-ரங்கராஜ் பாண்டே, செ.அருட்செல்வப் பேரரசன், திருச்செந்துறை ராமமூர்த்தி சங்கர், வானவில் க.ரவி, ஜெயகுமார் ஸ்ரீநிவாசன்
அண்மையில் பாரத மண்ணின் வேரான சனாதன தர்மம் தமிழகத்தில் சில தற்குறிகளால் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு, இழிவு செய்யப்பட்டதை எதிர்த்து நாடே கொந்தளித்திருக்கிறது. இத்தருணத்தில் சனாதனம் என்னும் வாழையடி வாழையின் சிறப்புகளைப் பதிவு செய்வது நமது கடமை; சனாதனம் குறித்த தார்மிக குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன... இது பகுதி-3...

7. சனாதனத்தை ஒரு நாளும் ஒழிக்க முடியாது!
-ரங்கராஜ் பாண்டே
‘ஆம்படையான் அடிச்சாலும் அடிச்சான், கண் பூளை கலைஞ்சது’ என்று ஒரு பழமொழி சொல்வது உண்டு. அப்படித்தான், தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் பற்றி, ‘தினமலர்’ நாளேட்டின் ஈரோடு, சேலம் பதிப்பு செய்திக்குப் பின், சனாதனம் பற்றிய விவாதம் இன்னொரு முறை எழுந்திருக்கிறது.
சனாதனம் பற்றிப் பேசுவதற்கு நான் தகுதியானவன் இல்லை. தகுதியானவர்கள் அமைதியாக இருப்பதாலும், எல்லாரும் பேச ஆரம்பித்து விட்டதாலும், நாமும் எழுதி வைப்போமே என்பதே இந்தக் கட்டுரை. இன்னொரு காரணமும் இருக்கிறது. அது, பா.ஜ.க. பற்றிய விமர்சனமாக இருந்தால் அவர்கள் பதில் சொல்லட்டும் என விட்டு விடலாம்; அ.தி.மு.க. மீதான குற்றச்சாட்டாக இருந்தால், பழனிசாமி பார்த்துக் கொள்வார் என அமைதியாகலாம். இது, சனாதனம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், ஒவ்வொரு ஹிந்துவும் பேச வேண்டும் என நினைக்கிறேன்.
முன்னுரை முடிந்தது. இனி என்னுரை….
சனாதனம் என்றால் என்ன என்று நான் சொன்னால், சண்டைக்கு வருவர். ஜாதி, மதம், எழுதுகிற நாளேடு எல்லாமே வம்புக்கு உள்ளாகும். அதனால், ஆரிய, வந்தேறி, பார்ப்பனர்கள் நடத்துகிற விக்கி பீடியா என்ன சொல்கிறது என தேடிப் பார்த்தேன்.
Santana Dharma – is an endonym used by Hindus to refer to Hinduism.
அதாவது, ‘சனாதன தர்மம்’ என்பது ஹிந்து மதத்தை குறிப்பிடுவதற்கான வார்த்தை என அர்த்தம்.
சரி, அவர்கள் ஒருவேளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கையாளாக இருக்கலாம் என்பதால், இந்த Britannica என்ன சொல்கிறது என எட்டிப் பார்த்தேன்.
Sanatana Dharma, in Hinduism, term used to denote the ‘eternal’ or absolute set of duties or religiously ordained practices incumbent upon all Hindus, regardless of class, caste, or sect.
அதாகப்பட்டது, சனாதன தர்மம் என்பது பிரிவு, ஜாதி, இனம் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல், ஹிந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் நிலையான அல்லது முழுமையான கடமை மற்றும் மத வழக்கம்.
அடப்பாவமே… அவர்களுமே ஹிந்து மதத்தின் பூர்வீகப் பெயர் தான் சனாதனம் எனச் சொல்லிவிட்டார்களே… அமித் ஷா வேலையாக இருக்குமோ என அஞ்சி, சுப்ரீம் கோர்ட் ஏதாவது சொல்லி இருக்கிறதா என்று பார்த்தேன்…
இந்த ஆண்டு பிப்ரவரியில் நீதியரசர் நாகரத்னா, ‘Hinduism is a way of life. Because of that India has assimilated everybody. Because of that we are able to live together’ என, ஒரே போடாகப் போட்டுவிட்டார்.
‘ஹிந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை. அதனால் தான் இந்தியா எல்லாரையும் அரவணைக்கிறது. அதனால் தான் நாமெல்லாம் ஒற்றுமையாக வாழ முடிகிறது’ என்று இதற்கு அருஞ்சொற்பொருள். அவரும் பா.ஜ.க. தான் என யாரும் சொல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன்.
