-கருவாபுரிச் சிறுவன்
சங்கரன்கோவிலில் அருள்பாலிக்கும் கோமதியம்மையின் ஆடித்தபசு விழா நாளை (21.07.24) நடைபெறுகிறது. இதனையொட்டி, எழுத்தாளரும் இலக்கிய ஆய்வாளருமான திருவாளர் கருவாபுரிச் சிறுவன் எழுதிய இக்கட்டுரை இங்கு வெளியாகிறது...

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை!
என்றும் வணங்குவது உன் மலர்த்தாள்; எழுதா மறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முக்தி ஆனந்தமே.
-அபிராமி பட்டர்
கோமதியம்பிகையின் பிரபாவம்:
அம்பிகையின் கருணையை ஒருவாறு ஒருங்கிணைத்துச் சொல்லும் வடநுால்களில் முதன்மையானது லலிதா சகஸ்ர நாமம். இதில் ‘அவ்யாஜ கருணா மூர்த்தி’ என்ற ஒரு பதம் வருகிறது.
வ்யா என்றால் காரணம், அவ்யா என்றால் காரணமே இல்லாதது. கருணா மூர்த்தி என்பதற்கு பொருள் வெளிப்படை. அம்பிகை ஒருவருக்கு அனுக்கிரகம் பண்ண வேண்டும் என முடிவு செய்து விட்டால் அதற்கு காரணமே தேவையில்லை. அவள் முடிவு பண்ணியதே ஒரு காரணம் தான் என பெரியோர்கள் அப்பதத்திற்கு வியாக்யானம் சொல்லுவார்கள்.
பாரத தேசத்தின் திருவடிப் பகுதியில் அமைந்த தென்தமிழகத்தின் சிறப்புற்று விளங்கும் தலங்களில் சங்கரநயினார்கோயிலும் ஒன்று. இங்கு விருப்பமுடன் மூலஸ்தானத்தில் நித்திய மங்களமாய் வீற்றிருந்து அருள் பாலிக்கும் அம்பிகை, காரணமே இல்லாமல் பக்தர்களுக்காக கருணை செய்வதற்கு ஏகாந்தமாய் வலதுபாதத்தை முன்னெடுத்து வைத்திருக்கும் அழகே அழகுக்கு அணி செய்வதாகும்.
அவளின் கருணையை அனுபவிக்க நினைப்பவர்கள் ஒரு தரம் அவளுடைய சன்னிதிக்கு வந்து தரிசனம் செய்ய வேண்டும். ஏன் தெரியுமா? அரிபிரம்மாதியர் முதல் முப்பத்து முக்கோடி தேவர்களும் அவளின் கடைக்கண் பார்வைக்காக நித்தம் சன்னிதியில் ஏங்கி நிற்கிறார்கள். இருப்பினும் அத்யந்த பக்தர்களின் குறைகளை அவர்களிடம் கேட்காமலே நிவர்த்தி செய்து நிறையாக்குவதில் அவளுக்கு நிகர் அவள்தான். ஏனென்றால் அவளின் தலைவன் சங்கரலிங்கப் பெருமான் அல்லவோ!
தன்னைக் காண தவம் கிடக்கும் தேவாதி தேவர்களை விட உண்மையான அன்பர்களின் அன்பே அவளுக்கு விருப்பம் என்கிறார் புளியங்குடி நகரம் முத்துவீரப்பக் கவிராயர்.
எவ்வெவ்வண்டத்தவரினும் உள்ள அரிபிரமாதி யாவரும் இவள் கடைக்கண் இனியவருள் எப்போது கிட்டுமென வந்துநின்று ஏத்தி எதிர் நோக்கி நிற்பார்...
-என்கிற இந்தக் காட்சியை நம்மவர்களில் யாராவது பார்த்தவர்கள் இருக்கிறார்களா என விசாரித்தால், இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் காட்ட முடியுமா? நாம் அவர்களை பார்க்க முடியுமா… அதன் பின் அவர்களை போல அன்னையை தரிசிக்க முடியுமா… என்ற அடுக்கடுக்கான கேள்விகள் படிக்கும் போது மனதில் எழலாம். அதற்கான விடை அது உங்களால் முடியும் என்பதே.
