ராமனுக்கு இங்கே என்ன சம்பந்தம்?

-பா.இந்துவன்

சமூக ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியங்கள் மூலமாக தேசிய சிந்தனையையும் சமய விழிப்புணர்வையும் உருவாக்கி வரும் இளைஞர் பா.இந்துவன். அவரது முகநூல் பதிவு ஒன்று இங்கே கட்டுரையாகிறது...

ராமனுக்கும் தமிழர்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று ஒரு பெரிய கலவரமே CLUB HOUSEஇல் நடந்து கொண்டிருந்தது. 

நானும், என்னதான் பேசுகிறார்கள் என்று அறிய உள்ளே போனேன்.

நான் உள்ளே சென்றதும்,  ‘பா’ வந்திருக்கார் என்று ஒரு சத்தம் கேட்டது.

மனதிற்குள் ‘என்னை எப்படிடா உங்களுக்குத் தெரியும்?’ என்ற கேள்வி எழும்பினாலும், அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களுக்குள் என்னைப் பற்றிப் பேசினார்கள். பின்னர் என்னைப் பேச அழைத்தார்கள்!

முக்கியமாக ராமர் கோயில் இடிப்பில் ஆரம்பித்து, வடநாட்டுக் கடவுள் என்ற அதே நீர்த்துபோன உருட்டைத்தான்‌ உருட்டிக் கொண்டிருந்தார்கள். எனக்கும் நேரம் போகவில்லை. எனக்கும் கொஞ்சம் Mind Relax ஆவதற்காக, இன்வைட் அக்ஸப்ட் பண்ணி, உள்ளே போனேன். உடனே குழுத் தலைவர் பவ்யமாக,  “பா. இந்துவன், நீங்க பேசுங்க” என்றார்.

நான் உடனே  “என்ன பேசுறது சார்? இங்கே பேசும் அளவுக்கு நான் வரலாறு எதுவும் அறிந்தவன் இல்லை.. உங்களிடமிருந்து ஏதாவது கற்றுக் கொள்ளலாம் என்றுதான் இங்கே வந்தேன்” என்று கூறியதும்..  “நீங்கள் யாரோட பக்கம்?” என்று கேட்டார்கள். அதற்கு நான்  “ஸ்ரீ ராமபிரானின் பரம பக்தனாவேன்” என்றேன். 

அங்கிருந்து ஓரமாக,..  “டேய்,.. இந்த சங்கிய குழுவை விட்டு ரிமூவ் பண்ணி விடுங்கடா” என்று ஒரு குரல் கேட்டது. அதையெல்லாம் எனது அப்பாவித்தனமான பேச்சால் குழு நடுவர் கண்டு கொள்வதாக இல்லை…!

“சரி உங்கள் ராமருக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டார் குழுவின் தலைவர். 

அதற்கு நான் அவரிடம் ”நான் இதற்கு பதில் சொல்லணும்னா உங்களைத் தவிர யாரும் இடைமறிக்கக் கூடாது” என்றேன். அதற்கு குழுத் தலைவர்  “சரி” என்றார். அவரிடம்  “எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்  என்று கூறுங்கள்” என்று கேட்டேன். 

அதற்கு அவர் “தமிழ் நூல்களில் இருந்து ஆரம்பியுங்கள் தோழரே” என்று கூறினார். நானும் ஆரம்பித்தேன்…!

“கலைக்கடலே கருணைநெடுங் கடலே கானங்
  கடந்ததடங் கடலேஎன் கருத்தே ஞான
மலைக்கண்எழுஞ் சுடரேவான் சுடரே அன்பர்
  மனத்தொளிரும் சுயஞ்சுடரே மணியே வானோர்
தலைக்கண்உறு மகுடசிகா மணியே வாய்மைத்
  தசரதன்தன் குலமணியே தமியேன் உள்ள
நிலைக்கண்உறும் ஸ்ரீராம வள்ள லேஎன்
  நிலைஅறிந்தும் அருளஇன்னும் நினைந்தி லாயே”

    -திருவருட்பா.

“நிப்பாட்டுங்க! நிப்பாட்டுங்க! என்ன தோழரே, இதுல ஸ்ரீராமர், தசரதர் என்றெல்லாம் வருகிறது? தமிழ் நூல்களில் எப்படி இதெல்லாம்? எதாவது சமஸ்கிருத ஸ்லோகத்தைச் சொல்றீங்களா?”

“அன்பரே இது சமஸ்கிருத ஸ்லோகம் எதுவுமில்லை.  ‘திருவருட்பிரகாச வள்ளலார்’ எழுதிய திருவருட்பா எனும் பொக்கிஷத்தை கேள்விப்பட்டிருக்கீங்களா? அவர் எழுதிய   ‘ராமநாமப் பதிகத்தின்’ இரண்டாவது பாடலில் வரும் வரிகள் இவை.”