இப்படி கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த மதத்தை ‘ஹிந்து மதம்’ எனக் குறிப்பிடாமல் ஏன் இவர்கள் ‘சனாதனம்’ என்றே அழைக்கின்றனர்?
1. வழக்குப் போட்டால் தப்பிக்கலாம்.
2. யாரையோ சொல்வதாக அப்பாவி மக்கள் நினைத்துக் கொள்வர்.
3. அப்போது தான், ‘சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என்று பேசிவிட்டு, ‘நான் எந்த மதத்துக்கும் எதிராகப் பேசவில்லை’ எனச் சொல்ல முடியும்.
அதையெல்லாம் விடுங்கள்…
ஹிந்து மதத்தை இழிவுபடுத்துவது, தமிழகத்தில் காலம் காலமாக நடப்பது தானே… அப்போதெல்லாம் உணர்ச்சிவசப்படாதவர்கள், திடீரென தூங்கி எழுந்து, இந்திரா காந்தி இறந்துவிட்டாரா என ‘ஷாக்’ ஆவது ஏன்? என்று ஒரு கேள்வி வரலாம்.
இதற்கு முன்னர் விமர்சித்தவர்கள் எல்லாம், அரசுப் பதவியில் இருந்தவர்கள் இல்லை. அல்லது, அரசுப் பதவியில் இருந்தபோது பேசியதில்லை. இப்போது, ஒரு அமைச்சரின் முன்னிலையில் இன்னொரு அமைச்சரே பேசியதால் தான் இவ்வளவு பரபரப்பும்.
சரி, பேச்சுக்கு வருவோம்!
சனாதனம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல; ஒழிக்கப்பட வேண்டியது… சூப்பர். அப்படியானால், ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்த கூட்டத்தில் இது ஒரு தீர்மானமாக நிறைவேற்றப்படுமா? பிரதானக் கூட்டணியாக இருந்து, மும்பை விருந்து வழங்கிய சிவசேனா… என்ன சேனா? சிவசேனா… இந்தக் கூற்றை ஏற்குமா?
சரி, எதனால் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்? ஏனென்றால் அது வர்ணாசிரமத்தை வளர்க்கிறது; ஜாதியைத் துாக்கிப் பிடிக்கிறது என்கின்றனர்.
முதலில் வர்ணாசிரமத்தைப் பார்ப்போம். வர்ணாசிரமம், இந்து மதத்தில் அதிகாரப்பூர்வமாக உள்ளது தான். மறுப்பதற்கோ, மறைப்பதற்கோ இல்லை. ஆனால், இதை ஒரு அதிகாரப் படிநிலையாகத் தான் இந்து மதம் சொல்லி இருக்கிறதே தவிர, பாகுபாடாகக் குறிப்பிடவில்லை.
ஒரு கட்சியில், எப்படி தலைவர், துணைத் தலைவர்,பொதுச்செயலாளர், பொருளாளர், மாவட்டத் தலைவர், நகரச் செயலாளர் என வேறு வேறு பதவிகளுக்கு, வேறு வேறு அதிகாரங்களும் உரிமைகளும் இருக்கின்றனவோ, அதுபோல நான்கு வர்ணங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன.
நான்கு வர்ணத்தவருக்கும் பூணுால் உண்டு என்பது, உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? இன்றளவும், ஆசாரி, செட்டியார், நாயுடு, வன்னியர் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மக்கள், நல்ல / பொல்லா நாட்களில் பூணுால் அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த வர்ணங்கள், பிறப்பால் அமைக்கப்பட்டவை இல்லை. அவரவர் செய்யும் தொழிலால் வகுக்கப்பட்டவை. வேலை தெரிந்தவர்கள், தங்களுடைய தொழில் திறமையை, தங்களது குடும்பத்திற்கு மட்டுமே சொல்லிக் கொடுத்ததால், அந்தத் தொழில்கள் குலத் தொழில்களாக மாறின.
இப்போதும் கூட அரசியல் கட்சித் தலைவர்கள், தங்களுடைய குடும்பத்தினரை அடுத்த வாரிசாகக் கொண்டு வருவதைப் பார்க்கிறோம். அப்படி அவரவர் குடும்பத்திற்கு சொல்லிக் கொடுத்த தொழில்நுட்பத்தின் விளைவாகத் தான் இந்த வர்ணாசிரமம், பிறப்பு அடிப்படையில் மாறியது.
