உண்மை – ரத்தினக் களஞ்சியம்

-மகாகவி பாரதி

...மனித ஜாதி நாளாக நாளாக வாழ்க்கையின் உண்மை விதிகளை நன்றாகத் தெரிந்து கொள்ளுகிறது. நமது பாட்டன்மாரும் பூட்டன்மாரும் நம்பிய விஷயங்களையே நாமும் நம்ப வேண்டுமென்ற விஷயமானது, குழந்தையாக இருக்கும்போது தைத்த உடுப்புக்களையே பெரியவனான போதும் போட்டுக்கொள்ள வேண்டுமென்பதற்கு ஒப்பாகும்...

பூமண்டலத்தில் வெவ்வேறு தேசங்களில் வெவ்வேறு காலங்களிலே பிறந்து, மனுஷ்ய ஜாதியாருக்கு ஞானதானம் செய்த சில பெரியோரின் வசனங்களை இங்கே கோத்தெழுதுகிறேன். தயவுசெய்து சிரத்தையுடன் படிக்கும்படி தமிழ்நாட்டு மஹாஜனங்களை வேண்டுகிறேன்.

தெலுங்கு தேசத்து ஞானியாகிய வேமன்ன கவி சொல்லுகிறார்:

”கல்லைக் குவித்துப் பெரிய கோவில்கள் ஏன் கட்டுகிறீர்கள்? தெய்வம் உள்ளுக்குள்ளே இருப்பதை அறியாமல், வீணாக ஏன் தொல்லைப்படுத்துகிறீர்கள்?”

ஸ்வாமி விவேகானந்தர்:-

”ஒவ்வொரு மனிதனுடையஅறிவிலும் பரமாத்மா மறைந்து நிற்கிறது. வெளியுலகத்தையும் உள்ளுலகத்தையும் வசப்படுத்தி உள்ளே மறைந்திருக்கும் தெய்வத்தை வெளிப்படுத்துவதே நாம் செய்ய வேண்டிய காரியம். செய்கை, அன்பு, யோகம், ஞான இவற்றினால் அந்தப் பொருளை அடைந்து விடுதலை பெற்று நில்லுங்கள். தர்மம் முழுதும் இஃதேயாம். மற்றப்படி மதங்கள், கொள்கைகள், கிரியைகள், சாஸ்திரங்கள், கோயில்கள், ஆசாரங்கள் எல்லாம் இரண்டாம் பக்ஷமாகக் கருதத்தக்க உபகரணங்களேயன்றி வேறில்லை’.

அமெரிக்கா தேசத்து மஹா வித்வானும் ஞானியுமாகிய எமெர்ஸன் சொல்லுகிறார்:

‘எவன் வந்தாலும் சரி, அவனிடமுள்ள தெய்வத்தை நான் பார்ப்பதற்குத் தடையுண்டாகிறது. ஒவ்வொருவனும் தன்னுள்ளேயிருக்கும் திருக்கோயிலின் கதவுகளை மூடிவைத்துவிட்டு மற்றொருவனுடைய தெய்வத்தையும், மற்றொருவனுக்கு வேறோருவன் சொல்லிய தெய்வத்தையும் பற்றிப் பொய்க்கதைகளை என்னிடம் சொல்ல வருகிறான்.’

த்ஸென்-தஸே-த்ஸுங் என்ற சீன தேசத்து ஞானி சொல்லுகிறார்:-

‘பழைய காலத்திலிருந்து வந்ததென்று கருதி, ஒரு மதம் உண்மையென்பதாக நிச்சயித்து விடலாகாது. உண்மை இதற்கு நேர்மாறானது. மனித ஜாதி நாளாக நாளாக வாழ்க்கையின் உண்மை விதிகளை நன்றாகத் தெரிந்து கொள்ளுகிறது. நமது பாட்டன்மாரும் பூட்டன்மாரும் நம்பிய விஷயங்களையே நாமும் நம்ப வேண்டுமென்ற விஷயமானது, குழந்தையாக இருக்கும்போது தைத்த உடுப்புக்களையே பெரியவனான போதும் போட்டுக்கொள்ள வேண்டுமென்பதற்கு ஒப்பாகும்.’

மேற்கூறிய எமெர்ஸன் பண்டிதரின் சிஷ்யரும் நல்லஞானியுமான தோரோ சொல்லுகிறார்:-

‘என்ன ஆச்சரியம்! உண்மையின் பிரகாசங்களில் நமது காலத்துக்குப் பயன்படாத பழையனவற்றை உலகம் ஒப்புக் கொள்ளுகிறது. இப்போது புதிய ஞானிகள் கண்டு சொல்லும் உண்மைகளை வீணாக மதிக்கிறது; சிற்சில சமயங்களில்பகைக்கவும் செய்கிறது. என்ன ஆச்சரியம்! ‘

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்:-

‘ஆச்சரிய சித்திகள் காட்டுவதாகச் சொல்லும் மனிதர் இருக்குமிடத்துக்குப் போக வேண்டாம். அவர்கள் உண்மை நெறியினின்றும் தவறி விட்டார்கள்.’

முடிவுரை:

எனவே, எல்லா மதங்களும் உண்மைதான்: ஒருமதமும் முழு உண்மையன்று. ஆதலால் மதப்பிரிவுகளைக் கருதி மனிதர் பிரிந்துவிடக் கூடாது. எல்லா மதஸ்தரும் ஒரே தெய்வத்தைத்தான் வணங்குகிறார்கள். லௌகிக விஷயங்களைப் போலவே மத விஷயங்களிலும் ஒப்பு, உடன் பிறப்பு, விடுதலை மூன்றும் பாராட்ட வேண்டும்.

ஆதாரம்: 

பாரதியார் கட்டுரைகள் (பகுதி 19) 
பாரதி பிரசுராலாயம் வெளியீடு-1949

$$$

Leave a comment