‘தந்தை பெரியார்’ வாழ்க!

-டி.எஸ்.தியாகராசன்  

இந்திய விடுதலைக்காக உழைத்த உத்தமர்; எதிர்கால இந்தியா எந்த அடிப்படையில் அமைய வேண்டும் என்று கனவு கண்ட சிந்தனையாளர்; சமூகம் உயர சீர்த்திருத்தங்களை முன்னெடுத்த முன்னோடி; கல்வியே முன்னேற்றும் என்று அறிந்து பல்கலைக்கழகம் அமைத்த பெருமகன்; அறிவுத் திறத்தால் ஆங்கிலேயரையும் வசப்படுத்திய இதழாளர்- பண்டித மதன்மோகன் மாளவியாவை ’தந்தை பெரியார்’ என்று கட்டுரையாளர் திரு. டி.எஸ்.தியாகராஜன் போற்றுகிறார். ஏன்? படியுங்கள், விடை கிடைக்கும்....
பண்டித மதன்மோஹன் மாளவியா
(1861 டிச. 25 – 1946 நவ. 12)

பெற்றால்தான் பிள்ளையா? தான் பெறாமலே சிறுவன் ஒருவனைப் பேணி வளர்த்து, உயர்கல்வி வரை ஆதரித்து, நாட்டின் புகழ்க் கட்டிலில் அமர வைத்த பல்கலைக்கழகத் துணைவேந்தரை தந்தையென விளிப்பது சாலப் பொருத்தமே!

1925ஆம் ஆண்டு பாட்னாவில் நடைபெற்ற ‘காங்கிரஸ் மகாசபை’ கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய பண்டித மதன்மோகன் மாளவியாவிடம், ஒருவர் தன்னோடு அழைத்து வந்திருந்த சிறுவனைக் காட்டி “இவன் மெட்டிரிக்குலேஷன் முடித்து விட்டான்.  மேலே படிக்க விரும்புகிறான். ஆனால் வசதி இல்லை நீங்கள் தான் உதவ வேண்டும்” என்றார்.

மாளவியா அவரிடம் “நாளைக்கு இவனை அழைத்து வாருங்கள். என் மகன் கோவிந்தோடு சேர்ந்து படிக்கட்டும்” என்றார். “சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே” என்பதுபோல, அச்சிறுவனை காசி இந்து பல்கலைக்கழகத்தில் சேர்த்தார். அந்தச் சிறுவன், உயர்கல்வி முடித்து, பின்னாளில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராகி, மத்திய அமைச்சராகி நிறைவாக இந்திய நாட்டின் துணைப் பிரதமராக உயர்ந்தார். அவர்தான் பாபு ஜகஜீவன்ராம். 

துரோணாச்சாரியார் உதித்த  ‘பரத்வாஜ’ கோத்திரத்தில் தோன்றிய அலகாபாத் பிராமணர் பண்டித மதன்மோகன் மாளவியா என்னும் பெரியார்தான். ‘பாபுவை’ உயர்த்திய தந்தை பெரியார். 

இவர் பள்ளிப் பருவத்திலேயே சமஸ்கிருதம், ஹிந்தி, உருது, பாரசீகம், ஆங்கிலம் போன்ற மொழிகளைக் கற்றறிந்தார். தன் தந்தையிடம் வேதங்களைக் கற்றுணர்ந்தார். சுலோகங்களை மனனம் செய்து பழகினார்.  இவரது குடும்பம் பெரியது; வசிப்பிடமோ மிகச் சிறியது. படிப்பதற்கு இட வசதி இல்லாமையால் அருகிலுள்ள  ‘லாலா சோகன்லால்’ தோட்டத்தில் காலை, மாலை வேளைகளில் படிப்பதையும், யோகாசனம் செய்வதையும் வழக்கமாக்கிக் கொண்டார். கல்லூரி நாட்களில் மனனப் போட்டி, பேச்சுப் போட்டி, நாடகத்தில் நடிப்பது போன்ற துறைகளில் முதல் பரிசுகளாகவே பெற்றுத் திகழ்ந்தார். கவி காளிதாசரின்  ‘சாகுந்தலம்’ நாடகத்தில் சகுந்தலையாகவும், ஷேக்ஸ்பியரின்  ‘மெர்ச்சன்ட் ஆஃப் வெனிஸ்’  நாடகத்தில் போர்ஷியாகவும் அசல் பெண்ணாகத் தோன்றி நடித்தார்; பார்வையாளர்கள் வியந்தும்  மகிழ்ந்தும் பாராட்டினார்கள்.

