காத்திருக்க நேரமில்லை!

-சுந்தர்ஜி

இந்த சுந்தர்ஜி யாரென்று தெரியவில்லை. எங்கிருந்தாலும் வாழ்க! முகநூலில் ‘நம் எண்ணங்கள்’ என்ற தனிப்பட்ட பக்கத்தில் அற்புதமாக, பேச்சுநடையில் எழுதி இருந்தார். படிக்கும்போதே கண்களில் நீர் திரண்டுவிட்டது; விம்மல் வர யத்தனித்தது; ஏதோ ஒரு சோகம் தொண்டையை அடைத்தது. இந்த பாதிப்பு உங்களுக்கும் வர வேண்டாமா? இதோ இங்கே நகலாக்கம் செய்யப்பட்டிருக்கிறது அவரது பதிவு…

கணவன் மனைவி இருவரும் ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

 “என்னங்க… உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா….?”

“ இதென்ன புதுசா .. என்கிட்ட கேட்டா என்கிட்ட பேசுவா…. கேளு” என சிரித்தான்.

 “இல்லை, ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வர்றீங்க… அடிக்கடி வெளியே கூட்டிப் போறீங்க…  பொண்ணு கூட உட்கார்ந்து பாடம் சொல்லி குடுக்கறீங்க…. திடீரென நம்ம மேல நெருக்கமா மாறீட்டீங்க….  அதான்…” என்று இழுத்தாள்…

 “ஒண்ணுமில்லையே, எப்பவும் போலத்தான் இருக்கேன்.”

 “மறைக்காதீங்க … உங்க முகரையப் பார்த்தாலே தெரியுது… சொல்லுங்க!”

 “என்னத்தச் சொல்ல?”

 “ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டிங்களா? அதை மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறீங்களா நம்மகூட?”

 “போடி லூசு” அவன் சிரித்தான். 

ஆனால் அதில் உயிரில்லை. 

மெதுவாய்ச் சொன்னான். “நீயா கேட்பே சொல்லணும்னுதான் இருந்தேன்” என கொஞ்சம் சீரியஸ் ஆனான்.

 “என்னங்க, ஏதும் பிரச்னையா?” படபடத்தாள்.

அவன் இல்லையென தலையாட்டியபடியே, தனது அலுவலகப் பையைத் திறந்தான். ஒரு டைரியைத் திறந்து அதிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான். 

 “என்னங்க இது?”

“படி” என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான். 

அவள் படிக்கத் தொடங்கினாள்.

அவன் கண்கள் கண்ணீரைச் சிந்த ஆரம்பித்தன.

***

அன்புள்ள மகனுக்கு,

கண்டிப்பாக என்றைக்காச்சும் இந்தக் கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன்.

உங்கப்பாவுக்கு மனைவியா, உனக்கு அம்மாவ இந்த கடிதம் எழுதுறேன்.  

ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படி.

அவசரமா வேலை இருக்குனு, பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்துப் படிக்காதே.

உங்கப்பாவ நான் கல்யாணம் பண்ணும்போது நான் காலேஜ் லெக்சரர்.

அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது. இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன்ல வளர்ந்தாரு.

அப்புறம் உன் தங்கச்சி பிறந்தாள். நான் வேலையை விட்டுட்டு வீட்டோட உங்களைக் கவனிச்சுட்டு இருந்தேன்.

உனக்குத் தான் தெரியுமே அப்பா எப்படி பிசின்னு…

கல்யாணம் ஆன ஒரு வருஷம் தான் கனவு வாழ்க்கை. அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கை தான்.

உங்கப்பாவுக்குக் காத்திட்டு இருந்தேன். அவர்,  தான் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார்.

நீங்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு துணை. நாம தான் விளையாடுவோம். 

அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு போய்ட்டீங்க.. நீங்க வர்றதுக்குக் காத்திட்டுருப்பேன்.ஸ்கூல் விட்டு வந்ததும் கதைகதையாச் சொல்லுவீங்க. அதுல பாதி பொய் இருக்கும்.. அதெல்லாம் உங்க கற்பனைன்னு நினைச்சு ரசிச்சேன்.

அப்புறம் நீங்க வளர்ந்தீங்க… அம்மா கிட்ட சொல்ல ஏதுமில்லாம போச்சு. ஆனா உங்கள்ட்ட இருந்து ஆர்டர் மட்டும் வந்துச்சு.

இப்ப வெளியே போகனும்… இப்படி வெளியே போகணும்னு…ஆனா நீங்க வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்?

காத்திட்டு இருப்பேன். நீங்க சாப்டு வர்றீங்களா…. சாப்பிடாம வர்றீங்களானு பார்க்க, காத்திட்டு இருப்பேன்…

நீங்க எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு..பிசி.

இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்துட்டாரு.

அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கணும், மருந்து கொடுக்கணும், பிசியோதெரபி பண்ணனும்… காத்திட்டுருப்பேன்.

காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா?

அப்புறம் உன தங்கச்சி கல்யாணம்…

இப்ப அவ எப்படி இருக்கானு கூட… அவளா முடிவு செய்ற நேரத்திலதான் என் கூடப் பேச முடியும். ஏன்னா, அங்க அவ காத்திட்டு இருக்கா…. ஒரு அம்மாவா…

உனக்கு சொல்லவே வேண்டாம்…

அப்பா தொழிலை எடுத்துச் செய்ய ஆரம்பிச்ச உடனேயே நீ ரொம்ப பிசியாகிட்ட..

நீ கடைசி அஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசியேன்…

“சாப்டிங்களா, மாத்திர போட்டாச்சா.. ஊசி போட்டாச்சா..?” இவ்ளோதான்.

உங்கப்பா வாழ்றா காலத்தில பிசியா இருந்தாரு…நான் காத்திட்டு இருந்தேன்.

கடைசிக் காலத்தில் ஏதுவும் இல்லாம இருந்தாரு. ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு.

என்கிட்ட பேச அவருக்கு விஷயமே இல்லை… பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு. தூங்குனாரு….

ஏன்னா, பேச வேண்டிய காலத்தில் பேசல… பேச நேரமிருந்த காலத்தில் பேச விஷயமில்லை… அனுபவமும் இல்லை.

இப்படித்தான் பெரும்பாலான அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது.

நாம என்னைக்காச்சும் வெளியே போகும் போது, அங்க நிறைய அம்மாக்களைப் பார்ப்பேன்… அவங்க எல்லோர் கண்ணிலும் எனக்குத் தெரியுறது, காத்திருந்த ஏக்கம் மட்டும் தான்.

உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர்ற அவங்க மனைவிகளைப் பார்ப்பேன்… அதுல இன்னைகே வாழ்ந்துடனும்… அடுத்த ஆறு நாள் இவன்கூட பேசக் கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறதையும் பார்த்தேன்.

இன்னைக்கு ஒரு நாள் தானேன்னு புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்களைப் பார்த்தேன்.

இது கொஞ்சம் கொஞ்சமா, அவங்களுக்கு காரியம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது… உங்களுக்கு ஒரு நாள் தானேன்னு ஒரு நினைப்பு வந்துடுச்சு.

இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்கறியா..?

என் காலத்தில் இதையெல்லாம் உங்கப்பாகிட்ட சொல்லிப் புரிய வைக்க முடியலை… ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பாயில்ல? அதான் உன்கிட்டச் சொல்றேன்…

நான் உயிரோடு இருக்கும் போது இதைச் சொல்ல முடியலை… சொன்னாலும் உன்னால கேட்க முடியாது. அதனால தான் இப்பச் சொல்றேன்.

