உருவகங்களின் ஊர்வலம்- 39

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #39

39. வாளேந்தி வந்தவர்கள்…

    மென்மையாக ஒலித்த சுப்ரபாதத்தை
    ஊடறுத்தபடி அடித்தது காலிங் பெல்.
    கதவு திறக்கும்வரைக்கூடப் பொறுமையற்று
    இடிபோல் மீண்டும் மீண்டும் இடித்தது.
    உணர்வுகள் எதையும் வெளிக்காட்டாமல்
    வாசல் கதவைத் திறந்துவிட்டேன்.

    ஊரைச் சுற்றி ஓடிய சாக்கடை
    பருவம் தவறிப் பெய்த மழையில்
    நிரம்பி வழிந்து ஓடிக் கொண்டிருந்தது வாசலில்.
    வந்தவரின் காலில் சேறு நிரம்பியிருந்தது.
    கசாப்பு கடையிலிருந்து வந்தவர் போல
    பிய்த்தெறியப்பட்ட கோழித் தூவல்களும்
    ரத்தத் துளிகளும் கூட ஒட்டிக் கொண்டிருந்தன,
    முரட்டுக் காலணியில்.

    ‘கழற்றிவிட்டு வாருங்கள் –
    வீட்டுக்குள் காலணி அணிவது எங்கள் மரபல்ல’ என்றேன்.
    ‘உங்களுக்கு எது மரபல்லவோ
    அதுவே எங்களுக்கு மரபு’ என்று சொல்லியபடி
    உள்ளே நுழைந்தார்.

    மெளனமாக விலகி நின்றேன்.
    குடும்பத்தின் ஆண் வாரிசுகள் சகிதம் வந்திருந்தனர்.
    வீட்டின் ஒவ்வொரு இடமாகக் காட்டினேன்.

    பூர்விக நிலம் தான்;
    சொந்த வீடுதான்.
    என்றாலும் இனிமேல்
    இதன் உரிமையாளர் யார் என்பது
    தெளிவாக உறுதியாகிவிட்டிருந்தது.
    ஆவணப் பத்திரங்களில் சில
    சம்பிரதாய மாற்றங்கள் செய்யப்பட்டாக வேண்டும்
    அவ்வளவுதான்.

    சாட்சிகளை அழைத்துக்கொண்டு சென்று
    சம்மதக் கையெழுத்து போட்டுவிட்டு வர வேண்டும்.

    வழுவழுவென்றிருந்த மரத்தூண்களைத் தட்டிப் பார்த்து,
    ‘வெட்டி விறகாக்கினால் நின்று எரியும்’ என்று
    வெடிச்சிரிப்பு சிரித்தார்.
    பூவேலைப்பாடுகள் மிகுந்த பீடங்களை
    கைகளாலேயே சுரண்டிப் பெயர்ப்பதுபோலக் கீறினார்.
    பூஜையறையைப் பார்த்ததும்
    கழிப்பறையைப் பார்த்ததுபோல
    முகம் சுழித்தார்.
    சமையலறையைப் பார்த்தவர்
    ஓரமாக ஒடுங்கி நின்ற பெண்களைப் பார்த்தார்.
    (ஒரு மாயப் பர்தாவால்
    அவர்களை மூடத் துடித்தது மனம்).
    முற்றத்து துளசிமாடத்தைப் பார்த்தவர்
    ‘கசாப்புக் கல் போட ஏற்ற இடம்’ என்று
    கை தட்டிச் சொன்னார்.
    தொழுவத்தில் இருந்த பசுவையும்
    இளங்கன்றையும் பார்த்தவர்
    ‘இவற்றை விட்டு விட்டுச் செல்லுங்கள்-
    பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறோம்’ என்று
    ஹூக்கா புகை படிந்த பல் தெரியச் சிரித்தார்.

    (தாயும் கன்றும் மிரண்டு ஒடுங்கின).

    தோட்டத்தில் படர்ந்திருந்த
    வெற்றிலைக் கொடியைச் சுட்டி காட்டி
    போதைச் செடி என்று கண்களை உருட்டினார்.

