-கருவாபுரிச் சிறுவன்
பாரதத்தின் ஆன்மிக சக்திக்கு ஆதாரமாக விளங்குபவை சைவம், வைணவம் என்ற இரு வைதீக வழிபாட்டு முறைகளே. இவையே தொகுக்கப்பட்டு இன்றைய ஹிந்து மதமாகத் திகழ்கின்றன. இவை இரண்டும் பார்ட்வைக்கு வேறுபட்டுத் தெரிந்தாலும், இரண்டும் ஒப்புமையுடைவை; ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை என்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்.

கற்பூரகௌரம் கருணாவதாரம்.
சம்சாரசாரம் புஜகேந்திரஹாரம்.
சதாவசந்தம் இருதயாரவிந்தே
பவம் பவானி சகிதம் நமாமி.
-யஜூர் வேதம்
தற்பரம் பொருளே! சசிகண்ட! சிகண்டா!
சாமகண்டா! அண்ட வாணா!
நற்பெரும் பொருளாய் உரைகலந்து உன்னை
என்னுடை நாவினால் நவில்வான்
அற்பன்என் உள்ளத்து அளவிலா உன்னைத்
தந்தபொன் அம்பலத்து அரசே!
கற்பமாய் உலகாய் அல்லைஆ னாயைத்
தொண்டனேன் கருதுமா கருதே.
-திருமாளிகைத் தேவர்
சைவமும் வைணவமும் இத் தேசத்தின் இரு கண்களாகத் திகழ்பவை. பார்ப்பதற்கு வேண்டுமானால் வேறு வேறாகத் தெரியுமே தவிர, இவை உணர்த்தும் தத்துவங்கள் அனைத்தும் பரம்பொருள் ஒருவரைத் தான். தத்தம் பெயரளவுக் கொள்கையில் ஒரு சில மாறுபாடுகளைக் கொண்டவை. இருப்பினும் அவற்றில் வேற்றுமையில் ஒற்றுமையும், ஒற்றுமையில் வேற்றுமையும் இருப்பதை அனுபவித்து உணரலாம்.
யாவருக்கும் கருணை செய்யும் பரம்பொருளை திருமூல தேவ நாயனார் ‘‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’’ என்றார்.
‘‘ஒன்றே நினைந்திருமின்காள்’’ என தேவாரத்தில் திருஞானசம்பந்த நாயனாரும் மனிதர்களுக்கு அருளுரையாகப் பாடிப் பரவுகிறார்.
“ஓர் ஆலிலை சேர்ந்த எம் பெருமா மாயனை அல்லாது ஒரு தெய்வம்” என நம்மாழ்வாரும்,
“திருமாலை அல்லாது தெய்வமென்றேத்தேன்” என பொய்கையாழ்வாரும்,
“மது நின்ற தண் துழாய் மார்வன் -பொது நின்ற பொன்னங்கழலே தொழுமின்” என்ற பேயாழ்வாரும்,
‘‘தேரும்கால் தேவன் ஒருவன் என்றுரைப்பார்… அவன் பெருமையை’’ என திருமிழிசையாழ்வாரும் பாடுகிறார்கள்.
தத்தம் கண்ட உண்மைப் பெருநெறியில் சைவ, வைணவ அருளாளர்கள் பலரும் உறுதி பட நின்று ஆன்மாக்களுக்கு நல்வழி காட்டுகிறார்கள்.
மக்களிடமுள்ள நல்லொழுக்கத்திற்கும் தேசபக்திக்கும் ஆணிவேராக இருப்பது நமது தேசத்திலுள்ள திருக்கோயில்கள். அவை யாவும் உயர்ந்த தத்துவத்தை உணர்த்தும் உயிரோட்டமுடைய ஞானக் கருவூலங்கள்.
தனுர் மாதமாகிய மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி சிவபெருமான், பெருமாள் கோயில்களுக்கும், இன்ன பிறகோயில்களுக்கும் குடும்பத்துடன் சென்று வழிபடுவது நம்மவர்களின் பண்டைய பாரம்பரியம்; தொன்று தொட்டு வரும் வழக்கம்.
அந்த அழகிய நற்பண்பு இன்றைய இளைய தலைமுறையினரிடமும் தொடர வேண்டும்.