உனக்கு வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, ஒரு பையன் இருக்கான், மனைவி இருக்கா… அவங்க காத்திட்டு இருக்காங்க…

உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் உனக்குத் தெரியாது. ஆனால் அத அவள் வெளிக்காட்டும் போது, உங்கப்பா கட்டில்ல நகர முடியாம இருந்தாரு….

அவரு தான் அப்பானு அவளோட காலேஜ்க்கு, ஸ்கூலுக்கு தெரியாத அளவுக்கு அவர் பிசி… அப்பா கூட அங்க போகணும், இங்க போகணும்ங்கிற எந்த ஆசையும் நிறைவேறல.  அவ அப்பா கடைசி காலத்தில சும்மா இருந்தபோது பேசுனதை அவள் கேட்க முடியலை…

ஏன்னா அவ வேறு வீட்டுக்கு போய்ட்டா… பார்த்தியா வாழ்க்கையை?

நீ உன் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கையைக் கொடுத்துடாதே.

உன் மனைவிய அவளோட மகனுக்கு கடிதம் எழுத வச்சிடாதே…

இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட… நாளைக்கு, மூணு வேளைக்கும் உனக்கு பிரச்னை இல்லை. இன்னும் சொல்லப்போனா, நீ இப்ப உழைக்கிறது, உன்னோட அடுத்த பத்து வருஷம் கழிச்சி செலவழிக்கப் போறதுக்குத் தான்.

அதைக் கொஞ்சம் குறைச்சிக்கோ…

சீக்கிரம் வீட்டுக்கு வா…

பொண்டாட்டிகிட்ட, புள்ளைககிட்டப் பேசு…

அவங்களுக்கும், நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு…

ஏன்னா, அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும்,  ஒருத்தரைக் காக்க வைக்கிறதும் ஒரு வாழ்க்கையா?

செய்வேனு நம்புறேன். ஏன்னா என்கிட்ட நல்லாப் பேசின பையன் தானே நீ? உன் மனைவி, மகளை விட்டுடவா போறே?

-அன்பு அம்மா

***

கடிதத்தைப் படித்து முடித்தாள். அவள் கண்களும் கலங்கி இருந்தன…

அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது. நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

சர்வர் வந்தான். இரண்டு மிகப் பெரிய ஃபலூடா ஐஸ்கிரீம் வந்திருந்தது. 

அவள் மெதுவாய் தன் அலைபேசியில் இருந்து, தனது அம்மாவிற்கு போன் செய்தாள்…

“நான் தான்மா…” 

…….

“ஏன் சும்மா பேசக் கூடாதா?”

…….

“என்ன செய்யறே?”

…….

“அப்பா என்ன செய்யறாரு?”

பேசத் தொடங்கிவிட்டாள். ஐஸ்கிரீம் கொஞ்சம் கொஞ்சமாய் உருகத் தொடங்கியது.

அவன் சிரித்தபடியே சாப்பிடத் தொடங்கினான். 

இனிமேல் இப்படித்தான்.

இனி அங்கே அன்புக்காகக் காத்திருக்க அவசியமில்லை.

***

நேரில் நாம் செல்ல முடியாமல் இருந்தாலும் போன் மூலமாக தினமும் பேசி மகிழ்வோம். நம்முடைய சராசரி வாழ்க்கை 60 ஆண்டுகள் என்று வைத்துக்கொண்டு இன்றுமுதல் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

வாழ்க்கையில் பணம், கார்,வீடு, எல்லாம் வாழ்க்கையை வாழ்வதற்காகத் தான்.

ஆனால் இன்று அவற்றுக்காக வாழ்க்கையையே தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

சிந்தியுங்கள் நண்பர்களே… உங்கள் வாழ்க்கை உங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது…உங்கள் வாழ்க்கைக்கான மகிழ்ச்சியும் உங்களிடம் தான் உள்ளது

வாழ்க்கைக்காக தான் பணம்… பணத்துக்காக வாழ்க்கையை இழந்து விடாதீர்கள்.

$$$

Leave a comment