‘கோமதி’ என்னும் மந்திரச்சொல்லை மனதில் நிறுத்தி இக்கட்டுரையைப் படியுங்கள். முடிவில் அதற்கான உபாயம் திரிகரணங்களில் ஒன்றின் வழியாக உங்களுக்குப் புலப்படும்.
சீராசைச் சிறப்பு:
* அழியாப்புகழ் பெற்றதும், தென்தமிழக பஞ்சபூத தலங்களுள் பிருத்விக்குரிய ஸ்தலமுமான சங்கரநயினார் கோயில் என்னும் சங்கரன்கோவில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.
* மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முச்சிறப்பினையுடையது.
* அன்னை ஆதிபராசக்தியும், நாக அரசர்களாகிய சங்கன் பதுமனாகிய இருவரும் பலகல்ப காலம் தவமிருந்து ஈருருவானவர்களை ஓருருவாக தரிசித்த மகிமை மிக்க திருத்தலம்.
*ஆதிசங்கரரின் ஆத்மார்த்த சீடர்களில் ஒருவரான வித்யாரண்ய சுவாமிகளால் அருளிச் செய்யப்பட்ட ‘கோமதியம்பிகை அஷ்டகம்’ பிறந்த தலம்.
* திராவிட மாபாஷ்ய கர்த்தாவின் முதன்மைச்சீடர்களில் ஒருவரான காஞ்சிபுரம் சிதம்பர முனிவரால் பாடப்பெற்ற புனித பூமி.
* தமிழ் இலக்கிய உலகின் முடிசூடா மன்னர் உ.வே.சாமிநாதய்யரின் பிரியமான தலம்.
* ஆன்மாக்களின் உடற்பிணி, உள்ளப்பிணி போன்றவற்றை நீக்கும் பொருட்டு திருவாவடுதுறை ஆதீனம் 10வது பட்டம் தவத்திரு வேலப்ப தேசிக சுவாமிகளால் அன்னையின் திருவுரு முன்பு ஸ்ரீ சக்கரம் ஸ்தாபிக்கப் பெற்ற திருத்தலம்.
பாடி மகிழும் நூல்கள்:
* சீவலமாற பாண்டியன், முத்துவீரப்ப கவிராயரால் இயற்றப்பெற்றது சங்கரநயினார் கோயில் தலபுராணம், கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ்.
* புளியங்குடி திருக்கமலப்புலவரின் கோமதியம்பிகை சதகம்.
* திருநெல்வேலி தச்சநல்லுார் அழகிய சொக்கநாதபிள்ளையவர்களின் கோமதியம்பிகை பதிகம்
* கரிவலம் வந்த நல்லுார் சென்னிகுளம் காவடிச்சிந்து புகழ் அண்ணாமலைக் கவிராயரின் கோமதி அந்தாதி,
* ஆசிரியரின் பெயர் இன்னார் தான் என்று இன்றுவரை இன்னும் தீர்க்கமாக அறியப்படாத சங்கர சதாசிவமாலை, சங்கரநயினார் கோயில் உலா, சங்கரன் கோயில் அந்தாதி போன்றவை யாவும் இத்தல மாண்பினை விளக்கும்; பெருங்கருணையைப் பேசும்.
* புளியரை பொ. சதாசிவ சுப்பிரமணிய பிள்ளை கோமதியம்பிகை பேரில் பாடிய சந்தவிருத்தம்
* ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் மாதொருபாகம் பிள்ளை பாடிய கோமதியம்பிகை பதிகப்பாமாலை.
* கள்ளிக்குளம் க.சுப்பையா நாயக்கர் ஆக்கிய கோமதி அந்தாதி, கோமதி மும்மணிமாலை, கோமதி வாரதுதி, திருவெழுக்கூற்றிருக்கை.
* தேசியகவி சுப்பிரமணிய பாரதியாரின் பதிகம்.
* பல புலவர்களால் இயற்றப்பட்ட கீர்த்தனைகள், தனிப்பாடல்கள் யாவும் சங்கரலிங்கப் பெருமானின் திருவருளையும், கோமதியம்பிகையின் தண்ணருள் கருணையையும் விவரிக்கத் தவறுவதில்லை.