அது அவர்கள் வாழ்வில் வேரூன்ற வேண்டும். அதன் உண்மைப் பொருளைத் தெரிந்துணர வேண்டும் என்ற நோக்கில் ஒரு உந்துதலுக்காக மட்டுமே கீழ்க்கண்ட பட்டியல் தரப் பட்டுள்ளது.
நமது பெருமையையும் அருமையையும் அறிந்துணர்ந்து கொள்ள ஒரு ஆரம்பப் புள்ளியே இது.
இடமால் வலந்தான் இடப்பால்
துழாய்வலப் பால்ஒண்கொன்றை
வடமால் இடந்துகில் தோல்வலம்
ஆழி இடம்வலம்மான்
இடமால் கரிதால் வலஞ்சே
திவனுக் கெழில்நலஞ்சேர்
குடமால் இடம்வலங் கொக்கரை
யாம்எங்கள் கூத்தனுக்கே!
-சேரமான் பெருமாள் நாயனார்
தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன்நாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இணைந்து.
-பேயாழ்வார்
அரனும் அரியும்!
| சமயம் | சைவம் | வைணவம் |
| இயல்பு | சூடு | குளிர்ச்சி |
| கடவுள் | சிவபெருமான் | மஹாவிஷ்ணு |
| பெண் கடவுள் | அம்பாள் | தாயார் |
| தோற்றம் | கருப்பையில் புகாதவர் | கருப்பையில் புகுந்தவர் |
| இருப்பிடம் | கயிலாயம் | வைகுண்டம் |
| நிலை | அமர்ந்த நிலையில் தியானம் | அனந்தசயனத்தில் நித்திரை |
| அம்பிகையின் வாசஸ்தலம் | சுவாமியின் இடப்பாகம் | பெருமாளின் திருமார்பு |
| பிரியர் | அபிஷேகம் | அலங்காரம் |
| உடை | புலித்தோல் | பட்டுப் பீதாம்பரம் |
| மாலை | ருத்திராக்கம் | துளசி |
| ஏந்திய ஆயுதம் – | மான், மழு | சங்கு, சக்கரம் |
| தனிஆயுதம் | சூலம் | கதாயுதம் |
| ஆதிசேஷன் – | ஆபரணமாக்கியவர் | அதன்மேல் பள்ளி கொண்டவர் |
| குருமுதல்வர் | திருநந்தி தேவர் | விஷ்வக்சேனர் |
| வாயிற்காவலர்கள் | ஆட்கொண்டார், உய்யக்கொண்டார் | ஜெயன்,விஜயன். |
| முதற்கடவுள் | விநாயகர் | தும்பிக்கையாழ்வார் |
| முதல் பக்தர் | அகஸ்தியர் | நாரதர் |
| ஈரெழுத்து மந்திரம் | சிவ | ராம |
| மந்திர அட்சரம் | ஐந்தெழுத்து | எட்டெழுத்து |
| மந்திரம் | நமசிவாய | நாராயணாய நமக |
| உடன் வசிப்பவர்கள் | சிவகணங்கள் | நித்ய சூரிகள் |
| மலை மீது இருப்பவர் | திருக்குமரன் | திருவேங்கடவன் |
| தமிழக அடியார்கள் | நாயன்மார்கள் | ஆழ்வார்கள் |
| பெரிதாகப் பேசப்படும் செயல்கள் | அட்ட வீரட்டம் | தசாவதாரம் |
| திருநூல் அரங்கேற்றம் | சிதம்பரத்தில் பெரிய புராணம் | ஸ்ரீரங்கத்தில் கம்ப ராமாயணம் |
| முருகனுக்கு உறவு | தந்தை | மாமன் |
| சமய இலக்கியம் | பன்னிரு திருமுறைகள் | நாலாயிர திவ்ய பிரபந்தம் |
| திருநூல்களைத் தொகுத்தவர்கள் | நம்பியாண்டார் நம்பி | நாதமுனிகள் |
| பாடல் பெற்ற தலங்கள் | 247 | 108 |
சங்கரனாரும் நாராயணரும் சேர்ந்து காட்சி தரும் கோயில்: தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோயில்
சிவபெருமானும் அம்பிகையையும் இணைந்து மாதொருபாகனாக அருளும் திருக்கோயில்: நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு, தென்காசி மாவட்டத்திலுள் வாசுதேவநல்லுாரிலுள்ள சிந்தாமணி நாதர் கோயில்.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று.
-பொய்கையாழ்வார்
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.