“ஐயய்யோ வள்ளலார் ராமரைப் புகழ்ந்து எழுதியிருக்காரா? வள்ளலார் ஆரிய ராமனுக்கு எதிரானவர்னு தானே சொல்லி குடுத்தாங்க. படுபாவிக ஏமாத்திட்டானுகளா?  இல்ல நீங்க ஏமாத்துறீங்களா? ஒண்ணும் புரியலையே”.

“இப்போ நான் தொடர்ந்து சொல்லணுமா, இல்லை, நிப்பாட்டணுமா நண்பரே? உங்களுக்கு சந்தேகம் இருந்தால் வீட்ல போய் பொறுமையா நான் சொல்வது சரியா தவறா என்று  ஆய்ந்து கொள்ளுங்கள். இப்போது என்னைப் பேச விடுங்க…!”

“இந்த திருவருட்பா காலத்தால் பிந்தையது இல்லையா? அதனால 18 ஆம் நூற்றாண்டிற்கு முன்னாடி இதுபோல எதாவது பாடல் இருக்கா?”

உடனே நான்  “சோழர்கால கட்டிடக் கலைகள் பற்றிச் சொல்கிறேன்” என்று கூறி ஆரம்பித்தேன்.

“திரு அயோத்தி நின்றருளுகின்ற ஸ்ரீராகவ  பெருமாளுக்கு நுந்தா விளக்கு எரிக்க மன்னனின் அரசியார் சீயபுவன சுந்தரமணியார் பத்து களஞ்சு நெல் தானமாக…”

“தோழரே! தோழரே! நிப்பாட்டுங்க. நிப்பாட்டுங்க! சோழர் கட்டிடக்கலை பற்றிச் சொல்றதா சொல்லீட்டு, இங்கயும் அயோத்தி ராமர்னு சொல்லீட்டு இருக்கீங்க… ஏன்?”

“இதுவும் சோழர்களின் கட்டிடக் கலை சம்பந்தமானதுதான் சகோதரரே. அதாவது காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ள காமாக்ஷி அம்மன் சன்னிதியில் கிடைத்த கல்வெட்டுகளின் அடிப்படையில், இது ஏற்கனவே ராமர் கோயிலாக இருந்ததாகவும் அது இடிந்துவிட்டதால் பிற்காலத்தில் அதை காமாட்சி அம்மன் கோயிலாகக் கட்டியுள்ளதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

அதற்குச் சான்றாக பொ.ஆ. 941 ஆம் ஆண்டில் முதலாம் பராந்தக சோழனின் 34 ஆவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட, இன்று காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டு கூறுவதாவது:

‘திரு அயோத்தி நின்றருளுகின்ற ஸ்ரீராகவ  பெருமாளுக்கு நுந்தா விளக்கு எரிக்க மன்னனின் அரசியார் சீயபுவன சுந்தரமணியார் பத்து களஞ்சு நெல் தானமாக’ கொடுத்த தகவல் உள்ளது. இங்கே ராமன் இருக்குமிடம் அயோத்தி என்பதால்  அயோத்தி நின்றருளிய ஸ்ரீராகவன் என்று சான்று பகிர்வதாக குடந்தை சேதுராமன் கூறுகிறார்…!”

ஐயய்யோ சோழர்களின் கட்டிடக் கலையிலும் ராமர் கோயிலா,  தமிழர்களுக்கும் ராமருக்கும் சம்பந்தமே இல்லைனு சொன்னானுக. இங்க பார்த்தால் சோழர்களே ராமர் கோவில் கட்டியிருக்காங்களே.”

“சரி விடுங்க சகோ… பாண்டியர்களின் கட்டிடக் கலை பற்றிச் சொல்லுங்க…!”

 “சரி சொல்றேன் கேளுங்க…”…

"ஸ்ரீ ராகவேந்திர பெருமாளுக்கு வைத்த பத்துமா நிலம்…"

“ஐயய்யோ நிப்பாட்டுங்க, நிப்பாட்டுங்க. என்ன நீங்க வள்ளலார்ல தொடங்கி சோழர்கள், பாண்டியர்கள் என்று எல்லா இடத்திலும் ராமரை அடையாளப்படுத்துறீங்க? ராமரை முன்னிறுத்தாத வரலாறே இல்லையா?  தமிழர்களுக்கும் ராமருக்கும் சம்பந்தமே இல்லைனு சொன்னாங்க, நீங்க என்னடான்னா வள்ளலார் முதல் சோழர்கள் பாண்டியர்கள்னு தொடர்பு படுத்திக்கிட்டே போறீங்க, சரி சொல்ல வந்ததை முழுமையா சொல்லுங்க….!”