எல்லாரும் சமம் என்பது, எழுதவும் பேசவும் இனிப்பாக இருக்கும்; நடைமுறையில்அது சாத்தியமில்லை. ஒரே காரில் பயணிப்பதால், உரிமையாளரும் டிரைவரும் ஒன்றில்லை.
‘எங்களை என்ன தாழ்த்தப்பட்டவர் என்று நினைத்தார்களா?’ என்று, ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் பேசுகிறார். ‘பட்டியல் சமூகத்துக்கு நாங்கள் போட்ட பிச்சை’ என இன்னொரு பிரமுகர் பேசுகிறார். பாகுபாடு காட்டுவது சனாதனம் என்றால், இவர்களுடைய பேச்சு என்ன தனம் என தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
வர்ணாசிரமம் ஹிந்து மதத்தில் உள்ளது தான் என்று ஏற்கும் அதே நேரத்தில், ஜாதி பற்றி ஹிந்து மத நுால்கள் எவையேனும், எங்கேயும் பேசி இருக்கின்றனவா என அறிய விரும்புகிறேன்.
ஜாதி என்பது ஒரு மதம் சார்ந்து உருவானது அல்ல. அந்தந்த சமூகக் குழுக்கள், அவர்களுக்கு உள்ளாகவே உருவாக்கிக் கொண்டது.
அதனால்தான் நான்கு வர்ணங்களும், வடமொழிப் பெயரில் இருக்கும்; ஆனால் ஜாதிப் பெயர்கள் அந்தந்த மாநில மொழிகளில் இருக்கும். வன்னியர், நாடார், செட்டியார், முக்குலத்தோர் போன்றவை எல்லாம், வடமொழிப் பெயர்கள் என யாரும் சொல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன்.
சரி, இந்தப் பாகுபாடு ஹிந்து மதத்தில் மட்டும் தான் இருக்கிறதா? மற்ற மதங்களில் இல்லையா?
கிறிஸ்தவத்திலும் பாகுபாடு இருக்கிறது என, என்னுடைய நேர்காணலில், அருட்தந்தை ஜெகத் கஸ்பரே ஒப்புக்கொண்டார். இஸ்லாத்தில் பாகுபாடு இல்லை என்றால், பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் ஏன் குண்டு வெடிக்கிறது என ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
எனவே, மதங்கள் பாகுபாடு காட்டுவதில்லை; மதத்தின் பெயரால் மனிதர்கள் பாகுபாடு காட்டுகின்றனர்.
அப்படியே ஹிந்து மதத்தில் ஏற்றத்தாழ்வு இருப்பது உண்மை என்றால், அந்த ஏற்றத்தாழ்வைத் தான் சரிசெய்ய வேண்டுமே தவிர, ஒட்டுமொத்த மதத்தையே அழிப்போம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்த ஆண்டு ஆடி மாதம், சென்னை, கோயம்பேடில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் நிகழ்ச்சியில், பாதுகாப்புக்கு நின்ற பெண் போலீசுக்கே பாலியல் தொந்தரவு கொடுத்ததால், தி.மு.க. பிரமுகர் கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். இப்போது கண்ணனைக் குற்றம் சொல்லாமல், ஒட்டுமொத்த தி.மு.க.வையே ஒழிக்க வேண்டும் என யாராவது சொன்னால் ஏற்க முடியுமா?
சரி, சனாதனம் தான் பாகுபாடு பார்க்கிறது என்றால், அதே மேடையில் இருந்த பீட்டர் அல்போன்சை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆக்காததற்கு என்ன காரணம்? அவரே என் நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார், ‘நான் கிறிஸ்தவன் என்பதால் தான் மாநிலத் தலைவர் ஆக்கப்படவில்லை’ என!
சரி, ராமானுஜர் சனாதனவாதியா இல்லையா? அவரைப் பற்றி எதற்காக, ராமானுஜ காவியம் எழுதப்பட்டது?
சனாதனத்துக்கு வக்காலத்து வாங்கும் பா.ஜ.க.வில் அகில இந்தியத் தலைவராக ஒரு பட்டியலினத்தவர் இருந்திருக்கிறார். பட்டியலினத்தவர்கள் இரண்டு பேர் மாநிலத் தலைவர் ஆக்கப்பட்டிருக்கின்றனர். சனாதனத்தை ஒழிக்கக் குரல் கொடுக்கும் கட்சியில் அது சாத்தியமா?
சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென்றால், அவற்றின் ஆணி வேராக இருக்கும் கோயில்களில் அரசு மூக்கை நுழைப்பது ஏன்? அறநிலையத் துறையைக் கலைத்துவிட வேண்டியது தானே?
