-சேக்கிழான்
கோவை சிறையில் 'வால்மேடு' பகுதியில் ஒரு வளாகத்தில் திறந்தவெளி சிறைக்கூடங்களில் நாங்கள் அடைக்கப்பட்டோம். உறங்க மட்டுமே சிறை அறைகளை தஞ்சம் புகுவோம். சிறைக்குள் தரக்குறைவான உணவு, சுகாதாரமற்ற சூழல் (கழிப்பறைகளை உபயோகப்படுத்தவே முடியாது), சிறைப்படுத்தப்பட்ட உணர்வு ஆகியவற்றை மீறி, தொண்டர்களின் ஒருங்கிணைந்த பயிற்சி முகாமாக அந்த நாட்கள் மாற்றப்பட்டன. தினமும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், பாடல்கள், அளவளாவல்கள், யோகாசனம், உடற்பயிற்சிகள், சிறைக்குளேயே ஷாகா என்று, சிறை நாட்கள் கழிந்தன.

அயோத்தி ஆலயத்தில் இன்று பாலராமர் விக்ரஹ பிராணப் பிரதிஷ்டை நிகழ்வதை ஒட்டி வெளியாகும் எனது மலரும் நினைவுகள் இவை....
அனுபவங்களே நமது வாழ்வை வழிப்படுத்துகின்றன. காட்டாற்று வெள்ளமாக வாழ்க்கைப் படகை இறைவன் இழுத்துச் செல்லும் சூழலிலும், ஒருவர் நிலைகுலையாத மனத்துடன் அதை ஏற்றால், அமைதியான தீவில் படகு நிலை சேரலாம். சரியாக 33 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்குக் கிடைத்த சிறை அனுபவம் அப்படிப்பட்டது தான்.
1990 – அயோத்தி இயக்கம் நாடு முழுவதும் மிகவும் தீவிரமாக இருந்த காலகட்டம். ஹிந்து உணர்வு நாட்டில் பீறிட்டு எழுந்த காலகட்டமும் அதுவே. அயோத்தி நாயகன் ராமனின் ஜன்மபூமியை மீட்பதற்கான போராட்டம் கூர்மை அடைந்திருந்த நேரம். அயோத்தியில் அரசியல் தடைகளைத் தாண்டி சிலான்யாஸ் (1989) நடந்து முடிந்திருந்த காலம் அது.
அந்த சிலான்யாஸிற்கு, எங்கள் ஊரான (கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள) வடசித்தூரில் இருந்து 7 புனிதச் செங்கற்கள் அயோத்தி அனுப்பப்பட்டன. பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் மதுரைவீரன் கோயிலில் வைத்து வழிபடப்பட்ட செங்கல்லும், கொண்டம்பட்டி, மெட்டுவாவி போன்ற பக்கத்து ஊர்களில் வழிபடப்பட்ட செங்கற்களும் வடசித்தூருக்கு ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு, கரிவரதராஜப் பெருமாள் கோயிலில் சேர்க்கப்பட்டன. அங்கிருத்து அவை கோவை வழியாக அயோத்தி அனுப்பப்பட்டன. அப்போது தலா ரூ.1.25 மதிப்புள்ள ராமர்கோயில் படங்கள் மூலமாக மட்டும் ரூ. 650 நிதியை வசூலித்து கோயில் நிதியாக அனுப்பினோம்.
அப்போது, டாக்டர் பி.எம்.கோவிந்தராஜுலு, வெண்ணெய்க்காரர் ராமசாமி செட்டியார், எனது நண்பன் விவேகானந்தனின் தந்தை ரங்கசாமி கவுண்டர், அப்பண்ண கவுண்டர், எனது தந்தை இரா.முத்துவேலு ஆசிரியர் (இவர்கள் நடத்திய ஸ்ரீ ராமஜெயம் விழாக் குழு, மூன்றாண்டுகள் அற்புதமான ஆன்மிகப் பணியை வடசித்தூரில் நடத்தியது. 1989-1991 ஆண்டுகளில் வடசித்தூர் அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் கோயிலில் மார்கழி உற்சவத்தை இக்குழு ஊரையே ஒன்றுகூட்டி அற்புதமாக நடத்தியது). ஆகியோரின் பங்களிப்பு சிறப்பானது. கொண்டம்பட்டி நிலக்கிழார் எஸ்.வெங்கடாசல கவுண்டர், மணியகாரர் ராமசாமி கவுண்டர், மெட்டுவாவி அய்யாசாமி அண்ணா ஆகியோரின் ஆதரவும் உதவிகளும் மறக்க முடியாதவை.
