சேரமான் நடத்தும் செங்கோலாட்சி நாடறிந்தது. புலவர் நாவறிந்தது. தரும தேவதை அவன் நாட்டில் தங்கி நாலுகாலாலும் நின்று நடைபோடுகிறது. அவனுடைய நாடு அறமம் வளரும் கோயில். அவ்வறம் யாதோர் இடையூறும் இன்றி இனிதே தங்கும்படி செங்கோல் செலுத்தும் பேராளன் சேரமான். அறம் துஞ்சும் செங்கோலை உடைய அவனுடைய நாட்டில் வாழும் குடிமக்களுக்குக் குறை ஏது? பசி இல்லை; பிணி இல்லை; பகையும் இல்லை.