சனாதனம் என்றால், அழியாதது என்று அர்த்தம்; முடிவில்லாதது என்று பொருள். எப்போதும் இருப்பது; சந்திர சூரியர்கள் உள்ளவரை இருக்கும்.
கடந்த, 1323இல், திருவரங்கத்தில் உல்லுக் கான், 12,000 வைஷ்ணவர்களின் தலையைத் துண்டித்த பின்னரும், சனாதனம் இருந்தது. ஔரங்கசீப் ஆட்சிக் காலத்தில், ஹிந்துவாக இருப்பதற்கே ‘ஜிஸ்யா’ வரி விதித்தபோதும், சனாதனம் இருந்தது.
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கட்டிய அரண்மனை இல்லை; சனாதனத்தின் சாட்சியாக, அவர்கள் கட்டிய கோயில்கள் இருக்கின்றன.
“சர்வே ஜனா சுகினோ பவந்து” (எல்லா உயிர்களும் இன்புற்று இருக்கட்டும்) என சொல்லிக் கொடுத்த உபநிஷதம், சனாதனத்தின் அடையாளம்.
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலார், சனாதனத்தின் உச்சம்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என தமிழிலும், ‘வசுதைவ குடும்பகம்’ (உலகமே ஒரு குடும்பம்) என வடமொழியிலும் சொல்லிக் கொடுத்தது சனாதனம்.
‘கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்?’ என கேள்வி எழுப்பிய வள்ளுவம், சனாதனத்தின் சாட்சி.
அடியேன் என்றும், தாசன் என்றும், தொண்டரடிப்பொடி என்றும், சிவனடியார் என்றும், பணிவைச் சொல்லிக் கொடுத்தது சனாதனம்.
அன்பே சிவம் என்பது சனாதனம்.
‘அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி ஞானச் சுடர் விளக்கு’ ஏற்றியது சனாதனம்.
நிற்க.
தான் ஒரு கிறிஸ்தவன் எனக் கூறிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன் என்ற அமைச்சர் உதயநிதியும், பெருமைக்குரிய கிறிஸ்தவராக இருக்கும் பீட்டர் அல்போன்சும், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் அந்த மேடையில் இருந்தது கவனிக்க வேண்டிய விஷயம்.
அதைவிட முக்கியமான விஷயம், அந்த மாநாட்டை நடத்தியவர்கள். த.மு.எ.க.ச. என்றழைக்கப்படும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம். இவர்களுடைய குழுமம் தான் தமிழக அரசோடு இணைந்து புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகின்றன.
ஆக, இவர்களுடைய நோக்கம் தெளிவாகிவிட்டது; அது நடக்கப்போவதில்லை என்பதும் உறுதியாகிவிட்டது.
ஏனென்றால் இது சனாதானம்!
- திரு. ரங்கராஜ் பாண்டே, தமிழகத்தின் முன்னணி பத்திரிகையாளர்; ‘சாணக்யா’ – யு-டியூப் சேனலின் நிறுவனர்.
- நன்றி: இக்கட்டுரை தினமலர் (09.05.223) நாளிதழில் வெளியானது.
$$$
8. இதிகாசங்கள் சொல்லும் சனாதனம்
-செ.அருட்செல்வப் பேரரசன்
‘திராவிடம்’ என்ற சொல் சம்ஸ்க்ருதம் என்பதை அறியாமலா, ‘சனாதனம்’ என்ற சொல் சம்ஸ்க்ருதம் என்று சொல்கின்றனர்?
பிணிகளையும், நச்சுக்கிருமிகளையும் போல பாரபட்சம் பாராமல் ஒழிக்கப்பட வேண்டியவை இம்மண்ணைச் சாராத அந்நிய சித்தாந்தங்கள்.
திராவிட அரசியலும், கம்யூனிசமும் நிச்சயம் நம் மண் சார்ந்தவை அல்ல. சனாதனம் நம் மண்ணின் அறத் தொகுப்பு; ஒருபோதும் மாற்றமில்லாத நிலையான தொல்லறம்.
சனாதனத்திற்கு எதிராக, அல்லது சனாதனத்தை ஒழிப்போமென சூளுரைக்கும் சட்டம்பிகளின் பட்டியலைத் தயார் செய்து பாருங்கள்.
அனைத்தும் அந்நிய வித்துக்கள்; அல்லது அந்நிய நிலத்தில் பயிர் செய்பவை.
