திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -47

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நாற்பத்தேழாம் திருப்பதி...

47.  சதுர்யுகம் கண்ட திருக்கூடல்

அனுமனை அணைத்த கைகள்…
அகிலத்தை அளந்த கால்கள்…
நாமகிரியாள் உறையும் நல்மார்பு…
நாலாயிரம் கேட்ட செவிகள்…
பாஷ்யகாரனுக்குப் பணித்த கண்கள்…
பக்தர்களைக் காக்கும் மனது - என
எல்லாமே அறிந்து கொண்ட எனக்கு
திருக்கூடல் கூடலழக பெருமானே – உன்னிடம்
என்ன வேண்டுவது என தெரியவில்லை – நீ
கமலா மகனுக்கு கனிந்துரைப்பாயே!
பாற்கடல்நாதர்

மதுரை மாநகரின் ஒருபகுதியில் உள்ள இத்தலம், நான்கு யுகங்களாக உள்ளதாகும். பெரியாழ்வாரின் ‘பல்லாண்டு பல்லாண்டு’ பாடல் பிறந்த தலம் இது. அஷ்டாங்க விமானத்தில் கீழ்த்தளத்தில் கூடலழகர் அமர்ந்த கோலத்திலும்,  இரண்டாவது நிலையில் சூரியநாராயணர் நின்ற கோலத்திலும், மூன்றாவது நிலையில் பாற்கடல்நாதர் பள்ளிகொண்ட நிலையிலும் அருள் பாலிக்கின்றனர். இத்தல இறைவன், மதுரை தமிழ்ச் சங்கத்தில் ‘துவரைக் கோமான்’ என்ற பெயரில் இடம்பெற்றிருந்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன.

மூலவர்: கூடலழகர் (அமர்ந்த திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: மதுரவல்லி, வகுளவல்லி
உற்சவர்: வியூகசுந்தர்ராஜப் பெருமாள்
விமானம்: அஷ்டாங்க விமானம்
தீர்த்தம்: ஹேம புஷ்கரிணி, சக்கர தீர்த்தம், கிருதமாலா, வைகை நதிகள்.
தல விருட்சம்: வாழை
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை

எப்படிச் செல்வது?

மதுரை மாநகரிலிருந்து தென்கிழக்கில் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது இத்தலம். 

சேவிப்பதன் பலன்கள்:

எல்லா பிரச்னைகளையும் தீர்த்து வைக்கும் பெருமாள் என்பதால் அனைவரும் வந்து வணங்க வேண்டிய தலம் ஆகும். 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலம் இது.

$$$

Leave a comment