ஒற்றை வரியால் உலகை வியக்க வைத்த தினம் – செப்டம்பர் 11!

-சுவாமி விமூர்த்தானந்தர்

முன்பின் தெரியாத ஒருவரின் முதல் வரியினால், பிரிந்திருந்த அந்நிய மக்களின் 8000 கரங்கள் இணைந்தன; 4000 இதயங்கள் திரண்டன. அவரது சிகாகோ முதல் உரை 3.5 நிமிடங்கள்தான் நிகழ்ந்தது. பகவத் கீதையின் 18 அத்தியாயங்கள் போல, 18 வாக்கியங்களே அவை; 472 சொற்கள் மட்டுமே.

“உதவு, சண்டையிடாதே; ஒன்றுபடுத்து, அழித்து விடாதே; சமரசமும் சாந்தமும் வேண்டும்; கருத்து வேறுபாடு வேண்டாம்”… போட்டியும் பூசலும் கலவரமும் தீவிரவாதமும் கோலோச்சும் காலகட்டத்தில் சுவாமி விவேகானந்தரின் மேற்கூறிய செய்தி எவ்வளவு முக்கியம் என்பதை எண்ணிப் பாருங்கள்.

‘வாழு, வாழ விடு’ என்ற இந்தச் சிறிய அறிவுரையை மட்டும் அனைத்துச் சமய மக்களும் அதன் குருமார்களும் தொடர்ச்சியாகக் கடைப்பிடித்தால் உலகம் சொர்க்க பூமியாவது திண்ணம். 

வாழு என்றால் முதலில் ஒருவன் உள்ளொளி பெற வேண்டும். பிறகு தான், அவன் பிறருக்கும் அதை வழங்க – வாழவிட வேண்டும். 

இந்த உண்மையை உணராத போது, மதிக்காதபோது ஒவ்வொரு சமயமும் பிற சமயங்களைத் தங்கள் காலடியில் போட்டு மிதிப்பதில் மட்டுமே கவனம் கொள்கிறார்கள் என்று தைரியமாகக் கூறலாம்.

ஆனால் சமய இலக்கியங்களில் பரிச்சயம் உடையவர்கள் பிறருக்குப் போதிப்பதிலேயே அல்லது பிரச்சாரம் செய்வதிலேயே தங்களின் வாழ்க்கையின் சாரம் இருப்பதாக நம்புகிறார்கள். தான் சுவைக்காத ஒன்றை விற்றுப் பிழைக்கும் வெற்று வியாபாரியாகவே சமயத்துறையில் பலரும் இருப்பது துரதிர்ஷ்டம்.

பல தலைவர்கள் மக்களின் முன்னேற்றத்திற்காக உரையாற்றினர். அவை அந்தந்தக் காலத்திற்கு அற்புதமானவை. ஆனால் ஒட்டுமொத்த உலக மக்களின் நன்மைக்காக எந்தக் காலத்திற்கும் ஏற்ற வகையில் விளங்கும் உரை ஒன்று உண்டென்றால், அது சுவாமி விவேகானந்தர் சிகாகோ சர்வ சமய மாநாட்டில் உரைத்ததுதான். 

1893-இல் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சிகாகோ நகரில் சர்வ சமயப் பேரவையில் ‘அமெரிக்கச் சகோதரிகளே, சகோதரர்களே!’ என்று தமது உரையைத் தொடங்கினார். அன்று அவரது நா ஆடியதும் நானிலம் பாரதத்தின் பெருமையைப் பாட ஆரம்பித்தது. ஆம், அடிமைப்பட்டுக் கிடந்த நமது நாட்டை அகிலத்தின் முன்பு ஆண்மையுடன் காட்டியவர் சுவாமி விவேகானந்தர்.

பாரத ரிஷி, முனிவர்களின் பரஞான அனுபவங்களையும், அபர ஞானத் திரட்சிகளையும் விவேகானந்தர் தமது உரையின் மூலம் வெளிப்படுத்தினார். 

