-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நாற்பத்து ஐந்தாம் திருப்பதி...

45. ஸ்ரீதேவி தவம் புரிந்த திருத்தண்கால்
வெண்யாணை மேலேறி, செந்தாமரை ஏந்தி, பொன் ஆயிரம் தரும் தனலக்ஷ்மியே பண் நாலாயிரம் கொண்ட ஸ்ரீமந் நாராயணன் நின்ற திருத்தண்கால் வந்த மகாலட்சுமியே – நீ உன் இருகண் திறந்து எனை இரட்சிப்பாயே!
வைகுண்டத்திலிருந்து பூமிக்கு வந்து பெருமாளை வேண்டி ஸ்ரீதேவி தவம் இருந்த தலம் என்பதால் திருத்தங்கல் என்று பெயர் பெற்றது. தங்கால மலையில் அமைந்த குடைவரைக் கோயில் இது. இம்மலை மீது சிவன், முருகன் கோயில்கள் உள்ளன.
இத்தலத்தில் அன்ன நாயகி (ஸ்ரீதேவி), அமிர்த நாயகி பூதேவி), அனந்த நாயகி (நீளாதேவி), ஜாம்பவி ஆகிய நான்கு தாயர்கள் அருள்பாலிக்கின்றனர். ஜாம்பவியை பெருமாள் மணந்த திருத்தலம் இது. விரும்பிய வாழ்க்கைத் துணையை அடைய இத்தல பெருமாளை வணங்கலாம்.
மூலவர்: நின்ற நாராயணன் (நின்ற திருக்கோலம் – கிழக்கே திருமுக மண்டலம்) தாயார்: செங்கமலத் தாயார், ஜாம்பவதி, பூதேவி, நீளாதேவி உற்சவர்: திருத்தங்கலப்பன் ஆகமம்: வைகானஸ ஆகமம் விமானம்: தேவச்சந்திர விமானம் தீர்த்தம்: பாபவிநாச தீர்த்தம், பாஸ்கர தீர்த்தம், அர்ச்சுனா நதி மங்களா சாசனம்: பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார்
திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 5.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை

எப்படிச் செல்வது?
சிவகாசியிலிருந்து விருதுநகர் செல்லும் மார்க்கத்தில் சிவகாசியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது; நகரப் பேருந்து வசதி உள்ளது. விருதுநகர் -தென்காசி ரயில் மார்க்கத்தில் திருத்தண்கால் ரயில் நிலையம் இருக்கிறது. அங்கு இறங்கியும் வரலாம்.
சேவிப்பதன் பலன்கள்:
திருமணப் பிரார்த்தனைத் தலம் இது. முன்ஜென்ம பாவம் தீரவும், தடங்கல் நீங்கவும், வணங்க வேண்டிய திருத்தலம் ஆகும். 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள் வர வேண்டிய தலம் இது.
$$$