***
இதிகாசங்கள் சொல்லும் சனாதனம்:
அவன் (ராமன்), ஆணவக்காரனான ராவணனை வதம் செய்ய விரும்பிய தேவர்களால் தூண்டப்பட்டு மனிதர்களின் உலகத்தில் பிறந்த சனாதன விஷ்ணுவல்லவா?
– இராமாயணம், அயோத்தியா காண்டம் 1:7
பரதன் ராஜ்ஜிய பரிபாலனத்தையும், பிதாவுக்கான தொண்டையும் செய்வதை உறுதி செய்வது உன் கடப்பாடு; இதுவே சனாதன தர்மம்.
-இராமாயணம், அயோத்தியா காண்டம் 19:26
நானும், நீயும், சீதையும், லக்ஷ்மணனும், சுமித்திரையும் பிதாவின் ஆணையில் நிற்க வேண்டும். இதுவே சநாதன தர்மமாகும் (தொன்மையான கடமையாகும்).
– இராமாயணம், அயோத்தியா காண்டம் 21:48
ஜகத்பதியும், என் பிதாவுமான காகுத்ஸ்தர் (தசரதர்) எது வரை ஜீவித்திருப்பாரோ, அது வரையில் அவருக்கு நீ தொண்டாற்ற வேண்டும். அதுவே சனாதன தர்மமாகும்.
– இராமாயணம், அயோத்தியா காண்டம் 24:13
என் பிதா எனக்கு எவ்வாறு ஆணையிட்டாரோ, அவ்வாறே அதற்குக் கீழ்ப்படிந்து சத்திய தர்மப் பாதையில் செல்ல விரும்புகிறேன். அதுவே சனாதன தர்மமாகும்.
– இராமாயணம், அயோத்தியா காண்டம் 30:38
தானம் செய்வது, யஜ்ஞ தீக்ஷை எடுப்பது (வேள்வி தொடங்கும் சடங்கைச் செய்வது), போர்களில் உடலைத் தியாகம் செய்வது ஆகியவை இந்தக் குலத்திற்கு உசிதமான சனாதன நடைமுறைகளாகும்.
– இராமாயணம், அயோத்தியா காண்டம் 40:7
கொடுமையின்மையும் (அஹிம்சையும்), சத்தியமும் கூடியதே சனாதன ராஜ நடை (தொன்மையான அரசவொழுக்கம்) என்பதால், ராஜ்ஜியமானது, சத்தியத்தையே தன் சாரமாகக் கொண்டிருக்க வேண்டும். சத்தியத்திலேயே உலகம் நிலைத்திருக்கிறது.
– இராமாயணம், அயோத்தியா காண்டம் 109:10
உன்னை எந்த அர்த்தத்தில் நான் கொன்றேன் என்பதன் காரணத்தைப் பார். சனாதன தர்மத்தைக் கைவிட்டு, உடன்பிறந்தவனின் பாரியையுடன் (உன் தம்பி சுக்ரீவனின் மனைவியான ருமையுடன்) வாழ்கிறாய்.
– இராமாயணம், அயோத்தியா காண்டம் 18:18
நித்தியமான அறத்தை அதன் புதிர்கள் அனைத்துடன் நான் அறிவேன். அஃது உலகளாவிய நட்புறவு மற்றும் அனைத்துயிரினங்களுக்கான நன்மை ஆகியவற்றைக் கொண்டதும், அனைவராலும் அறியப்பட்டதுமான பழங்கால சனாதன தர்மத்தைத் தவிர வேறேதும் இல்லை.
-மஹாபாரதம், சாந்தி பர்வம், 262ஆம் அத்தியாயம், 5ஆம் சுலோகம்
நல்லவர்கள் பயிலும் பழமையான தர்மம், அண்ட அறிவுடன் அனைத்தையும் காணும் சக்தி பெற்ற முனிவர்களால் நிறுவப்பட்டது. ஓ துருபதனின் மகளே (திரௌபதி), கடலைக் கடக்க நினைக்கும் வணிகர்களுக்கு கப்பல் எப்படியோ, அப்படி சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புவோரின் ஒரே படகு சனாதன தர்மமே.
– மஹாபாரதம், வனபர்வம் 31ஆம் அத்தியாயம், 23,24 சுலோகங்கள்.
அழிவற்றவனாகவும், இந்த அண்டத்தின் பரம்பொருளாகவும் நீயே இருக்கிறாய். சிதைவில்லாதவனாகவும், நித்தியமான அறத்தின் (சாஸ்வத தர்மத்தின்) காவலனாகவும் நீயே இருக்கிறாய். சனாதன புருஷனாக நான் உன்னைக் கருதுகிறேன்.