    திண்ணையில் வந்து அமர்ந்தவர்
    வண்டியோட்டியைப் பார்த்து
    ‘வா வந்து திண்ணையில் உட்காரு’ என்றார் அதிகார தோரணையில்
    ‘வேணாம் எஜமான்…’
    ’அல்லாவுக்கு முன்னால நாம எல்லாம் சமம் தான்…’
    ‘அப்படின்னா, உங்க பொண்ணை எனக்குக்
    கட்டிக் கொடுப்பீங்களா பாய்…?’

    கண்கள் சிவந்தன.
    சற்று நிதானமானவர்,
    திமிருடன் கேட்டார்:
    ‘நீ இந்தத் தெருவுக்குள்ள இதுக்கு முந்தி வந்திருக்கியா?’
    இடுப்பில் கட்டிய துண்டை அவிழ்த்து உதறியபடியே சொன்னார்:
    ‘இல்லை எஜமான்’.
    ‘அந்த நன்றியைக் காணுமே!’
    ‘நீங்க பர்தா போட்டு மூடறீங்க
    அவுக அக்ரஹாரம்னு சொல்லி மூடினாங்க.
    நீங்க செஞ்சதைவிட அவங்க செஞ்சது
    ஆயிரம் மடங்கு மேல் பாய்!’

    *

    மிகைப்படுத்திச் சொல்லியிருப்பதாகத் தோன்றுகிறதா?
    ஆமாம்.
    கொஞ்சம் மிகைதான்.
    வார்த்தைகளில் வன்மம் தென்படுகிறதா?
    ஆமாம்.
    தெரிந்துதான் செய்திருக்கிறேன்.
    ஆனால், இதுதான் மிகை;
    வேறொன்று சொல்கிறேன்.

    இது வெறும் வார்த்தைகளிலான வன்மம்
    இன்னொரு வரலாற்று வன்மத்தைச் சொல்கிறேன்.
    உங்கள் அறச் சீற்ற நரம்புகள்
    உயிர்த்தெழ வேண்டும் என்றுதான்
    இந்த முன்னோட்ட வரிகள்.

    *

    அதிகாலைகளில் குளிக்கச் செல்கையில்
    இருளுக்குள் இருந்து பீடிக் கங்கு புகைய
    கிண்டலடித்தது தெரியுமா?
    அரச மர வழியில்
    முள் மரங்கள் வெட்டிப் போட்டது தெரியுமா?
    இரவுகளில் நாட்டு ஓடுகளின் மேல் எறிந்த கல்
    தடதடத்து இறங்கிய இதயங்கள் தெரியுமா?
    சொன்னாலும் புரிந்துகொள்ளவும் மாட்டீர்கள்.

    இவற்றுக்கென்று ஓர் நியாயம்
    ஏற்கெனவே உருவாக்கித் தரப்பட்டுள்ளது.
    நாய்கள் மூன்று திசைகளில் இருந்து குரைத்தன;
    நான்காவது திசை வழியாகத்
    தப்பி ஓடின விலங்குகள்.
    வேட்டைக்காரன் அங்கு வாகான இடத்தில் முன்பே
    வாளுடன் தயாராகக் காத்திருந்தான்.

    வரலாறு என்றால்
    அவரவர் பார்வையிலான கதைகள்
    என்று சொல்வதுதானே
    வல்லாதிக்க சக்திகளுக்கு வாகானது?
    நல்லது
    கண் முன்னால் இருக்கும் காட்சிகள்
    சிலவற்றைச் சொல்கிறேன்.

    அந்த வழிபாட்டு மையத்தின் படிக்கட்டுகளைப் பார்த்திருக்கிறீர்களா?
    கல்வெட்டுகள் போல் தென்படுகின்றனவா…
    நீங்கள் நினைத்தது சரிதான்.
    இடிக்கப்பட்ட கோயிலின் சுவர்கள்தான்
    இங்கு படிக்கட்டுகளாகக் கிடக்கின்றன.

    சிமென்ட் காரை பூசப்பட்ட சுவர்களின்
    இடையிடையே தென்படும்
    சித்திர வேலைப்பாடுகள் உள்ளுக்குள் இருக்கும்
    சிதிலங்கள் என்ன என்று காட்டுகின்றனவா?