* பட்டியலில் விடுபட நுாற்கள் பல இருக்கலாம். அவையாவும் காலதேவன் ஆசியோடு மீண்டும் இணைத்துக் கொள்ளப்படும்.
சைவ சித்தாந்த பூஷணத்தின் சீர்மிகு நூல்:
ஆவுடைத்தாய் அகிலாண்ட நாயகி ஆதிபராசக்தி அம்பலத்தேயாடும் ஆடவல்லானின் அருகில் நிற்கும் அபயாம்பிகையான கோமதியம்பிகையின் திருவடிக்கு ‘சதரத்ன மாலை’ என்னும் அழகிய பாமாலை ஒன்றை சைவ சித்தாந்த பூஷணம் பேட்டை. ஆ.ஈஸ்வரமூர்த்திப் பிள்ளையவர்கள் தொடுத்துச் சாற்றியுள்ளார் அது இன்னும் வாடாமல் மிளிர்கிறது. அது என்றுமே வாடாது என்பது அந்நுாலைப் படிப்பவர்களுக்கு அது புரியும். அதன் ரகசியமும் தெரியும்.
சைவசமயத்தின் எழுச்சி நாயகன், மாற்று மதத்தவர்களுக்கு சிம்மசொப்பனம், பழுத்த துாய சைவ சித்தாந்தவாதி, ஞானம் என்னும் தோணியில் எல்லோரையும் பயணிக்கச் செய்யும் படகோட்டி, எந்நிலையில் இருந்தாலும் தன்னடியைத் தேடி வருபவருக்கு விண்ணிலையைக் காண்பிக்கும் பேரருளாளன், தன் பெயரை உச்சரிப்பவர்களை உச்சத்தில் கொண்டு வைக்கும் தன்னிகரில்லாத தலைவன். அடியேனைப் போன்ற ஊமர்களுக்கு உற்சாகம் அளிக்கும் உத்தமன். திருநெல்வேலி திருமந்திரநகர் என்னும் பேட்டை. ஆ.ஈஸ்வரமூர்த்திப் பிள்ளையவர்கள் (இனி அவர்களை பிள்ளையவர்களே என்றே பதிவு செய்வோம்).
- சைவப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் சென்ற நுாற்றாண்டில் பிறந்தவர் பிள்ளையவர்கள்.
- தன் வாழ்நாள் முழுவதும் சைவ சமயக் கொள்கைப்பிடிப்போடும், ஈடுயிணையற்ற சைவ வாழ்விலும் தன்னை கரைத்துக் கொண்டவர்கள்.
- மனம், மொழி, மெய்களில் உயரிய சிவச்சிந்தனை, ஈர அன்புடன் கூடிய சைவ சமயப்பற்று, தனித்துவம் வாய்ந்த தேசியப்பார்வை இம்மூன்றையும் அணிகலனாகக் கொண்டவர்கள் பிள்ளையவர்கள்.
- தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் இம்மூன்றிலும் புலமை கொண்ட இப்புலவரின் கடைசிக்கால வாழ்வினோடு இணைத்துக் கொண்டது இச்சங்கர நயினார் கோயில் நகரம்.
- எழுத்து, சொல், செயல் இம்மூன்றிலும் ஓரே நேர்க்கோட்டினைக் கொண்ட இவரின் சமயப்பணியை அறிந்துணர்ந்து கொண்ட அன்றைய துறைசை ஆதீனம் 22 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள் 30 – 5- 1968 அன்று திருநெல்வேலி கிளை மடத்திற்கு வர வழைத்து ஆதீன வித்துவானாக ஆக்கியருளினார்கள்.
- ஆசிரியர் பணி, அரன்பணி, ஆதீனப்பணி இம்முன்றையும் மேற்கொண்ட பிள்ளையவர்கள், மாணவர்களுக்கு நல்லாசிரியராகவும், திருமுறை சாஸ்திரம் பாடங்களை நடாத்தும் போதகாசிரியராகவும், செய்யுள்கள் இயற்றும் நுாலாசிரியராகவும், முன்னோர் மொழிந்த திருநுாற்களுக்கு குறிப்புரை, பதவுரை, விரிவுரை எழுதும் உரையாசிரியராகவும், சமய இதழ் நடத்தும் இதழாசிரியராகவும், சமய உண்மைகளை அனைவரும் உணரும் பொருட்டு பல்வேறு கருத்துக்களைப் பதிப்பித்து எடுத்துரைக்கும் வெளியீட்டாளராகவும், தான் பணியாற்றிய இடங்கள் தோறும் சபைகளை ஸ்தாபித்த ஸ்தாபகராகவும் என பன்முகத் தோற்றத்தில் பரிணாமித்தார்.