அடுத்த ஆண்டு (1990) முதலாம் கரசேவை ஆண்டு. ‘இல்லம் தோறும் ராமஜோதி; உள்ளம் தோறும் தேசபக்தி’ என்ற முழக்கத்துடன் அயோத்தியிலிருந்து கிளம்பிவந்த ராமஜோதி ரதங்கள் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் ஹிந்து விழிப்புணர்வை உருவாக்கி வந்தன. அதன் உச்சமாக, அயோத்தியில் 1990, அக்டோபர் 30 -இல் கரசேவை நடக்க நாள் குறிக்கப்பட்டிருந்தது. அன்று உத்தரபிரதேச மாநிலத்தில் முலாயம் சிங் ஆட்சி, தங்களை மீறி அயோத்தியில் ஈ, காக்காய் கூட பறக்க முடியாது என்று கொக்கரித்தது. மத்தியிலோ, ‘மதச்சார்பற்ற தன்மை’யைக் குத்தகைக்கு எடுத்த வி.பி.சிங் பிரதமர். மத்திய, மாநில அரசுகள் இணைந்து, அயோத்தியை யுத்தபூமி ஆக்கின. (அயோத்தி என்றாலே யுத்தம் இல்லாத இடம் என்று தான் பொருள்!)
நாடு முழுவதிலுமிருந்து கரசேவகர்கள் அயோத்தி சென்றனர். அவர்கள் பல இடங்களில் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். பலர் கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாகினர். அயோத்தி செல்லும் அனைத்துப் பாதைகளும் அடைக்கப்பட்டன. எங்கும் காவல்துறையின் அதீத கட்டுப்பாடுகள். காவியுடை அணிந்திருந்தாலே கைது செய்யப்படும் நிலைமை. அயோத்தி செல்லும் ரயில்கள், பேருந்துகள் அனைத்தும் ரத்து. ஆனால், இந்த அராஜகத் தடைகளை மீறி, அன்புடன் உணவிட்டு கால்நடையாகவே பயணித்த கரசேவகர்களை ஆதரித்தனர் மக்கள்.
அனைத்துத் தடைகளையும் மீறி, குறிப்பிட்ட தினமான அக்டோபர் 30இல் அயோத்தியில், அரசின் கட்டுப்பாடுகளையும் மீறி பல்லாயிரக் கணக்கில் கரசேவகர்கள் திரண்டனர். காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், நூற்றுக்கு மேற்பட்ட கரசேவகர்கள் பலியாகினர். சரயூ நதி எங்கும் கரசேவகர்களின் சடலங்கள் மிதந்தன. அந்த நிகழ்வே இந்திய அரசியலில் பாரதீய ஜனதா கட்சி முதன்மையான இடத்தைப் பிடிக்க வித்திட்ட நிகழ்வு என்றால் சற்றும் மிகையல்ல. (அந்த நிகழ்வுகளின் படப்பதிவுகள் கொண்ட வீடியோ காட்சிகளைக் கண்டு மனம் பதறியது, இன்றும் நினைவில் இருக்கிறது).