கல்லூரிப் படிப்பு முடிந்ததும் 1877இல்  ‘ஹிந்தி உத்ரின் சபா’ என்றதொரு அமைப்பைத் தொடங்கினார். 1880இல்  ‘ஹிந்து சமாஜ்’ அமைப்பையும் நிறுவினார். 1881இல்  ‘சுதேசி’  என்ற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்தார்.  இலக்கிய விவாத அரங்குகளில் உரையாற்றலானார்.  ‘பிரதீப்’ என்ற பத்திரிகையில் 1880 முதல் 1884 வரை கட்டுரைகள் எழுதலானார்.

அந்நாளில் இந்தியாவின் வைசிராய் பதவியில் இருந்த  ‘ரிப்பன் பிரபு’ இந்தியர்கட்கு பல நன்மையான திட்டங்களைக் கொண்டுவந்தார். இதனால் மக்கள் “ரிப்பன் எங்கள் அப்பன்” என்று அழைத்து வந்தனர். 1884இல் ரிப்பன் பிரபு பணி ஓய்வு பெறும் நாளில் அவரைப் பாராட்டிச் சிறப்பிக்க மாளவியா எண்ணம் கொண்டார். அப்போது காங்கிரஸ் கட்சி உதயமாகவில்லை. அந்நேரத்தில், எந்தவொரு அமைப்பின் பின்புலம் இன்றி தானே அந்த விழாவை நடத்தினார். இதனால் ஆங்கிலேய அரசு அதிகாரிகள் இவரைப் பாராட்டி மகிழ்ந்தனர். பொதுமக்களும் இவரை மதிப்புடன் கருதத் தொடங்கினார்கள்.

தனது 22ஆவது வயதிலேயே இப்படி ஆற்றலாளராக விளங்குவதைக் கண்ட இவரது முன்னாள் ஆசிரியர் பண்டிட் ஆதித்யராம் பட்டாசார்யா இவரை மேலும் உயர்த்த எண்ணி 1886இல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் இரண்டாவது மாநாட்டிற்கு அழைத்துச் சென்றார். அம் மாநாட்டில் எந்தவித முன்தயாரிப்பும் இன்றி, இவர் பேசப் பணிக்கப்பட்டார்.  அந்த மேடையில் இவரது பொருளமைந்த உரையைக் கேட்ட தாதாபாய் நௌரோஜி “பாரத மாதாவின் சொற்கள் இந்த இளைஞர் வாயில் எதிரொலிப்பதைக் காண்கிறேன்”  என்றார்.

காங்கிரஸின் நிறுவனர் ஏ.ஓ.ஹ்யூம் இவரின் உரையைக் கேட்டு அகமகிழ்ந்தார். அடுத்த ஆண்டு சென்னையில் 1887இல் நடைபெற்ற மாநாட்டில் இவரது எழுச்சி மிகு உரையைக் கேட்ட ஏ.ஓ.ஹ்யூம் “மொத்த காங்கிரசின் குரலாக இந்த ஒருவரின் தனிப்பேச்சு எதிரிகளின் விமர்சனங்களைப் புறம் தள்ளும்” என்று சொல்லிப் பாராட்டினார். 

இவ்வாறு தொடங்கிய காங்கிரசின் உடனான இணைப்பு 60 ஆண்டுகள் அவர் இறக்கும் வரை நீடித்தது.

மகாகவி பாரதி தன் சுயசரிதையில் “முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும், மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும்” என்ற வழி, மாளவியா முன்னை நாளில் பாரதம் பாரில் உயர்ந்து நின்றதையும், இப்போது, ஏன் இப்படி ஆனது என்பது பற்றியும் ஆழமாக சிந்திக்கலானார்.