பிள்ளையவர்களின் சமகாலச் சான்றோர்கள்:
பிள்ளையவர்களின் பணியைப் பாராட்டி ஆசி வழங்கியவர்கள் பலர்:
- நடமாடும் ஞானப்பண்ணை காசிவாசி பழநி ஈசான சிவாசாரிய சுவாமிகள்
- திருவாவடுதுறை ஆதீனம் 22 -வது குருமகாசன்னிதானம்
- கூனம்பட்டி ஆதீனம் 55 வது சன்னிதானம்
- காஞ்சிபுரம் ஆளவந்த வள்ளலார் ஆதீனம் சிவசுவாமி தேசிகர்
- மகாபெரியவர் என்று அழைக்கப்படும் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்
- தருமை ஆதீனப்புலவர் வஜ்ஜிரவேலு முதலியார்
- திருவாசக மணி கே.எம்.பாலசுப்பிரமணியம்
- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஜி.சுப்பிரமணிய பிள்ளை
- பண்டித மணி மு.கதிரேசன் செட்டியார்
- டி.இராமலிங்கம் பிள்ளை
- பாம்பன் சுவாமிகளின் சீடர் திருவனந்தபுரம் எஸ்.சச்சிதானந்தம்
- பெரிய புராணம் பேருரையாசிரியர் கோவை, சி.கே.சுப்பிரமணிய முதலியார் என்ற சிவக்கவிமணி ஐயா
- அருள்மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.
- இலங்கை அச்சுவேலி குமாரசாமி குருக்கள் போன்றவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவார்கள்.
நுாலின் அமைப்பு:
- கோமதியன்னையின் அருமை பெருமையை அழகுற எடுத்துச் சொல்லும் ‘கோமதி சதரத்ன மாலை’ சொற்சுவை, பொருட்சுவை நிறைந்தது.
- நுாறு பாடல்களைக் கொண்டது.
- நுாறு பாடல்களில் உள்ள கருத்துக்கள் ரத்தினம் போல ஒளி வீசுவதால் சதரத்னம் என்னும் பெயரை ஆசிரியர் முன்னிறுத்தினார் போலும்.
- சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது இது.
- வெண்பாவிற்குரிய இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, கலிப்பாக் கூறுகளை உள்ளடக்கியது.
- ஆசிரியப்பாவின் சிறப்பு இலக்கணமான ஏகாரத்தில் முடிவது இந்நுாலின் மற்றொரு சிறப்பு.
- காய்ச்சீரில் முடிந்து காய்ச்சீரில் தொடங்குவதால் அந்தாதிக்குரிய கூறுகளையும் கொண்டது.
- நான்கு அடிகளும் முழுமையாக்க் கொண்டு நான்கு சீர்களைப் பெற்றுள்ளதால் கலி விருத்தம் எனவும் கூறலாம்.
- இந்நுாலுக்கு ஆசியுரை வழங்கிய காசிவாசி பழநி ஈசான சிவாசாரிய சுவாமிகள் ‘சூதன் ஒலி மாலை’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்கள் அதற்கு ஏற்றாற்போல இதிலுள்ள கருத்துக்களும் வேதத்தின் சாராம்சங்கள், ஆகமத்தின் பிழிவுகள், புராண நுட்பங்கள், தேவார திருவாசக திருமுறைச் சாயல்களை கொண்டதாகவே திகழ்கிறது.
- பிள்ளையவர்களின் முதன்மை மாணாக்கர்களில் ஒருவர் ரத்தினவேலன் என்னும் சிவநேயர். இவரே இந்நுாலிற்கு எளிவுரை ஒன்றை வரைந்துள்ளார்கள். குருநாதரின் செய்யுள் நடைக்கு சீடரின் உரைநடை எவ்வளவு சாலப் பொருந்திய தெய்வாதீனச் செயல் என்பதை நினைத்து பார்த்தால் மேனி சிலிர்க்கும். இதைவிட சீடருக்கு வேறு என்ன பெருமை இருக்க முடியும். இச்செயலே அம்மையப்பனின் திருவடியை மேலும் மேலும் சிந்திக்க வைக்கிறது.