சிகாகோ சர்வ சமயப் பேரவையில் பேசிய பல மதத்தினரும் என் மதமே ஒசத்தி என்று அடித்துக் கூறி, சிலரின் கைத்தட்டலுக்காகவே பேசினர்; மனிதகுல மேன்மைக்காக ஆத்மார்த்தமாக அரிதாகவே பேசினார்கள். அந்தப் பேச்சாளர்களுள் 5-வது மற்றும் 20-வது நபர்கள் “சகோதர, சகோதரிகளே” என்று கூறவும் செய்தனர். ஆனால் விவேகானந்தர் கடைசிப் பேச்சாளராக 23 -வது உரையை நிகழ்த்தி அனைவரையும் ஈர்த்தது ஓர் அதிசயம்!

பிற மதத்துத் தலைவர்கள் தங்களது மதம் மட்டுமே சர்வ சக்தி வாய்ந்தது; எல்லோருக்கும் தாங்களே தலைவர்கள்; மற்றவர்கள் எல்லாம் தங்களுக்குப் பணிய வேண்டும் என்ற தோரணையில் உரையாற்றினர்.

ஆனால் விவேகானந்தர், இந்து மதம் எல்லோருக்கும் தாய் மதம். ஏனென்றால் அது அனைவரையும் அரவணைக்கிறது. அவரவருக்குரிய மரியாதையைத் தருகிறது என்ற சனாதன தர்மத்தின் சாராம்சத்தைப் பாரினில் முழங்கினார்.

பாரதத்தின் பிரதிநிதி என்பதோடு உலகிலுள்ள எல்லா மக்களின், ஏழை எளியவர்களின் நலன்களுக்காக வந்து உதித்தவர் என்ற ஏகாத்ம பாவ நிலையில் இருந்து கொண்டு சுவாமி விவேகானந்தர் இந்த உரையினைப் பொழிந்தார். 

மிக முக்கியமாக, ஒட்டுமொத்த உலக மக்களின் முன்னேற்றத்திற்கான அனைத்துச் சமயங்களின் ஒரே பிரதிநிதியாக சுவாமிஜி உரையாற்றினார்! ‘அமெரிக்கச் சகோதரிகளே, சகோதரர்களே’ என்ற அவரது ஒரே வரி, இரண்டு நிமிடங்கள், அரங்கில் இருந்த 4000 பேரை எழுந்து நின்று கரகோஷம் செய்ய வைத்தது. இது ஓர் உலக சாதனை.

முன்பின் தெரியாத ஒருவரின் முதல் வரியினால், பிரிந்திருந்த அந்நிய மக்களின் 8000 கரங்கள் இணைந்தன; 4000 இதயங்கள் திரண்டன. அவரது சிகாகோ முதல் உரை 3.5 நிமிடங்கள்தான் நிகழ்ந்தது. பகவத் கீதையின் 18 அத்தியாயங்கள் போல, 18 வாக்கியங்களே அவை; 472 சொற்கள் மட்டுமே.

விஸ்வத்தையே தன்னுள் உணர்ந்த ஒரு விஸ்வாத்மா உரையாற்றினால், உலக மக்களுக்கு உற்சாகமன்றி வேறு என்ன வரும்?

அவர் “சகோதர சகோதரிகளே” என்று, பிறர் கூறியதுபோல சடங்காகக் கூறவில்லை. மாறாக, உலக மக்கள் யாவரும் உலக அன்னையின் ஒரு வயிற்று மக்கள் என்பதை உணர்ந்ததால் அவர் அவ்வாறு அழைத்தார். சகோதரம், சக உதரம் – ஒரு வயிற்றுப் பிள்ளை என்பது பொருள் அல்லவா!