“அதாவது பொ.ஆ. 863இல், பாண்டியன் மாறஞ்சடையனின் இரண்டாம் ஆட்சியாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி மனோன்மணீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டில், ராமர் கோயிலுக்கு நிலதானம் அளிக்கப்பட்ட தகவல் உள்ளது. அந்தக் கல்வெட்டின் காலத்தை குடந்தை சேதுராமன் அவர்கள்,  ‘இது வரகுணன் காலத்துக் கல்வெட்டாக இருக்கலாம்’ என்று எழுதியதோடு பொ.ஆ. 864 க்கு முன்னரே தமிழகத்தில் ராமர் கோயில்கள் இருந்துள்ளன என்ற தகவலை இக்கல்வெட்டுடன் சேர்த்து பதிவிட்டுள்ளார்” (ஆதாரம்: South Indian Inscription-  volume 14).

“ஐயோ தெரியாம உங்களை உள்ள இழுத்து விட்டுட்டேன் போலயே, இனிமேல் இந்த வாட்சப், முகநூல் பார்த்து வரலாறு பேசுறத நிப்பாட்டணும் முதல்ல. சரி  தோழரே எங்கள் முப்பாட்டன் முருகன் பற்றி சொல்லி குடுங்களேன்…!”

“முருகன் பற்றியா? சரி சொல்றேன் கேளுங்க…!”

“எந்தை வருக ரகுநா யகவருக

மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
யுண்க வருக மலர்சூ டிடவருக
என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்

     -திருப்புகழ்

“சகோதரரே நான் முருகனைப் பற்றித் தானே கேட்டேன்? ஆனால் இதில் ரகுநாயகன், அபிராமன், கோசலை என்றெல்லாம் வருகிறதே?”

“விரிவாகச் சொல்றேன், கேளுங்க…”… “அதாவது கோசலை, ஒரு நாள் ராமரை பால் குடிக்க அழைத்தாள். அன்று என்னவாயிற்றோ ராமர் பால் குடிக்க மறுத்தார். கோசலை கெஞ்சினாள். ராமர் சற்றுத் தள்ளிப் போய் நின்று, அங்கிருந்தபடி கோசலையைப் பார்த்தார். இந்தக் கட்டத்தை அருணகிரி நாதர் வர்ணித்து முருகனுடன் ஒப்பிடுகிறார்…”

“அடக்கடவுளே எங்கள் முப்பாட்டன் முருகனைப் புகழும் இடத்திலும் ராமனா? இது என்ன சோதனை? இது கண்டிப்பாக பார்ப்பனர்கள் எழுதியதாகத் தான் இருக்க வேண்டும்.” 

“சகோதரரே இது திருப்புகழில் வரும் பாடல். இதை எழுதியவர் மிகச் சிறந்த முருக பக்தரான அருணகிரிநாதர்.”

“அங்கேயும் போச்சா  சித்தர்கள் ராமரைப் பற்றி ஏதாவது சொல்லி இருக்காங்களா?” ( மனசுக்குள் இதில் எப்படி ராமர் வறாருனு பாத்துக்குறேன்)

“சரி சொல்றேன், கேளுங்க. கொஞ்சம் கவனமாக் கேளுங்க நண்பரே”னு சொல்லிவிட்டு ஆரம்பித்தேன்.

“நானதேது? நீய தேது? நடுவில் நின்றது ஏதடா?
கோனதேது குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராம ராம ராம என்ற நாமமே”

“என்ன, இங்கேயும் ராமநாமமா? ஐயய்யோ தெரியாம வந்து மாட்டிக்கிட்டேனே. மானமுள்ள தமிழ்ப் பிள்ளைகள் யாராவது இருந்தால் வந்து என்னைக் காப்பாத்துங்களேன். ராமனுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தம் இல்லைனு நான் சொன்னா, சோழர்கள், பாண்டியர்கள், அருணகிரிநாதர் முதல் சித்தர்கள் வரை தொடர்புபடுத்துறானே, முடியலையே!”

“சகோதரரே இது சித்தர் சிவவாக்கியர் எழுதியது. அவர் இதுமட்டுமின்றி இன்னும் பல பாடல்கள் ராமரைப் பற்றிப் பாடியுள்ளார். அவற்றையும் சொல்லவா?”

“வேண்டவே வேண்டாம்”என்று கூறியவர் “சமண காப்பியங்கள் பற்றிச் சொல்லுங்க” என்றார், கர்வத்தோடு.

நானும் ஆரம்பித்தேன்

“மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே”

     -சிலப்பதிகாரம்.

“நிறுத்துங்க! நிறுத்துங்க! நிறுத்துங்க. இதில் ராமனைப் பற்றியோ ராமயணத்தைப் பற்றியோ இல்லை தானே?” (ஏதோ பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார்).