பிள்ளையவர்கள் கண்ட பிராட்டியார்:
சித்திரை மாதத்தில் மதுரையில் அழகர் வைகையாற்றில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு காட்சி தரும் வைபவம் எவ்வளவு பிரபலமோ அதைப்போல சங்கரன் கோயிலில் தெற்குரதவீதியில் கோமதியம்பிகைக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க சுவாமியாகவும் ஆடி மாதத்தில் சிவபெருமான் காட்சி தரும் வைபவமும் பிரசித்தி பெற்றது.
காலந்தோறும் நடக்கும் இந்த ஐதீக விழாவினைக் காண கண் கோடி வேண்டும். அச்சமயம் பல்லாயிரக் கணக்கான அன்பர்கள் கூடுவார்கள் என தமிழ்த்தாத்தா ‘என் சரிதத்தில்’ குறிப்பிட்டுள்ளார்.
ஆடித் தபசிற்கு கொடியேற்றிய நாள் முதல் அம்பிகை காலை மாலையில் பல்வேறு வாகனங்களிலும், தங்கம், வெள்ளிச் சப்பரத்திலும் ரத வீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் செய்வது வழக்கம்.
அப்போது காராம்பசு, யானை, தீவெட்டி, குடை, சாமரம், கொடி என தசாங்கத்தோடு சங்கு, துந்துபி, பேரிகை, முரசு, மேளதாள நாதஸ்வர வாத்திய கோஷங்களுடனும், அந்தணர்களின் வேதமந்திர முழக்கத்துடனும், ஓதுவார்கள் தமிழ்த் திருமறைகள் ஓதவும், அதைத் தொடர்ந்து திருநீறு அக்கமணிமாலை அணிந்த அடியார்கள் புடைசூழ அம்பிகை வீதிவலம் வருகிறாள். அப்போது மேல ரதவீதியில் அருள் செய்யும் சற்குருநாதர் வேலப்ப தேசிகரை தரிசனம் செய்து விட்டு தன் மாணக்கர்களுடன் வெளிவந்த போது அம்பிகையை தரிசனம் செய்தார் பிள்ளையவர்கள்.
”ஹர ஹர நமபார்வதிபதியே! ஹர ஹர மகா தேவா,
சித்ஸபேச சிவ சிதம்பரம்.
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!”
-என்ற கோஷங்கள் விண்ணையும் தாண்டி முழங்கின.
பிள்ளையவர்களைக் கண்ட அடியார்கள் அனைவரும் வணங்கினர். சிறுபுன்னகையோடு அவர்களைப் பார்த்த பிள்ளையவர்கள் அவர்களுடன் இணைந்து கொண்டார்.
அம்பிகையின் சப்பரத்திற்குப் பின்னே பிள்ளையவர்களும் வருவதை அறியாத சில நாத்திகர்கள் தன் கண்முன் நடக்கும் இக்காட்சியெல்லாம் கண்டு தன்னை மறந்த நிலையில் கைகூப்பி வணங்குவதை எதேச்சையாக பார்த்தார்கள் பிள்ளையவர்கள். அம்பிகையின் சப்பரம் ஈசான திக்கிற்கு வந்த போதும் எதிரே வில்லுவண்டியில் வந்த அரசியல் பிரமுகர் ஒருவர் அம்பிகையின் சப்பரத்தினைக் கண்டு அப்படியே ஓரமாக நிறுத்தி, ஏனைய அடியார்களுக்கும் வழிவிட்டு நின்று தரிசனம் செய்வதைப் பார்த்த பிள்ளையவர்களின் திருவாயில் இருந்து மதுரமான துதி ஒன்று பிரவாகமாக வெளிப்பட்டது.
நாம் செய்த தவத்தின் பயனால் அவர்களது நன்மாணக்கர் ஒருவர் அந்த நேரத்தில் குறிப்பெடுத்து வைத்த பாடல் உங்களுக்காக இதோ…..