-பூதத்தாழ்வார்
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கண் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று.
-பேயாழ்வார்
ஒப்புமைச் சிறப்புகள்:
ஆலமரம்: அதன் கீழ் அமர்ந்தவர் சிவன்– அம்மரத்தின் இலையில் பள்ளி கொண்டவர் கண்ணன்.
கருப்பையில் சம்பந்தப்படாத அடியார்கள்: சுந்தரர் கண்ணாடியில் தோன்றினார் – முதல் மூன்று ஆழ்வார்கள் மலர்களில் தோன்றினார்கள்
இப்பூவுலகில் உண்மையாக நடந்தது: சுந்தர மூர்த்தி நாயனார் பூதஉடலோடு கயிலாயம் – துக்காராம் பூத உடலோடு வைகுண்டம்.
அடியார்களை வழிபடும் தெய்வமாக வணங்கியவர்கள்: அப்பூதி நாயனார் – மதுரகவியாழ்வார்
தெய்வத்திடம் பட்டம் பெற்றவர்கள்: திருநாவுக்கரசு நாயனார் – மதுரகவியாழ்வார்
பக்தரான இளம் பாலகர்கள்: மார்கண்டேயர், திருஞானசம்பந்தர், மெய்கண்டார் – துருவன், பிரகலாதன்.
அற்புதம்: சுந்தரருக்காக திருவையாற்று நதி வழிவிட்டது – வாசுதேவருக்கு யமுனை நதி வழிவிட்டது.
கண்ணில் திருவிளையாடல்: கடவுளுக்காக கண் கொடுத்தார் கண்ணப்பர் – குருநாதருக்காக கண் கொடுத்தார் கூரத்தாழ்வார்
தூது சென்றது: சுந்தரருக்காக சிவன்– பஞ்ச பாண்டவர்களுக்காக கண்ணன்.
பொற்கிழியோடு தொடர்புடையவர்கள்: நரசிங்கமுனையரையர் – பெரியாழ்வார்
சாமர்த்திய லீலை: இளையான்குடிமாற நாயனாருக்கு குபேரனைத் தொண்டனாக்கியது – குசேலரை குபேரனாக்கியது
கீதை உபதேசம்: சிவபெருமான் ராமனுக்கு செய்தது – கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு செய்தது.
மூர்க்கத்தனமாகச் செயல்பட்டவர்கள்: சக்தி நாயனார், மூர்க்க நாயனார் – திருமங்கையாழ்வார்
தாழ்நிலை: பன்றிக் குட்டிக்கு பால் கொடுத்தது – வராக அவதாரம்
கடைக்குல அடியார்கள்:–திருநாளைப்போவார் என்னும் நந்தனார் – திருப்பாணாழ்வார்
முக்தி கொடுத்த நிகழ்வு:– சிதம்பரத்தில் கள்ளிச்செடிக்கு முக்தி கொடுத்தது – தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் நாய்க்கு முக்தி கொடுத்தது
தன்பக்தருக்காக சிரார்த்தம் கொடுப்பது: திருவண்ணாமலை அண்ணாமலையார் தனது பக்தனான வல்லாள மகாராஜாவுக்கு மாசி மகத்தன்றும், தென்காசி மாவட்டம், கரிவலம்வந்த நல்லுார் பால்வண்ணநாதர் பக்தர் வரதுங்கருக்காக ஆண்டுதோறும் மார்கழி அமாவாசைக்கு முன் தினமும் திதி கொடுக்கும் நிகழ்ச்சி – குடந்தை சாரங்கபாணி பெருமாள் தீபாவளி அமாவாசை அன்று லட்சுமி நாராயண சுவாமி என்ற பக்தருக்காக சிரார்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி.
பாடல்களின் சிறப்பு: அடியெடுத்துக் கொடுத்துப் பாடுதல் – உள்ளிருந்து உணர்த்துதல்
பாடல்களின் தனிச் சிறப்பு: திருக்கயிலைக்குச் சென்று பாடுதல் – பூலோகத்தில் இருந்தே பாடுதல்.
அன்பு சிவமிர ண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாக அமர்ந்திருந்தாரே.