1893இல் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் மாளவியா பேசியவை இவை:

“ஆங்கிலேயர்களுக்கு உண்மையான கடவுள் பக்தி இருக்குமானால் இங்கு வந்து கிராமம் கிராமமாக மக்களைப் பார்க்கட்டும். எதனை இழந்து மக்கள் இந்த வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பது பற்றிச் சிந்திக்கட்டும்.  முக்கியத் தொழில்களான நெசவு, வேளாண்மை, கிராம கைத்தொழில்கள் எங்கே போயின?  மக்கள் அணிந்திருக்கும் அரைகுறை ஆடைகள் கூட இங்கிலாந்தில் இருந்து வந்தவையாக இருக்கின்றன. முன்னைய காலத்தில் இந்தியாவில் இருந்துதான் நெய்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.  இன்று ஒரு குண்டூசியைக் கூட இங்கிலாந்தின் தயாரிப்பாக மாற்றி விட்டார்களே! 

 “1857இல் நடந்த முதல் சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு கிராம சபை நீதிபரிபாலனம் பறிபோய் ஆங்கிலேயர்களின் கொடுமையான நீதிமன்ற சட்டங்கள் அமுலுக்கு வந்தன. தண்டனைகள் மிகவும் மனிதத் தன்மையற்றவையாக மாறிவிட்டன. சில மகாணங்களில் நிலவரி 50 சதவிகிதத்திற்கும் அதிகமாகிவிட்டது. இந்த 19ஆம் நூற்றாண்டில் மட்டும் ஆங்கிலேயர்கள் உலகின் பல நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போர்களை நடத்தியுள்ளனர். அந்த போர்ச்செலவை ஈடுகட்ட இந்திய மக்களின் மீது வரிச்சுமையை ஏற்றுகிறார்கள். இந்தியப் பொருள்களின் ஏற்றுமதிக்கு அதிகவரியும், அவர்கள் நாட்டுப் பொருள்களின் இறக்குமதிக்கு சொற்ப வரியும் விதித்து, நம் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கின்றனர். 

“இதனாலேயே 1861இல் கொடிய பஞ்சம் ஏற்பட்டு பல லட்சம் இந்தியர்கள் மாண்டனர். இந்தியர்களின் கல்வி தொடர்பாக 1835லேயே லார்டு மெக்காலே இங்கிலாந்து நாடாளுமன்றத்தில்  ‘இந்தியாவை நாம் முழுமையாக ஆள வேண்டுமெனில் அவர்கட்கு ஆங்கில மொழிக் கல்வியைப் பயிற்றுவிக்க வேண்டும்.  அப்போது தான் அவர்கள் ரத்தத்தில் இந்தியர்களாகவும் நுகர்ச்சி இன்பத்தில், கருத்து, சிந்தனையில், ஆய்வுணர்ச்சியில் ஆங்கிலேயர்களாகவும் இருப்பார்கள்’ என்று உரையாற்றினார். அதன்படி இந்தியாவின் தொன்மையான மொழிகளை அழித்து அவர்களது மொழியைத் திணித்து விட்டார்கள்”

-என்று உணர்ச்சிகரமாக உரையாற்றினார். 

இவரது நிகற்ற ஆளுமைப் பண்பால் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு நான்கு முறை தலைவர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்தியர்கள் முன்னைய நாள் விழுமியங்களை மீட்டெடுக்கவும், இந்நாளின் விஞ்ஞானக் கோட்பாடுகளைக் கற்றுணரவுமான கல்வியை நடைமுறைப்படுத்த மாளவியா விரும்பினார்.  

நம் நாட்டின் கணிதம், அல்ஜீப்ரா, ஜியாமென்டரி, வான சாஸ்திரம், ஆயுர்வேதம், கலாசாரம் ஆகியவை, மேலை நாட்டினர் குறிப்பாக ஆங்கிலேய பல்துறை அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை , இன்று மழுங்கியும், மங்கியும் இருப்பதை நீக்க வேண்டும்; துயரம், சுரண்டல், அடிமைத்தனம், அநீதி, சமூக ஏற்றத்தாழ்வுகள், சக மனித துரோகம், ஜாதி, மத மோதல்கள் போன்ற சாபக்கேடுகளில் இருந்து மக்கள் முழுமையாக விடுபட வேண்டும். இந்தியா பன்முகத் தன்மையுடையது.  ‘இந்நாடு ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பார்சிகள் மற்றும் பல சிறிய பிரிவுகளை கொண்ட அனைவர்க்கும் சொந்தமானது. எந்த ஒரு பிரிவினரும் மற்றொரு பிரிவினரை அடக்கும் போக்கு கூடாது. இப்படி நாம் ஒற்றுமையாக நாட்டின் விடுதலைக்காக உழைப்போமெனில் 1930இல் நாடு முழு சுதந்திரம் பெற்று விடும் என்று ஆருடம் கணித்தார்.