அப்போது தமிழகத்தில் திருவாளர் மு.கருணாநிதியின் ஆட்சி. முலாயமுக்கு தான் சற்றும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்க அவரும் கடும் நெருக்கடிகளை ஹிந்து இயக்கங்களுக்கு ஏற்படுத்தி வந்தார். அதையும் மீறி ஹிந்து இயக்கங்கள் ராமஜோதி பிரசார இயக்கத்தை நடத்திவந்தன. நானும், எனது நண்பர்களுடன் அதில் தீவிரமாக ஈடுபட்டேன். எங்கள் ஊரான வடசித்தூருக்கு ராமஜோதி ரதம் வந்தபோது கிராமம் அதுவரை காணாத வரவேற்பளித்தோம். ரதம் வந்த நாளன்று மாலை முதலாகவே ஒலிபெருக்கி பிரசாரம் களை கட்டியிருந்தது. ‘வந்துவிட்டது ராமஜோதி ரதம்’ என்று சுமார் ஆறு மணிநேரம் சொல்லிக் கொண்டிருந்தோம். இரவு 10.30 மணியளவில் தான் ராமஜோதி ரதம் வந்தது. அப்போது கூடிய ஆயிரக் கணக்கானோர் திரண்ட கூட்டத்தை இன்றும் எங்களால் மறக்க முடியாது. எங்கள் கிராமம் மட்டுமல்லாது, அண்டைக் கிராமங்களில் இருந்தும் நூற்றுக் கணக்கான மக்கள் அருள்மிகு பிளேக் மாரியம்மன் கோயில் மைதானத்தில் குழுமினர்.
அந்த ரதத்திலிருந்து பெற்ற ஜோதியை மற்றொரு அணையா தீபத்தில் ஏற்றி தனி வாகனத்தில் வைத்து இருபதுக்கு மேற்பட்ட கிராமங்களுக்கு நாங்களே கொண்டு சென்றோம். (இதற்கு காவல் துறையில் அனுமதி வாங்க வேண்டும் என்றும் கூட எங்களுக்குத் தெரியாது; அனுமதியும் வாங்கவில்லை). ஒவ்வொரு கிராமத்திலும் (கொண்டம்பட்டி, கோதவாடி, கிணத்துக்கடவு, தாமரைக்குளம், சூலக்கல், முள்ளுப்பாடி, நல்லட்டிபாளையம், காணியாலம்பாளையம், கோவில்பாளையம்…) கிடைத்த அற்புத அனுபவங்களை மறக்க முடியாது. ராமபிரான் மீதான கிராம மக்களின் பக்தி எங்களையும் மக்களையும் இணைத்தது.
நாடு முழுவதும் நடந்துவந்த அறப்போராட்டத்தில் நாங்களும் எங்களால் இயன்ற மட்டிலும் தீவிரமாகப் பங்கேற்றோம். எங்கள் ஊரிலிருந்து அயோத்தி கரசேவைக்கு பொன்.மாசிலாமணி அண்ணனை நாங்கள் ஒன்றுசேர்ந்து அனுப்பி வைத்தோம். ஆனால் அயோத்தி செல்ல முடியாமல் அவர் பாதிவழியில் திரும்பினார்.
இந்நிலையில் தான், அக்டோபர் 22ஆம் தேதி, திடீரென நானும் எனது சக இயக்கத் தோழர்கள் பொன்.இளங்கோ, பிரகாஷ், கோபாலகிருஷ்ணன், திருஞானம், பழனிசாமி உள்ளிட்ட 7 பேரும் கைது செய்யப்பட்டோம்.
(டீஸல் கணேசன் என்ற நண்பரையும் – அவர் அயோத்தி இயக்கத்தில் பங்கேற்காதவர் என்றபோதும்- கைது செய்திருந்தனர். டீசலை தனி கேனில் வைத்து விற்பதற்காக போலீசுக்கு அவர் மாமூல் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த வகையில் அவர்களுக்குள் ஏதோ தகராறு; அதற்காக அவரை எங்களுடன் சேர்த்து கைது செய்தது நெகமம் போலீஸ்; சிறையில் எங்களுடன் சேர்ந்து அவரும் தீவிர ராமபக்தராக மாறிவிட்டார்!)
‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை’ என்ற பெயரில் கைது செய்யப்பட நாங்கள், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டோம். அங்கு ஏற்கனவே ஆயிரத்திற்கு மேற்பட்ட ஹிந்து இயக்கத் தொண்டர்கள் எங்களுக்கு முன்னதாக கைதாகி சிறையில் இருந்தனர். (தமிழகம் முழுவதிலும் அப்போது சுமார் 30 ஆயிரம் பேர் கைதாகினர்).
