சக்தியை குதிரையாக்கி, பாரதம் என்ற ரதத்தை, உலகின் குருவாக ஆக்கும் பாதையில் விரைந்து செலுத்துவோம், வாருங்கள்.
$$$