...ஔவையின் நூலோ மிகத் தெளிந்த, மிக எளிய தமிழ்நடையில் எல்லா ஜனங்களுக்கும் பொருள் விளங்கும்படியாக எழுதப்பட்டிருக்கின்றது. ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ என்பது கவிதைத் தொழிலில் மிகவும் உயர்ந்த தொழில். இதில் ஔவை ஒப்பற்றவள். இத்துடன் மிகவும் அருமையான நுட்பமான விஷயங்களை யாவருக்கும் அர்த்தமாகும்படி மிகவும் எளிய நடையில் சொல்வதாகிய அற்புதத் தொழிலை உயர்ந்த கவியரசர்களே தெய்வீகத் தொழில் என்றும் தெய்வசக்தி பெறாத சாதாரணக் கவிகளுக்கு சாத்தியப்படாத தொழில் என்றும் கருதுகிறார்கள். இந்த அற்புதத் தொழிலிலும் ஔவை நிகரற்ற திறமை வாய்ந்தவள்....