-நிர்மலா சீதாராமன்

58. அரசியல் சாசனத்திற்கு விரோதமான அமைச்சரின் பேச்சு
‘சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என்று இங்கே அமைச்சர் ஒருவர் (உதயநிதி ஸ்டாலின்) பொதுமேடையில் பேசியுள்ளார். இங்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். அரசியல் சாசனத்தின்படி உறுதிமொழி ஏற்றுக் கொண்ட பிறகே ஒருவர் அமைச்சராகப் பொறுப்பேற்கிறார். பதவி ஏற்கும் போதே இரு தரப்பு மக்களுக்கும் பகைமையை ஏற்படுத்தும் வகையில் பேசக் கூடாது, எந்தவொரு விரோதச் செயலையும் செய்யக் கூடாது என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்ட பிறகே அமைச்சராகப் பொறுப்பேற்கிறோம்.
என்ன தான் (தனிப்பட்ட) கொள்கை இருந்தாலும் கூட, எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் அழிக்கப் போகிறேன் என்று சொல்லும் உரிமை அரசியல் சாசன சட்டப்படியும், பதவியேற்கும் போது ஏற்ற உறுதிமொழிப் படியும் யாருக்கும் இல்லை. குறிப்பாக ஓர் அமைச்சர் இப்படிப் பேச அதிகாரமே இல்லை. இது மிகவும் தவறான ஒன்று. அவர் என்ன பேசினார் என்று ஊடகங்களிடம் சாட்சிப் பதிவு இருக்கிறது.
பொது மேடையில் வைத்து அமைச்சர் என்ன சொன்னார்? ‘இது சனாதன எதிர்ப்பு மாநாடு இல்லை. சனாதன ஒழிப்பு மாநாடு’ என்கிறார். அப்படிப் பேசிவிட்டு இப்போது ‘எதையும் ஒழிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை’ என்கிறார். இப்படியெல்லாம் பேசுவது சரியானதா? நாம் அனைவரும் பேசும்போது பொறுப்பாகப் பேச வேண்டும். பேசுவதற்கு முன் யோசித்துப் பேச வேண்டும். உணர்ச்சிவசப்பட்டுப் பேசாமல், என்ன பேசுகிறோம் என்பதை யோசித்துப் பேச வேண்டும்.
அதே மேடையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் (சேகர் பாபு) இருந்திருக்கிறார். அவரை வைத்துக்கொண்டே சனாதனத்தை (இந்து மதத்தை) ஒழிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதை அவரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இதன்மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? இந்து பக்தர்கள், சனாதன பக்தர்கள் உண்டியலில் பணத்தைப் போடுகிறார்கள். அந்தப் பணம் மட்டும் வேண்டுமா? அது மட்டும் நன்றாக இருக்கிறதா? இப்படிப் பேசிவிட்டு அதற்கு ரியாக்ஷன் (எதிர்ப்பு) இருக்கக் கூடாது என எதிர்பார்ப்பது தவறு.
இதனை மிகவும் கண்ணீருடன் சொல்கிறேன். (சேலத்தில்) அவதார புருஷனான ராமரின் கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்தினார்கள். அதனைப் பார்த்து வளர்ந்தவள் நான். ஆனால் அதற்கு அப்போது எந்தவொரு பதிலடியும் கொடுக்கப்படவில்லை. இங்கு எந்தவொரு வன்முறையும் இருக்கக் கூடாது என்றே சொல்கிறேன். அது பேச்சாக இருந்தாலும், செயலாக இருந்தாலும், வன்முறைக்கு எப்போதும் வன்முறை பதிலாக இருந்தது இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பதே எனது விருப்பம்.
நீங்கள் எந்த அளவுக்கு இகழ்ச்சியாகப் பேசினாலும். அவர்கள் (இந்துக்கள்) தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதுவே சனாதன தர்மம். அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள் என்பதாலேயே இதுபோல தொடர்ந்து சிலர் கேவலமாகப் பேசி வருகிறார்கள். அவர்கள் வேறு எந்த மதம் குறித்தாவது பேசி இருக்கிறார்களா? அதற்கு முதுகெலும்பு இல்லாதவர்கள் இவர்கள். மற்ற மதங்களில் குறைகளே இல்லையா, அவை குறித்துப் பேசத் தைரியம் இருக்கிறதா?
அதேபோல, இந்த மோசமான பேச்சுக்காக அமைச்சரைக் கொல்ல வேண்டும் என்று உத்தரப்பிரதேசத்தில் ஒரு சாமியார் பேசியது தவறு. அதை நான் ஏற்க மாட்டேன். வன்முறையை சனாதனம் எப்போதும் ஏற்காது. அதே சமயம், ராஜஸ்தானில் ஒரு டெய்லரை கழுத்தை அறுத்து சிலர் கொன்றார்களே. அது குறித்து ஊடகங்கள் ஏதாவது கேள்வி எழுப்பினவா? அதைப் பற்றியும் ஊடகங்கள் பேச வேண்டும். தமிழக அமைச்சர் (உதயநிதி) பேசியது சரியா என்று அவர்களிடமும் கேட்கும் துணிவு ஊடகங்களுக்கு இருக்கிறதா? அது இல்லாதபோது ஊடகங்கள் தங்கள் மரியாதையை இழந்துவிடும்….
- சென்னையில் செப். 16ஆம் தேதி நடைபெற்ற தணிக்கையாளர் சங்கத்தின் 90-ஆவது ஆண்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து அவர் கூறிய கருத்தே இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
(தொடர்ந்து ஒலிக்கும் தார்மிகக் குரல்கள்!)
$$$