“சகோதரரே இளங்கோவடிகளால் எழுதப்பட்ட இந்த சிலப்பதிகார வரிகளில் ராமனோ, ராமயணமோ வருகிறதா என்பதை நான் அப்பாடலுக்குக் கூறும் விளக்க உரைகளில் உள்ளதா என்று நீங்களே பாத்து தெரிஞ்சுக்கோங்க…”

பொருள்: மூன்று உலகும் இரண்டு அடிகளால் முறையாய் நிரம்பாததை முடிக்கும் வண்ணம் தாவி (மகாபலியின் தலையின் மேல் வைத்த) அந்தச் சிவந்த திருவடி, சிவக்கும் வண்ணம் தம்பியோடு கானகம் புகுந்து சோ என்ற அரணும், அதில் வாழும் மக்களும்,போரில் இறக்கும்படிச் செய்து, தொன்மையான இலங்கையின் கட்டுக்காவலையும் அழித்த வீரனின் புகழ் கேளாத காதுகள் என்ன காதுகள்? அந்தத் திருமாலின் புகழினைக் கேளாத காதுகள், என்ன காதுகள்?

“ஐயய்யோ, டேய் வேற யாராவது இவர்கிட்ட பேசுங்கடா. நான் போறேன் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பி விட்டார். 

அவர் போனதும் இன்னொரு நண்பர் வந்து, “என்ன ப்ரோ, சங்க காலத்தில் ராமர் இருந்தாரா?”

“அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும்
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின்…”

     -புறநானூறு.

“அதாவது, உன்பொதி பசுங்குடையார் என்ற சங்கப்புலவர் இந்த புறநானூற்று வரிகளால் சொல்வது என்னவெனில்..

பெரிய சுற்றத்துடன் கூடிய பாணன் ஒருவன் வறுமையில் இருந்தான். அவன் இளஞ்சேட்சென்னியின் அரண்மனையை அடைந்து, அதன் முன்னே நின்று, கிணைப்பறையைக் கொட்டி, வஞ்சித்துறைப் பாடல்களைப் பாடினான். அவனைக் கண்டவுடன், இளஞ்சேட்சென்னி, அப்பாணனுக்கும் அவன் சுற்றத்தாருக்கும் பல அரிய அணிகலன்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் பரிசாக அளித்தான். வறுமையால் வருந்திய என்னுடைய பெரிய சுற்றத்தார், அவன் வழங்கிய பொருள்களை எல்லாம் கண்டவுடன் அவற்றை ஆர்வத்தோடு எடுத்து, விரல்களில் அணிவனவற்றைக் காதிலும், காதில் அணிவனவற்றைக் விரல்களிலும், இடையில் அணிய வேண்டியவற்றைக் கழுத்திலும், கழுத்தில் அணிய வேண்டியவற்றைக் இடையிலும் அணிந்து கொண்டனர். 

மிகுந்த வலிமையுடைய ராமனுடன் கூடியிருந்த சீதையை, வலிய அரக்கன் கவர்ந்துகொண்டு செல்லும்பொழுது, சீதை கழற்றி எறிந்த நகைகள் நிலத்தே விழுந்தவுடன் அந்த நகைகளைக் கண்டெடுத்த, சிவந்த முகமுடைய குரங்குகளின் கூட்டம் அவற்றைத் தாறுமாறாக அணிந்ததைக் கண்டோர் நகைத்து மகிழ்ந்தனர். அதுபோல, பெரிய சுற்றத்திற்குத் தலைமை தாங்கி, அவர்களின் வறுமையைக் களையும் நேரத்தில், பல அரிய எண்ணங்களினால் உண்டாகிய துன்பம் நீங்குமாறு, நாங்களும் அரிய மகிழ்ச்சியை மிகவும் அடைந்தோம்!”

இதுமட்டுமின்றி அகநானூறு, பழமொழி நானூறு போன்ற இன்னபிற இலக்கியங்களிலும் ராமனைப்பற்றியும் ராமாயணத்தைப் பற்றியும் குறிப்புகள் உண்டு என்பதை கூறிக்கொள்வதோடு, தமிழர்களுக்கும் ராமருக்கும் சம்பந்தம் உண்டு என்பதை வள்ளலார் தொடங்கி சித்தர்கள், காப்பியக் கவிகள், சங்காலப் புலவர்கள் வரை நன்கு அறிந்திருந்தனர் என்பதை மேற்கூறிய தரவுகள் மூலம் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்” என்று முடித்து மைக் ஆஃப் செய்தேன்…!

நான் முடித்ததும் அங்கிருந்து என்னை ரிமூவ் செய்துவிட்டனர். எனக்கும் கொஞ்சநேரம் நேரம் போனது என்று ரிலாக்ஸாகி வந்துவிட்டேன்…

$$$

Leave a comment