கல்வியறிவு பெற உள்நாடோ, வெளிநாடோ எங்கிருந்தேனும் தேடிப் பெறுதல் அவசியம். இருளில் மூழ்கியுள்ள நம் மக்களைப் புத்துணர்ச்சியோடு எழச் செய்ய பிரகாசம் பொருந்திய விளக்கினை ஏற்ற வேண்டும். மனித குலம் முழுமைக்கும் தேவையான, தெய்வீகப் பெருமைகள் அடங்கிய ஞான, அறிவுப்பேழை நம்மிடம் உள்ளது. இதில் இல்லாத அறிவு நலன்கள் உலகில் எங்கும் இல்லை. எனவே வருங்கால இந்தியாவை நடத்திச்செல்ல உறுதியான தலைவர்களை நாம் இப்போதிலிருந்தே உருவாக்குதல் அவசியம்”  என்று அறைகூவல் விடுத்தார்.

1918இல் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை முன்னெடுத்தார். பெண்கள் துணிந்து சமூகத்தின் எல்லாப் பணிகளிலும் பங்கெடுக்க முன்வர வேண்டும். அதுநாள் வரை நாடு முன்னேற வழி இல்லை. இதற்கு பெண்கள் கல்வி கற்க எல்லா வசதிகளையும் செய்தாக வேண்டும் என்றார். பெண்கள் குடும்பத்தின், நாட்டின் முக்கிய மையப்புள்ளி. இதற்காகவே காசி ஹிந்து பல்கலைக்கழகத்தில் பெண்களுக்காக ஒரு கல்லூரியை உருவாக்கினார்.

மாளவியா 1930இல் பம்பாய் ஆர்தர் ரோடு சிறையில் இருந்து விடுதலையான பிறகு 50 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசும்போது, பிரிட்டிஷ் அரசின் காலனி நாடுகளில் பெண்கள் படும் துயரத்தை விவரித்தார். நமது சகோதரிகளின் துயரத்தை கடந்த 75 ஆண்டுகளாக கவனிக்காமல் இருந்தற்காக நாம் அனைவரும் வருந்த வேண்டும் என்றார். 

ஆங்கில அரசு அமைத்த சாண்டர்ஸ் கமிட்டியின் முன்பாக வெளிநாட்டில் இந்திய தொழிலாளர்கட்கு ஏற்பட்ட கொடுமையான சம்பவங்களை சுட்டிக்காட்டி  ‘கூலி’ அடிப்படையில் ஏழைத் தொழிலாளர்களை ஏற்றுமதி செய்யும் ஏஜென்ட்களின் அராஜகங்களை விவரித்தார். குறிப்பாக  பிஜீத் தீவுக்கு அனுப்பப்பட்ட தமிழகத் தொழிழாளர்களின் துயரமான காட்சிகளை பாரதி “கற்பு நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்த பஞ்சை மகளிரெல்லாம் துன்பப்பட்டு மடிந்து மடிந்து, மடிந்தொரு தஞ்சமுமில்லாதே-அவர் சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில் மிஞ்ச விடலாமோ?” என்று பாடியதற்கொப்ப மாளவியா போராடினார். 