– ஸ்ரீமத் பகவத்கீதை 11:18
- திரு. செ.அருட்செல்வப் பேரரசன், (கிசாரி மோகன் கங்குலியின்) மூலமகாபாரதம், ஹரிவம்ச புராணம், வான்மீகி ராமாயணம் போன்ற நூல்களை தமிழில் மொழியாக்கம் செய்தவர்.
- இது இவரது முகநூல் பதிவு
$$$
9. ஆபத்தான லிபரல் சாடிஸ்ட்கள்!
-திருச்செந்துறை ராமமூர்த்தி சங்கர்
ஒரு அழுக்கு லிபரல்: பாதி ஹிந்துக்களுக்கு ‘சனாதனம்’ என்றால் என்னவென்றே தெரியாது.
1. ஹிட்லரால் விஷவாயு பயன்படுத்திக் கொல்லப்பட்ட லட்சக் கணக்கானவர்களுக்கு தாங்கள் யூதர்கள் என்பதாலேயே கொல்லப் படுகிறோம் என்று தெரியாது.
2. யோசப் ஸ்டாலினால் கொல்லப்பட்ட லட்சக் கணக்கானவர்களுக்கு தாங்கள் யூதர்கள், கொசாக்குகள் என்பதாலேயே கொல்லப்படுகிறோம் என்று தெரியாது.
3. மாவோவால் கொல்லப்பட்ட கோடிக் கணக்கான பேருக்கு பாசிசம் என்றால் என்னவென்றே தெரியாது.
4. வங்காளப் பிரிவினையின் போது கொல்லப்பட்ட வங்காளிகளுக்கு தாங்கள் ஹிந்துக்கள் என்பதால் கொல்லப்பட்டோம் என்று தெரியாது.
5. டில்லி கலவரத்தில் கோரமாகக் கொல்லப்பட்ட சீக்கியக் குழந்தைகள், பெண்களுக்கு தாங்கள் சீக்கியர் என்பதால் கொல்லப்படுகிறோம் என்று தெரியாது.
6. கோத்ராவில் ரயிலில் எரிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாங்கள் ஹிந்து என்பதால் எரிக்கப்படுகிறோம் என்று தெரியாது.
ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டு இறந்தார்கள். நம் அடையாளங்கள் நம் எதிரிகளுக்கு நன்றாகவே தெரியும்…
….
நம் பிரச்சினை சனாதனத்தை அழிப்போம் எனும் கொலைகாரர்கள் மட்டுமல்ல, இதற்கு உருவிவிட்டு ஆதரவு அளிக்கும் லிபரல் சாடிஸ்ட்களும் கூட.
- திரு. திருச்செந்துறை ராமமூர்த்தி சங்கர் கணக்குத் தணிக்கையாளர்.
- இது இவரது முகநூல் பதிவு.
$$$
10. சனாதன தர்மம் என்பது என்ன?
-வானவில் க.ரவி
சனாதனம் என்றால் ‘காலத்தால் அழியாமல் என்றும் உள்ளது’ என்று பொருள். தர்மம் என்பது அடிப்படைக் கோட்பாடு. ‘சனாதன தர்மம்’ என்றால் காலத்தால் அழியாமல், இடத்துக்கு இடம் மாறுபடாமல் என்றும் நிலைத்திருக்கும் கோட்பாடுகளின் தொகுப்பு.
வர்ண – ஆஸ்ரம தர்மம் வேறு, சனாதன தர்மம் வேறு.
வர்ண – ஆஸ்ரம தர்மம் என்பது, மனிதர்களால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கோட்பாடுகளின் தொகுப்புகள். இவை இடத்துக்கு இடம், காலத்துக்கேற்ப மாறுபடும். ஆனால், சனாதன தர்மம் என்பது மனிதர்களால் ஏற்பட்ட கோட்பாடுகளின் தொகுப்பு அல்ல. அவை பிரபஞ்ச விதிகள்; சமூகக் கோட்பாடுகள் அல்ல.
வர்ண – ஆஸ்ரம தர்மம் என்பதை ‘வர்ணாஸ்ரம தர்மம்’ என்று சேர்த்துச் சொல்லிச் சொல்லிப் பழகி விட்டோம். இரண்டும் ஒன்றல்ல.