அணியாரும் விழாநாளில் அலங்காரம்பல கொண்டு
மணிவீதி முழக்கோடு வரும்நின்னை கண்டக்கால்
பணியாத தலைபணியும் பாடாத வாய்பாடும்
தணியாத சிந்தையும் தான் தணிந்து ஒடுங்கும் கோமதியே!
-கோமதி சதரத்ன மாலை-10
ரதவீதியுலா வந்த அம்பிகையின் சப்பரம் திருக்கோயில் முகப்பை அடைந்தது. அந்த நேரத்தில் உழுவல் அன்பர் ஒருவர் அங்கு வந்து அம்பிகையின் அருளைப் பெற்றவர்கள் எப்படியெல்லாம் அளவளாவி மகிழ்வார்கள் என்பதை சொல்லுங்கள் குருவே! என வேண்ட, பிள்ளையவர்களும் புகழ்ந்தேத்தும் அந்தப் பாடலை நாமும் கொஞ்சம் படிப்போமா?
சொன்னாலும் வாயினிக்கும் சொலக்கேட்டால் காதினிக்கும்
பன்னாளும் சிந்தித்தால் பரந்தினிக்கும் சிந்தையெல்லாம்
பொன்னாளும் கலையாளும் புவியாளும் புகழ்ந்தேத்தும்
அன்னாயுன் சரிதங்கள் அற்புதமாம் கோமதியே!
-கோமதி சதரத்ன மாலை-19
கூட்டத்தில் குறிப்பெடுத்த நன்மாணக்கரைக் கவனித்த பிள்ளையவர்கள், இந்த ஆன்மாக்களின் நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப பூர்வ ஜென்ம புண்ணியப் பயனாலும் முன்னோர்களின் வினைப்பயனும் காரணமாகி இப்பிறவி அமைகிறது. இது வீணான வாழ்வாக அமையக்கூடாது என்பதில் கவனமாக இருந்து அம்பாளின் திருநாமத்தை வாயாரப் புகழுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவள் பெருமையைப் பேசுங்கள். அவளின் திருபெயர்களை எழுதுங்கள் என உபதேசம் செய்தார்.
இப்படியொரு ஆசிரியர் மீண்டும் இப்பூவுலகில் பிறப்பாரா, அதுவும் நமக்கு கிடைப்பாரா என்பது சங்கரலிங்கப் பெருமானுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
சிவபூஜை என்முன்னோர் செய் பயனால் நாயேனும்
அவமே நாள் போக்காமே ஆன மட்டின் நின் புகழைத்
தவறாமல் படித்திடுவேன், சாற்றிடுவேன், எழுதிடுவேன்
உவமானம் கடந்தாளே, உய்யக்கொள்வாய் கோமதியே!
-கோமதி சதரத்ன மாலை-11
பாடங்களை மனனம் செய்த குழந்தைகள் வாத்தியாரிடம் தங்கு தடையின்றி நிறுத்தி நிதானமாக எல்லோருக்கும் கேட்கும்படி சப்தமாக ஒப்பிவிக்கும். அதைப்போல திருக்கோயிலுக்குள் எழுந்தருளியிருக்கும் அன்னையைப் பார்த்து, “தாயே! உன் திருநாமங்கள் தான் எத்தனை எத்தனை? அத்தனையும் அடியேனுக்கு தாரக மந்திரமம்மா!” என இவ்வுலகத்தின் பெரிய வாத்தியாரிடம் அந்த பிள்ளையவர்கள் சப்தமாகச் சொல்லும் அந்த அம்மையின் பெயர்களை நாமும் காதால் கேட்டாலே போதும் உய்வு பெறுவது உறுதி.
பகவதியே மாதேவி பவானி பராசக்தி சிவையே
நகமகளே யைமவதி நாரணியே ஈசையே
ககனமுயர் பிராமியுமை கெளரி திரு வீசுரியே
தகவுறுமிப் பெயர்களெற்குத் தாரகமாம் கோமதியே!
-கோமதி சதரத்ன மாலை-18
“உரை சேரும் எண்பத்து நுாறாயிரமாம் யோனி பேதங்களை… நிரை சேரப்படைத்து அவற்றின் உயிருக்குயிராய் அங்காங்கே நின்றான்” -என்பது திருஞான சம்பந்த சுவாமிகளின் திருவாக்கு.