அந்நாளில் அரசுத் துறைகளில் பணி கிடைக்க 1877ஆம் ஆண்டு அரசாணை வண்ணம் உருது அல்லது பெர்சியா மொழி தெரிந்திருக்க வேண்டும். இதனால் ஹிந்தி பேசும் பெரும்பான்மை மக்கள் வேலைவாய்ப்பின்றித் தவித்தனர். 1897இல் வழக்கறிஞரான மாளவியா 100 பக்க அறிக்கையொன்றைத் தயாரித்து, தான் உடல்நலம் இல்லாத நிலையில் கூட இரண்டு மணிநேரம் நீதிமன்றத்தில் நின்று வழக்கை எடுத்துரைத்தார்.  இறுதியாக 1900இல் உருது, பெர்சியா மொழிகளோடு தேவநாகரி லிபியினையும் பயன்படுத்தி பணியில் சேரலாம் என்ற தீர்ப்பினைப் பெற்றார். 

தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக அளவற்ற உதவிகளை மாளவியா மனமுவந்து நல்கினார். 1918இல் ஹரித்துவாரில் சனாதன தர்மசபை மூலம் துப்புரவுத் தொழிலாளர் 2000 நபர்களுக்கு புதிய ஆடைகள் வழங்கினார்.  1923இல் காசியில் நடந்த ஹிந்து மகாசபை கூட்டத்தில் “ஹரிஜன மக்கள் கல்வி கற்பதும், பொது கிணறுகளில் நீர் எடுப்பதும், கோயில்களில் மற்றவர்களோடு சேர்ந்து வழிபாடு செய்யவும் உரிமையுடையவர்கள்” என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார். 

 மாளவியாவின் ஹரிஜன முன்னேற்றப் பணிகள் குறித்து கிரிதர்லால் குறிப்பிடும்போது “நான் உள்பட நூற்றுக்கணக்கான ஹரிஜனங்கள் மாளவியாஜி உதவியால் தான் உயர்ந்தோம். இவர் நடத்தி வந்த  ‘சரசுவதி மந்திர்’  நிலையத்தில் எந்தவித ஜாதி வேற்றுமைகயையும் காண முடியாது; ஏழை- பணக்காரர் என்ற பாகுபாட்டையும் ஒருபோதும் கண்டதில்லை. மாளவியாஜியின் மனோதர்மம் சனாதன தர்ம வழி கொண்டதாக இருந்தது. எங்கள் சமூகத்தினர் பலர் கட்டாய மதமாற்றத்தால் துன்பப்பட்டு இருப்பதைக் கண்டு அதனைக் களைய பல சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்” என்கிறார்.

 கட்டாய மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களை கங்கையில் நீராடச் செய்து வேத மந்திரங்களை சொல்லச் சொல்லி, ஹோமம் வளர்த்து அவர்களை வணங்கச் செய்து தாய்மதத்தில் இணைத்தார். இதனால் ஹிந்து மக்களில் சிலர் இவரை அவமானப்படுத்தினார்கள். 1929இல் கல்கத்தாவில் கங்கைக்கரையில் பாதிக்கப்பட்டவர்களோடு தானும் நீராடி மந்திரங்களை சொல்லச் சொல்லி சடங்கினை நடத்திக் கொண்டிருந்தபோது இவர் மீது சிலர் சேற்றை வாரி வீசினர். சிலர் யாகத்திற்கான பொருள்களை தேசப்படுத்தினார்கள். ஒருவன் கத்தியொன்றை இவர் மீது வீசினான்.  ஆனாலும் சற்றும் பொறுமை இழக்காது பணியைத் தொடர்ந்தார்.

1932இல் மகா சிவராத்திரியன்று 500 ஹரிஜனங்களுக்கு கங்கைக் கரையில் மந்திர தீட்சையளித்து அவர்களோடு உணவருந்தினார். 1938இல் ஹரித்துவாரில் கும்பமேளாவில் சங்கராச்சாரியரோடு விவாதிக்கையில் வேத நூல்களை மேற்கோள் காட்டி  ‘சநாதன தர்மத்தில் தீண்டாமைக்கு இடமில்லை’ என்பதை நிறுவினார்.

1932இல் டாக்டர் அம்பேத்கார் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பம்பாயில் உள்ள வேத பண்டிதர் நாகப்பா சாஸ்திரியை அம்பேத்கருக்கு சமஸ்கிருதம் கற்பிக்க ஏற்பாடு செய்தார்.