    பிரகாரத் தூண்களின் யாழிகள்,
    அகல் விளக்கு மங்கைகள்,
    புராண மாந்தர்கள்,
    அத்தனையைச் சுற்றிலும்-
    லைலாவைச் சுற்றி எழுப்பியதுபோல-
    ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கிக் கட்டிய சுவர்
    அதன் மேலே வெண் பளிங்கு டைல்கள்
    உடைத்துப் பார்க்கத் தயாரா…?
    மேல் பூச்சுக்களை மட்டும்தான்.

    கால் நனைக்கும் சிறு தடாகத்தினுள்
    அலைகளை மீறித் தென்படும் கறுப்பு பிம்பம்
    வெறும் கல் தூண்தான் இல்லையா?
    (காபாவில் ஆதியில் இருந்த
    அதே கறுப்பு அரு உருவம்).

    நந்திகேஸ்வரர்
    எங்கோ பார்த்துக் கொண்டிருப்பது தெரிகிறதா?

    சில கருவறைகள்
    சுவர் எழுப்பி மூடப்பட்டிருக்கின்றன.
    சில கருவறைக்குள்
    அதே குறுகலான
    அதே பொன்னிறத் தகடுகள் வேய்ந்த நிலைப்படி,
    அதே ஒற்றை விளக்கு ,
    பல சுடர்களாகப் பிரதிபலிக்கும் கண்ணாடி,
    (எவ்வளவு மகத்தான தத்துவம் அது
    எத்தனை அற்புதமான குறியீடு அது).

    லிங்கத்தை மூடிய கல்லறை
    உடைக்கப்பட்ட ஆவுடையின் இடத்தில்
    மும்மூர்த்திகளையும்
    முப்பெரும் தேவிகளையும்
    நினைவுறுத்தும் மூன்று கிளை குத்துவிளக்குகள்,
    தொட்டடுத்து அபிஷேக தீர்த்தக் குளம்
    மினரட்களாக்கப்பட்ட கோபுரங்கள்
    மதம் மாற்றப்பட்ட கோயில் யானைகள்.

    தங்க இடம் கேட்டோ,
    வாடகை வீடு கேட்டோ,
    விலைக்கு வாங்க வந்ததுபோலோ வந்திருக்கவில்லை.
    அகதிகள் என்றோ,
    அடைக்கலம் கொடுங்கள் என்றோ,
    வந்திருக்கவில்லை.
    தெளிவாக…
    வெளிப்படையாக…
    வாளேந்தித்தான் வந்திருந்தார்கள்.

    கடலோர கபாலி கோவிலும்
    கதைகள் சொல்லும் ஆயிரம்.
    வீட்டின் ஒவ்வொரு அறையையும் திறந்துகாட்ட வேண்டியிருந்திருக்கவில்லை
    ஆலயத்தின் ஒவ்வொரு அறையையும் திறந்துகாட்ட வேண்டியிருந்திருக்கவில்லை
    வந்தார்கள்… கொன்றார்கள்.
    இருந்ததை இடித்தார்கள்.
    இல்லாததைக் கட்டிக் கொண்டார்கள்.
    இதுதான் இருந்தது என்று
    எழுதியும்வைத்துவிட்டார்கள்.

    எம் வீட்டுக்கு நேர்ந்ததைச் சொல்லிக் காட்டியிருக்கிறேன்
    நம் இந்துஸ்தானுக்கு நேர்ந்ததையும் சுட்டிக் காட்டியிருக்கிறேன் .

    சேற்றுக்காலுடன் வீட்டுக்குள் நுழைந்ததாகச் சொன்னது மிகையா?
    துளசி மாடத்தை இடித்து
    கசாப்புக் கல் போடச் சொன்னதாகச் சொன்னது மிகையா?
    இப்படித்தான் நடந்ததென்று சொல்ல முடியாவிட்டாலும்
    இதுதான் நடந்தது என்று நிச்சயம் சொல்ல முடியும்.

    என்றோ நடந்தவை அல்ல;
    இன்றும் நடப்பவையே;
    இதைப் புரிந்துகொள்ளாவிட்டால்
    நாளையும் நடக்கப் போகிறவையே!

    $$$

    Leave a comment