சுவாமிஜி பேசியதன் செல்வாக்கு உலக அளவிலும், நமது நாட்டின் அளவிலும், சமுதாய வளர்ச்சியிலும், தனிமனிதரின் மேம்பாட்டிலும் எத்தனையோ நல்ல விளைவுகளை ஏற்படுத்தியது. அதில் குறிப்பாக ஆறு செல்வாக்குகள் இன்று கோலோச்சுகின்றன என்று பதிவு செய்யலாம்.

1. இந்தியர்கள் தங்களைத் தாங்களே நம்ப ஆரம்பித்தார்கள்.

2. தங்கள் பலத்தையும் பாரம்பரியப் பெருமையையும் உணரத் தொடங்கினார்கள். 

3. அந்நிய அடிமைத்தனத்திலிருந்தும் மோகத்திலிருந்தும் இந்தியர்கள் விழித்தெழ ஆரம்பித்தனர்.

4. நமது மக்களின் விழிப்புணர்வைக் கண்டு பிற நாட்டினர் நம்மை மதிக்க ஆரம்பித்தனர்.

5. பாரதம் அரசியல் மற்றும் சமுதாய விடுதலைக்காக வேட்கை கொள்ளத் தொடங்கியது.

6. உலகம் பாரதத்தை- அறிவியல் பூர்வமாக உள்ள அதன் மெய்ஞானத்தைக் கண்டு வியக்க ஆரம்பித்தது.              

***

“பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று – இவற்றால் உண்டான மத வெறி அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பல மடங்கு உயர்நிலையை எய்தியிருக்கும்.”

சுவாமி விவேகானந்தர் 130 வருடங்களுக்கு முன்பு சிகாகோ சொற்பொழிவில் உரைத்த மேற்கூறிய கருத்து இன்றும் நமக்குப் பொருத்தமாகவே இருக்கிறது, அல்லவா?

அதோடு, அந்நிய மண்ணில் அமெரிக்கர்கள் மத்தியில் அதுவும், கிறிஸ்தவர்களின் மத்தியில் சுவாமி விவேகானந்தர் சிங்கமென இவ்வாறு மொழிந்தார்: “மக்கள் பாவிகள் அல்ல, தெய்வத்தன்மை வாய்ந்தவர்கள்.”

இதைக் கேட்டுப் பலரும் வியப்புற்றனர். அதில் ஒருவர் இது பற்றி ஒரு கவிதையே எழுதிவிட்டார். அந்தக் கவிதை ‘ஓபன் கோர்ட்’ எனும் பத்திரிகையில் அக்டோபர் 12, 1893 -ஆம் ஆண்டு வெளிவந்தது. கவிதையின் தலைப்பு: Aunt Hannah on the Parliament of Religions.

அந்தக் கவிதையின் கருத்து இது: “காவி உடையில் அழகுமிக்க ஓர் இந்து துறவியின் பேச்சைக் கேட்டேன். மானுடம் முழுவதும் கடவுளின் அம்சம் என்றார் அவர்; நாம் பாவிகள் அல்ல என்றார். இதைக் கேட்டதும் மீண்டும் கூறுங்கள் என்று குரல் கொடுத்தேன். சர்வசமய சபை அந்தக் கூற்றை ஏற்றுக்கொண்டு ஆரவாரம் செய்தது.”

சுவாமிஜியின் சர்வ மத சபையில் இந்து சமயம் பற்றிய பேருரையைக் குறித்து தமது கருத்தை சகோதரி ஒருவர் அருமையாகக் கூறினார்:

“விவேகானந்தர் பேசத் தொடங்கியபோது இந்துக்களின் சமயக் கருத்துகளைப் பற்றிக் கூறியதாகத் தோன்றிற்று. ஆனால் அவர் பேச்சை நிறைவு செய்தபோது இந்து சமயம் படைக்கப்பட்டது.”

சுவாமி விவேகானந்தர் படைத்த இந்து சமயம் எப்படிப்பட்டது? அதன் தன்மை என்ன?