“எல்லா உயிர்க்கும் தான் ஈசன்” என்பது திருமூலதேவ நாயனாரின் சத்திய வரிகள்.
”அன்னை மீனாட்சியம்பிகையே அண்ட சாராசரங்களை ஈன்றாள்” என்பார் பரஞ்ஜோதி மாமுனிவர்.
“அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே” என்பார் திராவிட உபநிஷத கர்த்தா தாயுமான சுவாமிகள்.
“தாயறிய கருவில் இருந்து அமுதுாட்டும் தாய் துணை” என்பது திரிகூடராசப்பக் கவிராயரின் அமுத மொழி.
“படி முழுதும் ஈன்ற பராசக்தி” என்பார் திருமலை வேற்கவிராயர்.
இவ்வுத்தமக் கருத்துக்களை எல்லாம் மனதில் கொண்ட பிள்ளையவர்கள்,
பன்றி முதல் எவ்வுயிர்க்கும் பரமசிவன் பரமபிதா
பன்றி முதல் எவ்வுயிர்க்கும் பார்க்கிலுடன் பிறந்தனவாம்
பன்றி முதல் எவ்வுயிர்க்கும் பார் முழுக்கப் பொதுவுடமை
பன்றி முதல் எவ்வுயிர்க்கும் பரிவுடையாய் கோமதியே
-கோமதி சதரத்ன மாலை-73
-என்கிறார்.
பிரம்மா விஷ்ணுவாலும் காண முடியாத பரசிவம் பன்றிக்குட்டிகளுக்காக அதன் தாய் வடிவம் எடுத்துப் பால் கொடுத்த மதுரை சுந்தரேசர் நிகழ்த்திய திருவிளையாடல் புராண நிகழ்வினை நம் கண்முன்னே படம் பிடித்துக் காட்டுகிறது இப்பாடல்.
கோமதியம்பிகையின் சதரத்ன மாலை பாடல்களை படிக்க படிக்க உடல் சிலிர்க்கிறது, நாக்குழறுகிறது, உள்ளம் அவளின் திருவடியை நோக்கி ஒன்றுகிறதே என்னே! பிள்ளையவர்களின் கைவண்ணம். அவளின் திருச்சன்னிதிக்குச் சென்ற நாம் நம்முடைய திரிகரணத்தால் வழிபாடு செய்தால் என்ன நிகழும் என்பதை மேலும் படம் பிடித்துக்காட்டுகிறார் பிள்ளையவர்கள்….
தொழ வேண்டும் உனை என்றும் துாமலர் துாய்ப்பாடி உன்முன்
அழ ேவண்டும் உன்னடியில் அடியற்ற மரமே போல்
விழ வேண்டும் இவை செய்து உன் விளங்கருளில் திளைத்தாடி
எழ வேண்டும் என்பதுவே எனக்காசை கோமதியே
-கோமதி சதரத்ன மாலை-99
இது போன்ற சிறப்பு மிகுந்த துாயசிவச் சிந்தனையுடைய பாடல்கள் நுாறினைக் கொண்டது இந்நுால்.
பதிப்பும் வெளியீடும்:
சங்கரன் கோயிலில் அன்றைய உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த புளியரை பொ.சதாசிவ சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் 1958 ஆம் ஆண்டு இந்நுாலினை அச்சிட்டு முதன்முதலில் வெளிவர பேருபகாரம் செய்த பெருந்தகையாளராவர்கள்.
அதன் பின்னர், இவ்வூர் சைவ சித்தாந்த சபையினரும், கோமதியம்பிகை ஆடித்தபசு அன்னம்பாலிப்பு விழாக்குழுவினரும் பலமுறை அச்சிட்டு இலவசமாக வெளியீடு செய்துள்ளனர்.
பிள்ளையவர்களை பெருமைப்படுத்தும் விதமாக திருக்கோயில் நிர்வாகத்தினர் மூல நுாலை மட்டும் 1989, 1995 ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார்கள்.