அன்றுமுதல், நவம்பர் 5இல் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் வரை, 15 நாட்களும் கிடைத்த சிறை அனுபவம் எனது வாழ்வின் ஓரங்கம். அது எனக்கு மகிழ்வையும் தன்னம்பிக்கையையுமே அளித்தது. ஆனால், அந்தக் காலத்தில் என் வீட்டிலும் எனது நண்பர்களின் வீடுகளிலும் அடைந்த கஷ்டங்கள் தனி அத்தியாயம் ஆகத் தகுந்தவை. ராமர் கோயில் இயக்கத்தில் எங்கள் அழைப்பை ஏற்றுப் பங்கேற்ற பெரிய மனிதர்கள் பலரும் அவதிக்குள்ளாகினர்.
கோவை சிறையில் ‘வால்மேடு’ பகுதியில் ஒரு வளாகத்தில் திறந்தவெளி சிறைக்கூடங்களில் நாங்கள் அடைக்கப்பட்டோம். உறங்க மட்டுமே சிறை அறைகளை தஞ்சம் புகுவோம். சிறைக்குள் தரக்குறைவான உணவு, சுகாதாரமற்ற சூழல் (கழிப்பறைகளை உபயோகப்படுத்தவே முடியாது), சிறைப்படுத்தப்பட்ட உணர்வு ஆகியவற்றை மீறி, தொண்டர்களின் ஒருங்கிணைந்த பயிற்சி முகாமாக அந்த நாட்கள் மாற்றப்பட்டன. திருவாளர்கள் மிசா நாராயணன், அர்ஜுன் சம்பத், மூகாம்பிகை மணி உள்ளிட்டோர் சிறைக்குள் கலகலப்பான பயிற்சிமுகாம் சூழலை ஏற்படுத்தினர். தினமும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், பாடல்கள், அளவளாவல்கள், யோகாசனம், உடற்பயிற்சிகள், சிறைக்குளேயே ஷாகா என்று, சிறை நாட்கள் கழிந்தன.
சிறைப்பட்ட உணர்வே கடைசி நாட்களில் முற்றிலும் மறைந்துவிட்டிருந்தது. தினசரி எங்களைப் பார்க்க ஊரிலிருந்து வரும் உறவுகள் அளிக்கும் தின்பண்டங்களைப் பகிர்ந்து கொள்வோம். இதனிடையே தான் அக்டோபர் 30 வந்தது. எங்களுக்கு நாட்டில் நடக்கும் சம்பவங்களைச் சொல்ல ஏற்பாடு இருந்தது. அதன்மூலமாக நாட்டில் மத்திய, மாநில அரசாங்கங்கள் நடத்திவரும் ஹிந்துவிரோத நடவடிக்கைகள் தெரிந்திருந்தன. கரசேவை தினத்தன்று, நாங்கள் வால்மேடு பகுதிக்குள் பிரமாண்ட ஊர்வலம் நடத்தினோம். எங்கிருந்தோ வந்த ராமர் படத்தை அலங்கரித்து சப்பரம் அமைத்து, ராமபஜனை பாடியபடி, சிறைக்குள்ளேயே ஊர்வலம் சென்றோம். கரசேவகர்களுக்கு எந்த துயரமும் நேரக் கூடாது என்று பிரார்த்தித்தோம்.
அதன் பிறகு நடந்தது சரித்திரம். கரசேவை தடை செய்யப்பட்டது; ரதயாத்திரை சென்ற பாஜக தலைவர் எல்.கே.அத்வானி பிகாரில் கைது செய்யப்பட்டது; வி.பி.சிங் அரசுக்கு பா.ஜ.க. ஆதரவை வாபஸ் பெற்றது; அயோத்தியில் பலநூறு கரசேவகர்கள் உயிரை அர்ப்பணித்தது; வி.பி.சிங் அரசு கவிழ்ந்து சந்திரசேகர் பிரதமரானது… என்று நீளும் சரித்திரம்.
தமிழகத்தில் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டவர்களின் நீதிமன்றக் காவலை நீட்டிக்க கருணாநிதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, எங்களுக்கு ஐந்து நாட்கள் முன் கைது செய்யப்பட்டவர்களின் காவல் நீட்டிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் தான் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. உடனடியாக நாங்கள் அனைவரும் நவம்பர் 5ஆம் தேதி நள்ளிரவு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி விடுதலை செய்யப்பட்டோம்.