-திருமூல தேவ நாயனார்
உண்மை அடியார்கள்:
முதன்மை அடியார்கள்: தேவார மூவர் (திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார்) – முதல்மூவர் (பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்)
பிரதான நூல்கள்: பன்னிரு திருமுறைகள், பதினான்கு சாஸ்திரங்கள் – திவ்ய பிரபந்தங்கள், தனியன்கள்
எண் வரிசையில் நூல்கள்: 1 முதல் 12 வரை – 1 முதல் 4 வரை
அந்தாதி பாடியவர்கள்: காரைக்கால் அம்மையார், நக்கீரர், கபிலர், பரணர் – பொய்கையார், பூதர், பேயர், திருமிழிசை, திருவரங்கத்து அமுதனார்.
திருப்பள்ளியெழுச்சி பாடியவர்கள்: மாணிக்கவாசகர் – தொண்டரடிப்பொடியாழ்வார்
திருப்பாவை பாடியவர்கள்: மாணிக்கவாசகர் – ஆண்டாள்
திருவெழுக்கூற்றிருக்கை பாடியவர்கள்: திருஞானசம்பந்தர் – திருமங்கையாழ்வார்
திருத்தாண்டகம் பாடியவர்கள்: திருநாவுக்கரசர் – திருமங்கையாழ்வார்
திருப்பல்லாண்டு பாடியவர்கள்: சேந்தனார் – பெரியாழ்வார்
அதிகமாக பாடல்கள் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர் – திருமங்கையாழ்வார்
குறைந்த அளவில் பாடல்கள் பாடியவர்கள்: சேந்தனார் – மதுரகவியாழ்வார்
மார்கழி மாதத்தில் படிக்கும் நூல்கள்: திருவெம்பாவை – திருப்பாவை
அடியார்களில் அரசராகத் திகழ்ந்தவர்கள்: சேரமான் பெருமாள் – குலசேகர ஆழ்வார்
பெண்ணடியார்கள்: காரைக்கால்அம்மையார், இசைஞானியார், மங்கையர்க்கரசி – ஆண்டாள்
ஒரே எண்ணிக்கையுடைய பாடல்களைப் பாடியவர்கள் (143): காரைக்கால்அம்மையார் – ஆண்டாள்
காலத்தால் முந்தியவர்கள்: திருமூலர், காரைக்கால்அம்மையார், மாணிக்கவாசகர், – முதல்ஆழ்வார்கள், நம்மாழ்வார்.
வேதத்திற்கு நிகராகக் கருதப்படும் நூல்கள்: திருவள்ளுவ தேவ நாயனாரின் திருக்குறள், திருமூலதேவ நாயனாரின் திருமந்திரம் – நம்மாழ்வார் பாசுரங்கள்.
ஆதிகுருநாதர்கள்: சமயக்குரவர்கள் – வைணவ ஆச்சாரியர்கள்
தத்துவ விரிவுரை ஆசிரியர்கள்: சிவஞான யோகிகள் – ராமானுஜர்
சமயத் தலைவர்களுக்குரிய பரம்பரை பட்டம்: ஆதீன கர்த்தாக்கள் – ஜீயர்கள்
காமம் யாவையும் தருவதும், அப் பதம் கடந்தால்,
சேம வீடு உறச் செய்வதும், செந் தழல் முகந்த
ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும், ஒருவன்
நாமம்; அன்னது கேள்: நமோ நாராயணாய!
-கம்ப நாட்டாழ்வார்
திருக்கோயில் வழிபாட்டு முறைகள்:
திருக்கோயிலுக்குரிய சட்டநூல்கள் (ஆகமங்கள்): காமிகம் முதல் வாதுளம் வரை (28) – பஞ்சாரத்னம், வைகாசனம் (2)
தலங்களின் சிறப்பு: தேவாரப் பாடல் பெற்ற தலம் – மங்களாசாசனம் செய்யப்பெற்றது.
கோயில் மூலஸ்தானத்தில் உள்ள மூலவரின் தத்துவ நிலை: அருவம், உருவம், அருவுருவம் – நின்றல், இருத்தல், கிடத்தல்
பிரதானக் கோயில்: சிதம்பரம் – ஸ்ரீரங்கம்
ராஜாக்கள்: நடராஜர் – ரங்கராஜர்
பூசை செய்வோர்: சிவாச்சாரியார் – பட்டாச்சாரியர்
சுவாமி முன் பதிகம், பாசுரம் பாடுபவர்கள்: ஓதுவார் – அரையர்
வாகனம்: நந்தி – கருடன்
வீதியுலாவின் போது சிறப்புடைய தரிசனம்:- 4 ஆம் நாள் ரிஷபவாகனக் காட்சி – 5ஆம் நாள் கருடவாகனக் காட்சி.