‘வர்ண தர்மம்’ என்பதன் சாரம் என்ன? அறிஞர்கள், வீரர்கள், வணிகர்கள், உழைப்பாளிகள் என ஆவதற்குத் தக்க அடிப்படைப் பண்புடையவர்களாக மனிதர்களில் நால்வகைப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதே அந்தக் கோட்பாட்டின் சாரம். இந்தப் பிரிவுக்கும் ஜாதிகளுக்கும் தொடர்பில்லை. இந்தப் பண்புகள் மரபணுவால் மட்டுமே நிச்சயிக்கப் படுவதில்லை. அப்படி இருந்தால், அம்பேத்கர் நம் அடிப்படைச் சட்டத்தை வடிவமைத்த அறிஞராக இருந்திருக்க முடியாது. எனவே பிறப்பை மட்டும் வைத்து ஒருவர் அறிஞராக வரக் கூடியவரா, செயல்வீரராக வரக் கூடியவரா, வணிகராக வரக் கூடியவரா அல்லது தம் உழைப்பினால் உலகத்தை உயர்த்தும் உழைப்பாளியாக வரக் கூடியவரா என்பதைத் தீர்மானிக்கக் கூடாது.
‘ஆஸ்ரம தர்மம்’ என்பது வேறு. கற்கும் பருவம், இல்லறப் பருவம், ஓய்வுப் பருவம், துறவறப் பருவம் என்ற நான்கு நிலைகளை முறையே பிரும்மச்சரிய ஆஸ்ரமம், கிரஹஸ்த ஆஸ்ரமம், வானப்பிரஸ்த ஆஸ்ரமம், சன்யாச ஆஸ்ரமம் என்று பகுத்துப் பார்க்கும் நல்ல சிந்தனை அது.
எனவே, பிராமணர், முதலியார், செட்டியார், பிள்ளைமார், கவுண்டர், வன்னியர், நாடார், தேவர், பறையர், பள்ளர் என்று நாமே கற்பித்துக் கொண்ட நூற்றுக் கணக்கான ஜாதிப் பிரிவுகளுக்கும், சனாதன தர்மத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
நாம் கற்பித்துக் கொண்ட நூற்றுக் கணக்கான ஜாதிப் பிரிவுகளுக்கும் நால்வர்ணக் கோட்பாட்டுக்கும், நான்கு ஆஸ்ரம தர்மத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
ஆனால் இந்த நால்வர்ணக் கோட்பாட்டைப் பிறப்புடன் இணைத்து, பல ஜாதிகளை அவற்றுள் அடக்கி வைத்ததும், அவற்றைச் சமதளத்தில் வைக்காமல், உயர் அடுக்கு முறையில் ஒன்று இன்னொன்றை விட உயர்ந்தது அல்லது தாழ்ந்தது என்று கற்பித்துக் கொண்டது மாபெரும் தவறு. அது தர்மமே இல்லை; அதர்மம், கண்டிக்கத் தக்கது.
ஜாதி ஒழிப்பு மாநாடு நடத்த அஞ்சி, சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தலாமா?
இதெல்லாம் புரியாமல் சனாதனத்தை எதிர்க்கிறோம் என்று சொல்வது அறியாமையின் விளைவு.
தமக்கு அர்த்தம் தெரியாத சொல்லைப் பேச்சில் பயன்படுத்தத் தேவையே இல்லை. “ஜாதிப் பாகுபாடுகளை எதிக்கிறோம்” என்ற அர்த்தத்தில்தான் சனாதன எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம் என்ற விளக்கம் அபத்தமானது. ஜனநாயகத்தில் ஊழல் மலிந்து விட்டது என்பதால் ஊழலை எதிர்ப்பதாகக் கற்பித்துக் கொண்டு, ஜனநாயகத்தையே எதிர்ப்பது போன்ற மடமையின் வெளிப்பாடு அது.
‘பிறப்பை வைத்து மனிதர்களை உயர்வு – தாழ்வு என்று வேறுபடுத்தும் வழக்கத்தை எதிர்க்கிறோம்’ என்று தூய தமிழில் சொல்லியிருந்தால், நானும் ஆதரித்திருப்பேன், எல்லாரும் ஆதரித்திருப்பார்கள். பிறகு ஏன் புரியாத வடமொழிச் சொற்களைப் பயன்படுத்திப் பேச வேண்டும்?
பொருள் புரியாத சொற்களைப் பேச்சில் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாமே. நீங்கள் எதை எதிர்க்கிறீர்கள் என்பதையாவது தெளிவாகத் தமிழில் சொல்லுங்கள். தமிழில் பேசுங்கள்!