மாளவியாவின் உலகப் புகழ் பெற்ற சாதனையாக காசி ஹிந்து பல்கலைக்கழகத்தை தோற்றுவித்ததைக் குறிப்பிடலாம். 1904 அக்டோபரில் முக்கிய பிரமுகர்களுக்கு மாளவியா ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார்.  “நான் தொடங்க நினைக்கும் பல்கலைக்கழகம் மாணவர்கள் தங்கிப் பயிலும் வகையில் இருக்கும்.  வேதம், இதிகாசம், புராணம், அர்த்தசாஸ்திரம், சிற்பம், ஓவியம், இசை, இலக்கியம், ஆயுர்வேதம், வேளாண்மை, பொறியியல், விஞ்ஞானம் போன்ற பாடங்களும், சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளும் கற்கும் கூடமாக அது இருக்கும் என்று சொல்லி நிதிதிரட்டும் பணியில் இறங்கினார். காசி மகாராஜாவே நிதி திரட்டும் பணியியல் பங்கெடுத்தார்.

ஒரு நாள் சீலம் மிகுந்த துறவி ஒருவர் தந்த ரூ.101-ஐ எடுத்துக்கொண்டு காசியில் உள்ள விசுவநாதர் கோயிலுக்குச் சென்று இறைவன் திரு முன்பு, தனது திட்ட அறிக்கையையும், தான் கொண்டு சென்ற பணத்தையும் வைத்து மனமுருக வேண்டினார். அதுநாள் முதற்கொண்டு தான் செல்லுமிடங்களில் தான் சந்திக்கும் எல்லாரிடமும் பல்கலைக்கழகம் பற்றியே பேசினார். 

நைனிடாலில் தங்கியிருந்தபோது இவரிடம் ஒருவர் “உங்களது சொந்த ஊரில் ஒரு சிறிய பள்ளிக்கூடம் கூட கட்டமுடியாத நீங்கள் எப்படி பல்கலைக்கழகம் கட்டுவதைப் பேச முடியும்?  ஏன்று கேள்வி கேட்டார். ஆனால் மாளவியா சாதித்துக் காட்டினார்.

1939 ஆகஸ்டு 20ஆம் நாள் இவர் காசி ஹிந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணியில் இருந்து மாளவியா ஓய்வுபெறும் நாள் வரை நன்கொடையாகப் பெற்ற தொகை ரூ. 155 லட்சம். மேலும் தருவதாக வாக்களித்தவர்களின் தொகை ரூ. 25 லட்சம். இதில் பிச்சை எடுத்து உண்ணும் ஒருவர் தந்த ரூபாய் ஒன்று; 80 வயது மூதாட்டி தந்த ரூபாய் ஒன்று; மெயில் ரன்னர் தந்த இரண்டு அணா; பிரிட்டிஷ் இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கை ஆட்சி செய்த மன்னர்கள் பலரின் நன்கொடை, பம்பாய் வணிகர் இரண்டொருவர் தந்த தொகை எல்லாம் அடங்கும்.

இன்று காசியில், 1,360 ஏக்கர் நிலப்பரப்பில் உலகை வியப்பில் ஆழ்த்தும் பிரமாண்டமானதொரு பல்கலைக்கழகம் நூறு ஆண்டுகளைக் கடந்து பல லட்சம் அறிஞர்களை உருவாக்கி, புகழ்பெற்று வருகிறது. இவரது அரிய முயற்சியால் கவரப்பட்ட மகாத்மா காந்தி, இவரை  – மாதம் ஒரு லட்சம் வருமானம் உள்ள வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு பிறர் நலனுக்காக கையேந்தி நிதி கேட்டதால் –  ‘நோபில் பெக்கர்’  (பெரு மதிப்பிற்குரிய பிச்சைக்காரர்) என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். 

நல் மாணவராய், சிறந்த ஆசிரியராய், புகழாய்ந்த மூன்று பத்திரிகைகளின் ஆசிரியராய், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் நான்கு முறை தலைவராய்ப் பணியாற்றி, ஏழை குழந்தைகட்குத் தந்தையாய் பெரியாரினும் பெரியராய் வாழ்ந்த இவரை  ‘தந்தை பெரியார்’ வாழ்க எனச் சொல்லி கொண்டாடுவோம்!

$$$

Leave a comment