திருக்கோயிலில் சப்பரத்தை எழுந்தருளச் செய்து தொண்டு செய்பவர்கள்: சீர்பாதக்காரர் – தோளுக்கினியான்
பூஜைக்கு உகர்ந்த பத்திரம்: வில்வம் – துளசி
பிடித்த நைவேத்தியம்: பிட்டு – அவல்
அன்னம்: சுத்தான்னம் – சித்திரான்னம்
சுவாமி பிரசாதம்: விபூதி – திருமண்
அம்பாள் பிரசாதம்: குங்குமம் – ஸ்ரீ சூர்ணம்
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வு: கும்பாபிஷேகம் – சம்ரோக்ஷணம்
தென்தமிழகத்தின் தலங்கள்: நவகயிலாயம் – நவதிருப்பதி (18)
கண்ணுதலான் ஆலயம் நோக்கும் கண்களே கண்கள்
கறை கண்டன் கோயில் புகும் கால்களே கால்கள்
பெண்ணொரு பாகனைப் பணியும் தலைகளே தலைகள்
பிஞ்ஞகனை பூசிக்கும் கைகளே கைகள்
பண்ணவன் தன் சீர்பாடும் நன்னாவே நன்னா
பரன் சரிதையே கேட்கப்படும் செவியே செவிகள்
அண்ணல் பொலன் கழல் நினைக்கும் நெஞ்சமே நெஞ்சம்
அரனடி கீழ் அடிமை புகும் அடிமையே அடிமை
-வரதுங்கர்
வழிபாட்டில் ஒப்புமை:
கிழமை: திங்கள் – புதன்
திதி: திரயோதசி – ஏகாதசி
நட்சத்திரம்: திருவாதிரை – திருவோணம்
மார்கழி மாதத்தில் முக்கிய நாள்: ஆருத்ரா தரிசனம் – வைகுண்ட ஏகாதசி
நோய் நீங்க: சுரதேவர் – தன்வந்திரி
கோப அவதாரம்: ருத்திரர் – பரசுராமர்
ஞானம் பெற: தட்சணாமூர்த்தி – ஹயக்கீரிவர்
பகையகல: பைரவர் – சக்கரத்தாழ்வார்
பிரதோஷ காலதரிசனம்: நந்தியெம்பெருமான் – நரசிம்மர்
ஒரே நாளில் தரிசிக்கும் தலங்கள்: தென்தமிழக பஞ்சபூதலங்கள், கொங்கு நாட்டில் மூன்று காலத்தலங்கள் – திருநங்கூரில் 11 திவ்ய தேசம்
எல்லா வளமும் பெற இந்தப் பதிகம், பாசுரங்களை மட்டும் படித்தால் போதுமானது: துஞ்சலும், காதலாகி, மற்றுப்பற்று, சொற்றுணை வேதியன், நமச்சிவாய வாழ்க எனத்தொடங்கும் நமசிவாய பதிகங்கள் – ஆழி எழ சங்கம் எழ… ஒழிவில் காலமெல்லாம்…வாடி வருந்தினேன் என்னும் பாசுரங்கள் (10)
அருமறை முதல்வனை ஆழிமாயனை
கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணனை
திருமகள் தலைவனை தேவ தேவனை
இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்.