பின் குறிப்பு:
சனாதனத்தை எதிர்த்தவரின் தலையைக் கொய்துவிட வேண்டும் என்று உத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஒருவர் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத் தக்கது. அப்படிப்பட்ட வன்முறைப் பேச்சுக்கு சனாதன தர்மத்தில் இடம் கிடையாது. மனிதர்களால் ஏற்படுத்தப்படாத சனாதன தர்மத்தை, ஏன், காலத்தால் அழியாத சனாதன தர்மத்தை மனிதர் எவரும் பாதுகாக்கத் தேவையில்லை. அது அழிக்கவே முடியாதது.
- திரு. வானவில் க.ரவி, வழக்கறிஞர்; சென்னையில் வானவில் பண்பாட்டு மன்றத்தை நிறுவி நடத்தி வருபவர்.
- இது இவரது முகநூல் பதிவு.
$$$
11. காலம் தண்டிக்கும்
-ஜெயகுமார் ஸ்ரீநிவாசன்
சனாதனம் குறித்துப் பேசுகையில் இந்து மதத்திற்கு எதிராகப் பேசவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். (தினமணி -04.09.2023)
“நான் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை, பார்ப்பனீயத்தைத் தான் எதிர்க்கறேன்.” இதைச் சொன்னவர் உதயநிதியின் தாத்தா கருணாநிதி.
சனாதனம் என்றால் இந்துமதம் என தெரியாத அளவு முட்டாளாய் இருப்பார் உதயநிதி என்று நான் நம்பவில்லை.
அதே தாத்தா கருணாநிதி காலத்து டெக்னிக்.
அவருக்காவது எவ்வளவு பேச வேண்டும் என்ற தெளிவு இருந்தது.
அவரைப் பொருத்த வரை சிறுபான்மையினர் என்போர் வாக்கு வங்கி மட்டுமே. அதற்காக அவர்களை ஒரு எல்லைவரை ஆட்டம்போட அனுமதித்தார். திண்டுக்கல், கோவையில் அல்-உம்மா மற்றும் அதன் தலைவர்கள் என்ன செய்கிறார்கள், செய்தார்கள் என்று தெரிந்தும் அதை அனுமதித்ததற்குப் பிரதிபலனாக வாக்குக் காணிக்கையைப் பெற்றுக்கொண்டார், ஹிந்துக்களை பலிகொடுத்து. அதைத் தாண்டி அவர்களுக்கு இதயத்தில் இடம் மட்டுமே. ஓவராகப் பேசினால் சிறுபான்மையினர் தங்கள் இடம் அறிந்து நடந்துகொள்ள வேண்டும் என்று, கூசாமல் பேச, அவர்களைக் கைகழுவ்வும் தயங்க மாட்டார்.
உதயநிதியும் ஸ்டாலினும் சிறுபான்மையினருக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததும் அல்லாமல், அதை பெருமையாக வெளியில் சொல்லிக் கொண்டும், அரசு நிர்வாகத்தை முழுமையாக கிறிஸ்தவர்கள் கையில் கொடுத்தும் இருக்கின்றனர். உதயநிதி தான் ஒரு கிறிஸ்தவன் என சொல்லிக்கொள்வதில் பெருமை அடைவதாகப் பேசி இருப்பதையும் சேர்த்தால் தமிழகத்தின் இன்றைய துரதிர்ஷ்ட நிலை தெரியும்.
சட்டம் – ஒழுங்கு என்பது கிலோ என்ன விலை என்ற நிலையில் தமிழகத்தைக் கொண்டுவந்து நிறுத்தியதும், திருட்டுத்தனம் செய்து சிறையில் இருப்பவருக்கு அமைச்சர் பதவியில் வைத்திருப்பதும் சொல்லும், இவர்களின் தராதரத்தை.
ஆடிய ஆட்டமென்ன, பேசிய வார்த்தையென்ன என அனைத்திற்கும் பதில் சொல்லாமல் போய்விட முடியாது.
அறிவியலில் இருந்தே பதில் சொல்வோம்.
ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை ஒன்றுண்டு. (நியூட்டனின் மூன்றாவது விதி)
உதயநிதிக்கு காலம் புரியவைக்கும். நான்கு மாதங்களுக்கு முன்பான செந்தில் பாலாஜியையும் இன்றைய செந்தில் பாலாஜியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் காலம் என்ன செய்யும் என்பது விளங்கும்.
- திரு. ஜெயகுமார் ஸ்ரீநிவாசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் பொறியாளர்.
- இது இவரது முகநூல் பதிவு.
(தொடர்ந்து ஒலிக்கும் தார்மிகக் குரல்கள்!)
$$$
One thought on “வாழும் சனாதனம்! – 3”