இவ்வூர் அறுபத்து மூவர் குருபூஜைக்கு குழுவினர் திருக்கோயில் நிர்வாகத்தின் அனுமதியுடன் கோமதியம்பிகை சன்னிதியைச் சுற்றி உட்பிரகாரத்தில் நுாறு பாக்களும் பதாகைகளில் எழுதி அனைவரும் படிக்குமாறு அமைத்து வைத்திருந்தனர். ஆனால், 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத் திருப்பணிக் காலங்களில் அதை துாய்மை படுத்துவதற்காகவும், அழிந்த எழுத்துக்களை புதுப்பிப்பதற்காகவும் அவ்விடத்தில் இருந்து எடுத்த பதாகைகளை இன்று வரை மீண்டும் அதே இடத்தில் நிறுவுவதற்கு திருக்கோயில் நிர்வாகத்திற்கு கால நேரம் அமைய வில்லை. அது அமைய வேண்டும் என கோமதியம்பிகையின் திருவடியை வேண்டிக் கொள்வோம்.
இவ்வூரிலுள்ள கோமதியம்பிகை மாதர் சங்கத்தினர் , சைவசித்தாந்த பேரவையினர் மற்றும் பலரும் இவற்றிலுள்ள உருக்கமான பாராயணப் பாடல்களை அச்சிட்டு இலவசமாக வெளியீடு செய்துள்ளனர்.
2014 ஆம் ஆண்டு ஒம் சரவணபவ ஆன்மிக இதழிலும், தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் நடத்திய அமைப்பின் வழி தொகுக்கப்பெற்ற சிற்றிலக்கியக் கட்டுரைகள் என்னும் நுாலிலும் இந்நுால் பற்றிய கட்டுரை வெளிவந்துள்ளன.
2020ஆம் ஆண்டில் கரிவலம் வந்த நல்லுார் நம்பியாரூரர் அடியார்கள் திருக்குழாம் என்ற அமைப்பினர் துறைசை ஆதீன கர்த்தா 24வது குருமகா சன்னிதானம் திருக்கரங்களால் நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை அன்று வெளியீடு செய்தனர்.
பின்னர் 2021ஆம் ஆண்டு இக்கட்டுரையாளர் (கருவாபுரிச் சிறுவன்) 10வது பட்டம் வேலப்ப தேசிகர் குருபூஜை தினத்தில் அறிமுகக் கட்டுரையோடு இந்நுாலினைப் பதிப்பித்து வெளியீடு செய்யும் வாய்ப்பினைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிறைவுரை:
தனியொரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வமான சைவத் தமிழ்ப்பணிகளை தனியொரு மனிதராக நின்று தன் வாழ்நாள் முழுவதும் செய்தவர் பிள்ளையவர்கள்.
சங்கரன் கோயில் பற்றி வரலாறு எழுதுபவர்கள் யாராயினும் பிள்ளையவர்களை மறந்துவிட முடியாது; எளிதில் கடந்து மறுத்துவிடவும் முடியாது.
செந்தமிழ் நோக்கில் இந்நுாலை உண்மையான ஆய்வாளர்கள் ஆரோக்கியமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை விண்ணப்பமாக வைத்து, படிப்பவர்கள் மனதில் அழுத்தமாகவும் திருத்தமாகவும் இருத்திக் கொண்டால் அவர்களது வருத்தம் குறையும். பொருத்தமான வாழ்வு அமையும்.
கோமதியம்பிகையை தரிசிக்க வழி புலப்படும் என்று முதலில் கூறியதை நினைவூட்டி குருநாதரின் திருவடியை சிந்திப்போமாக.
மீசுரமாக வந்து பார்க் கண்டன் வீரங்காட்டி எமனை உதைத்துப் பூசுர குலத்தில் வந்த மார்கண்டன் பூசை வேட்டருள் பரன் புகழே, பாசுரம் இயற்றி பேசுரம் மிக்கன் பதிப்புரை நுால் செயும் ஆசிரியன் ஈசுவர மூர்த்தி எனும் பெயர் புலவன் இனிது நீடுழி வாழியவே.
திருச்சிற்றம்பலம்.
வாழ்க பாரதம்! வாழ்க மணித் திருநாடு.
காண்க:
சைவ சமயத்தில் மொழிப்போர்
கோமதி சதரத்ன மாலை
சங்கரநயினார் கோயில் தலபுராணம்
$$$