-வில்லிபுத்தூராழ்வார்
- பஞ்சபூதம் – சிவத்தலம் – பெருமாள் தலம்
மண் – காஞ்சிபுரம் – திருக்கண்ணபுரம்
நீர் – திருவானைக்கா – திருமாலிருஞ்சோலை
நெருப்பு – திருவண்ணாமலை – திருஆதனுார்
காற்று – திருக்காளத்தி – திருவேங்கடம்
வான் – திருத்தில்லை – திருவரங்கம் (5)
- நடராஜருக்குரிய பஞ்ச சபைகள்:
தாமிர சபை – திருநெல்வேலி
சித்திரசபை – திருக்குற்றாலம்
வெள்ளியம்பலம் – மதுரை
பொற்சபை – சிதம்பரம்
ரத்தினசபை – திருவாலங்காடு
- பஞ்ச ஆரண்ய தலங்கள்:
முல்லை வனம் – கருக்காவூர்
பாதிரி வனம் – அவளிவணநல்லுார்
வன்னி வனம் – அரதைப்பெரும்பாழி
பூளை வனம் – இரும்பூளை
வில்வ வனம் – கொள்ளம்புதுார்
- பஞ்ச நாராயணத் தலங்கள்:
ஆபரணதாரி – ஆனந்த நாராயணர்
பெரியஆலத்துார் – வரதநாராயணர்
தேவூர் – தேவநாராயணர்
கீவளூர் – யாதவநாராயணர்
திருக்கண்ணங்குடி – தாமோதரநாராயணர்
- பஞ்ச நரசிம்மர் தலங்கள்:
குறையலுார் – உக்கிரநரசிம்மர்
மங்கைமடம் – வீரநரசிம்மர்
திருநகரி – யோகநரசிம்மர்
திருநகரி – ஹிரணியநரசிம்மர்
திருவாலி – லட்சுமி நரசிம்மர்
- பஞ்ச கிருஷ்ணர் தலங்கள்:
திருக்கோவிலுார்
திருக்கண்ணங்குடி
திருக்கபிஸ்தலம்
திருக்கண்ணபுரம்
திருக்கண்ணமங்கை
முக்தித் தலங்கள்:
பிறந்தால் முக்தி: திருவாருர்- காஞ்சிமாநகர்
தரிசித்தால் முக்தி: சிதம்பரம் – திருவரங்கம்
வசித்தால் முக்தி: மதுரை – குருவாயூர்
இறந்தால் முக்தி: காசி – பத்மநாபபுரம்
நினைத்தாலே முக்தி: திருவண்ணாமலை – பூரி ஜெகன்நாதர்
நவக்கிரக அதிபதிகள்:
சூரியன் – சிவபெருமான் – ராமர்
சந்திரன் – பராசக்தி – கிருஷ்ணர்
செவ்வாய் – முருகன் – நரசிம்மர்
புதன் – அம்பாள் – சீனிவாசப் பெருமாள்
குரு – தட்சிணாமூர்த்தி – வாமனர்
சுக்கிரன் – இந்திரன் – பரசுராமர்
சனி – பைரவர் – கூர்மம்
ராகு – துர்க்கை,காளி – வராகம்
கேது – விநாயகர் – மச்சம் (9)
சிவபெருமான் கோயில்களில் பெருமாள் சன்னிதிகள்:
காஞ்சிபுரம், கச்சிஏகம்பநாதர் கோயில் – நிலாத்துண்டபெருமாள்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம், நடராஜர் கோயில் – கோவிந்தராஜப் பெருமாள்.
நாகை மாவட்டம், சிக்கல், சிங்காரவேலர் கோயில் – கோலவாமனப் பெருமாள்.
நாகைமாவட்டம், திருவக்கரை, சந்திரமௌலீஸ்வரர் கோயில் – வரதராஜப் பெருமாள்
திருவண்ணாமலை மாவட்டம், திருவோத்தூர், வேதபுரீஸ்வரர் கோயில் – ஆதிகேசவப் பெருமாள்
ஈரோடு மாவட்டம், திருப்பாண்டிக்கொடுமுடி, மகுடேஸ்வரர் கோயில் -அரங்கநாதர்.
ஈரோடு மாவட்டம், பவானி, சங்கமேஸ்வரர் கோயில் – ஆதிகேசவப் பெருமாள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலுார், பக்தஜனேஸ்வரர் கோயில் – ப் ங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் – ஆதிகேசவப்பெருமாள்.
திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயில் – கோவிந்தராஜப் பெருமாள்.
கன்னியாகுமரி, திருமலை, மகாதேவர் கோயில் – மகாவிஷ்ணு
(இன்னும் இது போன்ற சன்னிதிகள் நிறைய உண்டு)
கடல்விடம் நுகர்ந்த காசினி லிங்கம்
காஞ்சிமா நகருறை லிங்கம்;
காவிரி வடபால் வருதிரு ஆனைக்
காவினில் அப்புலிங் கமதாம்
வடதிசை அண்ணா மலையினில் லிங்கம்
வன்னியின் வடிவு; காளத்தி
வாயுலிங் கமதாம்; சிதம்பர லிங்கம்
மாசில்ஆ காயலிங் கமதாம்.
-இரட்டைப்புலவர்கள்
திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணியுகந்தருளிதாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!
-திருப்பாவை தனியன்கள்
$$$