“கற்பு நெறியில் உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்துக் காப்பாற்றி, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் வாழ்கின்றவளே சிறந்த பெண்மணி” என்றார் திருவள்ளுவர். (குறள் – 56)

சுவாமி விவேகானந்தர் உரைக்கும் இந்துவானவன் கற்புடைய மங்கையர் போல, தனது சமய நெறிகளைக் கடைப்பிடிப்பான்; தன் சமயத்தையும் காப்பாற்றுவான். சிறந்த பெண் எவ்வாறு கணவனைக்  காக்கிறாளோ அதுபோல பிற சமயங்களையும் மதிப்பதில் கவனம் செலுத்துவான். தன் சமயத்தையும் கடைப்பிடித்துக் காப்பாற்றி பிற சமயங்களுடன் நல்லிணக்கம் வைத்து பொதுமக்களின் நன்மைக்காகப் பாடுபடுவதே இன்றைய உண்மையான இந்துவானவன் செய்ய வேண்டியது.  

அவனது கவனம் மக்களின் பொருளாதாரம், வறுமை, கலாச்சார சீரழிவு, கல்வி அறிவின்மை, பஞ்சம், நோய்கள், இயற்கைச் சீரழிவுகள் ஏற்பட காரணங்கள் போன்ற உலக பொதுப் பிரச்னைகளைப் புரிந்து கொள்ளக் கூடியதாகவும், அவற்றுக்கான தீர்வு காண்பதாகவும் இருக்கும் . மக்கள் துன்பப்படும்போது தான் வணங்கும் தெய்வமே துன்பப்படுவதாக நினைத்து ஜீவ சேவையில் சிவ சேவை செய்வான்.

உன்னதமான இந்த மனநிலை, ஆன்மிக அனுபவம் இந்து மதத்தினர் மட்டுமல்ல, ஏனைய அனைத்து மதத்தினரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றல்லவா? அதைத்தான் சுவாமிஜி பாரதத்தின் பெருமையாக, பண்பாடாக, பாரினில் தமது சிகாகோ உரையில் உரைத்தார்.

***

1993, ஆகஸ்ட் மாதம் 28 முதல் செப்டம்பர் 5 வரை நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்த சிகாகோ இரண்டாவது சர்வ சமயப் பேரவையில் உலகெங்கிலுமிருந்து சுமார் 6000 பேர் கலந்து கொண்டனர். அதில் ரோமன் கத்தோலிக்கத் தலைவர் ஜோஸப் பெர்னாண்டினும் தலாய்லாமாவும் மற்றும் பலரும் கையெழுத்திட்ட ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. உலக அமைதியும் நீதியும் தழைக்க எல்லா மதங்களின் ஒத்துழைப்பை நாட வேண்டும் என்ற அந்த அறிக்கை, பின்வரும் உறுதிமொழியை மேற்கொள்ள வற்புறுத்தியது:

“மதத்தின் பெயரால் இனிமேல் பிறரை நாம் அடக்கியாள மாட்டோம்; புண்படுத்த மாட்டோம்; மனித உயிர்களைக் கொல்ல மாட்டோம்; சித்திரவதை செய்ய மாட்டோம்.”

ஆஹா, எவ்வளவு சிறிய உபதேசம் இது. ஆம், வாழு; வாழ விடு! இதுதான் சுவாமி விவேகானந்தர் அன்று சொன்னது; இன்றும் அவர் சொல்வது. இதனை என்று மக்கள் கேட்கிறார்களோ அன்று உலகம் சொர்க்க பூமி ஆகிவிடும்.

ஆம் நண்பர்களே, வாருங்கள்! நெல் செய்வோம்; புல் தேயட்டும்!

  • பூஜ்யஸ்ரீ சுவாமி விமூர்த்தானந்த மஹராஜ், தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர்.

$$$

Leave a comment