அயோத்தி இயக்கம் அதன்பிறகு பல கட்டங்களைத் தாண்டிவிட்டது. அங்கிருந்த அடிமைச் சின்னம் 1992இல் இரண்டாவது கரசேவையில் அகற்றப்பட்டது. அந்த இடம் ராம்லாலாவுக்கே சொந்தம் என்று தீர்ப்பும் 2019இல் வந்துவிட்டது. அயோத்தி இயக்கம் பாரதீய ஜனதா கட்சி நாட்டை ஆளவும் வழிகோலியது. இந்த அனுபவங்கள் நமக்கு படிப்பினைகள். இப்போது அதே இடத்தில் பிரமாண்டமான ஸ்ரீராமர் ஆலயம் அமைந்துவிட்டது. இன்று நானும் எனது நண்பர்களும் 33 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீராமனுக்காக, ராமகாரியமாக, சிறை சென்றதன் பலனை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்.
நாங்கள் கைது செய்யப்பட நாளில், கைதுக்கு தப்பிய எனது ஷாகா ஸ்வயம்சேவகர்கள் விஜயகுமார், குமார் (இருவரும் சகோதரர்கள்), சுந்தரம், சிவா ஆகியோர் நிகழ்த்திய சாகசம் மறக்க முடியாதது. கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவலர்களை மீறி, “கைது செய்யப்பட ஹிந்து இயக்கத் தலைவர்களை விடுதலை செய்” என்று சுவரெழுத்துப் பிரசாரம் செய்த இவர்கள், ”இந்த சிறு தூறலுக்கே இரும்புக்குடை என்றால், நாளைய நெருப்பு மழைக்கு எந்தக் குடை?” என்று எழுதிய வாசகத்தை சிறையிலிருந்து வெளிவந்த பிறகு பார்த்து உணர்ச்சிவசப்பட்டோம்.
உண்மைதான். நாளைய நெருப்பு மழைக்கு இந்த ‘மதச்சார்பின்மை’யைக் குத்தகைக்கு எடுத்த அநியாயக்காரர்களிடம் எந்தக் குடை இருக்கிறது?
***
சிறையிலிருந்து விடுதலை ஆனபின் நான் எழுதிய அனுபவக் கவிதை இது...
ஜெயில் சோறு
கொட்டையாய் இருந்தது அரிசி -அதன்
கூடவே புழுங்கிய வாடை.
தொட்டதும் ஜில்லென இருக்கும்- மதியச்
சோற்றுக்கு நேற்றைய பாடை.
ஒருநூறு அச்சுகள் கொண்ட – பாடை
ஒன்றினைக் கைதிகள் கொணர்ந்து
தரும்போது பசியாய்த் தானிருக்கும்- பாழுந்
தொண்டையோ அனுமதி மறுக்கும்.
அச்சு அச்சாகவே இருக்கும்- அதில்
அங்கங்கே நெல்களும் தெரியும்.
மச்சமாய் கற்களும் தெரியும்- அதை
உண்டிடில் கற்குவியல் பிரியும்.
காற்படிக் கரண்டியால் மொண்டு – சாம்பார்
கைதி என்தட்டினில் ஊற்ற,
பாற்கடல் நடுவினில் பள்ளிகொண்டான் போல
படியச்சு கண்ணுக்குத் தெரியும்.
நீரினில் மோரினைக் கலக்கி – பல
நாள்படு புளிச்சுவை மிகவே
மோரென ஊற்றிடுவார்கள் – அதை
முகர்ந்திடில் கள்மணம் வீசும்.
ஏனடா ஜெயிலுக்கு வந்தாய்? என்று
கேட்டிடும் கேள்வியை அங்கு
தானடா நன்றாய் உணர்ந்தோம் – புழுச்
சோற்றினைக் கொட்டியபோது!
இருப்பினும் எம்மனம் முழுதும் -ராமர்
கோயிலில் இருந்தது எனவே
விருப்பமும் வெறுப்புமே அற்று – அதை
உவந்துணவாகவே கொண்டோம்!
$$$